Sunday 7 February 2016

அரிதினும் அரிது கேள் 25 ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்




 அவள் படிக்கும் கல்லூரிக்கு போனான்அவன். அவளுக்காக வகுப்புகள் முடிய ஆசிரியர்கள் அறையில் காத்திருந்தான். வகுப்பு ஒரு மணிக்கு முடிய அவள் தகவல் அறிந்து துள்ளி ஓடி வந்தாள். அவள் ஓடி வரும் காலடிச் சத்தம் மரப்பலகை படிகளில் எதிரொலித்து அவன் காதுகள் வரை வந்தது. அடுத்து அவளும் மூச்சிரைக்க வந்து நின்றாள். அவள் முகத்தில் சிரிப்பு மகிழ்ச்சி. சென்னையிலிருந்து வர்றீங்களா...நலம்தானே என விசாரிப்புகள், கைக்குலுக்கல்.
பின்னர் கேண்டீனுக்கு அழைத்துச் சென்றாள். மதிய நேரத்தில் பொங்கல் வாங்கி சாப்பிட்டார்கள். நாளை கோவிலில் சந்திப்பதாகவும் கூறி மீண்டும் வகுப்புகளுக்கு சென்றுவிட்டாள். வீட்டு விலாசம் தந்தாள்.
மறுநாள் கோவில் போய் திரும்பும் போது நடந்துக் கொண்டே அவன் கேட்டான். நீங்க என ஏன் பேசணும். நீன்னே கூப்பிடு என்றாள். அந்த உரிமை அவள் காதலை சொன்னது. அவன் அவள் கையைப் பிடித்தான். இருவரின் விரல்களும் கோர்த்துக் கொண்டன. நடந்தார்கள், காலம் இடம் வெளி இடைவெளி எல்லாம் மறந்து இரவு வரை கால் வலிக்க பேசிக் கொண்டே நடந்தார்கள். திடீரென ஒரு இருட்டான வீதிக்குள் வந்துவிட்டார்கள். அவள் அவனை இறுக்கிப் பிடித்து கன்னத்தில் அவனுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். அவன் மூச்சுத்திணறினான். இத்தனை காதல் இத்தனை அன்பை அவன் இதுவரை அறிந்ததில்லை. வாழ்வில் அவனை யாரும் அதுவரை தானாக முத்தமிட்டதாக அவனுக்கு நினைவில்லை. அவளை தொட்டு அணைக்க அவன் ஆசைப்பட்டான். நாளை காலை பத்ரகாளி அம்மன் கோவிலுக்குப் போகலாம் என்று அழைத்தான். அவனுக்கு இந்த இடம் தெரியும். மேட்டுப்பாளையத்திலிருந்து சற்று தொலைவில் ஆற்றங்கரையில் அமைந்த இடம். அமைதியும் தனிமையும் இருக்கும். வைதேசி காத்திருந்தாள் படத்தில் இந்த இடம் படமாக்கப்பட்டுள்ளது.
அவள் வருவாளா என அவன் காத்திருந்தான்..அவள் நிச்சயமாக கூறவில்லை. பார்க்கலாம் என்று கூறி போய் விட்டாள்.
மறுநாள் காலை எட்டு மணி. அவள் வரும் நேரம். ஏழுமணியிலிருந்தே காத்திருந்தான். மழை தூறிக் கொண்டிருந்தது. வருவாளா வரமாட்டாளா எனப் புரியவில்லை. காத்திருந்தான். மணி 8.20 அதோ மலையாளப் பெண்கள் கட்டும் சந்தன நிறச் சேலையும் பச்சை ரவி்க்கையும் கட்டி அவள் கையில் வண்ணக்குடையுடன் சேலை நனையாமல் கையால் பிடித்து மெல்ல மெல்ல நடந்து வந்தாள். அவனைப் பார்த்து சிரித்தாள். ஒரு டீயும் கேக்கும் சாப்பிட்டு மேட்டுப்பாளையம் பேருந்தில் ஏறினார்கள். மழை பிடித்துக் கொண்டது. பேருந்து நடத்துனர் அனைத்து ஜன்னல்களையும் சாத்தி கதவுக்கும் திரை போட்டு விட்டார். சில பயணிகள் மட்டுமே இருந்தனர். பேருந்தின் கடைசி இருக்கையில் அவர்கள் அமர்ந்தனர். டிக்கட் வாங்கிய பின்னர் அவர்களின் பேச்சு குறைந்தது. கைகள் பின்னிக் கொண்டன. அவன் கைகள் அவள் இடுப்பிலும் தொடையிலும் உரசின.
அப்போது பேருந்துக்குள் ஒரு பாட்டு ஒலித்தது. அந்தப் பாடல் இதுதான்.



படம் : எஜமான்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடலாசிரியர்: R.V. உதயகுமார்

கங் கண கணவென கிங் கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் ஒலி முழங்க முழங்க
ஒரு சுயம்வரம் நடக்கிறதே யே......
இது சுகம் தரும் சுயம்வரமே யே....
ஆ ஆ ஆ...... ஆ ஆ ஆ.....

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே
எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே

ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

தனனனன... தனனனன... தனனனன...
தனனனன... ன... ன... ன... ன...

சுட்டு விரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன் அடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்

உன் உதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன் உடலில் நான் ஓடி உள்ளழகை தேடுவேன்

தோகை கொண்டு நின்றாடும் தேங்கரும்பு தேகம்
முந்தி வரும் தேன் வாங்கி பந்தி வைக்கும் நேரம்

அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு
வம்புகள் என்ன வரம்புகள் விட்டு

ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
இணையான இளமானே துணையான இளமானே

ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

கட்டிலிடும் சுட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக்கொடி தரும் அந்த பிள்ளைக்கனி வேண்டுமே

உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா
என்னுடைய தாலாட்டில் கண் மயங்கி தூங்க வா

ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும் பெறெடுப்பேன் நானே

முத்தினம் வரும் முத்து தினம் என்று
சித்திரம் வரும் விசித்திரம் என்று

ஆஆ... ஆ...   ஆஆ... ஆ ...
ஆஆ... ஆ...   ஆஆ...

