Thursday 7 December 2023

சால் பெல்லோவின் ஹெர்சாக் -1

சால் பெல்லோவின் ஹெர்ஸாக் நாவல் –சில எண்ணங்கள் செந்தூரம் ஜெகதீஷ் மனப்பிறழ்வுக்கும் உலகின் மிகவும் உயர்ந்த இலக்கியத்துக்கும் ஓர் ஆழமான தொடர்பு உள்ளது. எந்த ஒரு மகத்தான கலைஞனும் முழு மன ஆரோக்கியம் உள்ளவனாக இருப்பதை காண முடிவதில்லை.. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிகாசோவின் ஓவியங்களில் கைகால் உறுப்புகளை இழந்த மனிதர்களே பதிவானார்கள் என்பார் பிரபஞ்சன். சக மனிதர்கள் நண்பர்கள் காதலித்த பெண்கள் மணவாழ்க்கை முறிவுகள் சமூகத்தினர் போன்றவற்றால் கலைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அரசின் இரும்புச் சட்டம் தண்டிக்கப்படுவதற்கான அச்சம் திவாலாவதற்கான கவலைகள் கடன்கள் பாலியல் ஏக்கங்கள், ஒழுக்கவாதிகளின் புகார்கள் என்று பலவகைப் பிரச்சினைகளால் மகத்தான கலைஞர்கள் அலைக்கழிக்கப்படும் போது அவர்களின் நுண்ணுணர்வில் இருந்து தான் படைப்பாற்றல் கிளர்ந்து எழுகிறது. சாமான்ய மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக திருப்தி கொள்கிறார்கள். கலைஞர்களுக்கு அந்த திருப்தி எளிதில் கிடைப்பதில்லை. உரிய வயதில் திருமணம் ஆறேழு ஆண்டுகள் தீவிர காமம் பிள்ளைச் செல்வங்கள் பின்னர் சுற்றுலா ருசியான உணவு சேமிப்பு தொலைக்காட்சிகள் முன்பு முதுமை கழிதல் என்று பலரின் வாழ்க்கை எந்தவித சுவாரஸ்யமும் திகிலும் இல்லாமல் முடிந்து விடுகிறது. பெயர் பெற்று வாழ்ந்தவர்கள் பலரும் பெயர் நீங்கி பிணமென்று பேரிடப்பட்டு சுடுகாடு சென்று தீயில் கரைந்து காணாமல் போகிறார்கள். கலைஞன் ஒவ்வொரு கணமும் வாழ்கிறான். ஒவ்வொரு கணமும் இறக்கிறான். அவன் வாழ்வுக்கும் இறப்புக்கும் இடையில்தான் அவன் படைப்பாக்கம். பார்க்க நார்மலாகத்தான் இருக்கிறான். சிரிக்கிறான் ,குழந்தைகளுடன் விளையாடுகிறான், பெண்களை நேசிக்கிறான் மதிக்கிறான் பணிக்குப் போகிறான் வருகிறான் குடும்பத்தோடு இணக்கமாக இருக்கிறான். ஆனால் அவன் மனதுக்குள் ஒரு பேரலை பொங்கிப் பொங்கித் தணிகிறது. இவர் ஏன் இப்படிஇருக்கிறார் என்று சிலரைக் கேள்வி கேட்க வைக்கிறது. எப்போதும் உள்மனம் துயரத்தில தவிக்கிறது. தத்தளிக்கிறது. நிறைய ரகசியங்கள் ரணங்கள் உள்ளே கிடக்கின்றன. அவை எழுத்தாக மாறிவிட்டால் அதன் வலி குறையும் என்று அவன் நம்புகிறான். எழுத்து ஒன்றே நோயாகவும் மருந்தாகவும் உள்ள மனிதனுக்கு நீங்கள் எநத் லௌகீக மயக்கங்களாலும் வீழ்த்தி விட முடியாது. அப்படி மனைவி பிள்ளைகள் சொந்த வீடு வாசல் உற்றார் உறவினர் நண்பர்கள் பயணம் என்றுஇயல்பாக வாழ்கின்ற எந்த ஒரு சராசரியும் மாபெரும் கலைஞனாக மாற முடியாது.அத்தனையும் இருந்தாலும் இல்லாத ஒன்றுக்கான தேடல்தான் அவனை கலையின் பக்கம் திருப்பும். தன் வாழ்க்கையின் வெறுமையைப் பார்க்கத் திராணியற்றவன்தான் இந்தக் கூட்டத்திற்கிடையில் போய் ஒளிந்துக் கொள்கிறான். சால் பெல்லோ எழுதிய ஹெர்ஸாக் நாவலின் நாயகனும் மனப்பிறழ்வு கொண்டவன். அல்லது அப்படி குற்றம் சாட்டப்பட்டு மனநல விடுதியில் சிகிச்சை பெறுபவன். அவன் முதல் திருமண வாழ்க்கை தோல்வி. இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிகிறது. இன்னொருவனை காதலித்து அந்த இரண்டாவது மனைவி இவனை விட்டுப் பிரிகிறாள்., அவள் துரோகத்தால் அவன் மனம் பேதலிக்கிறது. துரோகம் செய்பவர்கள் துன்பம் விளைவிப்பவர்கள் ஆரோக்கியமானவர்களாகக் கருதப்படும் சமூகம் அல்லவா இது. பாதிக்கப்பட்டவர்கள் தானே மனப்பிறழ்வு கொண்டு அலைகிறார்கள். தனது பத்து வயது மகள் மீது உயிரையே வைத்திருக்கும் ஹெர்சாக், குழந்தையைத் தன்னிடம் தரும்படி தாயிடம் கேட்டு தோல்வியடைகிறான். அவன் மனப்பிறழ்வு கொண்டவன் என்று தாய் கூறி சட்டத்தின் துணையால் அவனை மனநலவிடுதிக்கு அனுப்பி விடுகிறாளா். தனது மகளை சரியாக பராமரிக்க மாட்டாள் என்ற கோபத்தால் இரண்டாவது மனைவியைக் கொலை செய்யத்திட்டமிடுகிறான் ஹெர்ஸாக்.ஒரு கைத்துப்பாக்கியில் இரண்டே இரண்டு தோட்டாக்கள் போட்டு, தனது இரண்டாவது மனைவி அவள் காதலன் ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்று மகளை தூக்கிக் கொண்டு ஓடிவிட வேண்டும் என்பதுதான் அவன் திட்டம். ஆனால் அந்தப்பெண் மகளை அன்போடு குளிப்பாட்டி உணவூட்டி உபசரிக்கும் காட்சியைக் கண்டு குழப்பம் அடைகிறான். அவன் மனநோய் குணம் அடைகிறது.அதுவரை அவன் பலருக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தான். அந்தோன் செக்காவின் வான்கா போல அந்தக் கடிதங்களை அவன் தபாலில் சேர்க்கவில்லை. வான்காவைப் போல அவனும் ஒரு ஆறுவயது சிறுவனின் மனநிலையில் தான் இருந்தான் ,முதல் மனைவிக்கு இரண்டாவது மனைவிக்கு மகளுக்கு ரமோனா என்ற தன் தோழிக்கு என்று அவன் பலருக்கும் அவன் தன் மனத்தைத் திறந்துபோட்டு கடிதங்கள் எழுதியிருக்கிறான். ஒரு கடிதமும் தபாலில் சேர்க்கப்படவில்லை .அது அவன் மனப்பிறழ்வுக்கான ஒரு சிகிச்சை ஒருதெராபி போலத்தான். மகள் நல்லபடியாக இருப்பதைக் கண்டு கொலை செய்யும் எண்ணத்தைக் கைவிடும் ஹெர்ஸாக் கடிதங்கள் எழுதுவதையும் நிறுத்தி விடுகிறான். இனி அதற்கு அவசியமில்லை. இந்த நாவலில் ஹெர்ஸாக்கின் வாழ்க்கை ஒருபாரபட்சமான பார்வையி்ல் அவனுடைய பார்வையில் மட்டுமே சொல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது ஒரு கலைஞனின் பார்வை . என் பெயர் ஹெர்ஸாக். நான் தான் அந்தப் பெயரில் வாழும் மனிதன். என்னைத் தவிர வேறு யாரும் அப்படிஇருக்க முடியாது என்று ஹெர்ஸாக் கூறுகிறான். இந்த வரிகளுக்காகவே இந்த நாவலை பைத்தியம் போல நேசித்திருக்கிறேன். இன்னும் வரும்

Wednesday 31 May 2023

தீப் பூக்களுடன் தலையாட்டும் மரம் கவிதை

தினம் ஒரு கவிதை 1 தீப் பூக்களுடன் தலையாட்டும் மரம் மரநிழல் தெரியாத தகிப்புகளூடாக நமது கரங்கள் கோர்த்தன. அங்கொரு மரம் தீப்பூக்களுடன் தலையாட்டுவதைக் கண்டேன். அதனடியில் போய் குளிருக்கு கனப்பு மூட்டிய இளமையைக் காய்த்தோம். பூத்தால் இப்படி பூக்க வேண்டும் சிவப்பு சிவப்பாக என்றது என் இடதுசாரி மனம் மணமே இல்லாமலா என்று சிரித்தாய் காலங்கள் கரைந்தாலும் இந்த மரத்தின் தீப் பூக்கள் உதிரவே இல்லை. நீ பிரிந்து சென்று விட்டாய் .அதன் பிறகுதான் அந்த மரம் சாய்ந்தது அந்த மரம் இப்போது என் நெஞ்சுக்குள் பூத்திருக்கிறது அக்னி கங்குகளுடன் சுட்ட வடுக்களுடன் அதற்கு மேலும் மேலும் நீரூற்றிக் கொண்டிருக்கிறேன் இதில் பறவைகள் அமர்வதில்லை பூச்சிகள் ரீங்கரிக்கவில்லை வெம்மையின் புண்களுடன் ஒரு பழைய நினைவைக் கோர்த்து வைக்கிறேன். எப்போதும் நெருப்புடன் வாழ்கிறேன். எப்போதும் தீயாகவே காய்கிறேன். நீ இருப்பாய் எங்கேயோ ஏதேனும் ஓர் மர நிழலில் வாசனைமிக்க மலர்களோடு. எப்போதாவது தீப்பூக்கள் நிரம்பிய மரத்தைப் பார்த்தாலாவது என்னை நினைத்துக் கொள்வாய். என்னை எரித்துச்சென்ற தீயையும் நீயல்லவா மூட்டினாய். எரிகிறேன். மெழுகுக்குத் தெரியும் எரிவது எத்தனை இன்பம் என்று.

