Wednesday 30 August 2017

பயணம்-9 மதுரை

வரும் செப்டம்பர் 2017  3 மற்றும் 4 தேதிகளில் மதுரை, திருச்சியில் நண்பர்கள் என்னை சந்திக்கலாம். மதுரை தமுக்கம் மைதானத்தில் 3ம் தேதி புத்தகக் கணகாட்சியில் இருப்பேன். 4ம் தேதி பிற்பகல் திருச்சியில் மீண்டும் 5ம் தேதி சென்னையில்

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் வேண்டி்க கொண்ட பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து நான் பிறந்ததாக என் அம்மா கூறுவார். ஆகவே நான் மீனாட்சி வரம் தந்து பிறந்த பிள்ளை. இதுவே மதுரைக்கும் எனக்குமான உறவை மேலும் பலப்படுத்துகிறது..
மதுரைக்கு தொழில்நிமித்தமாகவும் பயணமாகவும் பல முறை போயிருக்கிறேன் .நண்பராக ஜெயமோகன் அறிமுகமானதும் அங்குள்ள அகரம் புத்தக கடையில்தான். மதுரை நான்கு மாட வீதிகளில் சுற்றி வந்து அங்குள்ள பழைய புத்தகக் கடைகளில் பல புதையல்களை கண்டெடுத்திருக்கிறேன். திருநெல்வேலி அல்வாவும் மதுரை ஜிகர்தண்டாவும் வில்லாபுரம் மலையாள பிட்டு படங்களும் ஒவ்வொரு முறையும் புதிய அனுபவங்களைத் தந்துள்ளன. மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையங்களிலும் இரவு முழுதும் தங்கியிருந்த அனுபவங்களும் உண்டு. கையில் போதிய பணம் இல்லாமல் இரவில் ரோட்டோர கடைகளில் சுடச்சுட இட்லி சாப்பிட்டு விடிய விடிய தூங்கா நகரான மதுரையில் சுற்றித்திரிந்திருக்கிறேன்.
மதுரையில் எனக்குப் பிடித்த மற்றொரு இடம் அழகர்கோவில், அங்குள்ள குரங்குகள் நீண்ட நாள் உறவுகள் போல் அத்தனை இணக்கமாக இருந்தன.

மலையில் பழமுதிர்ச்சோலையில் குடியிருக்கும் குமரனைப் பார்க்கப் போகையிலும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா என்ற பாடலைப் பாடியபடி செல்லும் போதும் மனம் மகிழ்ச்சியில் துள்ளியிருக்கிறது.
மதுரையை குறித்து தமிழ்சினமாக்கள் ஏற்படுத்திய பிம்பம் சற்று அச்சமூட்டும். ஆனால் மதுரை அத்தனை ஆபத்தான நகரம் இல்லை.

இம்முறை மதுரை போன போது அங்கு புத்தகக் கடைகள் குறைந்திருந்தன. இருக்கும் சில கடைகளிலும் கல்லூரி பாடப்புத்தகங்களே அதிகமாக காணப்பட்டன. மதுரை போய் புத்தகம் வாங்காமல் திரும்பிய பயணம் அனேகமாக இதுதான்.

புட்டு, இடியாப்பம், இட்லி, தோசை, போன்ற உணவு ருசிகளில் குறையில்லை .ஆனால் விளக்குத்தூண் ஜிகர்தண்டாவுக்கு 60 ரூபாய் கொடுத்தும் ஒரு கரண்டி பாஸந்தி போட மாட்டேன் என்று கடை ஊழியர் பிடிவாதம் பிடித்தார். கூடுதலாக பணம் தருவதாக கூறிய போதும், கேமரா இருக்கு சார் போட முடியாது என்றும் அவர் பயத்துடன் கூறினார். அது ஸ்பெஷல் ஜிகர்தண்டா என்று கூறி 100 ரூபாய்க்கு டோக்கன் வாங்கினால்தான் பாஸந்தி போடுவாராம். அது வெளியூர்க்காரனான எனக்கு எப்படித்  தெரியும் ? 40 ரூபாய் தருவதாக கூறிய போதும் மாற்றத்தக்கது அல்ல என்று கூறிவிட்டார்.
பாஸந்தி இல்லாத ஜிகர்தண்டா என்ன ஜிகர்தண்டா பணம் சேர சேர வணிகர்களுக்கு திமிரு அதிகமாகி விடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். சாதாரண சிறிய கடையாக விளக்குத்தூண் பகுதியில் பாஸந்தியுடன் கூடிய ஜிகர்தண்டாவை 20 ரூபாய்க்கு சாப்பிட்ட நினைவு இன்றும் இனிக்கிறது.சுகர் வேறு பார்டர் லெவலை தாண்டி பயமுறுத்துகிறது இத்துடன் ஜிகர்தண்டாவுக்கு குட்பை. சென்னையிலும் இப்போது ஜிகர்தண்டா கடைகள் முளைத்துள்ளன .ஆனால் மதுரையை விட அது எந்த வ கையிலும் மேன்மை இல்லை.


Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...