Tuesday 19 January 2016

அரிதினும் அரிது கேள் 24- ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒருதுளி வஞ்சமில்லை

தியாகம் படத்தில் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல எனக்கு எப்போதும் பிடித்த மிக அழகான பாடல் . இளையராஜா இசையில் கவியரசு கண்ணதாசன் எழுதிய சில அர்த்தம் மிக்க சிவாஜி பாடல்களில் இதுவும் ஒன்று என்றாலும் இதைவிட சிறந்த பாடலை இக்கூட்டணி தரவி்ல்லை. வேண்டுமானால் கண்ணே கலைமானேவை அடுத்ததாக சேர்த்துக் கொள்ளலாம்.
தியாகம் திரைப்படம் சிவாஜியின் நடுத்தர வயதில் வந்த படம். எனக்கும் இப்போது கிட்டதட்ட அந்த வயது. சிவாஜியைப் போல என்னை அடையாளப்படுத்திக் கொள்ள எனக்கு இப்படமும் பாடலும் பலமுறை உதவியிருக்கிறது. அவரைப் போலவே சட்டையணிந்து தலையை வாரிக்கொண்டு அவர் மோட்டார் போட்டில் நின்று பாடும் அதே ஸ்டைலில் பலமுறை நானும் செய்து பார்த்திருக்கிறேன்- படகு இல்லாமலே
காதலியைப் பிரிந்த ஒருவர்- தவறாகப் புரிந்து பிரிந்து சென்ற காதலிக்கு தன்னிலை அளிக்கும் பாடல் இது.
இந்தியில் அமானுஷ் என்ற படம் உ்த்தம் குமார் என்ற அருமையான வங்காள நடிகரும் ஷர்மிளா தாகூரும் நடித்தது.இசை ஷியாம்லால் மித்ரா, இயக்கம் சக்தி சாமந்தா
 இதன் ரீமேக்தான் தமிழில் தியாகம், சிவாஜியும் லட்சுமியும் அத்தனை பொரு்த்தமாக பொருந்திப் போனார்கள்
இந்தியில் கிஷோர் குமார் பாடிய தில் அய்சா கிசி நே மேரா தோடா என்ற பாடலின் தமிழ் வடிவம் தான் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு. ஆனால் கண்ணதாசனின் வரிகள் இந்தியைத் தழுவாமல் தமிழுக்கென உள்ள கவிச்சுவையையும் காவியச்சுவையையும் தந்துவிட்டது.இளையராஜா-கண்ணதாசன்-டிஎம்.எஸ்-சிவாஜி காம்பினேசனி்ல் வந்த அற்புதமான பாடல் இது

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா 



இதே படத்தில்

உலகம் வெறும் இருட்டு நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு என்ற பாட்டும் டப்பாங்குத்து பாணியில் ஒரு தத்துவப்பாட்டு
ஆனால் எஸ்.ஜானகி பாடிய வசந்தகாலக் கோலங்கள் பாட்டும் ஒரு தாலாட்டும் கவிதை
வசந்தகாலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
அலையில் ஆடும் காகிதம் அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்கும் என்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று அதி்ல் இரண்டும் உண்டல்லவா......

