Thursday 12 January 2017

மீண்டும் புத்தகக் கண்காட்சிக்கு

புத்தகக் கண்காட்சிக்கு மீண்டும் இருமுறை சென்று வந்தேன். சினிமா, கவிதை புத்தகங்கள் மட்டுமே கவனம் ஈர்க்கின்றன. மு.முருகேஷின் ஹைகூ ஆய்வு போன்றவற்றையும் அதன் உழைப்பு கருதி வாங்கினேன்.
நற்றிணை பதிப்பகம் யுகனுடன் சிறிது நேரம் பேசியதி்ல் பதிப்புத்துறையிலும் தமிழ் இலக்கியத்திலும் அவருக்குள்ள ஈடுபாடும் பிரியமும் அளவற்றது எனத் தெரிந்துக் கொண்டேன். இப்படி ஒரு வாசகர் பதிப்பாளராக இருப்பது எழுத்தாளர்களுக்கு பெரும் பேறு. அவர் சினிமா பற்றி வெளியிட்ட ஒரு புத்தகம் விலை ரூ 300 தான் ஆனால் அதன் அச்சும் தரமும் இதுவரை தமிழ்ப் பதிப்புலகம் காணாதது.
பிரபஞ்சனின் சிறுகதைத் தொகுப்புகள், அசோகமித்திரனின் கதைகள் மற்றும் கட்டுரைகள் உள்ளிட்டவற்றையும் மிகவும் நேர்த்தியாக வெளியிட்டுள்ள யுகன் ஜெயமோகனின் மகாபாரதத் தொடரையும் அற்புதமாக வெளியிட்டுள்ளார். இப்படியெல்லாம் புத்தகங்கள் அச்சாக வேண்டும் என்ற கனவு எந்த எழுத்தாளனுக்குத்தான் இல்லை. என்னுடைய புத்தகங்கள் சிலவற்றையும் நற்றிணை மூலம் வெளியிட முயற்சிக்கிறேன்.
யுகனுடன் பேசும் போது சந்தித்த இன்னொரு முக்கிய நபர் பல்லடம் மாணிக்கம் அவர்கள். விருதாச்சலத்தில் மிகப்பெரிய நூலகம் வைத்துள்ளார். திருக்குறள் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராத காதல் கொண்டவர். கோவை ஞானியின் களம் கூட்டங்களின் போது தொண்ணூறுகளில் அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். நீண்ட இடைவெளியில் நோயாலும் வயதின் முதிர்வாலும் சிறிய தளர்ச்சி உடலில் இருந்தாலும் அவருடைய அதே ஆர்வத்தை காண முடிந்தது. தீராநதியில் வெளியாகும் எனது சினிமா கட்டுரைகளை படித்து வருவதாக கூறினார்.
அதே போல் எழுத்தாளர் தேவகாந்தனை சந்தித்ததும் மகிழ்ச்சியளித்தது. பழைய எழுத்தாளர்கள் நண்பர்கள் என புத்தக கண்காட்சியில் மகிழ்ச்சிக்கு குறைவே இல்லை. கௌதம சித்தார்த்தன், கால சுப்பிரமணியன், பாஸ்கர் சக்தி, என எத்தனையோ நண்பர்களை மீண்டும் பார்ப்பதில் மனம் மகிழ்ந்து வந்தேன்.
வரும் வழியி்ல் வழக்கம் போல் பழைய புத்தகங்களை வேட்டையாடினேன்.