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே

ஓ... எனை ஆளும் எஜமானே எனை ஆளும் எஜமானே


பாடல் ஒலி்க்க ஒலிக்க  அவள் திடீரென அவன் மடியில் சரிந்தாள். தூங்குபவள் போல காலை நீட்டிக் கொண்டு தலையை அவன் மடியில் வைத்துக் கொண்டாள். முகத்தை அவன் மடியில் மூடி அழுகிறாளா ஆனந்தப்படுகிறாளா என்று தெரியாமல் அவன் குழம்பினான். பூக்கள் சூடிய அவள் கூந்தலையும் ரவிக்கையின் மறைக்காத பகுதிகளையும் அவள் முதுகையும் அவன் வருடிக் கொண்டிருந்தான். பாடல் தேவாரம் போல் இனித்து. வேறு சில பாடல்களும் ஒலித்தன. ஆனால் இந்தப்பாடலுடன் அன்று காலம் உறைந்து விட்டது. அவனும் அவளும் அரைத்தூக்கத்தில் ஆழ்ந்தனர். பயணம் எப்போது முடிந்தது என்பதை இருவருமே அறியவில்லை. மேட்டுப்பாளையம் வந்துவிட்டது. மழை இல்லை. நல்ல குளிர்காற்று வீசியது. பத்ரகாளி அம்மன் கோவிலுக்குப் போனால் தாமதமாகி விடும்என்று அந்தப் பேருந்து நிலையத்தில் ஒரு படிக்கட்டில் போய் அமர்ந்தார்கள். பேசினார்கள். பல மணி நேரம் கடந்தது. அவன் தன் மனம் திறந்து தனது ரணங்களைக் கொட்டினான் .அவள் அழுதாள். அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.ஒருநாளும் உனை விட்டுப் போகமாட்டேன், உன்னை மறக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தாள்.ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் என்று இருவரும் பாடினார்கள்....கோவை திரும்பிசென்னை திரும்பும் வரை அவனுக்குள் அந்தப் பாடல் மனதுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. இன்றும் அதன் எதிரொலிகளை அவன் கேட்கிறான். அந்தப் பாடல் ஒலிக்கும்போது எல்லாம் அவன் மனதுக்குள் அழுகின்றான்.
 காலம் கொடியது. அவளும் ஒருநாள் அவனை விட்டுப் பிரிந்துவிட்டாள். அவன் பார்வையில் படாமல் எங்கேயோ ஒரு கிராமத்திற்குள் தன் பிள்ளை கணவர் என குடும்பத்தினருடன் தொலைந்தே போய் விட்டாள். பிரிவுகளுக்குப் பின் தகவலற்று போய்விடக்கூடாதா என்ற மகுடேஸ்வரனின் கவிதை மட்டும் இந்தப் பாடலுடன் அவனுக்காக மிச்சமிருந்தது. இன்று அந்த பேக்கரிக்கு அவன் போய் டீ சாப்பிடும் போது தூரத்தில் மழையில் நனைந்தபடி குடையுடன் அவள் நடந்து வரும் காட்சி அவன் கண்களுக்குத் தெரிகிறது. கண்களின் ஓரங்கள் நனைகின்றன. உன்னை நிறைய சிரிக்க வைக்கப்போகிறேன் என்று சொன்னவள் இந்த கண்ணீரையே தந்துவிட்டாள். வாழ்வின் அவன் சுமக்கும் எண்ணற்ற ரணங்களுடன் இந்த ரணத்தையும் ரகசியமாக சுமக்கின்றான்.


Friday 5 February 2016

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2016












குமுதம் தீராநதி பிப்ரவரி 2016 ல் வெளியான எனது கட்டுரை








சென்னை சர்வதேச திரைப்பட விழா 2016

செந்தூரம் ஜெகதீஷ்

சென்னை 13 வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு,57 நாடுகளைச் சேர்ந்த 184 திரைப்படங்கள் ஏழு திரையரங்குகளில் திரையிடப்பட்டன. இதில் பாலசந்தர், ஆச்சி மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், ஊமைப்பட காமெடியன் பஸ்டன் கியூட்டன் சினிமாவின் 120 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையிலும் படங்கள் திரையிடப்பட்டன. இதுமட்டுமின்றி பாஸ்பைன்டரின் வோவரிக்கா உள்ளிட்ட 5 திரைப்படங்களும் ரசிகர்கள் பெரிய திரையில் கண்டு களிக்க திரைப்பட விழா வழி வகுத்தது. இந்தியன் பனோரமாவில் மசான், கோர்ட் போன்ற அண்மையில் வெளியான 12 முக்கி்யத் திரைப்படங்களும் தமிழ்ப்பட வரிசையில் தனி ஒருவன், தாக்க தாக்க போன்ற புதிய படங்களும் எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தயாரித்த 11 குறும்படங்களும் திரையிடப்பட்டன.வழக்கமாக ரஜினி படமானாலும் சரி அஜித் விஜய் படமானாலும் சரி மூன்று நாட்களுக்குப்பிறகு திரையரங்கமே காலியாக இருக்கும். பத்து இருபது பேர் மட்டும் படம் பார்ப்பார்கள். ஆனால் திரைப்பட விழாவைக் காண வந்த ரசிகர்களால் திரையிட்ட ஏழு திரையரங்குகளும் நிரம்பி வழிந்தன. பல நேரங்களில் ரசிகர்கள் தரையில் அமர்ந்தும் நின்றும் படம் பார்த்தார்கள். நல்ல சினிமாவுக்கான ஏக்கமும் ஆர்வமும் ததும்பும் முகங்களில், சுகாசினி, நடிகர் ராஜேஷ், இயக்குனர் சந்தானபாரதி, எழுத்தாளர்கள், குறும்பட இயக்குனர்கள், மாணவர்கள் என பலதரப்பட்ட மனிதர்களை காண நேர்ந்தது.  பரத்பாலா, நடிகை லிசி, பத்திரிகையாளர் உதாவ் நாயக் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த தமிழ்ப்படங்களைத் தேர்வு செய்தனர்.முதலமைச்சர் ஜெயலலிதா இந்த திரைப்பட விழா சிற்ப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு்ம் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்தார்.

