Tuesday 28 May 2013

சூஃபி தர் - சூபிக்களின் வாசல்

இஸ்லாமை கரைத்துக் குடித்தவன் அல்ல நான். ஆனால் குரான், நபிகள் வரலாறு போன்ற அதன் புனிதமான புத்தகங்களை மனச்சுத்தியோடு படித்திருக்கிறேன்.இஸ்லாமிலிருந்து கிளை பிரிந்த சூஃபிக்களுடன் எனக்கு அதிகமான நெருக்கம் இருந்திருக்கிறது. காரணம் எனது மூதாதையரும் பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள்தான். இஸ்லாமிய ஆன்மீக நெறியுடன் எங்கள் குலத்திற்கும் குடும்பத்திற்கும் நெருங்கிய உறவு இருந்தது. ஆனால் முஸ்லீம்களால் பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர் எனது தாத்தாவும் அவரது குடும்பத்தினரும்.
உமர் கய்யாம், முல்லா நசுரூதீன், ஜலாலுதீன் ரூமி, ஹபீஸ், சா ஆதி, போன்ற சூபி அறிஞர்களுடனும் சூபி வாழ்வியலை ஏற்றுக்கொண்ட ஹஸ்ரத் இனாயத் கான், மிர்சா காலிப் போன்றோரின் படைப்புகளுடனும் எனக்கு அற்புதமான பிணைப்பு இருந்தது. சூபி இசையில் மஸ்த் கலந்தரும் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களிலும் நாகூர் அனிபாவின் இறைவனிடம் கையேந்துகள் பாட்டிலும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்வியின் அல்லா அல்லா பாடலிலும் எனக்குத் தீராத உறவு நீடிக்கிறது.
நாங்கள் சிந்தி இனத்தவர். எங்கள் குரு அமிர்தசரசில் அருள் புரியும் குருநானக்தான். ஆனாலும் சிந்தி மொழி உருதுவைப் போல பின்னாலிருந்து எழுதப்படுவது, சிந்திக்கள் பலர் இஸ்லாமியர் போல குல்லாய் போடுவார்கள். இப்போதும் கூட இப்படி பார்க்கலாம்.
இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக தோன்றிய மதம்தான் சீக்கியமதம் என்பார்கள். சீக்கிய வேர்களில் கிளைத்த நாங்கள் இஸ்லாமின் ரோஜா மலர்களுடன் நட்புறவு கொண்டோம்.
சூபி கலாசாரம் இஸ்லாமுக்கு எதிரானது என்போரும் உண்டு. அது தவறான கருத்து. இஸ்லாம் உருவ வழிபாட்டை ஏற்பதில்லை. ஆனால் சூபிக்கள் இறைவனின் உருவத்தை இசை நடனம் கலை இலக்கியம் போன்றவற்றில் தரிசிப்பவர்கள், உருவ வழிபாடு செய்யும் இந்துக்களோடும் கிறித்துவரோடும் அவர்களுக்கு நல்ல இணக்கம் உண்டு. இது அடிப்படைவாத இஸ்லாமியரிடம் இல்லை என்பதுதான் முக்கியமான வேறுபாடு.

இதைப் பற்றி ஓஷோ எழுதுவதைப் படித்தால் சற்று தெளிவு பிறக்கலாம்.சூபிக்கள் பற்றிய ஓஷோவின் தனி நூல்களுடன் அவரது எல்லா நூல்களிலும் குறிப்புகள் உண்டு.

இந்துமதத்தின் புனித நூலான நான்கு வேதத்திலிருந்து முரண்பட்டு  வளர்ந்த முற்போக்கு கிளை தரிசனங்கள் உபநிஷத்துகளில் பதிவாகின.
இதே போலத்தான் இஸ்லாமின் அடிப்படையான இறைநம்பிக்கையை கைவிடாமல் அதன் மேலோட்டமான இறுக்கங்களைத் தளர்த்தி வளர ஆரம்பித்தது சூபியிசம்.