Wednesday 15 March 2023

கணவன் அமைவதெல்லாம் 1-5 செந்தூரம் ஜெகதீஷ்

( முன் எச்சரிக்கை. இதயம் பலவீனமானவர்கள் இத் தொடரைப் படிக்க வேண்டாம். பல அதிர்ச்சி கரமான திடீர் திருப்பங்கள் உள்ளன. ) 1 ##மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கவியரசர் பாடியது உண்மைதான். எனக்கு என் மனைவி அமைந்தது தான் இன்று வரை நான் நலமாக வாழ காரணமாக உள்ளது. என் உறவுக்கார பெண் என்னை விட மூன்று வயது மூத்தவள்.19 வயதில் அவள் மீது தீராத காதல் கொண்டு விட்டேன். அவளுக்கும் அப்போது மிகவும் ஒல்லியாக இருந்த என்னைப் பிடித்திருந்தது. அவளும் ஒல்லி தான். இருவரும் காதலித்து வந்தோம். என் வீட்டில் எதிர்ப்பு இல்லை. நல்ல பெண் .ஆனால் நான் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடிந்தால் திருமணம் பேசலாம் என்று கூறினார்கள் என் பெற்றோர். அவள் தந்தைக்கும் சித்தப்பாவுக்கும் என்னைப் பிடிக்கவில்லை.வெட்டி விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.கட்டாயப்படுத்தி இனி அவள் உன் சகோதரி என்று கையில் ராக்கி கட்ட வைத்தனர். அவளுக்கு தமிழ் தெரியாது.நான் அவளுக்கு கடிதம் எழுதவே இந்தி கற்றுக் கொண்டேன். ஆனால் சகோதரி என்று பிரித்து விட்டதால் இரண்டு ஆண்டுகள் தொடர்பே இல்லை. கடிதங்கள் வரவில்லை. தபாலில் ராக்கி மட்டும் வந்தது. தனது அண்ணன் திருமணத்திற்கு அவள் கோவையில் இருந்து சென்னை வந்து இருந்தாள்.ஆனால் அவளை சந்திக்கவும் பேசவும் விடவில்லை. அப்போது நான் வேலை பார்த்த ஜவுளிக் கடையில் இலங்கைத் தமிழர் ஒருவர் இருந்தார்.வயதானவர்.மக்கா (மகனே )என்று அழைப்பார்.அவரிடம் எனது காதல் கதையை சொல்லி அழுவேன்.சாக வேண்டும் என்று கூற நிறைய புத்தி சொல்லி பார்த்து வேறு வழியின்றி அவர் எனக்காக தூக்க மாத்திரைகளை வாங்கி வந்து தந்தார். மனம் நோக 50 தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டேன். அவள் அண்ணன் திருமணம் நடந்த மண்டபம் வாசலில் போய் மயங்கி விழுந்தேன். ஆட்டோவில் அள்ளிப் போய் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மூன்று நாளுக்கு பிறகு சுயநினைவு திரும்பியது.அவளைப் பார்க்க துடித்தேன். இரண்டு நிமிடங்கள் பார்க்க அனுமதி கிடைத்தது.நலமா என்று விசாரித்து ஓரிரு வார்த்தை பேசினேன். நான் உன்னை சகோதரியாக ( அக்கா) நினைக்க முடியாது என்று அழுதபடி கூறினேன். அழைத்துப் போய் விட்டார்கள். அதுவரைக்கும் கோவிலுக்குப் போகாமல் நாத்திகனாகவே இருந்தேன். கடவுளை நம்பு நல்லது நடக்கும் என்று அம்மா சொன்னதைக் கேட்டு காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் குளத்தில் நீராடி தரிசனம் செய்து வந்தேன். பிறகு ஒருமுறை திருச்சி போன போது நண்பன் ஒருவன் கரூர் அழைத்துப் போனான்.அமரவாதி ஆற்றில் நீராடும் போது கதறி அழுதேன். என் நண்பன் சொன்னான் எல்லா சம்பிரதாய தடைகளையும் உடைத்துப் போடு.நீ அவளை சகோதரியாக நினைக்காத போது உலகமே எதிராக நின்றாலும் கவலப்பட வேண்டாம். இப்போதே கோயம்புத்தூர் போய் அவளைப் பார்த்து பேசு என்று கூறி தன்னிடம் இருந்த அறுபது ரூபாயைக் கொடுத்தான்.கோவைக்கு அப்போது கரூரில் இருந்து 12 ரூபாய் தான் டிக்கெட். கோவையில் இருந்து சென்னை ரயிலுக்கு 28 ரூபாய். வேறு காசு இல்லை. துணிந்து கோயமுத்தூர் பஸ் ஏறி விட்டேன் 2 கோயமுத்தூருக்கு நான் கையில் 60 ரூபாயுடன் கரூரில் இருந்து பஸ் ஏறியது இரண்டாவது முறையாக அந்த ஊருக்கு நான் செல்லும் பயணம். முதல் முறை எங்கள் காதல் எங்கள் இருவருக்கும் மட்டும் தெரிந்து இருவரின் வீட்டுக்குத் தெரியாத போது நான் என் அப்பாவின் பகுதி நேர ஊதியமான 70 ரூபாயை திருடிக் கொண்டு வீட்டில் சொல்லாமல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறினேன். இரவில் கோவையில் இறங்கி ஆட்டோ பிடித்து அவள் வீட்டில் இறங்கினேன். அவள் வீட்டார் ஆச்சரியம் அடைந்து என் வீட்டுக்கு போன் போட்டு விசாரித்த போது, வீட்டில் கோபித்துக் கொண்டு வந்து விட்டதாகவும் கோவையை சுற்றிப் பார்க்க ஆசை என்றும் கூறி சமாளித்து விட்டேன். இரண்டு மூன்று நாட்கள் அவள் வீட்டிலேயே தங்கியிருந்து மனம் விட்டு பேசவும் பழகவும் முடிந்தது. அவள் தம்பியை அழைத்துக் கொண்டு தப்புத் தாளங்கள் சினிமா பார்க்க போகவும் அவள் தந்தை அனுமதி கொடுத்திருந்தார். நாங்கள் சேர்ந்து பார்த்த முதல் படம் அதுதான். அதன் பிறகு பிரியா விடை பெற்று ஊர் திரும்பி வீட்டில் எல்லோரிடமும் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்ட போததுான் அவளைக் காதலிப்பதாகக் கூறினேன். இதெல்லாம் நடந்து விட்டபிறகு ராக்கி கட்ட வைக்கப்பட்டதும் தூக்கமாத்திரை சாப்பிட்டதும் பற்றி போன அத்தியாயத்தில் எழுதி இருந்தேன் அல்லவா....இந்த முறை அவள் வீட்டுக்குப் போக முடியாது .ஒரே நாளில் சென்னைக்குத் திரும்ப வேண்டும். கையில் பணம் இருக்காது .உணவுக்கே காசில்லை. அவள் வெளியே தண்ணீர் பிடிக்க வரும் வரை ஆறேழு மணி நேரமாக காந்திபுரத்தில் உள்ள அவள்வீட்டை சுற்றிச் சுற்றி வந்தேன். டீ சாப்பிட்டு சாப்பிட்டு பசியாற்றிக் கொண்டு இருந்தேன். அந்த இடம் போலீஸ் காலனி வேறு.யாராவது சந்தேகக் கேசில் பிடித்து விடக்கூடும் என்ற பயம்வேறு. ஒருவழியாக மாலையில் அவளை சந்திக்க முடிந்தது. கையில் குடத்துடன் வந்து சில நிமிடங்கள் பேசினாள். நான் மறக்காமல் அவளை சந்திக்க வந்ததில் அவளுக்கும் மகிழ்ச்சி .அவள் இரவில் மீண்டும் வந்து வேலிக்கு அருகில் நின்று மூன்று சப்பாத்திகளைக் கொடுத்துச் சென்றாள். சக்கரையுடன் அதனை சாப்பிட்டு ரயில் பிடித்து சென்னைக்குத் திரும்பினேன். காலையில் இருநது கிடைத்த உணவு அதுமட்டுமாதான். அதன் பிறகு அடிக்கடி கடிதங்கள் மூலமாக காதலை வளர்த்து வந்தோம். மூன்று நான்கு ஆண்டுகளாக சந்திக்கும் வாய்ப்பே அமையவில்லை.அவள் ஆறுமாதகாலம் உறவினர்கள் வீட்டுக்கு புனே போய் விட்டாள். புனே போகுமளவுக்கு என்னிடம் காசு இல்லை. தொடர்ந்து காதலிப்பதா மறந்து விடுவதா என்று தெரியாமல் காலம் இழுத்துக் கொண்டிருந்தது. மறக்கவும் முடியவில்லை. அப்போது சிறிது காலம் எனக்கு வேறு ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டது .