நான்  பார்த்த சில முக்கியப் படங்கள்

MOUNTAINS MAY DEPART சீனப்படம்

இது 1999ம் ஆண்டிலிருந்து 2025 வரை காலகட்டத்தை மையமாகக் கொண்ட கதையமைப்பு. ஆரம்பத்தில் முக்கோணக் காதல் கதையாக தொடங்குகிறது. தாவோ என்ற இளம் பெண்ணை இரண்டு பால்ய கால ஸ்நேகிதர்கள் காதலிக்கிறார்கள். இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. நிலக்கரி சுரங்கத்தை விலைக்கு வாங்கிய வசதியான நண்பனுக்காக ஏழை காதலனை நிராகரிக்கிறாள் கதாநாயகி. அவன் மனம் வெறுத்து இனி ஊருக்கே வரமாட்டேன் என்று சென்றுவிடுகிறான். அவள் தனது திருமணத்தை நடத்தினாலும் அவனுடன் மகிழ்ச்சியாக வாழாமல், விவாகரத்து செய்துவிடுகிறாள். ஒரு கேஸ் நிரப்பும் நிலையத்தை நடத்தி வசதியாக இருக்கிறாள். ஆனால் மகனை தந்தையிடம் வளர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் புத்திர பாசத்தால் பரிதவிக்கிறாள். மகன் ஷாங்காய் சென்று விடுகிறான்.
இதனிடையே இவளது பழைய காதலன் லாங்சி திரும்பி வருகிறான். அவனுக்கும் கல்யாணமாகி விட்டது .ஒரு சிறிய குழந்தையும் உண்டு. ஆனால் மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் பணத்துக்காக பரிதவிககும் அவனுக்கு தாவோ பண உதவி செய்கிறாள். அவன் வீட்டிலிருந்து வரும் போது அவன் வீட்டை விட்டு போகும் போது தூககிப்போட்ட அவளது திருமணப் பத்திரிகை அங்கு கிடப்பதைக் கண்டு எடுத்து வருகிறாள். அவள் தந்தை காலமானதும் இறுதிச்சடங்கின் போது மகன் தன் தாயைக் காண வருகிறான். மா என்று தன்னை அழைக்க அவள் கோருகிறாள். ஆஸ்திரேலியாவில் வளரும் அவனோ மேற்கத்திய கலாச்சாரத் தாக்கத்தால் மம்மி என்கிறான்.
தாத்தாவுக்கு அஞ்சலி செலுத்த மகனைக் கட்டாயப்படுத்தும் தாய் பாசம் என்பதும் பந்தம் என்பதும் தொலைந்து போன உறவுகளுக்கு இல்லை என்பதை நிதர்சனமாக புரிந்துக் கொள்கிறாள். அவனுக்காக அவள் ஒரு வீட்டையும் ஒதுக்கி அதன் சாவிகளை அவனுக்கு தருகிறாள். அவனை கொண்டு போய் விடுவதற்கு ரயிலில் போகும் போது இந்த ரயில் ஏன் மெதுவாக செல்கிறது. வேகமாக செல்லும் ரயிலிலோ விமானத்திலோ நாம் சென்றால் என்ன என்று மகன் கேட்கிறான். உன்னுடன் அதிக நேரம் இருக்கவே இந்த ரயிலில் டிக்கட் எடுத்தேன் என்கிறாள் தாய். திரையரங்கில் கைத்தட்டல்கள் பறக்கின்றன. பல ஆண்டுகள் கழித்து தமது பேராசிரியையுடன் நட்பு பாராட்டும் மகன் டாலர் தாயை நினைத்து உருகுகிறான். தாயின் முகம் கூட நினைவில் இல்லாத போதும் அவள் தந்த சாவிக்கொத்து அவன் கழுத்தில் ஊஞ்சலாடுகிறது. தாயை காண தமது வயது மூத்த பேராசிரியர் தோழியுடன் அவன் பெய்ஜிங் நோக்கி வருகிறான்.
இதனிடையே உறவுகளின் பிடியிலிருந்து ஏகாந்தமாக வாழப்பழகிக் கொண்ட தாய் தாவோ தனது தனிமையைக் கொண்டாடும் விதத்தில் நடனமாடுவதுடன் படம் முடிவடைகிறது. சீனாவில் முதலாளித்துவம் மெல்ல மீண்டும் ஊடுருவுவதையும் மேற்கத்திய கலாச்சாரம் தாக்குவதையும் வசதிகளுக்காக சீன மக்கள் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்தலும் உறவுகளின் நிலையற்ற தன்மைகளும் அந்நியமாதல் உணர்வுகளையும் இந்தப் படம் சித்தரிப்பதில் மென்மையான அதி்ர்வை ஏற்படுத்துகிறது.
கண்ணை விரிய வைக்கும் மலைப்பிரதேசங்கள், நிலக்கரி சுரங்கங்கள், சீனா மற்றும் ஆஸ்திரேலியாவின் நாகரீக விஸ்வரூபங்களை காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் அதற்குரிய துயரம் ததும்பும் இசையை இனிய ரீங்காரமாக தந்த இசையமைப்பாளரும் நமது
பாராட்டுக்குரியவர்கள்.

