Tuesday 4 July 2017

உலக சினிமா -தனிமைக்குத் துணையான காதல்

குமுதம் தீராநதி
 ஜூலை 2017 இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை
HENRY AND JUNE


Image result for henry and june
தனிமைக்கு  துணையான காதல்
செந்தூரம் ஜெகதீஷ்
“Everybody says sex is obscene. The only true obscenity is war.” 
― Henry Miller, Tropic of Cancer

உலகின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் பட்டியலில் தஸ்தயேவஸ்கி, டால்ஸ்டாய், அந்தோன் செக்கவ், பிரான்ஸ் காப்கா, காப்ரியல் கார்சியா மார்க்யூஸ், இவான் துர்க்னேவ், நிக்கோலய் கோகல், ஓ ஹென்றி, மாப்பசான் என பட்டியலிட்டுக் கொண்டே போனாலும் யாருடைய பட்டியலிலும் சட்டென இடம் பிடிக்காத சில பெயர்கள் உண்டு. அதில் முக்கியமானவர்கள் டி.ஹெச்.லாரன்சும் ஹென்றி மில்லரும். இதற்கு காரணம் இவர்கள் பச்சையாக செக்ஸைப் பற்றி கூசாமல் எழுதியவர்கள். கிறித்துவ விழுமியங்களுடன் வந்த விமர்சகர்களும் இடதுசாரி உணர்வுடன் வந்த நவீன படைப்பாளிகளும் இவர்களைப் புறக்கணி்த்தனர். ஆபாசம் என்று ஒரே வார்த்தையில் இந்த மகத்தான மேதைகள் புறக்கணிக்கப்பட்டார்கள் . ஹென்றி மில்லரின் நூல்கள் சுமார் 27 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டிருந்தன. 
செக்ஸ் என்பது ஆபாசமல்ல , போர்தான் மிகப்பெரிய ஆபாசம் என்பார் ஹென்றி மில்லர்
மார்சல் பிரவுஸ்ட்டையும் டி.ஹெச் லாரன்சையும் நேசிக்கும் இளம் பெண் எழுத்தாளர் அனாய்ஸ் நின். பாரீசில் தமது கணவரான ஹ்யூகோவுடன் வாழ்கிறார். இலக்கியம் வழியாக தனது செக்ஸ் அனுபவங்களை அவர் எழுத முயற்சிக்கிறார். அவரது வீடு முழுவதும் நிர்வாணப் படங்கள் ,ஓவியங்கள் .கணவர் தெரபிக்கு அழைத்துச் செல்கிறார். தெரபி செய்யும் நிபுணர் திடீரென  அனாய்ஸ் நின்னை முத்தமிடுகிறார். இதை அவள் தனது கணவரிடம் கூறுகிறாள். முத்தம் தானே பரவாயில்லை என்கிறார் கணவர். ஆனால் மீதிக்கதையை அவள் கணவரிடம் கூறவில்லை.
ஹ்யூகோ ஒருநாள் ஹென்றி மில்லரை அழைத்து வருகிறார். ஹென்றி வளர்ந்து வரும் எழுத்தாளர். அவருக்கு எழுத முடிகிறதே தவிர அதை அச்சடித்து புத்தகமாக்க வசதியில்லை. அவரிடம் டி.ஹெச்.லாரன்ஸ் பற்றி அனாய்ஸ் நின் பேசுகிறாள். லாரன்ஸ் செக்சை விவிலியம் போல் எழுதுகிறார். பிறப்பு இறப்பு போல் செக்சும் இயல்பான ஒரு விஷயம் என்பது ஹென்றி மில்லரின் தர்க்கம்.இந்த ஹென்றியோ சாதாரண மனிதனின் பாலியல் பிறழ்வுகள் பற்றி கூற விரும்புகிறான் என்கிறார் மில்லர். உடலுறவு ஒரு சுய விடுதலையாக வேண்டும் என்பதற்காக எழுதுவதாக கூறுகிறார் ஹென்றி மி்ல்லர்.
