Monday 29 April 2019

படித்தது- ராஜ சுந்தரராஜனின் நாடோடித் தடம்

அண்மையில் பெரியார் திடலில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ராஜசுந்தர் ராஜனின் நாடோடித் தடம் புத்தகத்தை வாங்கி வந்து ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன்.
புத்தகம் ஒரு சுயசரிதை போலும நாவல் போலும் கட்டுரை போலும் மாறி மாறி இழுத்துச் செல்கிறது.
இந்த நூலின் மையம் பெண்கள்- பெண் சுகத்தைத் தேடிய பயணங்கள் என்று கூறலாம். ஒரே வரியில் சொன்னால் தமிழின் best erotic litretaure

கான்புர், குண்டக்கல், மும்பை, டெல்லி,கோடம்பாக்கம், பரோடா என பல இடங்களில் திரிந்து பலவகைப் பெண்களைப் புணர்ந்து பெண்ணின் தடம் தேடிய அந்த நாடோடி வாழ்க்கையுடன் சொந்த வாழ்க்கையின் இல்லறம், இலக்கியம், புரிதல் மனிதநேயம் போன்ற பலவகை அம்சங்களுடன் ஒவ்வொரு பக்கமும் ஒரு புதிய உலகை நமக்கு அறிமுகம் செய்கிறது. ஜி.நாகராஜன் தொடங்கி வைத்த அந்த ஒற்றையடிப் பாதையில் பயணிக்கிறது இவரது புத்தகம். 
பாலியல் சார்ந்த பதிவுகள் தமிழ் இலக்கியத்தில் போதுமானதாக இல்லை. மிகவும் மென்மையான முறையில் தி.ஜானகிராமன், குபரா போன்ற எழுத்தாளர்கள் எழுதினார்கள். பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களை அதை நாகரீகப்படுத்தினார்கள். ( உட்கார் என்றால் படுக்கிற ஜாதி )
சாரு நிவேதிதாவின் பேண்டீசுக்குள் விரல் விடும் ராசலீலா எழுத்தும் முழு அளவிலான இலக்கியத்திற்கான போதாமையுடன் தான் உள்ளது.
பிரபஞ்சன் அற்புதமாக முயன்றார். ஆனால் அவராலும் ஒழுக்கத்தின் லட்சுமணக்கோட்டை தாண்ட முடியவில்லை. சு.வேணுகோபாலன், ஜீ.முருகன், வாமு கோமு போன்ற சில படைப்பாளிகள் இதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளனர். 

ஆனால் ஒரு ஹென்ரி மில்லர், எரிக்கா ஜங், அனாய்ஸ் நின், டி.ஹெச்.லாரன்ஸ் மரியா வர்கோஸ் லோசா போன்ற சர்வதேச எழுத்தாளர்கள் தரத்தில் தமிழில் எரோடிக் இலக்கியம் இல்லை. எனது கிடங்குத்தெரு நாவலின் சில பக்கங்களில் அந்த முயற்சி இருப்பதை காணலாம்

தமிழ்ப் படைப்பாளிகள் பெரும்பாலோர் தமிழ்ப் பண்பாடு தவறாதவர்கள். ஒழுக்க சீலர்கள், மனைவியைத் தவிர வேறு பெண்ணை ஏறெடுத்துப் பார்க்காத உத்தம சீலர்கள் .அல்லது அப்படி வேஷம் போட்டு திரிபவர்கள்
முழுமையாக தன்னை அவிழ்த்துப் போட்டு தனது உடல் மனம் சிந்தனை பற்றி சிறிதும் வெட்கமும் குற்ற உணர்வும் இல்லாமல் ஒரு பாவமன்னி்பபும் கோராமல் நான் இப்படித்தான் இருந்தேன் என்று கூறக்கூடிய ஒரு துணிவு தமிழில் முதன் முறையாக ராஜசுந்தரராஜனிடம் பார்க்கிறேன். 

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறுமியுடன் லாட்ஜில் சிக்கிய அந்த பகுதி உயிர்ப்பான ஒரு சிறுகதை... சிறுமியை அடிக்கச் சொன்ன அந்த போலீஸ்காரன் இருந்தால் அவன் குண்டியை நசுக்க வேண்டும் என்ற கோபமும் வெறித்தனமும் ஏற்படுகிறது. மனிதாபிமானமே இல்லாத எல்லா போலீஸ்காரர்களையும் ஒரு அடியாவது ஓங்கி அடிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ரகசிய ஆசையே உள்ளது.

இந்தப் புத்தகத்தை ஏன் வாங்கினேன் தெரியவில்லை . அது எனக்காக அங்கு காத்திருந்தது. வாழ்த்துகள் ராஜசுந்தரராஜன் உங்கள் வாசகனாகிவ ிட்டேன். இனி உங்கள் புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாங்குவேன். இந்த புத்தகத்தைத் தவறவிடாமல் கைப்பற்றியதற்காக மனம் நூறு முறை மகிழ்ச்சி கொள்கிறது. 


வெளியீடு
வாசக சாலை பதிப்பகம்
9942633833
9790443879
vasagasalai@gmail.com


Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...