-----------------------------------
மறுநாளும் புத்தகக் கண்காட்சிக்கு நண்பர் சூர்யராஜனுடன் சென்றிருந்தேன். முன்னாள் சினிமா இயக்குனரான அவர் பழைய பாசத்தில் பியூர் சினிமா அரங்கில் இயக்குனர் மகேந்திரனின் சினிமாவும் நானும் நூலை வாங்கினார். நான் காலச்சுவடு பதிப்பகத்தில் சுந்தர ராமசாமி நேர்காணல்கள், நானும் என் எழுத்தும் போன்ற நூல்களை வாங்கினேன். எஸ்.சண்முகத்துடன் சிறிது நேரம் பேசினேன். எல்லா நண்பர்களும் கிடங்குத்தெரு பற்றி விசாரிக்கிறார்கள். அந்த நாவலின் இடத்தை வேறு எந்த புத்தகமும் ஈடு செய்யவில்லை என்ற நண்பர்கள் சிலரின் கருத்து நீண்ட யோசனையை ஏற்படுத்தியது.
 இன்னொரு நாவல் விரைவில் வெளியிட வேண்டும். கிடங்குத் தெருவை விடவும் பெரிதாகவும் ஆழமாகவும்......எழுதிக் கொண்டிருக்கிறன்.




சந்திப்பு - அம்பை

எழுத்தாளர் அம்பையின் கதைகள் மீது எனக்கு இளம் வயது முதலே ஈர்ப்பு உள்ளது. சென்சிபல்என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகரான இலக்கியம் அவருடையது. அவர் யார் எனத் தெரியாமல்தான் பல ஆண்டுகளாக அவர் கதைகளை சிற்றிதழ்களிலும் பின்னர் காட்டில் ஒரு மான், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை போன்ற தொகுப்புகளிலும் வாசி்த்திருக்கிறேன். நண்பராக இருந்த ஜெயமோகன் நடத்திய சொல்புதிது இதழில் அம்பை கதைகளைக் குறித்து விரிவான கட்டுரை ஒன்றும் எழுதியிருக்கிறேன். சென்னை புத்தகக் கண்காட்சியின் விருட்சம் அரங்கில் தற்செயலாக அம்பையை சந்திக்க நேர்ந்தது. அழகிய சிங்கர் அவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு அவரிடம் என்னை அறிமுகம் செய்துக் கொண்டேன். அட நீங்கதானா செந்தூரம் ஜெகதீஷ் என மகிழ்ச்சியுடன் கைகுலுக்கிய அவர், எனது கிடங்குத் தெரு நாவலை மிகவும் விரும்பியதாக கூறினார். ஐ லவ் தட் நாவல் என்று அவர் கூறுவதைக் கேட்க எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. சுந்தர ராமசாமியும் அந்த நாவலை விரும்பியிருக்கிறார் என்று காலச்சு வடு கண்ணன் முன்பு எனக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிந்தது. பிரம்மராஜனும் காலச்சுவடு கட்டுரையில் அந்த நாவலை குறிப்பிட்டார். நாஞ்சில் நாடன் மிக சுவாரஸ்யமான இலக்கியப் படைப்பு எனப் பாராட்டியிருக்கிறார். கோவை ஞானி, பிரபஞ்சன், க.மோகனரங்கன் என பலர் விமர்சனம் செய்துள்ளனர். இது எனக்கு மிகவும் பெருமையானதுதான். அம்பையும் இந்தப்பட்டியலில் இணைந்தார். அந்த நாவல் போதிய கவனம் பெறாமல் போய்விட்டதாக ஒரு சிறு ஏக்கம் இருக்கிறது. மறுபதிப்புக்கும் தயாராகி வருகிறேன். நான் அந்த நாவலைப் பற்றி எழுதுகிறேன் என்றார் அம்பை. கடைசியில் அவரிடமிருந்து விடைபெறும் போதும் மகிழ்ச்சியை தெரிவித்த அவர் இந்தியில் உங்களை சந்தித்தது பெரும் மகிழ்ச்சியை தந்தது என்று கூறினார்.( மஜா ஆயா அம்பை எனும் ஆளுமையிடம் பேசிய சில மணித்துளிகள் முக்கியமானவை. இலக்கியத்தில் இதையெல்லாம் யாராவது பதிவு செய்தால் தேவலாம்.