THE SUMMER OF SANGALI (  இயக்குனர் அலாண்டே கேவட்டே) லித்துவானியா படம்

இப்படம் இரண்டு இளம் பெண்களைப் பற்றியது. இருவருமே அழகானவர்கள். இருவரும் ஒருவர் மற்றவரால் கவரப்படுகிறார்கள். ஒரு நாள் இருவரும் உடல் உறவு கொள்கிறார்கள்.ஒரே பாலின உறவு சகஜமாகி விட்ட வெளிநாட்டவருக்கு இதற்கு பிரச்சினை இல்லை. நமக்குத்தான் இத்தனை ஆண்கள் ஏங்கிக்கிடக்கும் போது ஏன் இப்படி இரண்டு பெண்கள் தங்கள் யோனியை இன்னொரு பெண்ணை சுவைக்க விடுகிறார்கள் என்ற கேள்வி எழாமல் இருக்காது. திரைப்பட விழாவில் திரையிட்ட பல படங்களில் இத்தகைய சென்சார் செய்யப்படாத முழு நீள நிர்வாணக்காட்சிகளுக்கும் உடலுறவுக்காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை.ஆனால் இது லெஸ்பியன் படம் அல்ல பாதிப்படம் இப்படியே போனாலும் பிற்பாதியில் படம் உயரத்திற்கு பறக்கிறது. உயரத்தை கண்டு அச்சமடையும் நாயகி சங்காலியா விமானம் ஓட்டுவதற்கு அச்சம் கொள்கிறாள். கோடையில் நடைபெறும் ஏரோநாட்டிகல் சாகச கண்காட்சி விழாவில் பங்கேற்க விரும்புகிறாள். அவளுடைய கனவு நனவாக அவளுடைய காதல் தோழி ஆஸ்டே உதவுகிறாள், அவளுடைய ஊக்கத்தால் அவள் அச்சம் தவிர்த்து உயரத்தில் பறப்பது கிளைமேக்ஸ், வாங்கிய ஊதியம் என்னவோ நாயகியாக நடித்த ஜூலிஜா அற்புதமான நடிப்பையும் சாகசத்தையும் வெளி்ப்படுத்துகிறார். நிர்வாணக் காட்சிகளில் தனது உடலை ஒரு துளிகூட மறைக்காமல் திறக்கும் அவர் பிற்பகுதியில் தனது அச்சத்தைப் போக்க உயரமான செல்போன் கோபுரங்களிலும் கட்டடங்களும் ஏறி மெய்சிலிர்க்க வைக்கிறார். இறுதியில் அவள் விமானத்தில் ஏறி பறக்கும் போது அவளுடைய கனவு நனவாகிறது.

HOW HE FALL IN LOVE ( US ) இயக்குனர் மார்க் மேயர்ஸ்

திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணுடன் கள்ளக்காதலில் விழும் இளைஞனின் கதை இது. ஆரம்பததில் சாதாரண உடல் இச்சைக்காக தொடங்கும் உறவு இருவரின் நெருக்கத்தால் ஆழமான காதலாகிறது. தன்னை விட இரண்டு மடங்கு வயதான கணவருடன் அவள் மனம் ஒட்டவில்லை. தன் வயதுக்கேற்ற காதலனையும் வாழ்க்கையையும் அவள் நாடுகிறாள். கணவன் ஒரு அற்புதமான மனிதர். வாள் வீச்சு கற்றுக்கொடுப்பவர். தன் மனைவி இன்னொரு இளைஞனை சந்திப்பதை அறிந்து மனம் துன்புற்று அவனுடன் பேசும் காட்சியில் உனக்கு திருமணமாகி உன் மனைவி இன்னொருவனுடன் போனால் என் வலி என்ன என்று எனக்குப் புரியும் என்கிறார். அவனுடன் கைக்குலுக்க கைநீட்டி திடீரென அவன் முகத்தில் குத்து விடும் காட்சி ஒரு கவிதை. இறுதியில் அந்த இளைஞனும் அவளும் தங்கள் உறவை நிறுத்திக் கொள்ளும் காட்சியும் கவித்துமாக முடிகிறது.

