Thursday 5 November 2020

புத்தகக் கடைகள்

மீண்டும் மீண்டும் ஒரு மனிதன் புத்தகக் கடை நோக்கி செல்ல வைப்பது எது என்று புரியவில்லை. படித்து தேவைப்படாத 30 ஆங்கில புத்தகங்கள் ஒரு பையில் போட்டு வைத்திருந்தேன் .அதை ஒரு புத்தக வியாபாரியிடம் கொண்டு போனேன்.₹ 300 தருவதாக கூறினார் .எல்லாம் பெரிய புத்தகங்கள். ஓஷோ நூல்கள் சிலதும் இருந்தன.கொடுக்க மனமில்லாமல் திருப்பி சுமந்து வீட்டுக்கு வந்தேன்.மறுபடியும் இன்று காலை நல்ல வெயில் காயுது என அண்ணாசாலை சிவா புத்தகக் கடைக்கு எடுத்துச் சென்றேன். சகோதரன் இறந்த துக்கத்தில் பல நாட்களாக கடையைத் திறக்க மனமின்றி இருந்த அவர் சில நாட்களுக்கு முன்பு தான் கடையைத் திறந்தார்.கொரோனா அச்சம் காரணமாக யாரும் புத்தகங்களை வாங்க வருவதில்லை என்று சொன்ன அவர் புத்தகங்களை வாங்க மறுத்து விட்டார். பின்னர் பணம் மெதுவாக அடுத்த மாதம் வாங்கிக் கொள்வதாக சொன்னதும் எடுத்துக் கொண்டு கணக்குப் போட்டார்.₹ 680 என சொன்னார். குறைவாக தெரிந்தும் கொடுத்து விட்டேன்.அவரிடம் ₹ 140க்கு இரண்டு புத்தகங்களை வாங்கிக் கொண்டு ₹ 520 பாக்கி விட்டு திருவல்லிக்கேணி சென்றேன். அதற்குள் வானம் இருட்டியது.வெயிலை நம்பி கடை போட்டவர்கள் அவசரமாக புத்தகங்களை மூடிக் கொண்டிருந்தனர் .கிடைத்த சில நிமிடங்களில் 3 கடைகளைப் பார்த்து ₹400க்கு புத்தகங்களை வாங்கினேன். அவை சிறந்த புத்தகங்கள். குறைந்த விலையில் மழை காரணமாக பணத்தேவை யின் பொருட்டு கொடுத்து விட்டார்கள் வியாபாரிகள். குறைந்த விலையில் புத்தகங்கள் விற்ற போது எழுந்த வருத்தம் குறைந்த விலையில் வேறு முக்கிய புத்தகங்கள் வாங்கியதால் மகிழ்ச்சியாக மாறியது.முதலில் கேட்ட கேள்விக்கு வருகிறேன்.ஒரு மனிதன் மீண்டும் மீண்டும் புத்தகக் கடைகளை நாடிச் செல்வது எதற்காக? குடும்பத்தில் இருந்து அந்நியமாதல். நட்புகளின் இழப்பு, காதல் கலவிக்கு ஒரு பெண்ணையும் அடையாத தனிமை,சுய கழிவிரக்கத்தை மறைக்க தன்னையொரு தனி மேதையென கருதுதல், மனிதர்கள் மீதான கோபம், வெறுப்பு , விலகல், அச்சம்,கசப்பு... கண்பார்வை முற்றிலும் இழந்து மடியும் வரை தவணை யில் சிறுக சாதல் என எத்தனை காரணங்கள் இருப்பதாக நான் கூற முடியும். என்னுடன் பேச யாருமில்லை. புத்தகங்களுடனே என் வாழ்க்கை முழுவதும் உரையாடிக் கொண்டிரூக்கிறேன்.அந்த உரையாடலுக்காவே இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.அதில் ஒரு சந்தோஷம் கூட கண்டு விட்டேன்.