தஸ்தகீர் பாபா என்ற சூபி ஞானியைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா.....
அவரது நினைவிடம் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரிலும் வடமாநில நகரங்களிலும் அமைந்திருக்கிறது. ஆனால் சென்னையிலேயே தஸ்தகீர் பாபாவுக்காக ஒரு ஆலயம் அமைத்து அங்கு அவரது உருவத்திற்கு முன்பு இஸ்லாமிய தொழுகை நேரப்படி சரியாக ஒருமணியிலிருந்து ஒன்றே முக்கால் வரை துவா எனப்படும் தொழுகை நடத்தப்படுகிறது. இதற்கு அடித்தளமிட்டது தாதா ரத்தன் சந்த் என்பவர், பழுத்த ஆன்மீக வாதி. உலக நாடுகளில் பயணித்தவர். மிகவும் தீர்க்கதரிசி, பண்பட்ட மனிதர். அவர் அமைத்த ஆலயம் தான் .
ஷா இன் ஷா பாபா

                                         பாபாவை வணங்கும் தாதா ரத்தன் சந்த்

இதே ஆலயத்தில் ஜலாலுதீன் ரூமி உள்ளிட்ட சூபி அறிஞர்களின் நூற்றுக்கணக்கான அற்புதமான படங்கள், ஓவியங்களை காணலாம். ரம்ஜான் கொண்டாடும் ஆலயமும் இதுதான். மாதம்தோறும் ஏழைகளுக்கு மளிகை சாமான் வாங்கி காரில் அவர்கள் வீட்டிற்கே கொண்டுபோய் தரும் தர்ம தானங்களுடன் எத்தனையோ நல்ல காரியங்கள் இங்கு எந்த வித விளம்பரமும் இல்லாமல் நடக்கிறது.

ஷாஹென் ஷா பாபா என்ற தமது குருவின் நினைவால் இந்த ஆலயத்தை கட்டியிருக்கிறார் தாதா ரத்தன் சந்த்

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில், சிட்டி சென்ட்டர் எதிரே உள்ள சிறிய வீதியில் வந்தால் இக்கோவிலை அடைந்துவிடலாம். ஒருமுறை பிற்பகல் ஒருமணிக்கு வந்து பாருங்கள். உங்கள் மதம். சாதி, இனம் எதுவாக இருப்பினும் இங்கே அனுமதி உண்டு. கோவிலுக்கு செல்லும்போது கடைப்பிடிக்கும் தூய்மையான உடலோடும் உள்ளத்துடனும் வந்தால் போதும். உண்டியலே இல்லாத கோவிலும் உலகில் இது ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.
ஆரம்பத்தில் எனக்கும் இக்கோவில் பணக்கார சிந்திக்களின்  பொழுதுபோக்குக்காகவும் ஆன்மீக உணர்வுக்காகவும் கட்டப்பட்ட 5 நட்சத்திர விடுதி என்ற கிண்டலான மனோபாவம்தான் இருந்தது. ஆனால் தொடர்ந்து அங்கு செல்லத் தொடங்கிய  பிறகு வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு விடையை கண்டறிந்திருக்கிறேன். வாழ்க்கையில் துன்பங்களே ஏற்படவில்லை என கூற முடியாவிட்டாலும் துன்பங்களை கையாளும் பக்குவத்தைப் பெற்றிருப்பது இறையருளால்தான்.
ஒருமுறை தாதா என்னைப் பார்க்க விரும்புவதாக தகவல் கிடைக்க அவரைப் போய் வணங்கி நின்றேன். உங்களுக்கு ஒரு வேலை தந்தால் செய்வீர்களா எனக் கேட்டார் தாதா.
சொல்லுங்கள் என்றேன்.
இங்கு சூபிக்களின் வரிகளை வெள்ளை போர்டில் அவ்வப்போது எழுதுங்கள் எனக்கட்டளையிட்டார். எனக்கும் அந்தக் கோவிலுக்கும் உறவு இதிலிருந்துதான் தொடங்கியது. ரூமி, ஹபீஸ், அத்தர், ஹஸ்ரத் இனாயத் கான், காலிப் போன்றோரின் அற்புதமான வரிகளை தேடிப் பிடித்து அங்கு எழுதி வருகிறேன். இதனால் எனக்கு அபரிதமான மரியாதை கிடைத்துள்ளது. பலர் தங்கள் டைரிகளில் அந்த வரிகளை எழுதிச் செல்வதைப் பார்க்கிறேன்.
இந்த ஆலயத்திற்கு இதை தர்கா என்றே தாதா அழைக்கிறார், இந்த தர்காவுக்கு வந்தவர்கள் அனைவருமே வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குப் போய்விட்டார்கள். ஆனால் நான் மட்டும் எப்போதும் போல தவிக்கிறேன். ஒருமுறை போர்டில் சூபி வாசகத்தை எழுதும்போது என்னை மட்டும் ஏன் வெறுங்கையுடன் திருப்பி அனுப்புகிறீர்கள் குருவே என ஷாயின்ஷா பாபாவிடம் மனமுருகி கேட்டு அழுதிருக்கிறேன். இன்றுவரை எனது தேவைகள் தீரவில்லை. ஆனால் இந்த தர்காவுடனும் சூபிக்களுடனும் எனது உறவு முடியாது என்பதுதான் இப்போதும் என் நிலை.

