சில நேரம் நாம் கேள்வியே பட்டிராத அரிய பழைய படங்கள் கிடைக்கும்போது, அவை மலரும் நினைவுகளைத் தூண்டிவிடும். எங்கேயோ, எப்போதோ நம் வாழ்க்கையுடன் அந்தப் படங்களுக்கு ஏற்பட்ட தொடர்பு இழைகளைக் கோர்த்துக் கொள்ள அவை உதவுகின்றன. அத்தகைய 4 திரைப்படங்கள் இரு டிவிடிக்களில் மலர்ந்துள்ளன. ‘பரோபகாரம்’ படமும் ‘பட்டி விக்ரமாதித்தனு’ம் முறையே சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ் ஆகியோரால் முக்கியத்துவம் பெறுகின்றன. நடிகர் திலகம் பின்னணி பேசியிருக்கிறார் என்பதுதான் ‘பரோபகாரம்’ படத்தை முக்கியமானதாக ஆக்கி விடுகிறது. நடிகையர் திலகம் சாவித்திரி, நாகேஸ்வர ராவ் போன்றோர் நடித்துள்ளனர். ‘பட்டி விக்ரமாதித்தன்’ நாம் அறிந்த கதைதான். புகழ்பெற்ற என்.டி.ஆரையும் காந்தா ராவையும் நாம் ஒன்றாகக் காண முடிகிறது. கண்டசாலாவின் இசையை ‘பரோபகார’த்திலும் ஆரூர்தாஸின் வசனத்தை ‘பட்டி விக்ரமாதித்தனி’லும் கேட்டு மகிழலாம்.
‘அம்மா எங்கே’, ‘அழகு நிலா’ ஆகிய இரண்டும் கறுப்பு - வெள்ளை திகில் படங்கள். நவரசத் திலகம் முத்துராமன் இரண்டு படங்களிலும் நாயகன். ‘அம்மா எங்கே’யில் இளமையான ராஜஸ்ரீ கண்களுக்கு விருந்தாகிறார். ‘பாப்பா பாப்பா கதை கேளு... காக்கா நரியின் கதை கேளு...’ என்ற வேதாவின் இசையில் ஒலிக்கும் ஏ.எல்.ராகவனின் பாட்டு தேன் அமுதம¢. ‘அழகு நிலா’வில் பி.பி.சீனிவாஸ், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் குரலில் மருதகாசியின் அற்புதமான பாடல்களைக் கேட்கலாம். இந்தப் படத்தில் முத்துராமனுடன் கல்யாண்குமார், தங்கவேலு, வி.கே.ராமசாமி போன்ற தேர்ந்த நடிகர்களும், நடனமாடும் அழகுப் பதுமையாக மாலினியும் நடித்துள்ளனர்.