இன்று வாசித்த புத்தகம் 7- 10

இன்று வாசித்த புத்தகம் 7 குரல்களைப் பொறுக்கிச் செல்பவன். கவிஞர் ஆசு. ஆ.சுப்பிரமணியன் என்ற ஆசுவை பல வருடங்களாகத் தெரியும். ஆறேழு புத்தகங்கள் எழுதினார் என்றும் தெரியும்.என் புத்தக பரண்களில் அவர் நூல்கள் இருக்கும் என்றும் தெரியும்.ஏன் இத்தனை காலமாக ஆசுவைப் பற்றி ஓரிரு வரிகளைக் கூட எங்கேயும் குறிப்பிடவில்லை என்று வெட்கினேன். மன்னியுங்கள் ஆசு உங்கள் எளிமையில் ஏமாந்து விட்டேன்.ஆசுவின் கவிதைப் புத்தகத்தைப் புரட்டிய போது என் முன்முடிவுகள் தகர்ந்தன.சிறப்பாக தன்னை வெளிப்படுத்திய ஒரு கவிஞனை அடையாளம் கண்டேன்.புத்தகத்தில் நுழையும் முன்பு கவிஞர் ஞானக்கூத்தன் வேறு மனம் திறந்து ஆசுவுக்கு மிகச்சிறந்த அங்கீகாரம் அளித்து முன்னுரை எழுதியுள்ளார். எனவே மிகவும் கவனத்துடன் ஒவ்வொரு கவிதையாக கடந்து சென்றேன்.ஆசுவின் கவிதைகள் அவரைப் போலவே எளிமையாவை.சில கவிதைகளில் சொல் விரயம் தெரிகிறது. சில கவிதைகள் சொல்லை ஆள்கின்றன. இதற்கு காரணத்தை ஆசுவே தன் முன்னுரையில் கூறுகிறார். மொழியின் வேருக்குள் என் கவிதை நீளுகிறதா என்றால் நான் கொண்டிருக்கும் சமூக உணர்வுள்ள பொறுப்பு மிக்க கவிதைக்கு எதுவரை மொழி நீளுகிறதோ அதுவே போதுமானது. மிகச்சிறந்த பார்வை ஆசு. கவிதையைப் பார்க்காமல் அவன் யார் எந்த சாதி எந்த குழு என்று பார்க்கும் தமிழ்ச்சூழலில் ஆசு போன்றவர்கள் அடையாளம் காணப்படும் நாள் தாமதமாகலாம்.ஆனால் கட்டமைக்கப் பட்ட பிரம்மாண்டங்கள் சரிந்து விழும் போது ஆசு போன்ற கவிஞர்கள் கவனம் பெறுவது நிச்சயம். --------- இன்று வாசித்த புத்தகம் 8 மகரந்தத் துகள்கள் கவிஞர் வானவன் 2002ம் ஆண்டு எழுதிய ஹைக்கூ கவிதைத் தொகுப்பு. 18 ஆண்டுகளுக்குப் பிறகு கவிதை குறித்த மதிப்பீடுகள், ஹைகூ குறித்த பார்வைகள் நிறையவே மாறி விட்டதை வானவனும் உணர்ந்துக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன் . இது அவர் கவிதை களை விமர்சிக்கவோ தலையில் வைத்து கொண்டாடவோ அல்ல. நல்ல வரிகள் பலவற்றை இந்நூலில் கண்டேன்.எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது எனக்கும் என் வீட்டாருக்கும் உதவி வேண்டுமா எனக் கேட்டு முகநூல் வழியாக தொடர்பு கொண்ட அவரது தொண்டு உள்ளத்தையும் அன்பையும் நான் மறக்கவில்லை. இலக்கியக் கூட்டங்களில் விதைகளை இலவசமாக விநியோகம் செய்வதையும் பார்த்து மகிழ்ந்தவன் நான் . நண்பர் பா.உதயகண்ணன் கூறியது போல வானவனிடமிருந்து மேலும் சிறப்பான கவிதைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. இரவு பயணம் துணைக்கு நிலா என்று ஹைகூவை நெருங்கிய கவிஞர் வளர என் வாழ்த்துகள். ----------- இன்று வாசித்த புத்தகம் 9 அப்ராவின் உப்பு நீர் . அன்பாதவனின் பெயர் நன்கு அறிந்த ஒரு பெயர்தான்.சௌந்தர சுகன் கல்வெட்டு பேசுகிறது போன்ற சிற்றிதழ் களில் வந்த ஆக்கங்கள் மூலமாக அவரைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறேன்.அவருடைய இந்த கவிதை நூல் இன்னும் அதிகமாக அறியச் செய்தது.முன்னுரையில் வதிலை பிரபா கூறியது போல அன்பாதவனின்எழுத்து நடை ஒரு தேர்ந்த பயணியின் தெளிவான நடை என்று எனக்கும் தோன்றியது. அவர் குறிப்பிட்ட கவிதை வரிகளை நானும் விரும்பி னேன் . உலகின் மிக உயர்ந்த கான்கிரீட் சிகரத்திலிருந்து நோக்குபவனின் கண்களில் தேங்கிய ஏக்கம் கடல்தாண்டி தெரியுமோ காதலினை வதனம் என்ற வரிகள் சிறப்பு. கோலியாத் பறவை,பைரவர்கள் போல சில கவிதைகள் அபூர்வமாக முழுமையான கவிதைகளாக மணம் வீசுகின்றன. இன்று வாசித்த புத்தகம். 10 உதிரும் இலை...யாழினி முனுசாமி கவிதைகள். நண்பர் முனுசாமி ஒரு பேராசிரியர். கவிஞர். முரண்களரி படைப்பகம் நடத்தி வருபவர். அவருடைய முதல் கவிதை நூல் 2005ம் ஆண்டு கனிமொழியின் முன்னுரையுடன் வந்துள்ளது. தவற விட்டேன்.அண்மையில் பழைய புத்தகக் கடையில் அவரது உதிரும் இலை கிடைத்தது.அன்பினால் நன்றி என்ற நீண்ட பட்டியலில் என் பெயரும் இருப்பதைப் பார்த்து ஆச்சரியம். நான் அவருக்கு என்ன செய்துவிட்டேன்? கவிதைகளில் ஆங்காங்கே கணவனாக,காதலனாக,இயற்கையை நேசிப்பவனாக ,சாதிய எதிர்ப்பாளனாக பல பரிணாமங்களைக் காட்டும் கவிஞர் தன் வயக் கவிதைகள் மூலமும் மனதை நெருங்கி வருகிறார்.வகுப்பறைகளுக்கு மட்டும் வயதாவதில்லை என்பன போன்ற பல வரிகளை ரசிக்க முடிகிறது .இத் தருணத்தில் இக்கவிதை சற்று கூடுதலாகப் பொருந்தும். எதிரி நயவஞ்சகமாய்ப் போர்த் தொடுக்கையில் ஒளிந்து கொள்ளுங்கள் உன் சகோதரனைக் காட்டிக் கொடுத்தாவது நீங்கள் பிழைத்துக் கொள்ளுங்கள்.எதிரி தரும் பெரும் பரிசுப் பொருள் கொண்டு வளப்படுத்திக் கொள்ளுங்கள்.பிறகு பேசுங்கள் நீயும் நானும் சகோதரன் ஒரே இனம் ஒரே நிறம். ..