அவள் ஒரு தமிழ்ப் பெண். பாவாடை தாவணி கட்டியிருப்பாள் அவளுக்கு நான் காதல் கடிதங்கள் எழுதித் தர வாங்கி பாவாடையில் ஒளித்துக் கொள்வாள். அவளும் ஓரிரு வரிகளில் நலம் விசாரித்து பதில்கள் எழுதுவாள். ஒரு முறை படிக்கட்டில் ஏறிச் சென்றுக் கொண்டிருந்த அவளை வழி மறித்து இடுப்பில் கை வைத்து இழுத்து அவள் பிளாஸ்டிக் வளையல்களை அணிந்த கையைப் பிடித்தேன். மறுக்காமல் சிரித்தாள். முத்தமிட முயன்ற போது விடுபட்டு வெட்கத்தில் ஓடி விட்டாள். ஆனால் அந்தக் காதலு்ம் நிலைக்கவில்லை. அவளுக்கு விரைவில் திருமண ஏற்பாடு ஆகி விட்டது. காதலை அவளுக்கு சொல்லாமலும் சொல்லியும் சொல்லாமலும் சொல்லியும் பயனில்லாமலும் அழுதுக் கொண்டே அவள் திருமணத்துக்குச் சென்று விருந்து சாப்பிட்டு விட்டு வந்தேன். இன்று வரை அவளை மீண்டும் சந்திக்கவில்லை. அதன் பிறகு இலக்கியக் கூட்டங்கள், கவியரங்கங்கள் என்று போகும்போது ஆறேழு பெண்கள் அழகாகக் கண்ணில் பட்டனர். ஆனால் யாரையும் காதலிக்கத் தோன்றவில்லை. மனம் முழுவதும் கோயமுத்தூரில்தான் இருந்தது. மீண்டும் ஒருமுறை என் காதலின் முடிவை அறிந்து கொள்ள கோவைக்குப் போய் வர முடிவு செய்தேன். 3 கோயமுத்தூருக்கு அடுத்து ஒருமுறை அல்ல நான்கு முறை போய் வந்தேன். ஒருமுறை அவளைப் பார்க்கவே முடியவில்லை. மற்ற மூன்று முறை திருடனைப் போல் ஒளிந்து ஒளிந்து பார்க்க முடிந்ததே தவிர பேச முடியவில்லை. அவள் அண்ணி அம்மா, தம்பி அண்ணன் என யாராவது அருகில் இருந்தனர். அவள் என்னைப் பார்க்கவில்லை. நான் வந்திருப்பதே அவளுக்குத் தெரியாது .இருவருக்கும் இடையே கடிதப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. இத்தகைய சூழ்நிலையில் தான் அவளை புனேவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவள் உறவுமுறை பையன் ஒருவனுடன் திருமணப் பேச்சு நடப்பதாக தகவல் கிடைத்தது. மேலும் எனது உறவினர்கள் இருவரிடம் அவள் நெருங்கிப் பழகுவதாகவும் வதந்தியைப் பரப்பி விட்டு என்னை நம்ப வைத்தனர். நான் நம்பிக்கை இழக்கலானேன். அப்போது என் வீட்டிலும் எனக்குப் பெண் தேட ஆரம்பித்தார்கள். வெளிநாட்டில் இருந்து தம்பி திரும்பி வந்தான். அவன் திருமணம் செய்து குடும்பத்துடன் இந்தியாவில் தொழில் நடத்தி வாழ நினைத்தான். அதற்கு மூத்த மகனான என் திருமணம் தடையாக இருந்தது. எனக்கு முதலில் திருமணம் நடத்தினால்தான் அவனுக்குப் பெண் கிடைக்கும் என்பதால் என்னை எப்படியாவது திருமணம் செய்து வைக்க எனது குடும்பத்தினர் முயன்றனர். எனக்கும் அப்போது வயது 25 ஆகி விட்டது. வீட்டின் நிர்ப்பந்தத்தின் பேரில் இரண்டு முறை பெண் பார்த்தேன். அதில் கண்ணாடி போட்ட ஒரு பெண்ணை எனக்கும் பிடித்திருந்தது. இரண்டு முறையும் அந்தப் பெண்களின் வீட்டாரால் நான் நிராகரிக்கப்பட்டேன். காரணம் எனது சம்பளம் அப்போது 400 ரூபாய் மட்டுமே. சொந்த வீடு இல்லை. படிப்பு அதிகம் இல்லை. அழகாக இல்லை இப்படி நிறைய காரணங்களை அவர்கள் கூறினர். என் தம்பி யோசித்தான் பேசாமல் அண்ணன் விரும்புகிற பெண்ணையே திருமணம் முடித்து விட்டால் என்ன என்று யோசித்து எனக்காக பெண் கேட்டு அவன் கோவைக்குப் போனான். ஆடம்பரமான உடைகள், தங்கச்சங்கிலி, டிப்டாப் தோற்றம் கவரும் பேச்சு என்று தம்பி ஜெயித்துவிட்டான். அவள் தந்தை எனக்கு மகளைக் கட்டிக் கொடுக்க சம்மதம் தெரிவித்தார். அந்த ஏழு வருடங்களில் அவர்களும் எங்கெங்கோ மாப்பிள்ளைத் தேடி வரதட்சணை தர முடியாமல் மேலும் மேலும் வறுமையில் தள்ளப்பட்டதால் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர். திருமண ஏற்பாடுகளை நடத்தினர். அப்போது அம்மா அப்பா தம்பியோடு நான் மிகவும் அவமானகரமாக நடத்தப்பட்டேன். தம்பியின் செல்வாக்குவீட்டில் மேலோங்கியது. ஒரு புறம் ஏழு ஆண்டுகளாக காதலித்து அந்தக் காதல் நிறைய பிரச்சினைகளால் கிட்டதட்ட மரணப்படுக்கையில் கிடந்தது. மறுபுறம் பணம் தான் வாழ்க்கையில் பிரதானம் என்ற புதிய சவால் எனது தம்பி மூலமாக எனது குடும்பத்தில் மேலோங்கியது. நான் குறுக்கே இல்லை என்றால் எனக்குரிய பெண்ணை என் தம்பிக்கு மணம் முடிக்கவும் இருவீட்டாரும் திட்டமிட்டனர். ஆனால் இறைவன் அன்றே எழுதி வைத்தானே.....அவள் எனக்கு மனைவி என்றுமுடிவாகி விட்டது. தம்பிக்கு எளிதாக வேறு பெண் கிடைத்து விட்டாள். எனது திருமணத்துக்கு தம்பி பத்தாயிரம் ரூபாய் கொடுத்தான். அதில் துணி மணி எடுக்க நான் அப்பா வேலை செய்த ஜவுளிக்கடைக்குப் போனேன். முதல் முறையாக அப்பாவிடமிருந்து அன்பு பொழிந்தது. எந்த விலையானாலும் பரவாயில்லை நல்லதாக எடுத்துக்கோ என்று பாசத்தைக் கொட்டினார். எனக்கு தந்தையை ஏமாற்றி அவர் சம்பளப்பணத்தை எடுத்து என் காதலியைக் காண ஓடிப்போன நாள் நினைவுக்கு வந்து அழுதேன். பல நாட்களாக இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று தோன்றியது. என் கையில் பணம் இல்லை. நிறைய சம்பளம் இல்லை. தம்பியின் தயவில் திருமணம் செய்ய வேண்டும். வீட்டில் அவன் பக்கம்பேச்சு இருந்தது. ஒப்பிடல் இருந்தது. நான் மெல்ல மெல்ல எனது கவனத்தை இலக்கியத்தின் பக்கம் திருப்பியிருந்தேன். என் வீட்டில் எப்போதும் நண்பர்கள் சூழ்ந்தனர். ஆண்களுடன் நான்கைந்து பெண் கவிகளும் அடிக்கடி வீட்டுக்கு வந்தனர். பிற்காலத்தில் புலவர் புலமைப்பித்தன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனி செயலாளராகப் பணி புரிந்த தமிழ் ஆசிரியர் புலவர் சங்கரலிங்கம் தலைமையில் நாங்கள் செந்தூரம் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தி மாதம் ஒரு கவியரங்கம் நூல் வெளியீடு இலக்கிய கருத்தரங்கம் நடத்திக் கொண்டு இருந்தோம். அப்போது சாரு நிவேதிதா விமலாதித்த மாமல்லன், குட்டி ரேவதி எல்லாம் வாசகர்களாக பார்வையாளர்களாக அமர்ந்திருப்பார்கள். அடிதடி எல்லாம் நடக்கும். திருமணத்தில் ஆர்வம் இழந்த நிலையில் எனக்குத் திருமணம் உறுதியானது. ஏழு வருடங்களாக ஆசைப்பட்டவளையே மணக்கக்கூடிய மகிழ்ச்சியும் கனவுகளும் எனக்கு இல்லை. கண்ணீரும் ஏமாற்றமும் கோபமும்தான் மிஞ்சியிருந்தது. நாளை திருமணம் என்ற நிலையில் திருமணம் வேண்டாம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு மீண்டும் ஒரு முறை நான் வீட்டை விட்டு ஓடிப் போனேன். அன்று பலத்த மழை பொழிந்துக் கொண்டிருந்தது.எங்கே போவேன் என்று தெரியவில்லை. ஏன் நான் திருமணத்தை விரும்பவில்லைஎன்று தெரியவில்லை. ஒரு பெண்ணோடு வாழ முடியுமா கையில் பணம் இல்லாமல் என்ற பயம் ஆட்டிப்படைத்தது. அந்தப் பெண்ணை என் உறவினர்களோடு புனே மாப்பிள்ளையோடு என் தம்பியோடுஇணைத்து பேசப்பட்டதும் ராக்கி கட்டியதும் மனரீதியாக பாதித்து இருந்தது. மன நிலைப் பிறழ்ந்தவனைப் போல் ஆகிப்போனேன். திருமணம் செய்த பிறகும் அவளை அவள் விரும்பும் நபரோடு அனுப்பி விடவேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அவள் யாரையும் விரும்பவில்லை (இன்று வரை) அவளுக்கு ஒரேயொரு காதலன்தான் அது நான்தான் என்று மிகவும் தாமதமாகத்தான் தெரிந்தது. அன்று பலத்த மழை பெய்த நாளில் இரவு நேரத்தில் வீட்டை விட்டு ஓடிப்போனேன். இரவு காட்சி இந்தி சினிமாவுக்குப் போனேன் .