Wednesday 13 January 2016

இந்திய சினிமா -Purab aur paschim









கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

குமுதம் தீராநதி இதழில் ( ஜனவரி 2016) வெளியான எனது கட்டுரை

இந்திய சினிமா
கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன – PURAB AUR PASCHIM
செந்தூரம் ஜெதீஷ்
நமது சுதந்திர தினம் குடியரசு தினம் போன்றவற்றை நாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். நூற்றாண்டு காலம் வெள்ளையனுக்கு அடிமையாக இருந்த ரணங்களும் வலிகளும் நமது முன்னோர்கள் வழியே நமக்குத் தெரிய வந்துள்ளன.
நாட்டின் மூவர்ணக் கொடிக்கு தனி மரியாதை உண்டு . ஆனால் இந்தக் கொடியை ஏற்றுவதற்கு கனவு கண்ட மகாத்மா காந்தி முதல் மகாகவி பாரதி வரை பலரும் அந்தப் பொன்னாளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
சுதந்திர இந்தியாவில் நாம் நமது தியாகிகளை மறந்து விட்டோம். அவர்களை கேலியாக பார்க்கும் வகையில் குரூரமானவர்களாகவும் மாறிவிட்டோம். ஆனால் பாரத மாதாவின் பாதம் பணிந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி வரும் படைப்பாளிகளையும் நாம் பெற்றுள்ளோம்.
அத்தகைய ஒரு படைப்பாளிதான் மனோஜ்குமார், நடிகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், தயாரி்ப்பாளர், இயக்குனர் என்ற பன்முக ஆற்றல் கொண்டவரான மனோஜ்குமார் முதலில் நடிகராகத்தான் அறிமுகம் ஆனார்.
ஆலயமணி படத்தின் இந்திப் பதிப்பு ஆத்மி என தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்தில் மனோஜ்குமார் தமிழில் எஸ்.எஸ்.ஆர். ஏற்ற வேடத்தை எடுத்துக் கொண்டார். சிவாஜி வேடத்தில் நடித்தவர் திலீப் குமார். சரோஜாதேவி வேடத்திற்கு வகிதா ரஹ்மான்.
நீல்கமல் , வோ கோன் தீ( தமிழில் யார் நீ ) போன்ற பிரபலமான திரைப்படங்களில் நாயகனாக நடித்த மனோஜ்குமாருக்குள் ஆன்மீகச் சிந்தனையும் தேச பக்தியும் ஊறியிருந்தது. இதை அவர் இயக்கிய உப்கார் படம் மூலம் நாம் அறிந்தோம். அந்தப் படத்தில் விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களால் இந்த நாடு சுபிட்சமாக இருப்பதாக மனோஜ்குமார் தெரிவித்தார். கஸ்மே வாதே பியார் என்ற பாடலை மன்னாடே குரலில் பிரானை பாட வைத்தார். பிரான் அப்போது வில்லன் நடிகர். ஆனால் அவருக்கு குணச்சித்திரப் பாத்திரம் தந்து, பாடலையும் பாட வைத்து புதுமை செய்தார் மனோஜ்குமார். கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையமைத்த இப்பாடல் தமிழில் இளையராஜா இசையில் பாலுமகேந்திராவின் நீங்கள் கேட்டவை படத்தில் ஜேசுதாஸ் குரலில் வைரமுத்துவின் வரிகளில் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் மேகங்கள் என்று இடம் பெற்றது.
உப்கார் படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடல் மேரி தேஷ் கி தர்த்தி இந்த பாடலுக்கு கோரஸ் உண்டு. இந்த கோரஸ்தான் பின்னர் மனோஜ்குமாரின் எல்லா தேசபக்தி படங்களுக்கும் தீம் மியூசிக்காக மாறியது. மனோஜ்குமாருக்கு முகமது ரபியும் முகேஷூம் பின்னணி பாடி வந்த நிலையில் புதிய பொருத்தமாக அவருக்கு மகேந்திர கபூரின் குரல் பொருந்தியது. பாரத் என்ற பெயரையும் தனது எல்லாப் படங்களிலும் தமக்கு அவர் சூட்டிக் கொண்டார்..
மனோஜ்குமார்-கல்யாண்ஜி ஆனந்த்ஜி-மகேந்திர கபூர் என்ற இந்தக் கூட்டணி அடுத்து வந்த பூரப் அவுர் பச்சிம் படத்தில் சக்கை போடு போட்டது.
இந்தப் படம் இந்தியாவை நேசிக்கிற ஒரு இளைஞனுடையது.படத்தின் தொடக்கம் கருப்பு வெள்ளையில் வெள்ளையர் ஆட்சியில் சில காட்சிகளை சித்தரிக்கிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகளை வேட்டையாடிய பிரிட்டிஷ் சிப்பாய்கள் மனோஜ்குமாரின் அப்பாவை தேடி வரும்போது சித்தப்பாவான பிரான் அண்ணனை காட்டிக் கொடுத்து தேச துரோகியாக மாறுகிறார். இதனால் அவருக்கு நிறைய பணம் கிடைக்க வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்கிறார். மனோஜின் தந்தை போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் காட்சியுடன் ஒரு பக்தி பாடல் ஒலிக்கிறது. லதா மங்கேஷ்கர், மகேந்திர கபூரின் இனிய குரல்களில் ஒலிக்கும் இந்த பாடல் ஆரத்தி வகையை சேர்ந்தது. இன்றும் இந்தியாவில் உள்ள பல நூறு கோவில்களிலும் பல கோடி பக்தர்களின் இல்லங்களிலும் இந்த ஆரத்தியை இதன் இசையை பின்பற்றி திருப்பதி பாலாஜி முதல் சீரடி சாய்பாபா வரை பல ஆரத்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
ஓம் ஜெய ஜெகதீஷ ஹரே சுவாமி ஓம் ஜெய ஜெகதீ் ஹரே
என்ற இந்த ஆரத்தி பாடலை இன்றும் ஏதேனும் ஒரு வடமாநில கோவிலில் ஒலிப்பதைக் கேட்க முடியும்.
இந்தப் பாடலுடன் சிறுவனாயிருந்த பாரத் பெரியவனாக மனோஜ்குமாராக காட்சியளிப்பான்.
இடைச்செருகலாக மற்றொரு காட்சி. பிரிட்டிஷ் கொடி கருப்பு வெள்ளையில் இறக்கப்பட்டு வண்ணத்தில் சுதந்திர இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு ஆரத்தி தொடர்கிறது.
வெளிநாட்டில் அதாவது லண்டனில் படிக்கச் செல்லும் பாரத் அங்கு ஆங்கிலேய கதாபாத்திரத்தில் ஊறிய கதாநாயகி சாய்ரா பானுவை சந்திக்கிறான், சாய்ரா தொடை தெரிய குட்டை ஸ்கர்ட் அணிந்து நடனமாடுகிறார், பாய் பிரண்ட்சுடன் டேட்டிங் செல்கிறார். மது அருந்துகிறார். புகை பிடிக்கிறார். இந்தியாவை மனதார வெறுக்கிறார். இது அவரது தந்தையான மதன்புரிக்கு மிகவும் மனவேதனையளிக்கிறது. மகளை இந்தியப் பெண்ணாக பார்க்க அவர் ஆசைப்படுகிறார். அதற்கு பாரத் சரியான ஆளாக வந்து சேர்கிறான். அவன் லண்டன் தேம்ஸ் நதிமீதான பாலத்தின் அடியில் நின்று அங்குள்ள ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹிப்பிகளுக்கு ரகுபதி ராகவ ராஜாராம் பதித்த பாவன சீதாராம் என பாடல் சொல்லித் தருகிறார்.
பாரத்தின் இந்தியப் பற்றை அங்கு வாழும் தேச துரோகி பிரான் கிண்டலடிக்கிறார். இந்தியாவில் வறுமைதான் உள்ளது. வாழ்க்கை இல்லை என்கிறார் பிரான். இந்தியா இஸ் நத்திங் பட் சீரோ என்று பேச அதையே பாடலாக்குகிறார் பாரத்