on writing 2

On Writing. 1.Literature is mostly about having sex and not much about having children.Life is the other way round. David Lodge 2.Childhood is a writer's bank balance .Graham Greene 3.If it reads easy,it was writ hard. Ernest Hemingway 4 I am dying and that whore Emma Bovary will live forever. Gustave Flaubert 5.You write in order to say the things you can't say.It's a cry or a scream or a song. Samuel Beckett 6.What is the use of a book thought Alice "without pictures or conversations" Lewis Carroll. 7 We do not receive wisdom,we must discover it for ourselves after a journey that no one can take for us or spare us. Marcel Proust 8.Travel is the saddest of all pleasures. Paul Theroux. 9 Picasso when asked why he was always to be found on the balcony,painting the same view,replied "Because every moment the light is different,the colours are different,the atmosphere is different". 10 It is no sin to be neurotic Sigmund Freud 11 In solitude man is eaten up by himself,among crowds by the many. Friedrich Nietzche 12.Most people are mediocre,they want to see their mediocrty mirrored in print. Antony Burgess. 13.It was important to note how people looked..If you don't take into account their haircuts,the hang of their pants,their taste in skirts and blouses,their style of driving a car or eating a dinner,your knowledge is incomplete . Saul Bellow 14 Socially I am a cripple. Vladimir Nabokov 15.The worst thing of getting old is feeling young. Oscar Wilde 16 .Nothing can be created without loneliness .I have created a loneliness for myself which nobody can comprehend.It is very difficult to be alone!There are clocks and watches. Pablo Picasso 17.The only way to forget is to remember. Sigmund Freud 18.Work and love are the only ways in which human nature can come close to happiness or at least avoid misery .Sigmund Freud 19. There are no facts only interpretations.Friedrich Nietzsche 20.It is better to light a candle than curse the darkness.. Chinese proverb. { Excerpts from A writer's Commonplace book } by Rosemary Freedman

on writing 1

1 .Writers write from a sense of loss Andre Gide 2. No writer can be a joiner.He must preserve his independence at all costs.J.B.Priestley. 3.A writer knows more than he knows Nadine Gor dimer 4 This whole book is a draft_nay but the draft of the draft . Isaac Singer 5 .I hate everything that does not relate to literature . Conversations bore me.. to visit people bores me ,the sorrows and joys of my relatives bore me to my soul .Franz Kafka 6 George Orwell said that like all writers he was driven by some demon whom one can neither resist nor understand. 7.Writers are supposed to make you laugh and cry.That's what mankind is looking for Saul Bellow. 8 I think like a genius write like an accomplished author and talk like a child... Vladimir Nabakov 9.The creator is nothing the work is everything.Gustave Flaubert 10 Last week I spent five days writing one page. Gustave Flaubert 11.Every great novelist listens for that super personal wisdom,which explains why great novels are always a little more intelligent than their authors.Novelists who are more intelligent than their works should change their profession.Milan Kundra 12 I write 50 pages until I hear a foetal heartbeat. Henry Miller 13.If you are a writer by definition it seems to me you are neurotic.And the whole writing business is some way of coming to terms with it. Dorris Lessing 14.Originality is nothing but judicial plagiarism Voltaire 15.Writing is always creating order from disorder.Order is something that needs disorder to take form .The only order one can trust is the order of the mind,internal order.And nothing is more disordered than a human mind.Italio Calvino. 16.Writing is a form of therapy, sometimes I wonder how all those who do not write ,compose,or paint can manage to escape the madness,the melancholia,the panic and fear which is inherent in the human situation.Graham Greene.{ Picture of Henry Miller} ----------------

the international movie

தி இன்டர்நேஷனல் என்ற படம் பார்த்தேன்.முழுவதும் பார்த்தேன்.இத்தனைக்கும் படத்தில் ஒரு முத்தக்காட்சி கூட இல்லை. சுத்தமான யு படம். கதாநாயகன் ஒரு இன்டர்போல் ஏஜன்ட்.கதாநாயகி ஒரு மாவட்ட ஆட்சியர் மட்டத்தில் உள்ள ஒரு அதிகாரி. பன்னாட்டு வங்கி ஒன்று ஆயுதங்களை வாங்கி விற்பனை செய்ய பெரிய முதலீடு செய்கிறது .உலகில் அணு ஆயுதங்களை எல்லா நாடுகளும் குவித்து வைப்பதால் பெரும் போர்களுக்கு வாய்ப்பு இல்லாத கட்டாயம். ஆனாலும் மூன்றாவது உலக நாடுகளில் சிறிய யுத்தங்கள், மோதல்கள், கிளர்ச்சிகள்,புரட்சிகள் வெடிக்கின்றன.அதற்கு எல்லோரும் சிறிய ஆயுதங்களை வாங்க பல ஆயிரம் மில்லியன் டாலர்கள் செலவு செய்கின்றனர். ஆயுத பேரம் மூலம் அந்த பன்னாட்டு வங்கிக்கு அதிகமான லாபமில்லாத போதும் ஏன் அதில் மிகப்பெரிய முதலீடு செய்கிறது?அந்த வங்கி ஆயுதங்களை தீவிரவாதிகள் கையில் கொடுத்து அதிக லாபம் காண்கிறது. ஆயுதங்களை தன் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இந்த உண்மையை அறிந்த நபர்கள் கொல்லப்படுகின்றனர். சர்வதேச சட்டங்கள்,வல்லரசு நாடுகள் சிறிய நாடுகளில் மோதலை மறைமுகமாக தூண்டி விடுகின்றன. எல்லோருக்கும் ஆதாயம் இருக்கிறது.யாரும் இந்த ஆட்டத்தை நிறுத்த முடியாது. சட்டமும் சிஸ்டமும் இடம் தராது.இதனை கிளைமேக்ஸில் உணர்கிறான் படத்தின் நாயகன்.சட்டத்தை விட்டு சிஸ்டத்தை மீறி அந்த கொடூர ரத்த வெறி பிடித்த ஆட்டத்துக்கு அவன் முடிவு கட்டுகிறான். படம் நல்ல திரைக்கதை வசனங்கள் சண்டை சாகச காட்சிகளுடன் விறுவிறு என நகர்கிறது.ஒரு லிப்டில் நாயகி நாயகனை பார்க்கும் போது அவன் முக வாட்டத்தை கவனிக்கிறாள்.ஷேவிங் செய்யாத முகம்.உறங்காத கண்கள். காலையில் சாப்பிட்டாயா என்று கேட்க நினைவில்லை என்கிறான்.தூங்கி எத்தனை நாளாச்சு எனக் கேட்கிறாள். தெரியவில்லை என்கிறான் ஒரு பெண்ணை படுக்கையில் பார்த்து எத்தனை நாளாச்சு என்றும் கேட்கிறாள் .Are you offering me என்று அவன் திருப்பி கேட்க நோ என்று அவள் சிரிக்கிறாள்.படத்தில் உள்ள ஒரேயொரு ரொமான்ஸ் காட்சி இதுதான்.