அசோக் என்றொரு தியேட்டர் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தது. அந்தத் திரையரங்கில் பிளாக் மெயில் என்றொரு படம் ரிலீசாகியிருந்தது. தர்மேந்திரா ராக்கி நடித்தது. அதில் கிஷோர் குமார் பாடிய பல்பல் தில்கே சாத் பாடல் மிகவும் பிரபலம் .ஒவ்வொருகணமும் நீ என் இதயத்துடிப்பில் இருக்கிறாய் என்று கூறும் பாடல் .படத்தில் ராக்கியின் பெயரும் எனது நாளைய மனைவியின் பெயரும் ஒன்று. இரண்டுபட்ட மனநிலையுடன் படம் பார்த்து கொட்டும்மழையில் நனைந்தபடி நடந்து சென்று சென்ட்ரல் அருகில் பெரியமேட்டில் உள்ளஒரு டீக்கடையில் ஒதுங்கினேன். இரவு மூன்று மணிக்கு டீக்கடையை அடைத்த போது போக்கிடமற்றவனானேன். வேறு வழியின்றி மெல்ல நடந்து வீட்டுக்குத் திரும்பினேன். விடிந்தால் திருமணம். விடிந்தது. 4 விடிந்தால் கல்யாணம். விடிந்தது. கு.ப.ராஜகோபாலனின் விடியுமா என்ற கதையில் உயிருக்குப் போராடும் கணவரோடு பயணிக்கும் மனைவி விடிந்ததும் பயணத்தின் முடிவில் கணவரின் இறப்பு செய்தியைக் கேட்பது போலத் தான் எனக்கும் அன்றைய தினம் விடிந்தது. இறந்தது நான்தான். இது எனது கதை. காதல் கதை, குடும்பக் கதை சொந்த மனைவியைப் பற்றிய கதை. இதில் எவ்வளவு சொல்வது எதைச் சொல்வது எதை மறைப்பது எதை சொல்லக்கூடாது என்று என்னால் யோசிக்க முடியவில்லை. மனதில் பட்டதை எழுதுகிறேன். முடிந்தவரை யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்றுதான் யோசிக்கிறேன். ஆனால் சில கசப்பான உண்மைகளை எழுதும்போது சிலரை அது காயப்படுத்தினால் நான் என்ன செய்ய...முதலில் காயம் பட்டவன் நான்தானே. ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஒருமுறை தான் என்று சமுதாயம் நிர்ணயித்துவிட்டது. அதனால்தான் திருமணங்கள் ஆடம்பரமாக நடத்தப்படுகின்றன. மேள தாளம் ஆடல் பாடல் நகை துணிமணி விருந்து உறவினர்கள் நட்புகள் சூழ என்று அத்தனை மகிழ்ச்சியான தருணங்களும் கொண்டாடப்படுகின்றன. ஆனால் இந்த மகிழ்ச்சி எதையுமே எனது திருமணத்தில் நான் அடையவில்லை ,அதுவும் ஏழு ஆண்டுகளாகக் காதலித்து மணக்கப் போகும் பெண்ணுடன். காலையில் 11 மணிக்குத் திருமணம் .மதியம் வரை சடங்குகள். அய்யர் அக்னி வளர்த்து மாலை மாற்றச் செய்து மங்கல் சூத்திரம் ( தாலி ) கட்டவைத்து ஏழு சுற்று சுற்ற வைத்து இவளை நான் வாழ்நாள் முழுவதும் கண்கலங்காமல் பாதுகாப்பேன் என்று சத்தியப் பிரமாணம் வாங்கிக் கொண்டார். மதியம் பசி நேரம் திருமணச் சடங்குகள் முடிந்தன. ஒருவாய் சாப்பிட்டோம். தூங்கி விட்டோம். மாலையில் செம்மையாக மழை கொட்டியது. மழை என்றால் பேய் மழை .யாரும் திருமணத்துக்கு வரமாட்டார்கள் போல இருந்தது. என் நெருங்கிய நண்பர்கள் சூர்யராஜன், நந்தா, சுதா ,நரசிம்மமூர்த்தி உள்பட பலர் வந்துவிட்டனர். வண்ணை வளவன் எஸ்.அறிவுமணி வந்தார்களா என்று நினைவில் இல்லை. கோட்டு சூட்டுடன் நான் மாப்பிள்ளையாகக் காட்சியளி்த்தேன். என் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. ஏதோ ஒரு துன்பம் ஆட்டிப் படைத்தது. என்னை நம்பி வந்து விட்ட ஒருத்தியை கடைசி மூச்சு வரை காக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். அதற்கேற்ப அவள் தோழி ஒருவர் அண்ணா இது ரொம்பவும் கஷ்டத்தைப் பார்த்து வந்த பொண்ணு .கண் கலங்க வச்சுராதீங்க அண்ணா என்று கோவைத் தமிழில் கண்ணீர் மல்க கைகூப்பி வேண்டிக் கொண்ட போது எனக்கு அழுகை வந்தது. இல்லைம்மா என் உயிருக்கு உயிராக நேசிப்பேன் .பாதுகாப்பேன் என்று சத்தியம் செய்தேன். திருமண வரவேற்பு முடியவும் மழை நிற்கவும் நள்ளிரவு ஆகி விட்டது. தனி அறையில் விடப்பட்டோம். அதுவரை ஒரு பெண்ணைக் கூட நான் தொட்டது இல்லை. ஒரேயொரு முறை வேறு ஒரு பெண்ணின் இடுப்பைத் தொட்டு கையைப் பிடித்து இருப்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இவளை நான் இதுவரை தொட்டது இல்லை என்று அச்சம் பரவியது. படபடப்பு அதிகரித்தது.திருமண மேடையில் கையைப் பிடிக்கும் போதும் எனக்கு மகிழ்ச்சியை விட படபடப்பு அதிகமாக இருந்தது. அன்று இரவு எனக்கு திடீரென காய்ச்சல் பிடித்தது. ஆறேழு நாட்கள் காய்ச்சல் .அவள் படுக்கையில் அமர்ந்து கண்ணீர் விட்டதைக் கண்டேன். பணிவிடைகள் நிறைய செய்தாள். தூக்கம் மயக்கம் என்று ஏழு நாட்கள் கழிந்த பிறகுதான் கணவன் மனைவியாக ஆனோம். திருமணமான புதிதில் முதன் முதலாக அவளை ஒரு சினிமாவுக்கு அழைத்துப் போனேன். சுபாஷ் காய் இயக்கி ஜாக்கி ஷெராப், மீனாட்சி சேஷாத்திரி அறிமுகமாகி நடித்த ஹீரோ என்ற படம் தான் அது. அப்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்த புவனேசுவரி திரையரங்கில் அந்தப் படம் ரீலீசாகியிருந்தது. படம் காதல் கதை பிரிவுக்குப் பிறகு மீண்டும் காதலர்கள் ஒன்று சேர்வார்கள். இனிய பாடல்கள் நிறைந்த படம். ஆனால் நாங்கள் பேசிக் கொண்டே இருந்தோம். படம் பார்க்கவில்லை. அதன் பிறகு நான் ஆறேழு முறை அந்தப் படத்தைப் பார்த்து விட்டேன். நாங்கள் பேசினோம் என்பதும் சரியல்லை. நான்தான் அதிகமாகப் பேசினேன். என் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்றும் எனது கவிதைகள் இலக்கியம் நண்பர்கள் லட்சியம் மார்க்சீய ஈடுபாடு, கடவுள் மறுப்பு பணத்துக்கு எதிரான என் மனநிலை, செல்வந்தர் ஆவது அடுத்தவரின் சுரண்டல் மூலம்தான் என்ற கம்யூனிசக் கருத்தியல் ஆகியவற்றை எல்லாம் ஒரே நாளில் அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தேன். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தலையை ஆட்டிக் கொண்டே துணை இருப்பேன் என்று மட்டும் கூறினாள். ஒரு புறம் என் தம்பி பணம் சம்பாதிக்கலானான். நான் இருக்கிற வேலையை எல்லாம் விட்டு விட்டு இலக்கியக் கூட்டங்களுக்கும் சினிமாக்களுக்கும் போகலானேன். தம்பிக்குத் திருமணம் நடந்தது. அவன் மனைவியை மகாராணி போலவும் என் மனைவியை வேலைக்காரி போலவும் நடத்தினார்கள். யாரும் அவளை பாவம் ஓர் ஏழைப்பெண் என்று நினைக்கவில்லை. மாறாக அவள் உழைக்கவே அழைத்து வரப்பட்டவள் போல அவள் மீது சமையல் முதல் துணி துவைப்பது வரைக்கும் எல்லா சுமைகளையும் திணித்தனர். அந்தக் கோபத்தை அவள் என் மீது கக்க ஆரம்பித்தாள் . ஆறு ஆண்டுகள் வரை சகித்துக் கொண்டிருந்தவள் அப்படி இனி சகிக்க முடியாத சூழலை என் குடும்பத்தினர் ஏற்படுத்தி விட்டிருந்தனர். அதே நேரத்தில் அவள் குடும்பத்தினரும் பெரும் பிரச்சினைகளில் சிக்கியிருந்தனர். நான்கு அண்ணன் தம்பிகள் இடையே ஒரே பெண். தந்தை சம்பாதித்து அழித்து விட்டார். இரண்டு அண்ணன்கள் குடி சூதாட்டம் என்று எல்லா கெட்டப் பழக்கங்களுக்கும் அடிமையாகி விட்டனர். இரண்டு தம்பிகள் படிக்க வழி இல்லை. அவள் அம்மா அப்பா பிரிந்து விட்டனர். கிடங்குத்தெருவில் என் மாமனார் ஒரு கதாபாத்திரமாக வருவார். என் மாமியார் இளம் வயதில் தன் பிறந்த வீடான புனேவிற்கு சென்ற போது பைத்தியம் பிடித்து விட்டது.