இந்தியா உலகிற்கு சீரோவை தந்த பிறகுதான் உலகத்திற்கு எண்ணவே தெரிந்தது. ராக்கெட்டுகள் போகும் தூரத்தை கணிக்க முடிந்தது. என்று செல்லும் அப்பாடலில் இந்தியாவின் பெருமைகளைப் பட்டியலிடுகிறார் பாரத்
இன்றும் இந்தியாவில் ஆண்களில் ராமன் உண்டு பெண்களில் சீதை உண்டு என்று சொல்லும் போது மதன்புரி தமது மகளின் அலங்கோலத்தை கண்டு வெட்கி தலைகுனிவார்.
இந்தியாவில் அன்பு உண்டு .நாங்கள் நதிகளைக்கூட அம்மா என்றுதான் அழைக்கிறோம். கல்லைக் கூட பூஜை செய்து கடவுளாக்கி விடுகிறோம் என்று பாடும் அந்தப் பாடல் கதாநாயகியின் மனத்தையும் மாற்றுகிறது. அவர்  பாரத்தை காதலிக்க பாரத் அவரை திருமணம் செய்ய இந்தியா வர வேண்டும் என்று கோருகிறார். பாரத்தின் கோரிக்கையை ஒரு நிபந்தனையுடன் ஏற்கிறார் சாய்ரா. அதாவது ஒருமாதம் அவர் இந்தியாவில் இருப்பார் .இந்தியாவை பிடிக்காமல் போனால் பாரத் வீட்டோட மாப்பிள்ளையாக நிரந்தரமாக லண்டனுக்கு குடியேற வேண்டும். இந்தியா பிடித்துப் போனால் பாரத் சொன்னபடி அவருக்கு மனைவியாக இந்தியப் பெண்ணாக வாழ தயார் என்று கூறுகிறார். இந்த சவாலை பாரத் ஏற்கிறார். இந்தியாவை பிடிக்கவில்லை என்று யாருமே கூற முடியாது என்பது அவருடைய உறுதியான நம்பிக்கை
இந்தியா வரும் மீரா அங்கு பாரத்தை ஒருதலையாக காதலிக்கும் பாரதியை சந்திக்கிறார். பாரதி ஏழைப்பெண். ஆனால் மீராவைப் போல் தனது தூய்மையான காதலை வெளிநாட்டு பெண்ணுக்காக தியாகம் செய்கிறார்.
இந்தியாவில் குருநானக் ,அமிர்தசரஸ், காந்தி, நேரு, பகத்சிங், நேதாஜி, வாரணாசி, கங்கை நதி, இமய மலை போன்ற மகான்களையும் புனிதத் தலங்களையும் கண்டு சாய்ரா மனம் மாறுகிறார். டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் பாடலில் மினி ஸ்கர்ட்டுடன் ஆடும் அவர் பின்னர் இந்தியப் பெண்ணாக வலம் வர புடவையுடன் தோன்றுகிறார்.