இன்று வாசித்த புத்தகம் 11-15

இன்று வாசித்த புத்தகம் 11 நான் வடசென்னைக்காரன். பாக்கியம் சங்கர். நண்பர்கள் சூர்யராஜன்,மு.நந்தாவுடன் பாக்கியம் சங்கரை சந்தித்து பேசிய போதெல்லாம் அவர் இத்தனை நல்ல எழுத்தாளராய் வருவார் என நினைத்தது இல்லை .ஒரு முறை எழுத்தாளர் பிரபஞ்சனுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது பாக்கியம் சங்கரை குறிப்பிட்டு நன்றாக எழுதுவதாக கூறினார். அதன் பின்னர் பாவையர் மலர் இதழில் அவர் எழுதி வந்த தொடர் தேநீர் இடைவேளையின் சில பக்கங்களை படிக்க நேர்ந்தது .சங்கரிடம் மிடாஸ் டச் என்ற மந்திரம் ஜாலம் செய்யும் தங்க செங்கோல் இருப்பதை அறிந்துக் கொள்ள எனக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை.ஆனந்த விகடனில் நான்காம் சுவர் தொடராக வந்த போது அவருக்காகவே விகடனை வாரம் தவறாமல் வாங்கினேன். பல அத்தியாயங்களைப் படித்து சிலவற்றை தவற விட்டேன். அது நூலாக வந்து பெரும் வரவேற்பை பெற்றதையும் அறிந்தேன்.நண்பர் நிமோஷினி விஜயகுமாரன் அழைப்பின் பேரில் பெரம்பூரில் நடைபெற்ற நூல் விமர்சனம் கூட்டத்தில் பார்வையாளனாக இரண்டு மணி நேரம் அமர்ந்து இருந்தேன்.காரணம் சங்கரின் எழுத்து ஏற்படுத்திய நம்பிக்கை. தொடர்ந்து என் அழைப்பை ஏற்று எனது இரண்டு சினிமா நூல்களின் வெளியீட்டு விழாவில் பாக்கியம் சங்கர் கடந்த ஆண்டு டிசம்பரில் கலந்துக் கொண்டு சிறப்பு செய்தார்.இதனிடையே எப்போதோ பழைய புத்தகக் கடையில் வாங்கிய பாக்கியம் சங்கரின் நான் வடசென்னைக்காரன் என்ற இந்தப் புத்தகம் என் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது.பாவையர் மலரில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இது.ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சிறுகதையின் நேர்த்தியுடன் எழுதப்பட்டுள்ளது.அசோகமித்திரன் கூறியது போல நன்றாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை சிறுகதைக்கு நிகரானது.அப்படித்தான் இந்த கட்டுரைகள் எடுத்ததும் கீழே வைக்க மனமில்லாமல் ஒரே மூச்சில் வாசிக்க வைத்தன.இந்த தொகுப்பில் வடசென்னையின் வாசம் அதிகம்.அதில் சில மதுக்கடை வாசனைகளும் இல்லாமல்லி, சசிகலா,ஆனந்தி போன்ற சில பெண்களின் மேனி வாசமும் இருக்கிறது.கானா கலைஞனின் பாடலுடன் ஜேசுதாஸ் காதல் கீதங்களும் இருக்கின்றன. கவியரங்குகள்,நண்பர்கள், காதலிகள் வந்து போகின்றன. ஆத்மாநாமும் கலாப்ரியாவும் பாபுவும் ஏனைய கவிஞர்களும் வருவதால் இதில் இலக்கிய வாடையும் வீசுகிறது. தண்ணீர் கேட்டு போன வீட்டில் நாராயண குருவும் நித்ய சைதன்ய யதியும் விவாதிக்கப்படுகின்றனர் .தன் வாழ்வையும் தன்னை சுற்றிச் சூழ்ந்து சுழலும் மனிதர்களையும் பாக்கியம் சங்கர் உன்னிப்பாக கவனித்து அதைப்பற்றி எழுதவும் செய்கிறார்.எழுத்து இயல்பாக வருகிறது. நான் படிக்கும்போது எந்தவித இடையூறையும் அது செய்யவில்லை.படித்து முடித்ததும் தபால்தலை மீது அழுத்தமாகப் பதித்த ஒரு முத்திரையாக மனத்தின் மீது அவர் எழுத்து பதிகிறது. அவர் அறிந்த வடசென்னையை நன்றாக அறிவேன்.அவர்கள் அந்நியர் அல்லர்.இனி சங்கரின் எழுத்தும் அந்த மனிதர்களுடனான உறவுக்கு ஒரு நட்புப் பாலமாக இருக்கும். -------- இன்று வாசித்த புத்தகம் 12 . A writer's commonplace book. என் அன்பு நண்பர் ஷாராஜ் Shahraj Strokes நாவல் எழுதுவது குறித்த ஒரு புத்தகம் படித்து முகநூலில் சிலாகித்து எழுதினார். ஆங்கிலத்தில் சுய முன்னேற்ற நூல்களை போல மிகவும் அதிகளவில் பேப்பர் பேக் பதிப்பாக கிடைப்பவை இத்தகைய போதனை நூல்கள் தாம்.இவற்றை நான் ஏராளமாகப் படித்திருக்கிறேன்.இலக்கியக் கோட்பாடுகள் அல்லது எழுத்தின் நுட்பங்கள் குறைவாகவும் எழுத்தை விற்பனை பண்டமாக்குவது எப்படி என்றும் கூறத்தக்க நூல்களே அதிகம் காணப்படும். அதே போன்று பொன்மொழி தொகுப்பு நூல்கள். குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதைதான்.அபூர்வமாக சில நல்ல புத்தகங்களை காண முடிகிறது. அதில் இந்த நூலும் ஒன்று. எழுதும் கலை குறித்து உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கருத்துக்களை தொகுத்து தந்துள்ளார் இதன் ஆசிரியர் ரோஸ்மேரி ஃப்ரீட்மேன்.