அந்த சமயத்தில் கருத்தரித்துப் பிறந்தவள் என் மனைவி. ஆதலால் அந்த பாதிப்பு அவளுக்கும் மூளையில் இருப்பதை மிகவும் தாமதமாகவே நான் புரிந்துக் கொள்ளத் தொடங்கியிருந்தேன்.மிக அதிகமான கோபம் கொண்ட ஒரு பெண்ணாக இருந்தாள். எடுத்ததெற்கெல்லாம் எரிந்து விழுவாள். சுட்டெரிப்பாள். நான் சமாதானம் செய்து விடுவேன். ஆனால் அதற்குள் விதி பலமாக விளையாடி விட்டது. எங்கள் இருவருக்கும் இடையே தினமும் எப்போதும் சண்டை மூண்டது.வாக்குவாதம் வசைகள் அதிகரித்தது. ஒரு முரண்பட்ட கலவையாக அவள் ஒரு புதிய தோற்றம் கொண்டு என் முன் நின்றாள். அவளைத் தண்டிக்க முடியாத போது பல சந்தர்ப்பங்களில் நான் என்னையே தண்டிக்கத் தொடங்கிவிட்டேன். 5 எனது மாமியாருக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டதனால் அந்த பாதிப்பு அவர் குடும்பம் முழுவதிலும் இருந்தது. இப்படி எழுதுவதனால் எனது மனைவியை நான் மனநோயாளி என்று கூறுவதாக அர்த்தம் அல்ல, மனநல பாதிப்பு வேறு மனநோய் வேறு.மனநோயாளி என்று என்னை வேண்டுமானால் சொல்லலாம். அவளை சொல்ல முடியாது அத்தனை நல்ல குடும்ப நிர்வாகி. நிதி நிர்வாகம் வீட்டு பராமரிப்பு சுத்தம் பக்தி உழைப்பு அன்பு பாசம் அபாரமான சமையல் கலை எல்லாம் நிறைந்த ஒரு பெண்ணைத்தான் இறைவன் எனக்கு தந்திருக்கிறான். இப்படி மனைவி அமைவதெல்லாம் வரம் தான். ராஜேஷ் கன்னா ஸ்மிதா பட்டீல் நடித்த Aakhir Kyon படத்தில் ஒரு பாடல் வரும்...என் மனைவிக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் .ஏன் படியுங்கள் புரியும். .கணவன் வேறு ஒரு பெண்ணுக்காக தன்னை விட்டுச் சென்றதை நினைத்து துரோகத்தின் வலியால் கதாநாயகி பாடுகிறாள். (லதா மங்கேஷ்கரும் அமித்குமாரும் பாடிய பாடல் இசை ராஜேஷ் ரோசன். பாடலாசிரியர் இன்டிவர்) எதிரிகள் கூட செய்யத் துணியாத ஒரு காரியத்தை என் நண்பன் செய்து விட்டான். உயிர் உள்ள வரை மறக்க முடியாத ஒரு துன்பத்தை பரிசாகத் தந்து விட்டான்.... சுயநினைவை இழக்கச் செய்து கொடுமைகளை திணித்தவன்தான் என்னை பைத்தியம் என்று கூறும் பழியை சுமத்தினான் என்று அவள் பாடுவாள். அவளுக்கு ஆறுதல் கூறும் வகையில் ராஜேஷ் கன்னாவும் பாடுவார்... சொந்த பந்தங்கள்தாம் எப்போதும் துன்பத்தைத் தருவார்கள். அந்தத் துன்பத்தை சில நல்ல அந்நியர்கள் வந்து தாங்கிக் கொள்வார்கள்..... இந்தப் பாடலில் ஸ்மிதா பட்டீல் பாடும் Diwaanagi kaa Diwaanagi kaa phir Hame ilzaam diyaa hain என்ற வரியை கேட்கும் போது என் மனைவி மீது பைத்தியம் மனநலம் பிறழ்ந்தவர் என்றெல்லாம் பழி சுமத்துவது எவ்வளவு பெரிய தப்பு என்று புரியும். அவள் மிகவும் புத்திசாலி. எனக்குக்கூட அவள் அறிவு கிடையாது.பைத்தியம் இங்கு நான்தான். இப்படித்தான் என்னை நான் தண்டித்துக் கொள்ள ஆரம்பித்தேன். எப்போதும் இறந்துவிடவே நினைத்தேன். தற்கொலைக்கான மனநிலையில் இருந்தேன். உடுமலை மஞ்சுளாதேவி ஒரு நல்ல மன நல மருத்துவரைப் பாருங்கள் என்று மருதமலை கோவில் வாசலில் நண்பர்களுடன் அமர்ந்திருந்த போது கூறினார். அப்போது தான் நான் கோவிலுக்குப்போக ஆரம்பித்திருந்தேன். ஆனால் வேகமாக நண்பர்களை குறிப்பாக தோழிகளை இழந்துவிட்டேன். எப்போதும் சாவு பற்றியே சிந்திக்கிற பேசுகிற ஒருவனை யார்தான் சகி்ததுக்கொள்ளமுடியும்? மஞ்சுளாதேவி போன்ற கொள்கையும் ஒழுக்கமும் நிறைந்த நட்புகள் நீடித்திருந்தால் என் வாழ்க்கை சரியான தடத்தில் போயிருக்கும். என் ஆறுதலுக்காகவும் தாம்பத்திய வாழ்வி்ன் போதாமைகளுக்காகவும் நான் வேறு சில பெண்களுடன் நட்பாகப் பழக ஆரம்பித்தேன். ஓரிரு பெண்கள் என்னைக் காதலிப்பதாகவும் கூறினார்கள் . அவர்களும் சில மாதங்கள் பழகியதும் விலகிப் போனார்கள். நீங்கள் ரொம்ப நல்லவராக இருக்கீங்க... ரொம்ப நல்லா பேசுறீங்க... நல்லா அன்பு செலுத்துகிறீங்க நல்லா பழகுறீங்க பின்னர் ஏன் யாரும் உங்களை விரும்பாமல் விலகிப் போறாங்க என்று கேட்ட ஒருத்தியும் உங்களை வாழ்நாள் முழுக்க சிரிக்க வைப்பதுதான் என் லட்சியம் என்று பேசிய ஒருத்தியும் கூட இரண்டு மற்றும் இரண்டு மாதங்களில் எந்தவிதக் காரணமும் கூறாமல் விலகிப்போனார்கள். அது என் ராசி அப்படி என்று எண்ணிக் கொண்டேன்.அதன் பிறகு பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு பெண்ணை க் கூட என் வாழ்க்கையில் நான் அனுமதிக்கவில்லை.இரண்டு மாதங்கள் பழகி விலகிப் போன, என்னை சிரிக்க வைப்பதாக சத்தியம் செய்த ஒருத்தியின் நினைவில் நான் என் மனைவியோடு விலகியும் விலகாமலும் உடனிருந்தும் வாழ்ந்து வந்தேன். அந்தப் பெண் தான் பிறகு கிடங்குத் தெரு துளசியானாள். ஆனால் பல வருடங்களுக்கு முன்பு கோவை ஞானி ஒருமுறை பேசும்போது என் மனைவியைப் பற்றி அவள் குணாதிசயங்கள் பற்றி அவளுக்கும் எனக்குமான பிரச்சினைகள் பற்றி எல்லாம் மனம் விட்டு ப் பேசினேன். அப்போது ஞானி ஒரு அற்புதமான விஷயத்தை சொன்னைார். அய்யா நீங்க உங்கள் பார்வையிலே அவளைப்பார்க்கறீங்க... உங்கள் பிரச்சினைகள் உங்கள் எண்ணங்கள் உங்கள் துன்பங்களைக் கூறுகிறீர்கள் . உங்கள் கவிதைகள் முழுவதும் அது காணக்கிடக்கிறது. ( இன்னும் மி்ச்சமிருப்பவை தொகுப்புக்கு ஞானி அவர்கள் முன்னுரை அளித்தார் ) எல்லாக் கவிதைகளும் உங்கள் துன்பத்தைப் பேசும் விதமாக உள்ளன. எப்போதாவது உங்கள் மனைவியின் பார்வையில் உங்களைப் பார்த்து இருக்கிறீர்களா...?.அவள் எண்ணம் என்ன என்று கவிதையாக எழுதி இருக்கீங்களா...? அப்படி ஒரு கவிதை இல்லை என்றால் இந்தத் தொகுப்பை நிறைவாக எண்ண முடியாது .ஒரு கவிதை அப்படி எழுதி சேர்த்து வெளியிடுங்கள் என்று கூறினார் ஞானி. நெருப்பு போல ஒரு உண்மையை சுட்டெரிக்கும் விதமாக சொல்லி விட்டார் ஞானி. சார்லி சாப்ளின் நினைவுக்கு வந்தார். நம் காலை ஒருவர் மிதித்து விட்டால் அவர் தான் ஸாரி சொல்லனும்.அப்படித்தான் நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அவர் சொல்லும் முன்பு ஸாரி என்று நாம் கூறுவதே மேன்மை என்பார் சாப்ளின். நீங்கள் தெரிந்து என் காலை மிதிக்கவில்லை. தெரியாமல் மிதித்து விட்டீர்கள் .உங்கள் காலால் மிதிபடும் இடத்தில் நான் என் காலை வைத்து இருக்கக் கூடாது . அது என் தவறுதான். என் காலை நீங்கள் மிதிக்கும் விதமாக இருந்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்பது போல பேரன்பு கொண்டு பேசும் சாப்ளின் போல வாழக் கற்றுக் கொண்டேன். தவறுகள் என் மனைவியுடையதாக இருந்த போதும் தண்டனையை நான் வாங்கிக் கொண்டேன். ஞானி கூறியது போல அவள் பார்வையில் அவள் உணர்வுகளுடன் ஒரு கவிதை எழுதினேன். என் முதல் நூலான இன்னும் மிச்சமிருப்பவை (1999 )தொகுப்பில் இடம் பெற்ற அந்தக் கவிதை.........