5
இறுதிக்காட்சியில் பிரானும் இந்தியா வர அவர்தான் அந்த தேசதுரோகி என தெரிய வர சினிமாத்தனமாக கிளைமாக்சுடன் ஆக்சன் காட்சிகளுடன் படம் முடிகிறது.
இப்படம் மனோஜ்குமாருக்கு மகத்தான வசூலையும் பாரத் என்ற பாத்திரத்திற்கு அபாரமான வரவேற்பையும் பெற்றுத் தந்தது. அடுத்தடுத்து அவர் இயக்கிய ரோட்டி கப்டா மக்கான் , கிராந்தி, ஷோர் போன்ற முக்கியமான அவருடைய படங்களிலும் பாரத் கதாபாத்திரம் பட்டிழைத்த பொன்னாக மின்னியது. ஆன்மீகத்திலும் நாட்டமுடைய மனோஜ்குமார் தமது படங்களில் ஓம் ஜெய் ஜெகதீஷ ஹரே ஆரத்தியை போல துர்க்கையம்மன் ஆரத்தி, விவேகானந்தரை சித்தரிக்கும் பாடல், இந்தியாவின் மகான்களை போற்றும் பாடல் என பலவகையான இனிய பாடல்களை திரையுலகிற்கு தந்தார். நேர்ததியான திரைக்கதையுடன் அவருடைய படங்கள் அபாரமான படைப்புகளாக வந்தன. பிற்காலத்தில் அவர் நடிகை மாதவியை வைத்து இயக்கிய கிளர்க் போன்ற சில படங்கள் தோல்வியைத் தழுவினாலும் பூரப் அவுர் பச்சிம், ரோட்டி கப்டா மக்கான், ஷோர் , கிராந்தி போன்ற படங்களுக்காக மனோஜ்குமாரின் பெயர் இந்திய சினிமாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் சேர்ந்து பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும்.

பின்குறிப்பு இக்கட்டுரை தீராநதி இதழில் வெளியாகி இரண்டே மாதங்களில் மனோஜ் குமாருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது. 