எழுத்தாளன் மனநோய் பிடித்த பிராணி என்றும் எழுதுவதன் வாயிலாகத்தான் தன் நோயைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். எழுதத் தெரியாத சாமான்ய மனிதர்கள் எப்படி தங்களது மனநோயை எதிர்கொள்கிறார்கள் என்று வியப்புடன் கேட்கிறார் ஒருவர்.எழுத்துக்கான ஊதியம் குறைவு உழைப்பு அதிகம் என்றும் ஓர் எழுத்தாளர் கூறுகிறார். நல்ல நாவல் குறித்த சில டிப்ஸ்களையும் இந்நூல் தருகிறது.அதில் ஒன்று... ஒரு நல்ல நாவலை எழுத நிறைய உத்திகளும் தொழில் நுட்பமும் தேவையில்லை. ஒரு எழுத்தாளர் நல்ல மனிதராக இருக்க வேண்டும். இன்று வாசித்த புத்தகம் 13 இன்று மழையால் பேருந்து பயணம். மதியம் எனக்குப் பிடித்த நேஷனல் ஆந்திர மீல்ஸ் சாப்பிட்டு அண்ணாசாலை ஹிக்கன்பாதம்ஸ் போனேன். தமிழ் நூல்களை தனி அறையில் வைத்துள்ளனர்.ஒவ்வொரு அலமாரியாகப் பார்த்தேன். அசோகமித்திரனின் செகந்திராபாத் சிறுகதைகள், புஷ்பா தங்கதுரையின் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, மு.மேத்தாவின் சோழ நிலா,மகுட நிலா, கண்ணதாசன் எழுதிய நூல்கள், ஆத்மார்த்தி யின் சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற நூல்கள் வாங்கும் ஆவலைத் தூண்டிய போதும் இப்போது வேண்டாம் என தள்ளிப் போட்டேன். ஆங்கில நூல்கள் பிரிவில் நீண்ட காலமாகத் தேடின பாஷோவின் பயண நூல் வாங்கத் தூண்டிய போதும் வைத்து விட்டேன்.விலை ₹350 .நான் படிக்க விரும்பும் ஏராளமான நூல்கள் இருந்தன. விலை ₹ 499 599 799 1200 என இருந்தது. என் சக்திக்கு ஆகாது.ஏதும் வாங்காமல் திரும்பி விட்டேன்.ஒன்றரை மணி நேர விரயம்.புத்தக வாசிப்பு குறைந்து வரும் காலத்தின் பிரக்ஞையுடன் பேருந்துக்கு காத்திருந்தேன். ஹிக்கின்பாதம்ஸ் கடையில் முன்பிருந்த களை இல்லை.வாடிக்கையாளர் ஓரிருவர் தான் இருந்தனர். தொழிலில் தாக்குப்பிடிக்க முடியாமல் இது போன்ற கடைகள் மூடுவிழா காணும்.சில பல ஆண்டுகளுக்குப் பின்னர் கட்டடம் பழுதாகி மூத்திரம் அடிக்கும் இடமாக மாறிவிடும்.அல்லது வணிக வளாகமாக இடித்துக் கட்டப்படும். அப்படித்தான் எதிரில் உள்ள அலங்கார் திரையரங்கின் ஞாபகம் வந்தது. பல அருமையான இந்திப் படங்களை அலங்காரில் பார்த்து ரசித்திருக்கிறேன். பக்கத்தில் ஒரு டீ க்கடை இருக்கும். சமோசா டீ சாப்பிட்டு படம் பார்க்கப் போன நினைவுகள் மனதில் நிழலாடின.இப்போது அலங்கார் இருந்த இடம் அலுவலக வளாகமாகி விட்டது .அருகில் இருந்த டீக்கடை மறைந்து கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளன.பிளாட்பாரத்தில் இருந்த பழைய புத்தகக் கடைகளும் காலப்போக்கில் காணாமல் போய்விட்டன. அண்ணாசாலையிலும் அதைச் சுற்றியும் இருந்த வெலிங்டன், பிளாசா,எல்பின்ஸ்டன்,கெயிட்டி,சித்ரா,பாரகன், ஜெயப்பிரதா, மிட்லண்ட் என பல திரையரங்குகள் இன்று இல்லை.நியு செஞ்சுரி புக் ஹவுஸ் இப்போது இல்லை.கீதா கபே வெளியே கிடைக்கும் ருசியான மலாய் லஸ்ஸி போன்ற எத்தனை சுவைகளையும் சந்தோஷங்களையும் இழந்து இந்த அண்ணாசாலை இப்படி வெறிச்சோடி காணப்படுகிறது .எல்லாவற்றையும் அழித்துக் கொண்டு எதை இந்த நகரத்தில் ஆக்கப் போகிறோம் என்று தெரியவில்லை .என் போன்ற எத்தனை பேருக்கு புத்தகம், சினிமா அவசியம்? செல்போனிலேயே வாழ்கிற ஒரு தலைமுறையை உருவாக்கி விட்டோம்.முன்பு தேவி வளாகம் சாந்தி கேசினோ என இரவுக் காட்சிகள் முடிந்து வெளியே வரும்போது சுடச் சுட டீயும் பன்பட்டர் ஜாமும் சாப்பிட்டு வரிசையாக நிற்கும் இரவு சேவை பேருந்துகளை நோக்கி மக்கள் செல்லும் போது அண்ணாசாலையில் ஒரு திருவிழா நடைபெறுவது போல இருக்கும். ஒரு பெருநகரம் தனது திருவிழாவை எங்கே தொலைத்து விட்டது என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.அடடா அதில் நானும் என் இளமைக்காலமும் அல்லவா தொலைந்து விட்டோம்! இன்று வாசித்த புத்தகம் 14 Death the greatest fiction. Osho. மரணம் ஒரு கலை. வாழ்தலைப் போல இதையும் பழகுதல் வேண்டும் என்றார் சில்வியா பிளாத் என்ற பெண்கவி.