Tuesday 3 January 2023

புத்தகக் காட்சிகளில் எனது அனுபவங்கள் செந்தூரம் ஜெகதீஷ்

ஒரு புத்தகத்தை வாங்கி அதைப் படிக்காமல் வைத்திருந்தால் அந்த எழுத்தாளரை கொல்வதற்கு சமம் என்று எங்கோ படித்திருக்கிறேன். எனக்கு இப்படி கொலை செய்யும் சந்தர்ப்பங்கள் அதிகமாக வாய்க்கின்றன. வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கை வாசிக்கும் புத்தகங்களை விட பல மடங்கு அதிகம் என்பதால் இப்படி நேர்கிறது. வருடம் தோறும் புத்தகக் காட்சிகளில் புதிய புதிய புத்தகங்கள் வாங்கி வருவதும் அதில் கால்வசி படிக்கும் முன்பே ஓராண்டு ஓடி விடுவதும் தான் நிகழ்கிறது. இன்னும் புத்தகங்கள் வாங்க வேண்டுமா என்ற கேள்வியும் பணத் தட்டுப்பாடும் எழும் போது தான் சற்று வேகம் குறைகிறது. ஆனாலும் புத்தகக் காட்சிகளுக்கு செல்வதை ஓராண்டும் தவறவிட்டதில்லை. புத்தகக் காட்சி நடைபெறும் நாட்களில் கூடுதலான உற்சாகம் கவ்விக் கொள்கிறது. இந்த ஆண்டு சர்வதேச புத்தகக் காட்சியாம்….என்ன சர்வதேசமோ தெரியவில்லை. வெளிநாட்டு தமிழர்கள் எழுதிய நூல்கள் கிடைக்குமா…குறிப்பாக ஈழ எழுத்தாளர்கள்… கழிவறை பார்க்கிங் உணவகங்கள் போன்றவற்றை மேம்படுத்தாமல் ஏசி செல்போன் சிக்னல் வசதி ஏற்படுத்தாமல் அது எப்படி உலகத்தரமான புத்தகக் காட்சி ஆகும் என்றும் புரியவில்லை. நானும் 30 ஆண்டுகளாக எழுதி வந்தாலும் எனது புத்தகங்களுக்கு புத்தகக் காட்சியில் இடம் கிடையாது. எங்கு தேடினாலும் கிடைக்காது. விருட்சம் போன்ற நண்பர்கள் அரங்கில் எப்போதாவது ஒன்றிரண்டு புத்தகங்களை கொடுத்து இருப்பேன். மற்ற அரங்குகளில் புத்தகங்கள் கொடுத்தாலும அதை டிஸ்பிளேவில் கண்ணுக்குத் தெரியும் படி வைக்க மாட்டார்கள். விற்றால் பணமும் தரமாட்டார்கள். கலக்கல் ட்ரீம்ஸ் தமிழ் வெளி வாசகசாலை போன்ற அரங்குகள் இப்போது என்னைப் போன்ற நட்சத்திர அடையாளம் இல்லாத எழுத்தாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக உள்ளன. கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் எனது எட்டு நூல்கள் பல அரங்குகளில் கிடைத்தன. புத்தகக் காட்சியும் நண்பர்களும். கடந்த ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை. ஓய்வு நாள் எனக்கு ஓய்வற்ற நாளாக அமைந்தது. சனிக்கிழமை இரவு ஷிப்ட் முடித்து கண் அசராத அயர்ச்சியுடன் குளித்து காலை 10.30 மணிக்கு சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சூர்யராஜனை பிடித்து விட்டேன். எப்படியோ நிமோஷினியை தவற விட்டு விட்டோம். மெட்ரோ சுரங்க பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காதது முக்கிய காரணம். எப்படியோ அவரும் வந்து சேர்ந்து விட்டார். வழியில் வண்ணை வளவனும் இணைந்தார். புத்தகக் காட்சிக்கு வெளியே இருந்த பழைய புத்தகக் கடைகளில வேட்டையாடினோம். உரத்தநாடு சங்கரலிங்கம் என்று மறைந்த எனது பழைய நண்பரின் மரபுக் கவிதை தொகுப்பை வளவன் எடுத்துக் கொடுத்தார். உரத்தநாடு சங்கரலிங்கம் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் பல ஆண்டுகளாக உதவியாளராக பணியாற்றிய ஓய்வு பெற்ற தமிழாசிரியராவார். சங்கரலிங்கம் மறைந்த பின்னர் அவருடைய மகன் திரு. பூங்குன்றனும் பின்னர் அம்மையாருக்கு உதவியாளராக பணியாற்றியவர். யார் யாருடன் எல்லாம் பழகி இருக்கிறேன் என்று எண்ணினால் பெரும் வியப்பு . புத்தகக் காட்சியில் எழுத்தாளர்கள் அனைவருக்கும் என் பெயர் தெரிகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரி பதிப்பகத்தில் தனது வாசகர்களுக்கு கையெழுத்திட்டு செல்பி எடுப்பதில் பிஸியாக இருந்தாலும் இருக்கையை விட்டு எழுந்து மிகுந்த பிரியமான ஒரு புன்னகையுடன் என்னிடம் சில சொற்களை பேசினார். கடும் உழைப்பு, அபாரமான எழுத்தாற்றல், அரியதான படைப்பாற்றலால் உச்சம் தொட்ட எஸ்.ராமகிருஷ்ணன் தமிழின் முதன்மையான படைப்பாளி. தற்போதைய படைப்பாளிகளில் நான் அவருக்குத்தான் முதலிடம் தருவேன். அவர் படைப்புகள் குறித்து ஒரு நான்கு மணி நேரம் கருத்தரங்கம் நடத்த ஆசை இதே போன்று புத்தகக் காட்சியில் இன்னொரு முக்கிய எழுத்தாளரை சந்தித்தேன். அவர்தான் ஷோபா சக்தி. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் புத்தகங்கள் யாவையும் வாசித்து அவரை ஒரு வாசகராக பின்தொடர்ந்திருக்கிறேன். முதன் முறையாக கருப்புப் பிரதிகள் அரங்கில் அவரை சந்தித்தது எதேச்சையானது என்றாலும் என் வாழ்வில் ஒரு முக்கியமான தருணம். நான் வாங்கிய அவருடைய இச்சா நாவலில் கையெழுத்திட்டு தந்தார்..சென்னையில் ஒரு நாள் அவருடன் உரையாட ஆசை. நேரம் வாய்க்குமா பார்க்கலாம். அடுத்து சந்தித்த முக்கியமான நண்பர் தருமபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்த என் முக்கிய நண்பர்களில் ஒருவரான தங்கமணியால் அறிமுகம் செய்யப்பட்ட அருமையானநண்பர் ஜெயவேல். கிடங்குத் தெருவைப் பற்றி அத்தனை பெரிய ஈடுபாட்டை ஜெயவேலை போல் வேறு யாரிடமும் நான் பார்க்கவில்லை. எத்தனை பெரிய மொழி ஆற்றலுடன் கிடங்குத் தெருவை எழுதி சினிமா கினிமா என எழுதிட்டிருக்கீங்க ,கிடங்குத் தெருவை மீண்டும் வெளியிடுங்கள். புதிய நாவலை எழுதித்தாருங்கள் என்று அன்புடன் கடிந்துக் கொண்டார் ஜெயவேல், அடுத்த புத்தகக் காட்சியில் உங்கள் 2 நாவல்களும் வராவிட்டால் வந்து அடிப்பேன் என்று கூட உரிமையுடன் திட்டினார். அவருடைய அன்புக்கும் வாசிப்புக்கும் தலைவணங்குகிறேன். ஒரு எழுத்தாளனுக்கு இப்படி ஒரேயொரு வாசகன் கிடைப்பதும் பூர்வ ஜென்ம புண்ணியம்தான். நண்பர் சூர்யராஜன் பெரும் நோயிலிருந்து மீண்ட சோர்வால் நடக்கமுடியாமல் அமிர்தா பதிப்பக அரங்கில் நண்பர்களுடன் உட்கார்ந்துவிட்டார். புத்தகமும் வாங்கவில்லை. மனது கவலைப்பட்டது. சூர்யராஜன்மிகச்சிறந்த எழுத்தாளர். பிரபஞ்சன் அவருடைய சிறுகதைகளின் ரசிகர். பல முக்கிய படைப்பாளிகளை ஒரு கணத்தில் கடந்துசெல்லக் கூடிய படைப்பாற்றல், திரைப்பட அறிவு, தேனீயைப் போன்ற சுறுசுறுப்பு கொண்ட ஒரு நண்பர் இப்படி நோய் நிதிப்பற்றாக்குறை, முதுமையால் தளர்வதை என்னால் காண முடியவில்லை. நலமாக வாழ்க சூர்யராஜன் வாசக சாலையில் கவிஞர் மனுஷியையும் அவர் நகமும் சதையுமான அகிலா ஸ்ரீதரையும் சந்தித்தேன். பிரபஞ்சன் இறுதி ஊர்வலம் பாண்டிச்சேரியில் நடைபெற்ற போது பேண்ட்டும் டிசர்ட்டும் போட்டு சின்னஞ்சிறு பெண் போல மழைக்கு ஒதுங்கியிருந்த மனுஷியை சற்று தூரத்தில் பார்த்தேன். பேசவில்லை. பிரபஞ்சன் அடிக்கடி குறி்பபிடும் பெண் படைப்பாளிகள் பெயரில் மனுஷிக்கும் தமயந்திக்கும் முக்கிய இடமுண்டு. பல முறை அவருடன் பேச முயற்சி. பெண்களைக் கண்டால் விலகிவிடும் என்புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும். எங்கே பெரிய பையுடன் வருவீங்கன்னு பார்த்தா மூனே மூணு புத்தகங்களுடன் வருகிறீர்கள் என கேட்டார் மனுஷி. எனக்கொரு இமேஜ் அப்படி இருக்கு எனத் தெரியும். பெரிய பையுடன்தான் வந்தேன். சுமக்க முடியாமல் நண்பரின் புத்தகக் கடையில் வைத்திருக்கிறேன் என்று தெரிவித்துக் கொண்டேன். . நிறைய புத்தகங்களை வாங்கினேன் ,நாஞ்சில் நாடன்,சோ.