Saturday 7 January 2017

புத்தகக் கண்காட்சி 2017

இரண்டாவது நாளிலேயே புத்தகக் கண்காட்சிக்குப் போவது வழக்கம். இம்முறையும் சென்றேன். காரணம் அதிக கூட்டமில்லாத நிலையில் பொறுமையாக புத்தகங்களைத் தேடலாம் என்பதே. கூட்டத்தில் தேடுவது சிரமம் ,மேலும் விரும்பும் விரும்பாத நண்பர்கள் சூழ்ந்துவிடுவார்கள். சிலரைத் தவிர்க்க முடிந்தாலும் சிலரைத் தவிர்க்க முடியாது. சிலருடன் பேச விரும்பினாலும் நேரம் இருக்காது. இப்படிப்பட்ட சிக்கல்கள் தொடக்க நாட்களில் இருக்காது.
க்ரியா பதிப்பகத்தில் சார்லஸ் பௌதேலரின் கவிதை நூல், மணற்கேணி வெளியிட்ட தேன்மொழியின் மூன்று கவிதைத் தொகுதிகள் , முத்துகாமிக்ஸ் அரங்கில் இரண்டு இரும்புக்கை மாயாவி காமிக்ஸ், இரண்டு சிஐடி லாரன்ஸ் டேவிட் காமிக்ஸ், குதிரைவீரன் பயணம் வெளியிட்ட சி.மோகன் சிறப்பிதழ், படச்சுருள் ,நிழல் சினிமா இதழ்கள், எடிட்டர் பி.லெனின் எழுதிய சினிமா ரசனை புத்தகம் போன்ற நூல்களை வாங்கி வந்தேன்,கடலில் இது கையளவுதான்.

எஸ்,ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதாவின் அனைத்து நூல்களையும் வாங்க வேண்டும். புதிய நாவல்களை வாங்க வேண்டும். சினிமா தொடர்பான புத்தகங்களையும் க்ரியா அகராதியையும் டாக்டர் இல்லாத இடத்தில் நூலையும் பூமணியின் அஞ்ஞாடியையும் சாகித்ய அகாடமி வெளியீடான தமிழ் இலக்கிய வரலாறு ( சிற்பி, நீல பத்மனாபன் தொகுத்தது ) அகநி வெளியீடான சிவனடியின் வரலாற்று தொகுதிகள், பெண் படைப்பாளிகளின் நூல்கள், பாலகுமாரன் சுஜாதாவின் சில புத்தகங்கள், மனுஷ்யபுத்திரன் கவிதைகள், பிரமீள், பிரம்மராஜன் தொகுப்புகள் என வாங்க வேண்டிய புத்தகங்கள் ஏராளமாக கண்ணில் தட்டுப்பட்டன.
பெரும்பாலும் புத்தகங்கள் விலை 400, 500 என இருப்பதால் வாங்க இயலுவதில்லை, ஒரு சில மட்டும் அடுத்த ரவுண்டில் வாங்குவேன்.

தமிழினி பதிப்பத்தில் வசந்தகுமார் அண்ணாச்சியை சந்தித்துப் பேசினேன். மற்றபடி புத்தகக் கண்காட்சியில் ஈர்ப்பும் ஆர்வமும் குறையத் தொடங்கியுள்ளது .பணமி்ன்மை, எனது புத்தகங்கள் வெளி வராமை, வேலை குறித்த எதிர்காலம் முதுமை குறித்த கவலைகள், இருக்கும் புத்தகங்களையே படிக்க முடியாமல் பராமரிக்க முடியாமல் இருக்கும் இயலாமை என பலவித காரணங்கள் இருக்கலாம். எழுத்தாளர்களின் போலியான முகங்களை கசப்பான அனுபவங்களூடாக கண்டதும் முக்கியக் காரணமாக இருக்கலாம். நல்ல எழுத்தாளர்கள் நல்ல மனிதர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடத்தனமாக இருக்கிறது. பதிப்பாளர்களோ கடைந்தெடுத்த அயோக்கிய கொள்ளையர்களாக இருக்கிறார்கள் என்பதும் ஒரு கசப்பான அனுபவம், நல்ல பதி்ப்பாளர்கள் நல்ல வியாபாரிகளாகவும் இருக்கிறார்கள். வியாபாரிகளுடன் எனக்கு ஒருபோதும் ஒட்டுதல் இருந்ததில்லை.
ஆனாலும் புத்தகங்களுடனான உறவு முடிவதே இல்லை. புத்தகக் கண்காட்சி முடித்து திரும்பும் வழியில் எனக்கு மட்டும் தெரிந்த ஒரு பழைய புத்தகக் கடையில் பாலிவுட் சினிமா பற்றிய இரண்டு ஆங்கில நூல்கள், சில ஆங்கில நாவல்கள், ஏராளமான ஆங்கில பத்திரிகைகள் வாங்கிக் கொண்டு இரண்டு புத்தக மூட்டைகளுடன் வீடு திரும்பினேன். இரண்டாவது மூட்டையின் செலவு வெறும் ரூ 150 மட்டும்தான்.