ஹென்றி மில்லருக்கு அனாய்ஸ் நின்னின் சைக்கிளைப் பிடிக்கிறது. ஹ்யூகோ தனது சைக்கிளை ஹென்றிக்கு பரிசாக தருகிறார். ஹ்யூகோ குதிரை வண்டியில் சவாரி செய்ய சைக்கிளில் அனாய்ஸ் நின்னுடன்  ரேஸ் விடுகிறார் ஹென்றி
ஹென்றியை ரசிக்க ஆரம்பிக்கிறாள் அனாய்ஸ் . தன்னைப் போலவே இருப்பதாக கருதுகிறாள். தனது கணவரின் ஆண்மையை விட தனது பெண்மைத்தன்மை மேலோங்கி இருப்பதை உணரும் அவள் அந்தப் பெண்மையை அடக்கி ஆளும் ஒரு ஆண்மகனுக்காக ஏங்கவும் செய்கிறாள். ஹென்றி தன் மனைவி ஜூன் குறித்து அவளிடம் பேசுகிறான். அவளுக்கு ஒரு கள்ளத் தொடர்பு இருந்தது. அதை ஹென்றி அறிந்ததும் அவள் அவரை விட்டு விலகிச் சென்று விட்டாள். போகும் முன்பு ஹென்றியிடம் நீ ஒரு எழுத்தாளனாக தோற்றுவிட்டாய். அழகு உனக்கு ஒரு ஜோக் என சண்டை போடுகிறாள். 
விரக்தியி்ல் குடித்து மயங்கும் ஹென்றி விலை மாதரிடம் சென்று தனது இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்.அப்போதுதான் ஹென்றி Tropic of Cancer என்ற நாவலை எழுதி வருகிறார். இதை தாம் அச்சிட பணம் உதவி செய்வதாக கூறுகிறாள் அனாய்ஸ். ஒரு புறம் ஹென்றிக்கும் அனாய்சுக்கும் நட்பு இறுகுகிறது. மறுபுறம் அனாய்ஸ் ஹென்றியின் மனைவி ஜூனை சந்திக்கிறாள். அவருடன் படுக்கையை பகிர்ந்துக் கொண்டாயா என கேட்கிறாள் ஜூன். இல்லை நட்புதான் என்கிறாள் அனாய்ஸ் .இதை ஜூன் சாதகமாக்கிக் கொண்டு தனது கணவரின் தோழியை ஓரு பாலின சேர்க்கைக்கு அழைக்க அதற்கு அனாய்ஸ் இணங்குவதற்கு ஒரு காரணம் இவள் ஹென்றியின் படுக்கையை பகிர்ந்துக் கொண்ட மனைவி என்பதுதான்.
நாம் ஏன் தயக்கங்களால் நிரம்பியிருக்கிறோம்? நம்மை இழந்துவிடுவோம் என பயப்படுகிறோமா?நம்மை இழக்காமல் நம்மை கண்டுபிடித்துக் கொள்வதற்கு எந்த வித வழியும் இல்லை என்ற ஹென்றி மில்லரின் வரிகள் அவளுக்கு நினைவில் எழுகின்றன.
ஹென்றி மீது வளரும் தனது காதலை மறைக்க முடியாமல் தவிக்கும் அனாய்ஸ் ஒரு கட்டத்தில் ஹென்றியின் இச்சைக்கு இணங்குகிறாள். ஹென்றிக்கும் அனாய்ஸ் நின்னின் கட்டுரைகளைப் படித்து டி.ஹெச். லாரன்ஸ் மீது அளவுக்கு அதிகமான மரியாதை எழுகிறது. லாரன்சை நான் புரிந்துக் கொள்ளத் தவறிவிட்டேன் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார்.