அவர் இளம் வயதில் தற்கொலை செய்துக் கொண்டார். ஓஷோ மரணம் ஒரு புனைகதை என்கிறார். இது ஓஷோவின் ஆரம்ப கால தொகுப்பு நூல்களில் ஒன்று. பகவான் ரஜ்னீஷ் பெயரில் வந்தது. பல நூல்களில் ஆங்காங்கே மரணம் பற்றி ஓஷோ கூறியதை அவரது சீடர்கள் தொகுத்தனர். தன் தாத்தாவின் இறுதி கணங்களைப் பற்றி கூறுகையில் தனது கலக்கத்தைப் பார்த்து பாட்டி சொன்னாராம். கலங்காதே.. தாத்தா நீண்ட காலம் வாழ்ந்து விட்டார்.இதற்கு மேல் ஆசைப்பட முடியாது. போதும்...என்று கூறினார். தாத்தா இறக்கும் போது பாட்டி ஒரு பாடலையும் பாடியதாக கூறுகிறார் ஓஷோ.பிரிவுக்கு தனி அழகு உள்ளது. பிரிவு கவித்துவமானது.அதன் மொழியைப் பயில வேண்டும். அதன் ஆழம் வரை வாழ வேண்டும். அதன் பிறகு அதன் துன்பத்திலிருந்து ஒரு புதிய வகை ஆனந்தம் உருவாகும் என்று கூறுகிறார் ஓஷோ. வாழ்க்கையில் திடீரென மரணம் நுழைகையில் வாழ்க்கையே அர்த்தமிழந்து விடுகிறது. அது அர்த்தமற்றது என்ற உண்மையைத் தான் மரணம் உணர்த்துகிறது.உன் ஒருவனுக்கு மட்டும் அல்ல அந்த மரணம். உன்னுடன் தொடர்பில் இருந்த எல்லோருடைய மரணமும் அது என்று விளக்குகிறார் ஓஷோ.மரண பயம்தான் மிகப்பெரிய பயம் என்றும் உன் துணிவை முற்றிலும் அழிக்கும் என்றும் கூறுகிறார். தியானம் மூலம் மரண பயத்தை வெல்ல முடியும் என்றும் வாழ்க்கையை கணந்தோறும் வாழ்ந்து அனுபவிக்க தியானம் மூலமே சாத்தியம் என்றும் கூறுகிறார் ஓஷோ.கலவிக்கு முந்தைய காதல் லீலைகளை வாழ்க்கை என்றும் மரணம்தான் உச்சம் அதுதான் உடலுறவு என்றும் அவர் தெரிவிக்கிறார்.ஒருவர் சாகாமலேயே மரணத்தை உணர முடியும் என்றும் ஓஷோ கூறியுள்ளார். ஒரு மனிதன் உயிரை விடும் அந்த சில நொடிகள் முக்கியமாவை .கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் கதைதான். ----------- இன்று வாசித்த புத்தகம் 15 நடிகை ஸ்ரீ தேவியை நம்நாடு,பாபு போன்ற படங்களில் குழந்தை உருவில் பார்த்திருந்த போதும் 16 வயதினிலே என்ற பாரதிராஜா படத்தில் முதன் முறையாக பருவமங்கையாகப் பார்த்த போது தூக்கத்தில் ஸ்ரீ தேவியை கனவுகண்ட பல லட்சம் ரசிகர்களில் நானும் ஒருவன்.அந்த அழகு அந்த சிரிப்பு செந்தூரப் பூவே என்று வெண்ணிற ஆடையில் ஊஞ்சல் ஆடிய காட்சி மயக்கம் இன்று வரை தெளியவில்லை.தொடை தெரிய பாவாடை யை தூக்கி யும் மாராப்பை நழுவ விட்டும் டாக்டர் பலவந்தப்படுத்தும் காட்சியில் இடுப்பை காட்டி யும் ஸ்ரீ தேவி தெளித்த கிளாமர் மழையை முற்றும் துறந்ந பல நடிகைகளாலும் ஈடு செய்ய இயலவில்லை. அப்போதே தெரிந்து விட்டது இந்தப் பெண் பெரிய சூப்பர் ஸ்டாராக வருவார் என்று. நடுவயதில் திடீரென தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்து விடுவார் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. மரணம் கொடூரமாக ஒரு கனவை பல லட்சம் கண்களில் இருந்து பறித்துச் சென்றது.ஸ்ரீ தேவி பற்றி சத்யார்த் நாயக் எழுதிய பயோகிராஃபி புத்தகம் ஒன்று பல முறை வாங்கத் தூண்டி விலை அதிகம் என்பதால் வாங்கவில்லை.இன்று என்னால் வாங்க முடியும் விலைக்கு ஒரு பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. நடிகை கஜோல் முன்னுரை எழுதியிருக்கிறார். இதன் பக்கங்களைப் புரட்ட ஒரு வண்ண தேவதையின் வசீகரமான திரைவாழ்க்கை கண்முன் காட்சிகளாக விரிகிறது.ஸ்ரீ தேவி நவரஸங்களையும் திரையில் வெளிப்படுத்திய நட்சத்திரம் என்கிறார் நூல் ஆசிரியர். அந்தக் கால சினிமா பத்திரிகைகளில் ஸ்ரீ தேவி பேசியவையும் அவரைப் பற்றி மற்றவர்கள் கூறியவையும் புத்தகம் முழுக்க பொங்கலில் கிடைக்கும் முந்திரி பருப்பைப் போல சிந்தி கிடக்கின்றன. இந்த சிறந்த புத்தகத்தில் இரண்டு குறைகள்.ஒன்று ஸ்ரீ தேவியின் படப் பட்டியல் இல்லை. பல அழகான படங்களும் இல்லை.இருக்கும் சில படங்கள் குட்டி ஸ்டாம்ப் சைசில் உள்ளன.நாலு வயதில் தொடங்கி ஐம்பத்து நான்கு வயதில் சாகும்வரை திரையுலக ரசிகர்களை தன் அழகால் வசீகரித்த தேவதையின் வண்ணமயமான படங்கள் எத்தனை எத்தனை ஆயிரம் இருக்கும் .இந்தப் புத்தகத்தில் கிடைக்கவில்லை.