Thursday 5 January 2017

உலக சினிமா - கருவில் பிறந்த காதலன் -WOMB

குமுதம் தீராநதி ஜனவரி 2017 ல் வெளியான எனது உலக சினிமா கட்டுரை இது....









ஜெர்மானிய திரைப்படம்
     WOMB - கருவில் பிறந்த காதலன்
          செந்தூரம் ஜெகதீஷ்


தந்தைக்கு மகளை பிடிப்பதும் தாய்க்கு மகனைப் பிடிப்பதும் ஏன் என்றொரு கேள்விக்கு உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்ட்  விடை காண முயன்றார். இளம் வயது கணவரை மகன் பிரதிபலிப்பதும் இளமையில் மனைவியின் தோற்றத்தை மகள் பிரதிபலிப்பதும் ஓர் உளவியல் காரணமாக கருதப்பட்டது. இப்பிரச்சினையை மையமாக வைத்து உருவான படம் தான் வோம்ப்( கர்ப்பப் பை)
இப்படத்தின் ஆரம்பத்தில் கருவில் உள்ள தனது குழந்தையுடன் ஒரு தாய் பேசுகிறாள். " நீ என்னை விட்டு விலகிப் போய்விட்டாய் என்பதால் நீ இல்லவே இல்லை என்பதை என்னால் ஏற்க முடியாது" என்கிறாள் ரெபக்கா என்ற அந்த தாய்.
படம் பின்னோக்கி நகர்கிறது. இளம் சிறுமியான ரெபக்காவுக்கும்  டாமி என்ற தாமசுக்கும் பால்ய கால காதல் மலர்கிறது. கடற்கரையில் அலைகளையும் மேகங்களையும் பார்க்க பிரியமுடைய தாமஸ் புயல் காலத்தில் கடலைப் பார்க்க ரெபக்காவை அழைத்துச் சென்று கலங்கரை விளக்கம் அருகே அமரச் செய்கிறான். அற்புதமான காட்சிகளுடன் கேமரா அந்த இளம் காதல் உள்ளங்களின் அலைக்கழிப்பை நமக்கு உணர்த்துகிறது. கடல் அலைகளில் அவன் ஆடைகளின்றி நீந்துவதையும் சைக்கிளில் வேகமாக செல்வதையும் அவள் ரசித்து சிரி்க்கிறாள்.
ஒரு முறை அவளை அவன் மிக மிருதுவாக இதழுடன் இதழ் பட்டும் படாமலும் முத்தமிடுகிறான், பின்னர் அவள் படிப்புக்காக தூரத்திற்கு பிரிந்து சென்று விடுகிறாள் .கடற்கரையில் அவர்கள் பிடித்து வந்த நத்தை ஒன்று அவள் நினைவாக மேஜையில் ஊர்ந்து செல்கிறது.
12 ஆண்டுகள் கழித்து பட்டப்படிப்பு முடித்து இளம் பெண்ணாக திரும்பி வரும் ரெபக்கா தாமசை மறக்கவில்லை. இருவரும் மீண்டும் நட்புடன் கைகோர்க்கிறார்கள். டாமி தீப்பெட்டியில் அவள் விட்டுச் சென்ற நத்தையை காட்டுகிறான். அது ஒரிஜினல் நத்தையல்ல,குளோனிங் மூலம் உருவாக்கியது என்கிறான். பழைய நத்தை இறந்துவிட்டது.
டாமி இப்போது அறிவியலில் நிபுணனாகி குளோனிங் செய்ய முற்படுகிறான்.  வயல்களில் பயிரை பாதுகாக்கும் பூச்சிகளை குளோனிங் மூலம் அதிகரிக்க செய்வது அவன் திட்டம்.
அவனும் ரெபக்காவும் அவனுடைய எஸ்டேட்டை பார்க்க காரில் செல்கிறார்கள். ஆனால் அப்போது சாலையை கடக்கும் டாமி மீது வேகமாக வந்த வேன் ஒன்று மோத அங்கேயே அவன் பட்டென செத்துப் போகிறான்.