 ஒரு பெண்ணாக மலர்ந்த காலம் வலியும் துன்பமும் மிக்கது என்று தனது டைரியில் பதிவு செய்கிறாள் அனாய்ஸ் . நான் வலிக்காக அழவில்லை, வலியை இழக்கத் தொடங்கி விட்டதால் அழுதேன் என்றும் அவள் எழுதுகிறாள். வலியுடனே வாழப்பழகி விட்ட நான் அந்த வலியில்லாத வெறுமையை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறுகிறாள் அனாய்ஸ் 
ஒரு கலைஞன் கலைஞனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்குத் தேவை தனிமைதான் என்று கூறும் ஹென்றி அனாய்சிடம் இருந்து விலகியிருக்க முடிவு செய்கிறார். தனது கணவருக்கு துரோகம் இழைக்கும் குற்ற உணர்ச்சியால் அந்த உறவைத் துண்டித்து விட அனாய்சும் முடிவெடுக்கிறாள்.  நான் தனியாகவே இருக்க விரும்புகிறேன். என் வெட்கத்தையும் ஏமாற்றத்தையும் தனிமையில் அசை போட விரும்புகிறேன். நான் சூரிய ஒளியையும் வீதிகளில் கிடக்கும் கற்களையும் எந்த துணையும் இல்லாமல் ரசிக்க விரும்புகிறேன். எந்த உரையாடலும் எனக்குத் தேவையில்லை. என்னுடன் நான் மட்டும் முகத்திற்கு முகம் நேராக இருக்க வேண்டும். எனது இதயத்தின் இசை மட்டும்தான் எனக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று தனது நாவலில் எழுதுகிறார் ஹென்றி மில்லர். 
வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கிறது. நாம் கோழைகளாக இருக்கிறோமா, ஹீரோக்களாக மாறுகிறோமா என்று அது கவலைப்படுவதில்லை. அதற்கு எந்த வித ஒழுக்கமும் இல்லை. அதனை நாம் புரிந்துக் கொண்டால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வோம். எவ்வித கேள்வியும் எழுப்ப மாட்டோம். நாம் எதை காண மறுக்கிறோமோ எதை பார்க்கக்கூடாது என்று கண்களை மூடிக் கொள்கிறோமோ எது நம்மால் மறுக்கப்படுகிறதோ நம்மை இழிவுபடுத்துவதாக நினைக்கிறோமோ அதுதான் கடைசியில் நம்மை தோற்கடித்துவிடுகிறது. அருவருப்பாகவும் வலி மிகுந்ததாகவும் தீயதாகவும் இருக்கும் ஒன்றே அழகாகவும் பலமாகவும் மாறக்கூடும். மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரக்கூடும் திறந்த மனத்துடன் அதனை நாம் எதிர்கொள்வதே சிறந்தது.அத்தகையோருக்கு ஒவ்வொரு கணமும் பொன்னானது.
இவ்வாறு நினைக்கும் ஹென்றி மில்லருக்கு தனிமையும் காமத்தின் களியாட்டத்தின் இடையே தேவைப்படுகிறது. தனித்திருத்தலும் துணை தேடி அலைதலுமே அவருக்கு வாழ்வாக பரிணமிக்கிறது. இலக்கு என்பதை அடைவது அல்ல தேடிக் கொண்டிருப்பதே என்று அவருடைய தேடல் தொடர்கிறது. 
அனாய்ஸ் நீ வரும் போது காலம் கனவாய் கடந்து விடுகிறது. நீ போகும் போதுதான் உன் இருப்பை நான் பூரணமாக உணர்கிறேன். ஆனால் அது காலம் கடந்த நினைப்பு. நீ என்னை விட்டு போய் விட்டாய், முதன் முறையாக உறவில் நேர்மையாக இருக்கும் ஒரு பெண்ணை நான் கண்டிருக்கிறேன். நீ என்னை ஏமாற்றலாம் என்று கூட எனக்கு நீ அனுமதியளித்தாய். தோட்டத்தின் வழியாக நடந்து செல்லும் போது நான் அதனை நினைத்துக் கொள்கிறேன். ஒரு போதும் உனக்கு துரோகமிழைக்க என்னால் முடியாது. பெண்கள் விஷயத்தில் நான் ஒழுக்கமானவன் அல்ல.  நான் பெண்களை நேசிப்பவன். அல்லது வாழ்க்கையை நேசிப்பவன். ஏதோ ஒன்று எது எனத் தெரியாது. ஆனால் நீ சிரித்துக் கொண்டேயிரு அனாயிஸ் ,எனக்கு உன் சிரிப்பு மிகவும் பிடிக்கிறது. நீ மட்டும்தான் அறிவுபூர்வமான சகிப்புத்தன்மை கொண்ட பெண்ணாய் தெரிகின்றாய். உன்னிடம் என்ன எதிர்பார்ப்பது என்று எனக்குத் தெரியாது ஆனால் இது ஏதோ ஒரு மாயம் போல் நிகழ்ந்து விட்டது. நான் உன்னிடம் எல்லாவற்றையும் கேட்க போகிறேன். ஏனென்றால் நீ அதனை ஊக்குவிக்கிறாய்.நீ நிஜமாகவே பலசாலியான பெண்தான். சாத்தியமற்றதையும் நீ ஊக்குவிக்கிறாய் என்றெல்லாம் ஹென்றிமில்லர் அனாய்ஸ் நின்னுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அனாய்ஸ் நின்னின் உதவியால் ஹென்றி மி்ல்லரின் முதல் நாவல் டிராபி்க் ஆப் கேன்சர் அச்சாகிறது. அத்துடன் ஹென்றிக்கும் அனாய்சுக்குமான காதல் உறவு முடிகிறது. ஆனால் இருவரும் காலம் முழுவதும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அனாய்ஸ் தன் கணவரிடம் திரும்பிச் செல்கிறாள் .கணவரிடம் நடந்ததைக் கூறி தான் அவரைத்தான் காதலிப்பதாக கூறுகிறாள். ஹென்றியுடன் பழகியது அவள் தனக்கான தேடலின் ஒரு பகுதி என்பதை அவரும் புரிந்துக் கொள்கிறார்.
