Wednesday 20 June 2018

மாத நாவல்கள் படிக்கலாமா ?

மாத நாவல்கள் படிக்கலாமா?


இன்று காலை முதல் பல்வேறு யோசனைகள். ஏதாவது லைட்டாக படிக்க வேண்டும். குமுதத்தைப் புரட்டியாகிவிட்டது. மனம் நிரம்பவில்லை
பலநாட்களாக படிக்கலாமா வேண்டாமா என்று எடுத்து வைத்திருந்த பத்து பன்னிரண்டு மாத நாவல்களை எடுத்து ஒரே மூச்சாக படிக்கலானேன்.
எல்லாமே பெண் எழுத்தாளர்கள் எழுதியவை. தமிழ்ச்செல்வி, ஆர்.கீதாராணி, பத்மா துரை, சி.வி. இந்திராணி, லதா சரவணன் என்றெல்லாம் பெயர்களை நீங்களும் அறிந்திருக்கலாம்.
பெரும்பாலும் ஒரே மாதிரியான எழுத்து. சினிமா பாட்டை தலைப்பாக கொண்டது, காதல், தனிக்குடித்தனம், மாமனார் மாமியார்., குழந்தை வளர்ப்பு, கணவருடன ் பிரிவு ,முன்னாள் காதலன், நட்பு, தோழிகள், குடும்பம் என்று ஒரே செக்கில் சுற்றிவரும் மாடுகள் போல் இந்த நாவல்கள்.
இந்தப் பெண்கள் மனங்களில் என்ன இருக்கிறது என்பதை உளவியல் ரீதியாகப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்தேன். பெண்ணின் மனதுக்குள் ஆண்தான் மறைந்திருக்கிறான். ஆண்களின் குரூரம் சிறிதும் குறையவில்லை. ஆண்களின் உலகிலே வளர்ந்த பெண்கள் ஆண்களைப் போல் சிந்திப்பது தவிர்க்க முடியாதது.
அவர்கள் எழுதும் வர்ணனைகள், பாலியல் உறவு யாவும் இப்படித்தான்.
உதாரணமாக லதா சரவணன் எழுதிய உன் பேரைச் சொல்லும் போதே நாவலில் சில வரிகள்...
அவன் கைககளைப் பிடித்துக் கொண்டாள் வர்ணிகா. என்மனம் என்றுமே உங்கள் வசம்தான் சித்து என்று சொல்வதைப் போல.வார்த்தைகளால் சொல்ல முடியாத நிலையில் அவனை அணைத்துஅவன் உதடுகளோடு தேன் இதழ்களை அவள் பொருத்த அவன் நெகிழ்ந்து போய் இனிய அதரங்களை சுவைத்தான்.
அப்பப்பா என்ன முரட்டுத்தனம்
பொய்யான சலிப்போடு விலகினாலும் அவன் கைகள் அணைப்பை விடுவிக்காததால் அவன் விருப்பம் அறிந்து மீண்டும் முகம் பொருத்த இந்த முறை முரட்டுத்தனம் அவளிடமிருந்தது.

இப்படி எழுதுவது இளம் பெண்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் ஆதிகாலத்து பழை யஉத்தி. இதை எழுத்தாளர்கள் இன்னும் கைவிடவில்லை. அதிலும் பெண்கள்..