மரணம் ஒரு முடிவல்ல....இன்னொரு வாழ்க்கையின் புதிய ஆரம்பம்தான் என்ற டாமியின் சொற்கள் ரெபக்காவின் காதுகளில் எதிரொலிக்கின்றன.
இந்த அதிர்ச்சியைத் தாளாமல் அழுது கதறும் டாமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறும் ரெபக்கா மீண்டும் டாமியை வரவழைக்க முடியும் என்கிறாள். டாமியின் தந்தையின் உடலில் உள்ள மரபணுக்களை தமது கருவில் செலுத்தினால் மீண்டும் டாமி பிறந்து வருவான் என்பது அவளது நம்பிக்கை. குளோனிங் என்பது வயல்வெளி பூச்சிகளுக்கு தான் மனிதர்களுக்கு அல்ல என்று டாமியின் தந்தை ரபேல் புத்தி கூறுகிறார், இயற்கை தருவதைப் பெற்றுக் கொள்வதும் அது பறித்துக் கொள்வதை விட்டுக் கொடுப்பதும் தான் மனிதர்களுக்கு உகந்தது என்று கூறும் அறிவுரையை ரெபக்கா ஏற்கவில்லை. வாழ்க்கை தான் மீண்டும் ஒருமுறை டாமியை நம்மிடம் கொண்டு வர இந்த பரிசை அளித்திருக்கிறது என்று அவள் மருத்துவ வளர்ச்சியை புகழ்கிறாள். ஒருவழியாக டாமியின் பெற்றோர் ஒப்புக் கொள்கிறார்கள்.
டாமியின் மரபணுக்கள் ரெபக்காவின் உடலில் செலுத்தப்படுகிறது. அவள் கன்னி கழியாமலே கருவுறுகிறாள். அழகான ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. அதற்கு டாமி என்றே பெயர் வைக்கிறாள் ரெபக்கா.
அவள் மார்பகத்தில் சுரக்கும் தாய்ப்பாலை பசியுடன் கைக்குழந்தையான டாமி கேட்கும் போது, குழந்தையின் வாயில் முலையை ஊட்டி சாப்பிடு என்கிறாள் ரெபக்கா. அப்போது அவள் கூறும் வசனம் ஒரு தாய் மகனுக்கு கூறுவதாக இல்லை. ஒரு காதலியின் முலையைப் பருகும் காதலனுக்கு கூறுவதாக இருக்கிறது. அன்பே , யாரும் இல்லை இங்கே உன்னையும் என்னையும் தவிர .எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடு என்கிறாள் ரெபக்கா.
மனித நடமாட்டம் யாருமற்ற ஒரு அத்துவான கடல் பண்ணை வீட்டில் தாயுடன் வளர்கிறான் டாமி. தாயுடன் தண்ணீர்த் தொட்டியி்ல் நிர்வாணமாக குளிக்கிறான். தாய்தான் உடலும் உள்ளமுமாக அவனுடன் நெருங்கிப் பழகும் ஒரே மனிதப்பிறவி. அவன் பிறந்தநாளுக்குக் கூட குழந்தைகளை அனுப்ப தாய்மார்கள் விரும்பவில்லை. அவன் ஒரு "காப்பி "குழந்தை என்பதால்.
ஆனால் டாமி வளர்ந்து வாலிபனானதும் அவனுக்கு மோனிகா என்றொரு காதலி கிடைக்கிறாள். மோனிகாவும் டாமியும் முத்தமிடுவதை போர்வையில் முகத்தை மூடிக்கிடக்கும் ரெபக்கா பொறாமையுடன் ஒரு கண்ணால் பார்க்கிறாள்.