பின்குறிப்பு - தாதா ரத்தன் சந்த் காலமாகி விட்டார். அவர் குடும்பத்தினர் இப்போது சூஃபி தரை நிர்வாகம் செய்கின்றனர்

பிரபல வார இதழ்களின் மறுபக்கம்

தமிழில் வெளியாகும் பிரபல வார இதழ்கள் அனைத்தும் சாதாரண வாசகனை நோக்கியே தங்கள் புத்தம் புதுக் கட்டுரைகளை வெளியிடுகின்றன. பாதிக்கும் மேலான பக்கங்களை  சினிமாவும்  சில பக்கங்களை  சினிமாவும் ஆக்ரமிக்கின்றன. அரசியலுக்காகவே வெளியாகும் ரிப்போர்ட்டர், ஜீ.வியிலும் கூட நடுப்பக்க அரைகுறை ஆடை அழகி அவசியமாகி விட்டது. 
மக்கள் அதிகமாக படிப்பது சினிமாவையும் அரசியலையும் அதை விட்டால் ஆன்மீகம், ஜோசியம் ஆகியவற்றையும்தான். 
பெண்கள் பத்திரிகை என்றால் கைத்தொழில்,வீட்டிலிருந்து சம்பாதிக்க தொழில், சமையல் குறிப்புகள், நாகரீகம், ஆடை அணிகலன்கள், அந்தரங்க பிரச்சினைகள்.
இதையெல்லாம் பத்திரிகை ஆசிரியர்கள் துல்லியமாக நாடி பிடித்து வைத்து விட்டனர். ஆனால் இந்த தேவைக்கு பரிமாற வேண்டிய கட்டுரைகளை எழுதுபவர்களை தேர்வு செய்வதில்தான் அவர்கள் தோற்றுப் போகின்றனர். ஒவ்வொரு இதழிலும் ஆசிரியருக்கு வேண்டிய சிலர் மட்டும் குறைந்தது பத்து பக்கம் அல்லது நான்கைந்து கட்டுரைகளை அவர்கள் எழுதி விடுவார்கள். அதற்கு தனியாக கவர்கூட வாங்குவார்களா என்று தெரியாது. இதே நபர்கள்தாம் அந்நிறுவனத்தின் அனைத்து இதழ்களிலும் வெள்ளி, ஞாயிறு இணைப்புகளிலும் எழுதித் தள்ளுவார்கள். தனி சன்மானமும் இதற்கு உண்டு. மற்ற உதவியாசிரியர்கள் பாவம் நாலு வாரத்தில் நாலு பக்கம் கூட எழுத விடமாட்டார்கள். அவர்கள் ஙே என விழித்தபடி கிடைக்கும் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக வாசகர் கடிதம், கவிதை தேர்வு செய்வார்கள், பரிசுக் கூப்பன்களை பரிசீலித்து பிரித்து வைப்பார்கள். அல்லது கேன்டீனில் உட்கார்ந்து புலம்பித் தள்ளுவார்கள்.

ஒரு பெரிய பத்திரிகையும் அதன் துணை இதழ்களும் சகோதர இதழ்களும் நான்கைந்து பேர் கொட்டமடிக்கும்  கூடாரமாக இருப்பதற்குக் காரணம் ஆசிரியர்தான். பெரும்பாலும் ஆசிரியர் பெயர் வேறு ஆசிரியர் வேலை செய்பவர் வேறாக இருக்கும்.

பிரபல வார  இதழில்  பத்தி எழுத 2 அல்லது 3 பக்கம் தரும்படி அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவரிடம் கேட்டேன். நீங்க பிரபலமானவரா எனக் கேட்டார். இப்போது மனுஷ்யப்புத்திரன் பத்தி எழுதுகிறார்.  மனுஷ்ய புத்திரனின் கால்கள் ஆல்பம் கவிதைதான் அவரை சுஜாதாவிடம் அறிமுகம் செய்து அவரை தமிழ்ச்சூழலில் பிரபலமாக்கியது. அந்தக் கவிதையை தேர்வு செய்து கோவை ஞானியின் நிகழ் இதழில் வெளியிட்டதில் முக்கிய காரணகர்த்தா நான்தான். ஆனால் நான் பிரபலமாகவில்லை.