தருமன், நெய்வேலி ராமலிங்கம், மந்திர மூர்த்தி அழகு, உதயகண்ணன் ,அழகிய சிங்கர், கிருபாகரன், ஆசு என நிறைய நட்புகளுடன் சில மணித்துளிகள். நான்கரை மணிக்கு கண்ணில் தூக்கம் சொக்க விடைபெற்றேன். ஆறு மணிக்கு வீட்டுககு வந்துவிட்டேன். பசி தூக்கம் தனிமை...வாழ்க்கையின் சூட்டுக்கு எத்தனை பெரிய இளைப்பாறுதல் இந்த நட்புகளும் புத்தகக் காட்சியும்.... தொடர்ந்து நான்கு நாட்களாக புத்தகக் காட்சி விஜயம். முதலில் சந்தித்தது கவிஞர் ஈழவாணியை. அவர் பெயரை அறிந்திருக்கிறேன். பார்ப்பதற்கு சற்று குண்டாக இருந்தாலும் அத்தனை இனிமையானவராக இருக்கிறார். அவர் நடத்தும் பூவரசி கலைவிழாக்களுக்கு ஸ்பான்சர்கள் தேடிக் கொண்டிருப்பதாக கூறினார். எனக்கு பத்து ரூபாய் கடன் தரக்கூட ஆளில்லை. நான் யாரை சொல்வேன். ஆனாலும் கேட்டுக் கொண்டேன். அவரை விட்டு நகர மனம் வரவில்லை. இத்தனை நல்ல மனிதத்துவம் ஒரு மனிதர் பெண் உடலில் இருப்பதால் அதை விட்டு எத்தனை காலம் தூரமாக இருந்துவிட்டேன் என நினைத்துக் கொண்டேன். கொஞ்சமாக வயதாகி விட்டதல்லவா...இனி பெண்களுடன் தயக்கமின்றி பேச வேண்டும். அவருடைய புதிய நாவலை விலை கொடுத்து வாங்கினேன். கவிதைத் தொகுப்பை பரிசாக தந்தார். நானும் என் சினிமா நூல்களை அவருக்குப் பரிசளித்தேன். இத்தகைய புதிய நட்புகளுக்கு புத்தகக் காட்சி வழிவகுக்கிறது. அவருடைய புத்தகங்களைப் படித்து விட்டு எழுதுகிறேன். அப்புறம் நண்பர் உதயா கண்ணனை பார்த்தேன். புத்தகக் காட்சியில் பொங்கல் நாளில் கூட கூட்டமில்லை. ஏன் என்று கேட்டால் அவரும் அதே கேள்வியை வேதனையுடன் திருப்பிக் கேட்டார். என் பங்குக்கு அவர் புத்தகக் கடையில் 125 ரூபாய் வியாபாரம் செய்து வந்தேன். புத்தகக் காட்சி பற்றி நிறைய விமர்சனங்கள், கண்டனங்கள் எழுகின்றன. இருக்கட்டும். ஜனநாயகத்தில் எதிர்ப்புக் குரல்களுக்கும் மதி்ப்பளிக்கத்தான் வேண்டும். எனக்கும் சில முரண்பட்ட கருத்துகள் உள்ளன. வெளியே ஒரு பெரிய மேடை இருக்கிறது. நூல் வெளியீடு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள். முதலமைச்சர் முதல் இந்த ஆண்டு தலைதூக்கிய கடைக்குட்டி எழுத்தாளன் வரை எவர் எவரோ அதில் பேசிமுழக்குகிறார்கள். வெளியே பாப்கார்னும் சிக்கன் சூப்பும் சாப்பிடும் கூட்டம் கேட்கிறதா தெரிவியவில்லை. நடந்து களைத்து இளைப்பாற நாற்காலிகளில் உட்காருபவர்கள் கேட்கக் கூடும். நானும் தான் 35 ஆண்டுகளாக நாவல் ,சிறுகதை ,கவிதை, திரைப்படம் ,சிற்றிதழ் சார்ந்து இயங்கி வருகிறேன் .என் பெயரை பபாசி அறியுமா... ஒருமுறையாவது மேடையில் என்னை அழைத்தார்களா என்றால் இல்லை. அத்துடன் 20 ஆண்டுகளாக ஊடகத்துறையில முன்னணி செய்தி சேனல்களில் பணியாற்றியும் நான் அடையாளமற்றவனாக தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் உண்மையான படைப்புச் சூழல் தமிழ்ச்சூழல் .தமிழுக்காக கத்தி கத்தி தொண்டை வெந்தவர்கள் இதற்காக பேச மாட்டார்கள். முரசொலியும் துக்ளக்கும் தான் அவர்களுக்குப் பிரச்சினை. தமிழில் தீவிரமாக இயங்கக் கூடிய ஒரு படைப்பாளி தனது புத்தகங்களை வெளியிடவே பல ஆண்டுகளாகி விடுகின்றன. அவை விற்பனையாகி தீர்வதற்கு பல ஆண்டுகள். 2004ம் ஆண்டு வெளியான எனது கிடங்குத் தெரு நாவல் 2006ம் ஆண்டில் பாஷா பாரதிய சம்மான், தஞ்சை பர்காஷ் இலக்கிய விருது பெற்றது. எத்தனை பேர் அதை படித்தார்கள் .... மிகுந்த வலியுடன் எழுதப்பட்ட ஒருதமிழ் கிளாசிக் அந்தஸ்து மிக்க நாவலுக்கு கிடைக்கக் கூடிய எதிர்வினைகளே இதுதான். கிடங்குத் தெரு தமிழின நூறு சிறந்தநாவல்களில் ஒன்று என நிறைய பேர் பேசுவதை கேட்கிறேன். ஒரு தமிழ்ப் படைப்பாளி வேறு ஒரு வேலை அல்லது தொழிலை நம்பி இயங்க வேண்டியிருக்கிறது. அத்தொழில் அவனை கழுத்தை நெறித்து கொன்றுவிடும் வரை அவன் முடிந்தவரை தனது படைப்புகளை தருகிறான். பிரபஞ்சன் வேறு வேலை இல்லாததால் முழு நேர எழுத்தாளரானார். அவர் உயிரைப் பறிக்க அதுவும் ஒரு காரணமாகி விட்டது.மிகுந்த ஆனந்தமாகவும் மன உளைச்சலுடனும் பிரபஞ்சனை பல்வேறு தருணங்களில் சந்தித்து இருக்கிறேன். புத்தகங்கள் யாருக்காக எழுதப்படுகின்றன. யார் வாசிக்கிறார்கள் முகநூலில் வேறு யார் பிறர் புத்தகங்களை பற்றிய பதிவுகளை போடுகிறார்கள் ..அதனை எத்தனை பேர் படித்து எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான உறவை மேம்படுத்துவது பற்றி நாம் யோசிக்கலாம். இதுான் இன்றைய சிந்தனை. --------------------

புத்தகக் காட்சி 2023 காகிதங்களின் காட்டில் தொலைவோம்...... செந்தூரம் ஜெகதீஷ்

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் புத்தகக் காட்சிகள் நடைபெற்றாலும் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சி ஒரு அறிவுத் திருவிழாதான். புத்தகங்களுடனான உறவு நமக்கு பள்ளிப்பருவத்திலேயே படிக்க கற்றுக் கொள்ளும்போதே ஏற்பட்டு விடுகிறது. புத்தக வாசனை இல்லாமல் யாரும் அறிவு பெற்று விட முடியாது. கல்வியைத் தாண்டியும் படிக்க வேண்டியவற்றின் மீதா ன நமது கவனமும் ரசனையும் தான் புத்தக வாசிப்பின் முதல் அஸ்திவாரம், புத்தகக் காட்சிகளுக்கு குழந்தைகளை அழைத்துப் போவது சாலச் சிறந்தது. சென்னை புத்தகக் காட்சியைப் பொறுத்தவரை மிகப்பெரியது .அதனால் அதற்கு பெரிய மைதானம் தேவைப்படுகிறது. மைதானம் என்றால் மண். மண் பகுதி என்பதால் அடிப்படை வசதிகள் சாலைகள் பார்க்கிங் இடங்களுக்கு எப்போதும் நெருக்கடிதான். தவிர வரும் கூட்டமும் அதிகம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு காயிதே மில்லத் கல்லூரி அமைந்தகரையில் உள்ள ஒரு கல்லூரி என கல்லூரிவளாகத்தில் புத்தகக் காட்சிகள் நடைபெறும் . அதிகமான ஸ்டால்களும் புத்தக அச்சாக்கமும் அப்போது இருக்காது. குறிப்பிட்ட சில பதிப்பகங்கள் மட்டுமே புதிய புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டு வரும் .சாரு நிவேதிதா, ம.வே.சிவகுமார் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் புத்தகக் கட்டுகளை சுமந்துக் கொண்டு புத்தகக் காட்சிகளுக்கு மூச்சிரைக்க ஓடி வரும் காட்சிகள் சகஜம். இப்போது அச்சுத்தொழிலில் அசுரப் பாய்ச்சல் ஏற்பட்டது காரணமாக குடிசைத் தொழில் போல பதிப்பகங்கள் பெருகிவிட்டன. எழுத்தாளர்களே பதிப்பாளர்களாக மாறி விட்டனர். இதனால் அதிகளவில் புத்தகங்கள் ஆண்டுதோறும் வெளியாகின்றன .