PHEONIX  ஜெர்மனி ( இயக்குனர் கிறிஸ்டியன் பெட்சோல்ட்)
திரைப்பட விழாவின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அற்புதமான படம் இது. அபாரமான கதையமைப்பும் திரைக்கதையும் அற்புதமான கிளைமேக்சும் இப்படத்தைப் பார்த்தவர்களுக்கு பரவச அனுபவத்தை தந்தன. முதலில் இப்படம் ஐநாக்ஸ் திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை 7.15 மணிக்குத் திரையிடப்பட்டது. 5.30 மணி முதலே ரசிகர்கள் நீண்ட கியூ வரிசையில் ஐநாக்ஸ் வளாகத்தில் காத்திருந்தனர். 7.20 வரை உள்ளே அனுப்பாத ஐநாக்ஸ் நிர்வாகம் வர்த்தக ரீதியான படங்களுக்கு பார்வையாளர்களை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தது. திரைப்பட விழாவுக்கு வந்தவர்கள் ஏதோ ஓசியில் படம் பார்க்க வந்த பிச்சைக்காரர்கள் போல நடத்தி கடைசியில் 50 பேரை கூட உள்ளே அனுப்பாமல் 170 இடங்கள் (மட்டுமே) கொண்ட அரங்கம் நிறைந்துவிட்டதாக கூறி 2 மணி நேரமாக காத்திருந்த 200 பேரை திருப்பி அனுப்பியது.ரசிகர்கள் வெளியே போக மறுத்து தர்ணா செய்தனர். கடைசியில் திரைப்பட விழா இயக்குனர் திரு.தங்கராஜ் மீண்டும் இப்படம் திரையிடப்படும் என்று உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். இரண்டுநாட்களுக்குப் பிறகு மீண்டும் இத்திரைப்படம் உட்லண்ட்சில் திரையிடப்பட்டது. இப்படத்தின் கதாநாயகி ஒரு யூதக்குடும்பத்தைச் சேர்ந்தவள். 1944ம் ஆண்டு நாஜிப்படைகளால் கைது செய்யப்பட்ட அவள் கணவன் ஜானி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தனதுமனைவியையும் அவள்குடும்பத்தினரையும் காட்டிக் கொடுக்கிறான். அவர்கள் இருந்த வீடு குண்டு வெடித்து தரைமட்டமாகி எல்லோரும் இறந்துவிட கதாநாயகி நெல்லி மட்டும் உயிர்தப்புகிறாள். ஆனால் அவள் முகம் சிதிலமடைகிறது. முகமாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு புதிய முகம் கொண்டு வரும் அவள் கணவருடன் பழகுகிறாள். அவளை மனைவி நெல்லி போல நடிக்கச் சொல்லுகிறான் அவன். அவள் சொத்தை தன்மனைவி உயிருடன் இருப்பதாகக் காட்டி அபகரிப்பது அவன் தி்ட்டம். தன்னைக்காட்டிக் கொடுக்கும் முன்பு அவன் தன்னை விவாகரத்தும் செய்துவிட்டதை அவள் அறிகிறாள். துரோகியான கணவனை சுட்டுக்கொல்ல அவள் துப்பாக்கியும் வைத்திருக்கிறாள் .ஆனால் அவன் மீதுள்ள தன் அன்பினாலும் காதலினாலும் அவள் அவனைக் கொல்லவில்லை. அதை விட பெரிய தண்டனையை தான் யார் என வெளிப்படுத்தி தருகிறாள். அந்த தருணம் சினிமாவின் பொற்காலங்களில் பொறிக்கப்பட வேண்டும். ஸ்பீக் லோ வென் யூ ஸ்பீக் லவ் என்ற அற்புதமான பாடலுடன் கணவர் அதிர்ந்து நிற்க திரைப்படம் முடிகிறது.


உலக சினி்மா -தனிமையில் ஆயிரம் மைல்கள் பயணம்







குமுதம் தீராநதி பிப்ரவரி 2016 இதழில் வெளியான எனது கட்டுரை இது....

உலக சினிமா
தனிமையில் ஆயிரம் மைல்கள் பயணம

செந்தூரம் ஜெகதீஷ


riding alone for thousand miles -china/japan
இயக்குனர் சியாங்-யிமோ ( XIANG YIMOU)

அன்பினால் தழைக்கும் இவ்வையகம். அன்பிலே முதன்மையானது தாய் அன்பு என்பார்கள்.ஆனால் சில குழந்தைகளுக்கு தாய் என்பவள் வெறும் பிறவி கொடுத்தவள் மட்டுமே. பாசத்துடன் தன் கண்ணில் வைத்து வளர்ப்பதென்னவோ தந்தைதான். இத்தகைய தந்தை உள்ளத்தை தாயுமானவன் என்பார்கள். ஆலயமணியில் சிவாஜி கணேசன் சரோஜாதேவியைப் பார்த்து பாடும் ஒரு பாடல் இது பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே ....இந்தப் பாட்டில் கவியரசு கண்ணதாசன் ஒரு வரி எழுதினார்.

தாய்மை எனக்கே தந்தவள் நீயே,,,தங்க கோபுரம் போல வந்தாயே என்பது அந்த வரி. ஒரு மனைவி கணவனுக்கு தாய்மை உணர்வைத் தருவது மகத்தான பரிமாற்றம். கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் முதல் பிள்ளை எனக்கூறுவதும் இதனால்தான்.

பாசத்துடன் பெற்ற உயிரை கண்ணும் கருத்துமாக வளர்ப்பதில் தந்தையி்ன் பங்கு எழுதப்படாதது. அறியப்படாதது. அனுபூதியாக அதன் ஆழம் புரிந்தவர்களுக்கு மட்டுமே தரிசனமாக ஒளி்ர்வது. இது தொடர்பான திரைப்படங்கள் அதிகமாக வந்ததில்லை. தமிழில் அபியும் நானும், தங்க மீன்கள், வெற்றித்திருமகள் போன்ற சில அண்மைக்காலப் படங்களில் தந்தையின் பாசம் பேசப்பட்டது.

குழந்தைகளையும் அவர்களின் உணர்வுகளையும் மையமாக வைத்து உலக அளவில் ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளன. இதிலும் தந்தையின் பாசத்தை பிரதிபலிக்கும் படங்கள் அதிகமில்லை.

தனிமையில் ஆயிரம் மைல்கள் பயணம் என்ற இந்தப்படமும் குழந்தைகளின் உலகையும் அத்துடன் தந்தையின் பாசத்தையும் விவரிக்கிறது.

கதை இதுதான்.