ஒருவரின் தகுதியையோ அல்லது திறமையையோ கணிக்கும் அளவு பத்திரிகை ஆசிரியர்கள் அறிவுஜீவிகள் அல்ல, தனக்கு அடங்கிய தன்னை மிஞ்சி விடாத  மந்த நிலை பத்திரிகையாளர்கள் போதும் அவர்களுக்கு. பத்திரிகை  விற்க அவர்கள் முழுதாக நம்புவது நடிகைகள் மற்றும் அஜித்,விஜய்,சூர்யா போன்றோரின் ஸ்டில்களை மட்டும்தான்.

இந்த வம்பை இன்னும் வளர்க்கலாமா இத்துடன் விட்டுவிடலாமா  



Tuesday 7 May 2013

குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பு தேவைதானா ?

அண்மையில் எனது செல்லக் குழந்தை விக்னேஷ்- வயது 12,  ஏழாவது வகுப்பில் பெயிலானதாக தகவல் வந்தது.கூடவே அவனது குறும்புகளையும் விளையாட்டையும் சகித்துக் கொள்ள முடியாத பிரின்சி மேடம் டிசி கொடுத்து அனுப்பி விட்டார். எட்டாவது வரை குழந்தையை பெயிலாக்க முடியாது, 14 வயது வரை குழந்தைக்கு கல்வி கற்கும் உரிமை, பள்ளியை விட்டு வெளியேற்றப்படுதல் தடுக்க வேண்டும் என்பதுபோன்ற சட்டவிதிமுறைகளோ தார்மீக நெறிகளோ அந்தப் பள்ளிக்குப் புரியவே இல்லை. அத்தனைக் குழந்தைகளையும் பாஸ் செய்துவிட்டு இந்த ஒரு குழந்தையை மட்டும் வெளியேற்றிவிட்டது பள்ளி நிர்வாகம்.

விக்கி எனது வளர்ப்பு மகன்தான். ஆனால் அவன் தாய் தந்தையும் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் அழுதது ஒருபுறம் இருக்க, எனது செல்லத்தால்தான் குழந்தை இப்படியாகி விட்டதாக பழிவேறு சுமக்க நேரிட்டிருக்கிறது.
என் குழந்தையாக இருந்திருந்தால் இப்படியொரு கேடுகெட்ட பள்ளியில் எனது குழந்தை படிக்கத்தான் வேண்டுமா என்று யோசித்திருப்பேன். குழந்தையின் விளையாட்டை ரசிக்கத் தெரியாத கிழட்டு முண்டங்கள் நடத்தும் அந்தப் பள்ளியில் படித்து அவன் வாழ்வின் ஒரு உன்னதத்தையும் கற்றுவிட முடியாது. மாறாக மந்தையில் ஒரு ஆடாக மாறிவிடுவான். எனது குழந்தையின் அறிவுக்கூர்மையும் அப்பாவித்தனமான அவன் சேட்டைகளும் எனக்குத் தெரியும். அதற்கு இப்பள்ளியோ நமது அரைவேக்காட்டு கல்வித்திட்டமோ தரும் சான்றுகள் தேவைதானா என்று கேட்டிருப்பேன். ஆனால் அவன் பெற்றோருக்கு இந்த சிந்தனை எழவில்லை. அவர்கள் விக்கியை எப்படியாவது ஏதாவது ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து விட அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். யார் யார் காலிலோ விழுந்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் பள்ளியில் படித்ததால்தான் இப்போது தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத முடிகிறது. எனது ஆசிரியர்களை இன்று நன்றியோடு நினைத்துக் கொண்டேதான் இதனை எழுதுகிறேன். ஆனால் விக்கி போன்ற குழந்தைகளுக்கு, குறும்புத்தனமும் உயிர்ப்பும் ததும்பும் அவர்களின் பால்ய கால சேட்டைகளுக்கு எந்தக் கல்வியும் ஈடாகாது. அதனை இழந்து அவர்கள் எதையும் அடைந்துவிடமுடியாது.


Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...