அனாய்ஸ் நின்னும் அவள் கணவர் ஹ்யூகோவும் குதிரை வண்டியில் செல்ல ஹென்றிமில்லர் தனது சைக்கிளில் வண்டியுடன் ரேஸ் விட்டு அதனை கடந்து செல்வதுடன் படம் முடிகிறது.
இப்படத்தில் பிரெட் வார்ட் ஹென்றி மில்லராக நடித்து அவருடைய உடல் மொழியை மிகச்சிறப்பாக கையாண்டிருந்தார்..உமா த்ரூமேன் மில்லரின் மனைவி ஜூனாகவும் மாரிய டி மெடிரோஸ் என்ற நடிகை அனாய்ஸ் நின் பாத்திரத்திலும் தோன்றியிருந்தனர். இப்படத்தில் சில புகழ் பெற்ற பாடல்களும் கவிதை வரிகளும் இடம் பெற்றன. செக்ஸை மையமாக வைத்த படம் என்றாலும் நீலப்படங்கள் போல் இல்லாமல் இலக்கிய விவாதம் கூடிய படமாக அமைந்ததால் இதற்கு மரியாதை கிடைத்தது.சில காட்சிகள் நிர்வாண உடலுறவு காட்சிகளாக அமைந்து விட்டதால் படத்திற்கு ஆர் என்ற தணிக்கை சான்று தரப்பட்டது. காப்மேன் என்ற இயக்குனர் இதனை இயக்கியிருந்தார். இந்த காப்மேன் தான் மிலன் குந்தரோவின் நாவலையும் படமாக்கியவர். 
ஹென்றி-அனாய்ஸ்-ஜூன் உறவை மையமாக வைத்து அனாய்ஸ் நின் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் இது. இப்படம் மிகச்சிறந்த ஒளி்ப்பதிவுக்காக ஆஸ்கருக்கு பரிந்துரை  செய்யப்பட்டது
ஆனால் ஆபாசம் எனக்கூறி இப்படத்தை ஹென்றி மில்லரின் சொந்த நாடான அமெரிக்கா 27 ஆண்டுகள் தடை செய்திருந்தது.  ஆப்பிரிக்கா போன்ற நாடுகளும் தடை விதித்தன. . காலம் தடைகளை நீக்கியது. ஹென்றி மில்லரை ஆபாச எழுத்தாளராக பார்த்தவர்கள் அவருக்கான இலக்கிய மரியாதையை புரிந்துக் கொண்டனர். அப்படம் வசூலை வாரிக்குவித்தது. 
ஹென்றி மில்லரின் நாவல்கள் டிராபிக் ஆப் கேன்சர் மட்டுமின்றி டிராபிக் ஆப் கேப்ரிகார்ன், நெக்சஸ், பிளக்சஸ், செக்சஸ் போன்றவையும் சரி இலக்கிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தடம் தப்பிய பாதத்தின் நடனமாயிருந்தாலும் அது ஒரு பரிசுத்தமான இலக்கிய ஆன்மாவின் நடனம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

-----------------------
Image result for henry and june


Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...