Tuesday 5 January 2016

மாலை நேரத்து மயக்கம் -போலியான கருதுகோள்களுக்கு பொய்யான ஆராதனைகள்

கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தைப் பார்க்கப் போனேன். தேவிபாரடைஸ் திரையரங்கின் இ  வரிசை வரை கூட்டம் இருந்தது ஆச்சரியமளித்தது. படம் பார்க்க வந்தவர்கள் பெரும்பாலோர் இளைஞர்கள், நடுத்தர வயதினர். ஓரிரு காதல் ஜோடிகளும் நடுத்தர வயது தம்பதிகளும் படத்தைப் பார்க்க வந்ததற்காக வெட்கப்பட்டு கூனி்க்கருகி மற்றவர்கள் பார்வையில் படாமல் தலைமறைவாக அமர்ந்திருந்தனர். படம் அடல்ட்ஸ் ஒன்லி என்பது மட்டுமல்ல, அடிக்கடி கக்கூஸ் வாந்தி ரத்தம் என குமட்ட வைக்கும் காட்சிகளும் வசனங்களும் நாறடித்தன.
என்ன சொல்ல நினைக்கிறார் கீதாஞ்சலி......திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது.
பெண் பாய்பிரண்ட்ஸ் வைத்திருப்பதும் டேட்டிங் போவதும் திருமணத்திற்கு முன்பே மூணாறு போய் ரூம் போட்டு ஒருவாரம் தங்கி வருவதும் தப்பு இல்லை.....
குட் போல்டான தீம் தான் ஆனால் கதாநாயகி மனோஜா கற்பிழக்காத சீதை போல் காட்டியிருப்பது ஏன்.....உன் பாய் பிரண்ட்சுடன் எந்த லெவலுக்குப் போவே,,,,,கிஸ், உரசல்...அல்லது எல்லாமே வா என பிரபு கேட்கும்போது கதாநாயகி பதிலளிக்காததே அவள் தப்பு செய்தவள் போல காட்டுகிறது.
பழக ஆரம்பித்த முதல் நாளே தொடாத ஆண் பெண் உறவு உண்டா என்ன?
கணவன் கிறுக்கன், சைக்கோ, லூசு, அழகற்ற மொக்கை பீசு என்றெல்லாம் கூறி அவன் பாலியல் பலாத்காரம் செய்யும் போது அவனை வெறுத்து ஒதுக்கி செல்லும் அவள் மீண்டும் அவனுடன் சேர்வதுதான் கதை

பாலசந்தர் பயன்படுத்திய அதே பாணி கதை....அந்த ஏழு நாட்களும் மௌன ராகமும் திருமண உறவின் புனிதத்தைப் பேசியதைத்தான் இந்தப் படம் பேசுகிறது. அன்பு காதலின் மென்மையையும் கூற முயற்சிக்கிறது. ஆனால் இதில் போலித்தனம் அதிகம். அந்த போலிமைக்கு பொய்யான ஆராதனையும் அதிகம் என்பதால் படம் சலிப்பை ஏற்படுத்துகிறது. புனிதங்களை கட்டிக் காக்க பாலசந்தருக்கு ஒரு நோக்கம் இருந்தது .செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் அது அவசியம்தானா.....நடுத்தர மக்களின் பாலியல் பிறழ்வுகளையும் குடும்பங்களின் மரபுகளையும் அவற்றுக்கிடையான முரண்களையும் சொல்வதுதான் பாலசந்தரின் பாணி. கடைசியில் கணவரிடம் மனைவி திரும்பிவிடுவதும் மனைவியிடம் கணவர் திரும்பி வருவதும் அபூர்வ ராகங்கள் முதல் புதுப்புது அர்த்தங்கள் வரை அவர் பயன்படுத்திய உத்தி. இதே தான் கீதாஞ்சலியும் செல்வராகவனும் செய்திருக்கிறார்கள்.
பெண்கள் பொய்யானவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். பேஸ்புக் காதலனுடன் மூணாறு வரும் பெண்ணும் காதலனுடன் ஆடி மது அருந்தும் காதலியும்தான் யதார்த்தம். இன்றைய பெண்களின் சீரழிவை சித்தரித்த வரையில் இப்படம் சரியான தடத்தில் செல்கிறது. ஆனால் பிரபுவின் சந்தேகத்தை தெளிவுபடுத்தி மனோஜா காதலனின் விரல் பட அனுமதிக்காதவள் என்பது போல் பாவலாக்கள் ஏன்?
படத்தின் அருமையான கண்டுபிடிப்பு நாயகி வாமிகா... அழகான பப்ளிமாஸ் நாயகி....பாக்யராஜின் வீட்ல விசேஷங்க பிரகதி, சின்னதம்பி குஷ்பூ வரிசையில் அழகான குண்டான தள தள தக்காளி போல் படம் முழுக்க வந்து மனதைக் கவர்கிறார். பாத்திரப்படைப்பில்தான் கோளாறு
இன்னொரு தளத்திற்கு ஆண்-பெண் உறவையும் திருமண உறவுகளின் போலித்தனத்தையும் கொண்டு செல்ல வாய்ப்பிருந்தும் சொல்லாமல் நழுவியதால் இப்படம் மனத்தை கவராமல் சிறிய சலனத்துடன் நின்று விடுகிறது.

Saturday 2 January 2016

அரிதினும் அரிதுகேள் 23 நெல்லறுக்கும் சோலை ஒன்னு செல்லரிச்சுப் போனதடி.....