அந்தக் காலத்திலும் மாத நாவல்கள் வந்தன. ஜெயகாந்தனின் புகழ் பெற்ற நாவல்கள் சில நேரங்களில் சில மனிதர்கள், இதய ராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் நாவல்களும், பாலகுமாரனின் புருஷ விரதம், இரவல் கவிதை போன்றவை மாத நாவல்களில் படித்ததுதான்.
தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன், கநாசு, சுந்தர ராமசாமி, நா.பார்த்தசாரதி, கல்கி, போன்ற பலரின் புகழ் பெற்ற நூல்களும் மாத நாவல்களாக வெளியாகி உள்ளன.
அந்த காலத்தில் பிடிசாமி, சந்திரமோகன் ,மேதாவி போன்ற திகில் எழுத்தாளர்கள் எழுத்துகள் தான் ஆரம்ப கால வாசிப்புக்கு துணை நின்றன. நடராஜ் திரையரங்கு ( இப்போது இடிக்கப்பட்டு விட்டது.) வாசலில் பாட்டு புத்தகமும் மாதநாவலும் விற்கிற ஒரு வியாபாரி இருந்தார். அருகில் புளியந்தோப்பு பகுதியில் அவர் வீடு. அப்போது நடராஜா தியேட்டரில் தர்மேந்திரா, அமிதாப் , ஜித்தேந்தர் நடித்த இந்திப் படங்கள் தான் வெளியாகும். அவற்றைப் பார்க்க போனால் சினிமா செலவுடன் மாத நாவலுக்காகவும் பணம் எடுத்துச் செலல்வேன். புளியந்தோப்பில் உள்ள தமது வீட்டுக்கு அந்த வியாபாரி அழைத்துப் போவார். கட்டுக் கட்டாக இருக்கும் பழுப்பு நிறப்பக்கங்கள் கொண்ட மலிவான மாத நாவல்களையும் பாட்டுப்புத்தகங்களையும் அள்ளி வருவேன் .ராஜேஷ்குமாரிந் எழுத்தில் ஒரு வசீகரம் இருந்தது. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா , போன்ற சிலர் படிப்பில் சுவை கூட்டியவர்கள். ராணி முத்து அந்தக் காலத்தில் வெளியிட்ட மு.வரதராசன், கல்கி, சாண்டில்யன் போன்றோரின் மாத நாவல்கள் இப்போது பொக்கிஷம் போல தோன்றுகின்றன.
மாத நாவல்களில் என்னதான் இருக்கு என்றறிய இளம் வயதில் மூர்மார்க்கெட் போய் 300 மாதநாவல்களை வாங்கி வந்து படித்துப்பார்த்திருக்கிறேன், ராஜேஷ்குமார் , சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், தேவிபாலா, இந்திரா சௌந்தரராஜன், ராஜேந்திர குமார், போன்ற எழுத்தாளர்களின் நாவல்களில் நூற்றுக்கு 5 மட்டுமே மிகச்சிறப்பாக எழுதப்பட்டவை. தாஜ்மகாலுக்கு குண்டு வைக்கும் ஒரு தீவிரவாதி பற்றிய சுபாவின் நாவலும் நரேன் சுசிலா துப்பறியும் நாவல்களும் பரத் சுசிலா துப்பறியும் பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்களும் வாசிக்க சுவையாக இருந்தன. சிலவற்றை திரைப்படமாகவும் எடுக்கலாம். ஆனால் பெரும்பாலானவை தரமில்லாத மொக்கை எழுத்துகள்.

அப்போதே அவற்றை தூக்கிப் போட்டு விட்டேன்.

ஆனால் பெண் எழுத்தாளர்களின் வருகையால் மீண்டும் புற்றீசல்கள் போல் மாத நாவல்கள் பெருகிவிட்டன. இவற்றின் வாசகர்களும் பெண்கள்தாம்.
அம்பையைப் போல் . ஹெப்சிபா ஜேசுதாசன், கிருத்திகா, ஆர்.சூடாமணி, உமா மகேஸ்வரியைப் போல யாராவது எழுதினால் பரவாயில்லை. அப்படி யாரும் இல்லை என்பதுதான் ஏமாற்றமாய் இருக்கிறது.
பெண் எழுத்தாளர்கள் எழுதிய ஒரு நூறு நாவல்களை இனி தொடர்ந்து வாசிக்கப் போகிறேன். சொ,கலைவாணி, பத்மா கிரகதுரை, முத்துலட்சுமி ராகவன், டெய்சி மாறன், அனிதா குமார் என ஏராளமான பெண் எழுத்தாளர்கள் இதில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள். பலர் யார் என்றே தெரிவதில்லை. சிலரை முகநூலில் காண முடிகிறது.


எந்த ஒரு நாவலும் வித்தியாசமாக இருந்தால் கட்டாயம் குறிப்பிடுகிறேன். இல்லையானால் இருக்கவே இருக்கு பழைய பேப்பர் கடை.....
===========================










No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...