அதற்கு ஏற்ப ஸ்டால்களும் அதிகரித்துள்ளன. இடத்துக்கான தேவையும் அதிகரித்து புத்தகக் காட்சிகள் கல்லூரி வளாகத்தில் இட நெருக்கடியால் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. அரசு ஒரு முறையான வளாகத்தை அனைத்து வசதிகளுடனும் புத்தகக்காட்சிகள், சர்வதேச திரைப்பட விழாக்கள், நூல்வெளியீடுகள், பொருட்காட்சிகள் நடத்த அமைத்துத் தரலாம். எந்த அரசும் செய்யவில்லை. தீவுத்திடல் அரசியல் மற்றும் கேளிக்கைக் கூட்டங்களுக்கு மட்டும் பயன்படுகிறது. சென்னையின் இட நெருக்கடியால் புத்தகக் காட்சிகள் அவஸ்தையோடு தான் நடைபெறுகின்றன. பதிப்பாளர்கள் புத்தகக்கட்டுகளை சுமந்து ஆட்டோக்களிலும் கார்களிலும் குறுகிய பாதைகளில் செல்வதைக் காண முடியும். வாசகர்களும் பொதுமக்களும் நந்தனம் பகுதியில் நடைபெறும் புத்தகக்காட்சிக்கு பேருந்துகள், மெட்ரோ ரயில் , ஆட்டோக்களில் எளிதாக வந்து சேர்கின்றனர். ஆனால் அவர்கள் வாசலில் இருந்து உள்ளே சென்று வெளியில் வருவது என்பது ஒரு தனி தேசாந்திரப் பயணம். குடி நீர் கழிவறை வசதிகள் கட்டாயம் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியம். மலை உச்சியிலும் சிக்னல் கிடைப்பதாக விளம்பரப்படுத்தும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் புத்தகக் காட்சியில் புகுந்தவர்களுக்கு சிக்னலை நிறுத்தி விடுகின்றன. இந்த ஆண்டு சர்வதேச புத்தகக் காட்சி என்று அரசு அறிவித்துள்ளது. அதற்காகவாவது உலகத்தரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பொதுவாக வசதிகள் ஒருபுறமிருக்க புத்தகக்காட்சிகளின் அவசியம் அதன் சமூகப்பங்களிப்பு பண்பாட்டு தாக்கம் போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புத்தகக்காட்சி சென்னையில் மிகப்பெரியதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆயிரக்கணக்கில் அரங்குகள், லட்சக்கணக்கில் புத்தகங்கள், கோடி்ககணக்கான ரூபாய்க்கு விற்பனை. ஆனால் ஒருமுறை மட்டும் அங்கு போய் முழுதாக சுற்றிப்பார்த்து விட முடியாது. பகுதி பகுதியாக பலமுறைதான் முழு புத்தகக்காட்சியைக் காண வேண்டும். புத்தகக் காட்சியை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம், கல்வி சார்ந்த பிரிவு ஒன்று .இது மாணவர்கள் பேராசிரியர்கள் போன்றோருக்கான இடமாக இருக்கும். அங்கு கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் , கூட்டங்கள், கலந்துரையாடல்கள் ஆலோசனைகள் நடத்தப்படலாம் .முக்கியமாக நீட் போன்ற அசுரனிடமிருந்து அச்சப்படும் உயிர்களை பாதுகாக்கலாம், இன்னொரு பிரிவு இலக்கியத்துக்கு என்று முழுமையாக ஒதுக்கலாம். அதிகளவில் விற்பனையாகும் நவீன இலக்கியங்களுடன் நாளிதழ்கள் வார இதழ்களின் அரங்குகள் இடம் பெறலாம். இலக்கிய ஆர்வலர்கள் வாசகர்கள் அந்தப்பகுதியை மட்டும் சுற்றிப் பார்த்து வெளியே வர அது உதவியாக இருக்கும். தேவையில்லாமல் பல முறை பல தேவையில்லாத இதர பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது . புதிய புத்தக வெளியீடுகள், கவியரங்குகள், உரையாடல் எழுத்தாளருடன் சந்திப்பு புத்தக விமர்சனம் என்று சிறிய அரங்குகள் அமைத்து புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தலாம். மூன்றாவது பகுதியை கேளிக்கை பகுதியாக வைக்கலாம் .உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், கீழடி அரங்கு, தொல்லியல் ஆய்வுகள், கோவில் சிற்ப வரலாறுகள், ஓவியக்காட்சிகள், குறும்படங்கள் திரையிடல் போன்றவை பலரை உற்சாகப்படுத்தும். இவற்றை சில நாட்கள் இடைவெளியில் தனித்தனியாகவும் நடத்தலாம். எல்லாவற்றையும் கலந்து ஒரே அரங்கில் வைக்கும் போது புத்தகக் காட்சியின் இட நெருக்கடி அதிகரிக்கிறது. ஆனால் என்னதான் நெருக்கடி வசதி குறைபாடு இருந்த போதும் தஞ்சைப் பரகாஷ் கூறியது போல விதியின் பின்னால் புறப்பட்டுச் சென்றுவிட்ட 300 பேர் எப்போதும் சிற்றிதழ் இலக்கியம் நாடி புத்தகக்காட்சிகளுக்கு வந்துக் கொண்டே இருப்பார்கள். வெளிநாட்டில் இருந்து வரும் எழுத்தாளர்கள் வாசகர்கள் இளம் வாசகர்கள் என்று இந்த எண்ணிக்கை இப்போது இருமடங்காக இருக்கலாம். இவர்கள் தான் புத்தகக் காட்சிகளின் அடிப்பை சுவாசக்காற்றாக உலா வருகிறார்கள் . ஒருவர் டிராலியில் ஜெயமோகனின் அத்தனை நூல்களையும் வாங்கிக் கொண்டு சென்ற காட்சியைக் கண்டு அதிர்ச்சியும் நமக்கு ஏற்படலாம். மலிவுப்பதிப்பில் புதுமைப்பித்தன், குபரா படைப்புகள், ப.சிங்காரம் நாவல்கள், என்று புத்தகங்கள் புதிய வாசகர்களுக்கு புதையல்களாகக் கிடைக்கின்றன. இந்த ஆண்டு திரைப்படத்தின் வருகையால் பொன்னியின் செல்வன் அதிகளவில் விற்பனையாகும். எப்போதும் போல எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, சுஜாதா ,ஷோபா சக்தி, பா.ராகவன் போன்ற தனி வாசகர்கள் கொண்ட எழுத்தாளர்களின் புதிய நூல்களும் அவற்றை வாங்குவதற்காக வரும் வாசகர்களும் இந்தப் புத்தகக் காட்சியைக் கொணடாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அனைவரிடமும் இந்நேரம் வாங்க வேண்டியநூல்களின் ஒரு பட்டியல் கையில் தயாராக இருக்கும். இந்த முறை புத்தகக் காட்சியில் வாங்கக்கூடிய புத்தகங்கள் அலமாரிகளில் தூங்கிக் கொண்டு அடுத்தப் புத்தகக் காட்சியில் தான் தூசு தட்டும் நிலைமை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது வாசகர்கள் பொறுப்பு. நல்ல புத்தகங்களை அடையாளம் காணுதல் .அவற்றை பதிப்பித்த பதிப்பாளர்களிடமே நேரடியாக சென்று வாங்குதல், வாங்கிய ஒரு மாதத்திற்குள் வாசித்து விடுவது. அதைப்பற்றி பேஸ்புக் அல்லது இணைய இதழ்களில் ஒரு சிறு மதிப்பீடாவது செய்வதுதான் புத்தகக் காட்சி என்ற செயல்பாட்டுக்கு நாம் செய்யக்கூடிய அணில் பங்காகும். சேகரிப்புக்கு என்றும் தனியாக நூல்களை வாங்கி வைக்கலாம், நூலகங்களுக்கு நல்ல நூல்களை வாங்கிப் பரிசளிக்கலாம். புத்தகம் வாங்க முடியாத நண்பர்களை அழைத்துச் சென்று அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கித் தரலாம். புத்தகங்களைத் தவிர ஏராளமான மனிதர்களை சந்திப்பதற்கும் தயக்கங்களை உடைத்து நேரடியாக உரையாடவும் புத்தகக்காட்சி தரும் வாய்ப்பு மகிழ்ச்சிக்குரியது. நல்ல நட்புகளையும் இந்த புத்தகக் காட்சி ஏற்படுத்தித் தருகிறது. ஒரு புத்தகத்தைப் படிப்பது என்பது ஒரு கருத்தியலை சிந்தனையை அனுபவத்தை வாழ்க்கையை உள்வாங்கிக் கொள்வதுதான். அதனுடன் நமது கருத்தியலும் சிந்தனையம் அனுபவமும் வாழ்க்கையும் புத்துணர்வு பெறுகிறது. புத்தகங்களுடனான வாழ்க்கை என்பது தனிமையின் மிகப்பெரிய வரமாக இருக்கும். எப்போதும் எந்த மனநிலையிலும் ஒரு புத்தகத்தின் வாசிப்பு நம்மை இலகுப்படுத்தும் ஒரு செயல்பாடு என்பது என் அனுபவம். புத்தகக் காட்சிகளை ஊக்கப்படுத்துவோம். குறைகள் இருக்கும் .இருந்த போதும் இது ஒரு திருவிழா. அறிவுத்திருவிழா. புத்தகங்கள் இல்லாத வீடுகள் ஜன்னல் இல்லாத வீடுகளை விடவும் இறுக்கமானவை. புத்தகங்கள் காடுகளில் இருந்து வரும் காகிதங்களில் தான் அச்சிடப்படுகின்றன. ஒரு நல்ல புத்தகம் ஒரு நிறைவான கானக அனுபவம்தான். இசையைப் போல மனிதனின் வன்மங்களைத் தணித்து மனத்தை சமன்படுத்த புத்தகங்களால் தான் முடியும். புத்தக விழாக்களைக் கொண்டாடுவோம். ஆறாம் அறிவை வீணடிக்க வேண்டாம். இந்த ஆண்டு புத்தகக் காட்சி நிறைய எதிர்பார்ப்புகளைத் தந்துள்ளது. எத்தனையோ அச்சகங்கள் இரவு பகலாக இயங்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான புதிய படைப்புகள் எழுதப்படுகின்றன. எப்போதும் கையில் ஒரு புத்தகத்துடன் வாழப்பழகுவோம். அதைப் பழக்கப்படுத்த குடும்பத்துடன் வாருங்கள் புத்தகக்காட்சிகளுக்கு. ஒரு அறிவின் சுடர் உங்களுக்கு அருளக் காத்திருக்கும்.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...