கிழக்கு வாசல் படம் ஆர்.வி.உதயகுமார் இயக்கியது. இதில் கார்த்திக்கை காதலித்து வேறொருவரை மணமுடிக்கும் குஷ்பூவை எண்ணி கார்த்திக் பாடுவதாக அமைந்த பாடல் பாடிப்பறந்த கிளி பாதை மறந்ததடி பூமானே.....இப்பாடலின் இடையே உணர்ச்சிகரமான காட்சிகள்....கார்த்திக்கின் தாயான ஆச்சி மனோரமாவை குஷ்பூவின் காதலை எதிர்க்கும் அவர் குடும்பத்தினர் அடித்து உதைத்து அவரை சாகடிக்க, கார்த்திக் சாவு சுமந்து செல்லும் சோகத்துடன் இழந்த காதலையும் கூறும் வேதனைப்பாடல் இது....இந்தப்பாட்டுக்கு ஆர்.வி. உதயகுமார் எழுதிய வரிகள் அபாரமானவை....அதே சமயம் பாடிய பாலசுப்ரமணியத்தின் குரல் ஒரு தேன் அமுதம். எல்லாவற்றுக்கும் மேலாக இசைஞானி இளையராஜாவின் இசையும் ஆர்க்கெஸ்ட்ராவும் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. காதலின் சோகத்தை கிராமிய மொழியில் மயக்க வைக்கும் இசையில் தந்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள. மறக்க முடியாத காதல் பாடல்களில் என் பிரியமான பாடலாக இது எப்போதும் நீடித்திருக்கிறது. 1990 ல் இந்தப் படம் வெளியான போது நானும் ஒரு காதலை, காதல் தோல்வியை எதிர்கொண்டதால் அந்தப் பாடல் என்மனதுக்குள் ஆழமான வடுவை ஏற்படுத்தியது.





பாடிப் பறந்த கிளி
பாதை மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே

ஒத்தையடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கண்ட கனவு அது கானாதாச்சு
கண்ணு முழிச்சா அது வாழாது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டி இழுத்தா அது வாராது
வீணாசை தந்தவரு யாரு யாரு

சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொன்னு செல்லரிச்சுப் போனதடி
கல்லில் அடிச்சா அது காயம் காயம்
சொல்லில் அடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப் போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு












படம்: கிழக்கு வாசல்
இசை: இளையராஜா
பாடல்: ஆர்.வி.உதயகுமார்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Friday 1 January 2016

2016 புத்தாண்டு வாழ்த்துகள்

ஹாப்பி நியு இயர் என காலை முதலே வாழ்த்துகள் செல்போனில் பொழியத் தொடங்கிவிட்டன. குறுஞ்செய்திகளிலும் நண்பர்களின் அன்பு வழிந்துக் கொண்டிருந்தது. மகிழ்ச்சியும் நன்றியும்.
ஆனாலும் இந்த புத்தாண்டு இருக்கிறதே அது சுத்த ஹம்பக். ஜி.நாகராஜன் சொன்னது மாதிரி நாளை மற்றொரு நாளே.
வாழ்க்கையை இழந்து வாழவே தெரியாமல் நின்று வருமானமும் இன்றி வசதியும் இன்றி சுகங்களும் கூடிக்களித்தலும் இன்றி தனிமை, வறுமை, பொறுமை, ஆற்றாமை என வாழ்ந்துக் கொண்டிருக்கும் என் போன்ற சிலருக்கு இந்த புத்தாண்டு ஒரு அர்த்தமும் தருவதாக இல்லை. இந்த ஆண்டு கோவிலுக்கு போக ஜீன்ஸ் அணியக்கூடாது என தடைவிதிக்கப்பட்டதால் கோவிலுக்கும் போகவில்லை. நேற்று புத்தாண்டு தினத்தில் ஜீன்சும் புதுச்சட்டையும் அணிந்து சென்று அம்மா அப்பாவை வணங்கி வந்தேன். தாயிருக்கும் காரணத்தால் கோவிலுக்குப் போகவில்லை என்று சின்னத்தம்பி பிரபு போல பாடிக்கொண்டிருக்கிறேன்.
பேசாமல் கோவிலுக்குள் ஜீன்ஸ் , ஷார்ட்ஸ் அணிந்து செல்லும் போராட்டம் ஒன்றை தொடங்கலாமா என்று யோசனை எனக்கு.இதில் பெண்கள் மட்டும் ஷார்ட்ஸ் அணிய வேண்டும்.அல்லது டைட்டான லெகிங்சில் சில்லுன்னு வரவேண்டும்.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...