டாமிக்கு தன் தந்தையின் குணங்கள் அப்படியே இருக்கின்றன. அதில் ரெபக்கா மீதான அளவு கடந்த அன்பும் அந்த அன்புக்கு என்ன பெயரிடுவது என்று தெரியாத குழப்பமும் உள்ளது.
ஆனால் கடற்கரையில் தாயிடம் நெருக்கமாக இருக்கும் டாமியைப் பார்த்து மோனிகா அதிர்ச்சியடைகிறாள். இதைப் பற்றி அவள் ரெபக்காவிடமும் டாமியிடமும் பேசிப் பார்க்கிறாள். ஆனால் இருவரும் குற்ற உணர்ச்சியால் பேச மறுக்கி்றார்கள். மோனிகா பிரிந்து செல்கிறாள்.
தாயுடன் சண்டை போடுகிறான் மகன். நீ என்னை என்னவென்று நினைத்திருக்கிறாய் என்று அவன் கேட்டாலும் அவன் தனக்குள்ளும் அந்தக் கேள்வியை கேட்கத் தவறவில்லை. பாலியல் ரீதியான பதற்ற நிலைகளுடன் டாமி ரெபக்காவை உலுக்கி எடுக்கிறான். நீ யார் நான் யார் என்ற அவனது கேள்வி்க்கு அவள் அவன் தந்தையைப் பற்றியும் அவன் பிறப்பை பற்றியும் அவனை தான் பெற்றெடுத்த நோக்கம் குறித்தும் கூறுகிறாள். டாமி அழுகிறான் . தாயிடம் கோபம் வெடிக்கிறது. ஆனால் அந்தக் கோபத்தை அவன் காமம் மிஞ்சுகிறது. நடுத்தர வயதில் இளமை மாறாமல் உள்ள தாயை காதலியைப் போல்  முத்தமிடுகிறான். அவளும் அதை விரும்புகிறாள். இருவரும் உடலுறவு கொள்கிறார்கள்.  அந்தக் காட்சியில் ரெபக்கா கன்னி கழிவதை இயக்குனர் நமக்கு அவள் கையில் இருக்கும் ரத்தம் மூலம் உணர்த்துகிறார். படத்தின் இயக்குனர் பெண்டக் ஃபிளைகாப்(Bendek fliegauf)
அதன் பிறகு குற்ற உணர்ச்சியால் டாமி ரெபக்காவை நிரந்தரமாக பிரிந்து சென்று விடுகிறான். போகும் போது அவன் முதன்முறையாக அவளை அம்மா என்றழைக்காமல் ரெபக்கா எனப் பெயர் கூறி அழைக்கிறான்.
ஆனால் டாமி கொடுத்த கரு அவள் கர்ப்பப் பையில் வளர்கிறது. இது இயற்கையான கருத்தரிப்பு, ஆனால் ஒரு முறையற்ற உறவில்.
அந்த கருவில் உள்ள குழந்தையுடன் தான் ரெபக்கா படத்தின் ஆரம்பக் காட்சியி்ல் பேசிக் கொண்டிருக்கிறாள். இந்தக் குழந்தையை அவள் ஒரு தாயாக மட்டுமே பார்க்கப் போகிறாள் என்று நாம் ஊகிக்கிறோம்
வாழ்க்கை புதிரானது. மனிதர்களின் உணர்ச்சிகளுடனும் உறவுகளுடனும் விளையாடி சி்க்கல்களை உருவாக்கி விடுகிறது. அண்ணன்-தங்கை, தாய்-மகன் போன்ற புனிதங்களைப் போட்டு உடைத்துவிடுகிறது. ஆதி மனிதன் விலங்குகளைப் போல் தாயையும் தங்கையையும் புணர்ந்துதான் மனித சமூகம் வளர்ச்சியடைந்துள்ளது. பாலியல் உணர்வுகள் தாயிடமும் தங்கையிடமும் வளராதவாறு மதரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒழுக்கத்தைப் போதித்து குழந்தைகளை வளர்க்கிறோம். ஆனால் சிக்மண்ட் பிராய்டையும் நாம் மறந்து விடமுடியாது .