புன்னகையுடன் பேசுகிறேன்

எல்லா மனிதர்களையும் ஒரே நேரத்தில் நேசிக்கவும் வெறுக்கவும் என்னால் எப்படி முடிகிறது என்று வியக்கிறேன். சில மனிதர்கள் அப்படி ஒன்றும் மோசமானவர்கள் இல்லை. மாறாக மிகவும் நல்லவர்கள். அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். அவர்களிடமும் நான் ஏன் விலகிச் செல்கிறேன் என்று எனக்குப் புரியவில்லை. நான் என்னை மட்டுமே நேசிக்கிறேன் என்று கூட சொல்ல முடியவில்லை. ஏனெனில் நான் மிகவும் வெறுக்கிற மனிதனும் நானேதான்.உறவுகள்,நட்புகள்,காதல்கள் தந்த வலிகள் இன்னும் நெஞ்சில் வண்டுகளைப் போல குடைகின்றன. எல்லோரும் சரியான வர்களாக இருக்கிறார்கள் எனில் நான் மட்டும் எப்படி தவறானவனாக இருக்கிறேன்.? நான் என்னதான் இந்த வாழ்க்கை யிடம் கேட்டு விட்டேன்?அன்பும் அரவணைப்பும் உண்மையும் அத்தனை தூரத்தில் உள்ள எட்டாத கனிகளா? யாரிடத்தில் எனக்கு அன்பும் அரவணைப்பும் உண்மையான தோழமையும் கிடைக்கும்?நான் அதனை எத்தனை பேருக்கு வழங்கியிருக்கிறேன்... அவர்களின் பெயர் சொல்லி கொச்சைப்படுத்த மாட்டேன்.இந்த வாழ்க்கையில் நான் வாழ இயலாது போனாலும் பிள்ளை களுடன் பூரணமாக வாழும் ஒவ்வொரு குடும்பத்தையும் மனதார வாழ்த்துகிறேன்.என் கண்ணீரின் ரகசியங்களை மகிழ்ச்சியுடன் வாழும் யாரிடமும் ஒருபோதும் கூற மாட்டேன். அவர்களிடம் ஒரு புன்னகையுடன் தான் பேசிக் கொண்டிருப்பேன்.என் சோகம் என்னோடுதான்.