தகாதா என்ற பெரியவர் தன் மகன் கென்ச்சிக்கு உடல்நலம் சரியில்லை என்ற மருமகளின் தொலைபேசி அழைப்பை அடுத்து, அவனைக்காண மருத்துவமனைக்கு செல்கிறார். ஆனால் மகன் தந்தையைப் பார்க்க விரும்பவில்லை. தன் தாயின் மரணத்திற்கு தனது தந்தைதான் காரணம் என்று மகன் தந்தையை வெறுக்கிறான். தன் மீது தவறு இல்லை என்ற தந்தையின் விளக்கத்தை அவன் ஏற்றுக்கொள்ள சிறிதும் தயார் இல்லை. இந்நிலையில் கென்ச்சிக்கு புற்றுநோய் என்றும் அதிக நாட்கள் வாழ மாட்டான் என்றும் மருத்துவர்கள் கூறிய தகவலை கூறி அழுகிறாள் மருமகள் ரியா. தனது கணவர் தொடர்பான ஒரு வீடியோ கேசட்டை அவள் மாமனாரிடம் தருகிறாள். உங்கள் மகனைப் பற்றி புரிந்துக் கொள்ள இது உதவும் என்று கூறும் அவள் தன் கணவர் தகாதாவை புறக்கணித்ததற்காக மன்னிப்பு கோருகிறாள். குடும்பத்துடன் நாம் அனைவரும் உணவருந்தும் நாளுக்காக தாம் காத்திருந்ததாகவும் அந்த நாள் இனி வரவே வராதோ என்றும் ரியா அழுகின்றாள்.

அந்த வீடியோ கேசட்டை போட்டுப் பார்க்கிறார் தகாதா.அது ஒரு கூத்துக் கலைஞனை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அவர் மகன் கென்ச்சி பேட்டி எடுத்த வீடியோ காட்சி. படிப்பை விட்டு சீன நாட்டுப்புறக் கலைகள் மீது நாட்டம் கொண்ட ஜப்பானிய இளைஞனான கென்ச்சி அந்த கூத்துக் கலைஞனின் தனிமையில் ஆயிரம் மைல்கள் நெடும்பயணம் என்ற கூத்துக்கலையை நிகழ்த்துவதற்கு கோருகிறான். அப்போது திருவிழா முடிந்து விட்டதால் அடுத்த ஆண்டு திருவிழாக்காலம் வந்தால் தாம் இந்த கூத்தை நிகழ்த்திக் காட்டுவதாக அந்தக் கலைஞன் கென் தகாகாரா கூறுகிறான்.

இந்த ஆண்டு திருவி|ழாக் காலம் என்பதை அறிந்த தகாதா தனதுமகனின் விருப்பத்தை நிறைவேற்ற அந்தக் நடனத்தைப் படம்பிடிக்க முடிவு செய்கிறார்.இதற்காக ஒரு டிராவல் ஏஜன்சி மூலம் மொழிபெயர்ப்பாளரையும் ரயில், வாடகைக்கார் போன்றவற்றையும் ஏற்பாடு செய்து சீனாவுக்கு செல்கிறார்.இதன் மூலம் தன் பாசத்தை தனது மகனுக்கு உணர்த்த முடியும் என்று அவர் நம்பியது வீண் போகவில்லை. தனது தந்தை தனக்காக சீனா சென்றதை அறிந்த மகன் நெகிழ்ச்சியடைகிறான்.இனி தனது தந்தை அதைப் படம் பிடிக்காமல் திரும்பி வந்தால்கூட அது முக்கியமில்லை என்றும் தனது தந்தையை தாம் மன்னித்துவிட்டதாகவும் கூறுகிறான். ஆனால் கென்ச்சிக்காக அந்த நடனத்தைப் படம்பிடித்து திரும்புவது என்று தகாதா முடிவு செய்கிறார்.

சீனாவில் அவர் தேடிச் செல்லும் நடனக் கலைஞன் கென் இப்போது சிறைக்கைதியாக மூன்றாண்டு தண்டனை பெற்று இருப்பதைஅவர் அறிகிறார். வெளிநாட்டவரான அவரை சிறைக்குள் அனுமதிப்பதும் கைதியை படம் பிடிக்க அனுமதிப்பதும் சாத்தியமே இல்லை என்று வெளியுறவு அதிகாரிகள் மறுக்கின்றனர். அப்போது தமது மகன் மரணப்படுக்கையில் இருப்பதைக் கூறி ஒரு கைதியின் நடனத்தை மட்டும் படமெடுக்க மனிதாபிமான அடிப்பைடையில் அனுமதிக்கும்படி மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் தகாதா விடுக்கும் உருக்கமான வேண்டுகோள் அதிகாரிகளின் மனதை மாற்றுகிறது. படம் எடுக்க அனுமதி கிடைக்கிறது.

ஆனால் நடனக்கலைஞனான கென் நடனத்திற்கான வேடம் அணிந்து வந்தும் அவனால் இசைக்கேற்ப ஆட முடியவில்லை. தனதுமகனை எண்ணி அவன் அழுகின்றான். உணர்ச்சி வசப்பட்டு அவன் அழுவதால் அவன் மகனை தேடி அழைத்து வர முடிவு செய்கிறார் தகாதா. மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கென் இருப்பதால் இன்னொரு நாளில் நடனத்தைப் படம் பிடிக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தகாதா அந்த கலைஞனின் எட்டு வயது மகனைத் தேடி ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஸ்டோன் வில்லேஜ் என்ற ஒருமலைக்கிராமத்திற்கு மொழிபெயர்ப்பாளனை அழைத்துக் கொண்டு பயணிக்கிறார்.

ஊர்ப்பெரியவர்களுடன் பேசி ஒரு வழியாக அந்த எட்டு வயது சிறுவனை தன்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி பெறுகிறார் தகாதா.மிகப்பெரிய விருந்தோம்பலுடன் அந்த கிராம மக்கள் சிறுவனை தகாதாவுடன் அனுப்பி வைக்கின்றனர்.