ஜெயகாந்தனின் ரிஷிமூலம், தி.ஜானகிராமனின் நாவல்கள் போன்றவை இத்தகைய பிரச்சினைகளை நுட்பமாக கையாண்டுள்ளன. இந்தப்படமும் மேலோட்டமாக பாலியல் பிறழ்வு, ஒழுக்கக்கேடு ஆகியவற்றை சித்தரிப்பதாக தோன்றினாலும் நமது கலாச்சாரத்திற்கு முற்றிலும் அந்நியத்தன்மையுடன் திகழ்ந்தாலும் நாம் பேச மறுக்கும் பார்க்க மறுக்கும் ஒரு உண்மையை அப்பட்டமாக நம் கண் முன் நிறுத்தி நம்மை அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. ரெபக்காவாக இவா கிரீனும் டாமியாக மேட் ஸ்மித்தும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். படத்தில் அனாவசியமான நிர்வாணக் காட்சிகளோ உடலுறவுக்காட்சிகளோ இல்லை. ஒரு சில காட்சிகளே கதைக்கு தேவையாக இருந்தபோதும் இயக்குனர் அதனை மிகவும் ஆபாசமாக சித்தரிக்கவில்லை. இதுவே இப்படத்தின் தரத்திற்கு உயர்வை அளிக்கிறது.
ஆண்களைப் பொருத்தவரை பெண் உடல் இச்சைக்கான ஒரு போக வஸ்துதான். இது நமது பண்பாட்டில் ஒரு அம்சமாகவே மாறிப் போயிருக்கிறது. இணக்கமாக இருக்கும் எந்த ஒரு பெண்ணையும் படுக்கையில் சாய்க்க ஆண்களுக்கு குற்ற உணர்ச்சியோ தயக்கமோ இல்லை. மகளிடம் அத்துமீறும் தந்தை, மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியர், நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்  என ஏராளமான செய்திகளை தினமும் செய்தித் தாள்களில் வாசிக்கிறோம், மூன்று வயது நான்கு வயது பெண் குழந்தைகளைக் கூட பாலியல் ரீதியாக வன்புணர்ச்சி செய்யும் வக்கிரங்களையும் நமக்கு இச்சமூகம் தினமும் கண்முன்னே நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது. மனிதனுக்குள் இருக்கும் ஆதி மனிதனின் மிருக உணர்ச்சி இலக்கியத்தாலும் இசையாலும் கலையாலும் மதத்தாலும் மாறிவிடவில்லை. மாறாக அடக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிவாளத்தை கட்டவிழ்த்து விட்டால் எந்த ஒரு குதிரையும் தறிகெட்டு ஓடும். எந்த ஒரு யானையும் மதம் பிடித்து ஆடும். எந்த ஒரு புலியும் வேட்டையாடிக் கொல்லும். டெல்லியில் நிர்பயாவுக்கு நிகழ்ந்தது இதுதான்.
ஒரு பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு அது குறித்த புரிந்துணர்வும் விழி்ப்புணர்வும் அவசியம் என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி .அத்தகைய ஒரு புரிந்துணர்வை இப்படம் அளிக்கத் தவறவில்லை.







Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...