யாங் எட்டு வயதேயானாலும் சுறுசுறுப்பான சிறுவன். சோகமும் தனிமையும் குழந்தைப்பருவத்திலேயே கண்டவன். பாசம் அறியாத அவனது பால்ய காலத்தில் தந்தை என்பது அவனுக்கு ஒரு வெற்றுச்சொல்தான். அவரைப் பார்பபதில் அவனுக்கு ஒருவித அலுப்புதான் உண்டே தவிர ஆர்வமில்லை. வழியில் கார் பழுதாக இடைப்பட்டநேரத்தில் சிறுவன் தப்பி ஓடுகிறான். அவனைவிரட்டிச் செல்கிறார் தகாதா.அப்புறம் பார்த்தால் அவன் ஓரிடத்தில் மலம் கழிக்கிறான். அவனை அக்கோலத்திலும் இதர பல புன்னகைக் கோலங்களிலும் படம் பிடிக்கிறார் தகாதா. மலம் நாறுகிறது என்றுமொழி தெரியாமல் அவர் மூக்கைப் பிடித்துக்காட்ட சிறுவன் சிரிக்கிறான். பார்ககாதே போ என விரட்டுகிறான். இருவருக்கும் இடையில் இருந்த அந்நியத்தன்மை விலகி ஒரு வித அந்நியோன்னியம் உருவாகிறது இக்காட்சியில். ஆனால் வழி தவறி விட்டதை உணர்கிறார் தகாதா. இருவரும் ஒருவரை ஒருவர் பாசத்துடன் அணைத்த நிலையில் உறங்குகின்றனர். கென்ச்சியை இப்படி ஒரு நாளாவது மடியில் வைத்து உறங்கச்செய்தேனா என்று அவர் கண்கலங்குகிறார். சிறுவயதில் தூக்கி வளர்க்காமல் போன கென்ச்சியை இந்தக்குழந்தையின் ரூப்த்தில் காண்கிறார் தகாதா.விடிகிறது. அவருடன் வந்த கைடு ஊர் ஆட்களுடனும் போலீசாருடனும் வழிதவறிப்போன தகாதாவையும் தேடி வருகிறான், ஆள் நடமாட்டத்தை அறிந்த தகாதா தன்னிடம் மீனவர்கள் படகில் பயன்படுத்தும் விசில் இருந்ததை அறிந்து அதை எடுத்து ஊதுகிறார். நான் ஊதுகிறேன் என்று அந்தச்சிறுவன் வாங்கி பீப்பீ என விசிலை ஊதுகிறான், கைடு அவர்களைக்கண்டுபிடித்து மீண்டும் கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

சிறுவன் தந்தையைப் பார்க்க விரும்பவில்லை என்பதால்தான் ஓடிப்போனான் என்று கைடு மூலமாக ஊர்மக்களுக்கு உணர்த்துகிறார் தகாதா...பயலுக இப்படித்தான் காரணமே இல்லாமே ஓடிக்கொண்டே இருப்பார்கள் என்று ஊரார் கூறுகின்றனர். ஆயினும் குழந்தையின் உணர்வுக்கு மதிப்பளித்து அவனை அழைத்துச் செல்லும் முடிவைக் கைவிடுகிறார் தகாதா.தந்தை தானாக வரும் போது வரட்டும் என்று சிறுவன் கூறியதை அடுத்து அவனை மீண்டும் ஊர்மக்களிடம் விட்டு விட்டு திரும்பிச் செல்லும் தகாதாவை புதிய பாச உணர்வுடன் பார்த்து அந்தச்சிறுவன் கண்கலங்குகிறான். மகனின் ரூபத்தில் அவனை அவர் பார்த்தது போலவே தந்தையின் ரூபத்தில் அவரைஅவன் உணர்கிறான். அவர் காரில் ஏறும் போது கையசைத்து இறங்கச் சொல்லும் சிறுவன் ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்து அழுகின்றான். அவரும் கண்கலங்குகிறார்.

ரத்த உறவோ எந்த விதமான பழக்கமோ இல்லாத குழந்தைக்கும் தமக்குமான பாச பந்தம் இது என்பதை உணர்கிறார் தகாதா. சிறுவன் யாங்கை மார்புடன் தழுவும் போது அவரது கண்களும் கலங்குகின்றன. பின்னர் பிரியா விடை கொடுத்து அவர் காரில் செல்ல விசிலை ஊதியபடியே அந்த சிறுவன் வெகுதூரத்திற்கு காரைத்துரத்தி ஓடி வருகிறான். தூரத்திலிருந்து கையசைத்து விடைகொடுக்கிறான்.

மருமகளிடமிருந்து அழைப்பு வருகிறது. கென்ச்சி இறந்துவிட்டதாக அவள் அழுதுக் கொண்டே கூறுகிறாள். இரவு கென்ச்சி தம்முடன் வெகு நேரம் பேசியதையும் தந்தையை எண்ணி உருகியதையும் அவள் விவரிக்கிறாள். இனி எதுவும் வேண்டாம் திரும்பி வாங்க அப்பா என்று கூறுகிறாள் மருமகள்.தனது தந்தைக்கு மகன் எழுதிய கடைசி கடிதத்தையும் அவள் போனில் வாசித்துக்காட்டுகிறாள்.

முகமூடி அணிந்து நடனமாடும் கூ்த்துக்கலையின் மூலம்தான் வாழ்க்கையில் நமது பாச உறவுகளுக்கு நாம் அணிவிக்கும் முகமூடிகள் குறிதது தாம் புரிந்துக் கொண்டதாக கென்ச்சி அந்தக் கடிதத்தில் குறிப்பிடுகிறான். தானும் ஒரு முகமூடியுடன் தந்தையை நெருங்க விடவில்லை என்று அவன் கூறுகிறான். முகமூடியைக் கழற்றி தனது உண்மையான முகத்துடனும் பாசத்துடனும் தனது தந்தையுடன் பேச வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவன் விருப்பம் பதிவாகியுள்ளது.

மகனுக்காக கண்ணீர் விடுகிறார் தகாதா என்ற அந்த தந்தை. மீண்டும் சிறைக்குச் சென்று கென் என்ற அந்தக் கூத்துக் கலைஞனை சந்திக்கிறார். மகன் கென்ச்சி இறந்துவிட்ட செய்தியை சொன்னால் கூத்துக்கலைஞன் உணர்சசி வசப்பட்டு மீண்டும் நடனமாடுவதை நிறுத்துவான் என்று கருதி அவர் கூறவில்லை. தமது மகனுக்காக படம் பிடிப்பதாக பொய் சொல்கிறார்.

மீண்டும் நடனமாடத் தயாராகிறான் கென். அவனிடம் சிறுவன் யாங்கின் மலம் கழிக்கும் படம் உள்ளிட்ட தாம் எடுத்த படங்களை காட்டுகிறார் தகாதா. யாங்கின் படங்கள் கென்னை மட்டுமல்ல, சிறையில் உள்ள அத்தனைக் கைதிகளையும் தங்கள் பிள்ளைக்குட்டிகளை எண்ணி கண்கலங்க வைக்கிறது. மிகுந்த நன்றியுடன் தகாதாவை வணங்குகிறான் கென்.

முகமூடி அணிந்து கென் ஆடும் அந்த நடனக்கூத்து நிகழ்ச்சியில் வாழ்க்கையில் உள்ள முகமூடிகளை கழற்றி அன்பில் நேர்மையாக இருங்கள் என்ற சீனப் பெருங்கடவுள் யுவானின் கொள்கையை நடனத்தில் விவரிக்கிறான் கூத்துக் கலைஞன்.

நடனத்தைப் படம் பிடித்த பின் எங்கே செல்வது என்று தெரியாமல் தனிமையில் அவர் நிற்கிறார். அவர் கண்களில் வழியும் கண்ணீருடன் படம் முடிவடைகிறது.

இந்த அற்புதமான தகாதா கதாபாத்திரத்திற்கு அபாரமான நடிப்பால் உயிரூட்டியுள்ளார் கௌச்சி என்ற ஜப்பானிய நடிகர். வாழ்நாள் முழுவதும் உறவுகளைப் பிரிந்து தனிமையில் கழித்துவிட்டு முதுமைக்காலத்தில் தனக்கு முன்பே தனது மகன் இறந்துவிட்ட துயருடன் குடும்ப பந்தத்தை அன்புக்கு அடைக்கும் தாழ்களாக உள்ள முகமூடிகளை நினைத்து அழுகிறார் தகாதா.ஈடு செய்ய முடியாத இந்த இழப்பும் தனிமையும் அவரை துயரத்தில் மூழ்கடிக்கச் செய்கிறது. பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்த வேண்டியவர்களிடம் அதை செலுத்தாமல், முகமூடிகளுடன் வாழும் மனிதர்கள் காலம் கடந்து விட்டப்பிறகு அந்த அன்பைப் பகிர நினைப்பதால் என்ன பயன்? காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. மரணம் ஒருவரையும் விட்டு வைப்பதில்லை. யாரோ ஒரு அந்நியச்சிறுவனுடன் தந்தைப்பாசத்தை அறிந்த தமக்கு தமது சொந்தமகனுடன் ஏன் காலம் தோறும் பாசத்துடன் வாழ முடியவில்லை?

உலகிலேயே மிகவும் அற்புதமானது அன்புமட்டும்தான். ஒரு மனிதன் இன்னொரு மனிதன்மீது எந்த வித சுயநலமும் இன்றி செலுத்தும் அன்பு தெய்வீகமானது. அன்புதான் உலகைப் பிணைக்கிறது. சீனாவும் ஜப்பானும் பின்பற்றும் பௌத்த சமயமும் அன்பையே போதிக்கிறது. ஒரே நாளில் அந்த எட்டுவயது சிறுவனை ஆரத்தழுவி அழச்செய்தது அநத் அன்புதான்.

மகனுக்காக கென் என்ற அந்தக்கூத்துக் கலைஞனும் அவனைப் போன்ற இதர கைதிகளும் கண்ணீர் விடும் காட்சியும் அன்பினால் ஏற்படும் காயங்களையும் வலிகளையும் விவரிக்கிறது. அன்பினால் வளர்கின்றன உறவுகள், உறவுகளால் வளர்கிறது வாழ்க்கை. அன்பும் உறவும் கிடைக்காத மனிதனுக்கு தனிமையில் ஆயிரமாயிரம் மைல்கள் துயரமான பயணம்தான் வாய்க்கிறது,அவன் தேடிச்செல்வது அவனுக்குக்கிடைப்பதில்லை. அவன் எதையாவது தேடுகின்றானா என்பதும் தெரியவில்லை.

முகமூடிகளுக்குப் பின்னால் அழுகின்ற முகத்துடன் உள்ள ஆயிரமாயிரம் மனிதர்களை புரிந்துக் கொள்ளவும் அன்பைப் பகிரவும் நாம் தயாராக இல்லை. நாமும் முகமூடிகளுடன் அவர்களை அணுகி வாழ்கின்றோம்.

துயரமும் தனிமையும் நோயும் மரணமும் வாழ்க்கையை முடித்து விடும் முன்பாக அன்பை நாம் அடைந்துவிடமாட்டோமா என்ற ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறது இந்த அற்புதமான படம்.

அன்பினால் செழிக்கும் இவ்வையகம்.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...