இன்று வாசித்த புத்தகம் 16-22

இன்று வாசித்த புத்தகம் 16 வாக்கு கவிதைகள் ரிஷி. தமிழ் அறிவுத்தளம் நன்கு அறிந்த பெயர் லதா ராமகிருஷ்ணன். ரிஷி என்ற பெயரில் கவிதைகள் , அனாமிகா என்ற பெயரில் கதைகளும் எழுதி வருகிறார். நிறைய மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார். அவருடைய கவிதைகள் நுன்ணுணர்வு கொண்டவை. நிறைய பத்திரிகைகளில் அவரை வாசித்து நூல் வடிவிலும் சிலவற்றை வாசித்திருக்கிறேன். இந்த தொகுப்பில் கடற்கரை மணல் எங்கும் ஓடித் திரிந்து கிளிஞ்சல் சேகரிக்கும் குழந்தைக் குதூகலமும் காலத் துளிகள் நாளும் பேதுறும் வயோதிகக் கலக்கமுமாக கவிதை எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். வலி நிவாரணி தரும் வலி ஒரு அழகான எழுத்து. இன்னொரு கவிதையில் வகைவகையாய் மிகை பிம்பம் தரித்து காகித வாள் சுற்றித் திரிகிறாள் நாளும் என்று எழுதிச் செல்கிறார். எனக்கு மட்டுமான கடல் இன்னொரு நல்ல கவிதை. எத்தனையோ கால்களுடன் என் கால்களையும் நனைத்து விட்டுப் போகிறது கடல். அதில் என்னை மட்டும் தொட்டுப் போன நீர்மணிகளைத் திரட்டியெடுத்து என் நினைவடுக்குகளில் பத்திரப்படுத்தி வைக்கும் வகையறியாது திகைத்து நிற்கிறேன் நான் மிகை ஆனந்தம் போலவே பெயரறியாத் துயரொன்றின் பெயரும் கடலாகவே... என்று கவிதையை முடிப்பது ரசிக்க வைக்கிறது. கடவுளின் பூமி என்ற இறுதிக் கவிதையில் பெண்ணிய கோபமும் தாய்மையின் கனிவும் கலந்து வருகிறது. பெண்டாளப்பட்ட பின் துண்டாடப்பட்ட பிறப்புறுப்புகள் பெண் கடவுளர்களை ஊனமாக்கின என்று எழுதிய ரிஷி கவிதையை இப்படி தொடர்கிறார் .ஆண்மையழித்தன பரப்ரும்மாக்களின் மரணித்து விட்ட கண்மணிகளில் இறுதிப் பதிவாய் மதம் பிடித்த பார்வைகளின் மூர்க்கம் தெருவோரம் அறுந்து கிடக்கும் கருப்பையிலிருந்து எட்டிப் பார்க்கிறது ஒரு குட்டிக் கடவுள் என்று முத்திரை பதிக்கிறார். ---------------- இன்று வாசிக்கும் புத்தகம் 17 Heroes of Olympus .The son of Neptune. Rick Riordan. பழைய புத்தகக் கடையில் அள்ளி வந்த புதையல்களில் இதுவும் ஒன்று. மிகை புனைவு கதைகள் சிறு வயதில் நம்மை ஈர்க்கின்றன. தெய்வங்கள், பிசாசுகள்,இறக்கை முளைத்த ராட்சசிகள் ....பறவைகள், விலங்குகள் என நமது கற்பனை வெளியை விரிவுபடுத்துபவை இத்தகைய மாயஜால கதைகள்.இவை படிக்க மிகவும் சுவாரஸ்யமான கதைகள்.கிரேக்க குட்டிக் கடவுள்களின் வீரதீர சாகஸம் என்றால் நான் விழுந்து தொழுது படிப்பேன்.அத்தனை சுகமான வாசிப்புகள் .இந்த புத்தகமும் அப்படித்தான்.கையில் எடுத்ததுமே விறு விறு என பல பக்கங்கள், பல அத்தியாயங்கள் போனதே தெரியவில்லை.மெதுசா என்ற அரக்கியைக் கொன்றதற்கு பழி தீர்க்க பெர்சி என்ற குட்டிக் கடவுளை இரண்டு அரக்கிகள் அவர்கள் மெதுசாவின் சகோதரிகள், நம் நாயகன் பெர்சியைத் துரத்தோ துரத்து என துரத்தி அழிக்க வருகின்றனர். கடலில் மூழ்கி உயிர் பிழைத்த பெர்சிக்கு பழைய நினைவுகள் யாவும் அழிந்து விட்டன...அவன் எப்போது மெதுசாவைக் கொன்றான்,ஏன் கொன்றான் என்று அவனுக்கு சுத்தமாக நினைவில்லை.அவனுக்கு தன் பெயர் பெர்சி என்பதும் தான் ஒரு டெமி காட் என்பதும் தெரியும் .அவனுக்கு தன்னையன்றி நினைவில் நிற்கும் ஒரேயொரு பெயர் அன்னாபெத்.யார் இவள்? அவனது உயிருக்கு உயிரான காதலியாக இருக்கும். சபிக்கப்பட்ட இந்த குட்டிக் கடவுள் பெர்சி யார் ...அவனும் ஹேசல்,ஃபிராங்க் ஆகிய இரண்டு குட்டிக் கடவுள்களையும் தேவர் குலத்தைக் காக்க அந்த சர்வ வல்லமைப் படைத்த தேவன் ஏன் அனுப்பி வைத்தான்?தேவர்களுக்கு என்ன ஆபத்து? அதனை இந்த மூன்று டெமி காட்ஸ் எப்படி தங்கள் சாகஸங்களால் சாதித்துக் காட்டினர்.. பெர்சி அன்னாபெத்தை சந்திக்க முடிந்ததா? இப்படி பல கேள்விகள் எழுப்பி படித்துக் கொண்டிருக்கிறேன்.முழுக் கதையையும் தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆசையாக இருக்கிறது அல்லவா...அசுக்கு புசுக்கு நான் சொல்ல மாட்டேன். நானே படித்து நானே ரசித்து. ....எப்பவாவது கிராபிக்ஸ் கலக்கலுடன் பாகுபலி மாதிரி ஒரு பிரம்மாண்டமான சினிமாவாக எடுக்கலாம். யாராவது பத்து இருபது கோடி செலவு செய்ய தயார் என்றால் சொல்லுங்கள். கதையை தமிழ் ஏழுத்தாளர் ஒருவர் தன் பெயரில் சுட்டாச்சு சுட்டாச்சு... பெரிய டைரக்டரிடம் அதனை பல லட்சம் பணத்துக்கு வித்தாச்சு வித்தாச்சு என்று யாரோ அழுகிறார் போல இருக்கு. அடப் பாவமே....இத்தனை கற்பனை வறட்சியா.... ----- இன்று வாசித்த புத்தகம் 18 Khushwant singh on women,sex,love, and lust. குஷ்வந்த் சிங் ஒரு பத்தி எழுத்தாளர் .பிரபல ஆங்கில நாளிதழ்களிலும் வார மாத இதழ்களிலும் எண்ணியதெல்லாம் எழுதிக் குவித்தார்.அவை நூற்றுக்கு மேற்பட்ட புத்தகஙாகளாக தொகுக்கப்பட்டுள்ளன.பெண் உடல் பாலியல் இன்பம் சார்ந்த அவர் எழுத்துகள் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.இந்தப் புத்தகம் அவரது 90வது வயதில் வெளிவந்தது. மும்பையில் அழகான மன நலம் பாதித்த ஒரு மெல்லிய வேட்டியை மட்டுமே ஆடையாக உடலை மறைத்து வாழ்ந்த அந்த பெண் ஒரு நாள் மழையில் தனது வேட்டியைக் களைந்து நிர்வாணமாக குளிப்பதை பார்க்கிறார். இன்னொரு அத்தியாயத்தில் ஸ்வீடனின் நிர்வாண கடற்கரையில் கண்ட காட்சிகள் குறித்து விவரிக்கிறார்.பேண்ட்டை கழற்ற தமக்கு தயக்கம் இல்லை என்றும் தலைப்பாகையை கழற்றி தனது நீண்ட கூந்தலை காட்டுவதற்கு சங்கடப்பட்டதாகக் கூறுகிறார். ஓஷோவின் தந்த்ரா டெக்னிக் பற்றிய பதிவில் கூட்டுக்குழு உடலுறவு முறைகள் பாலியல் இச்சைகளில் இருந்து விடுதலை தருமா என சந்தேகம் எழுப்புகிறார்.காமனைத் தொழுதால் ராமனை அடையலாம் என்ற ஓஷோவின் சித்தாந்தத்தை சிலாகித்து காமத்திலிருந்து கடவுள் படிக்கத்தக்க புத்தகம் என்று பரிந்துரை செய்கிறார்.புத்தகம் முழுவதும் ஷேக்ஸ்பியர் முதல் உருது கவிதைகள் வரை மேற்கோள்கள் சிதறிக் கிடக்கின்றன. ஒரு அத்தியாயம் ரயிலில் செல்லும் புதுமணத் தம்பதிகள் ஊர்போய் முதல் இரவை கொண்டாட பொறுமை இல்லாமல் ரயிலிலேயே முதலிரவைக் கொண்டாடிய காட்சியைக் கூறுகிறார்.அவர்களின் நிர்வாணக் கோலத்தை கண்டு திடீரென மின்விளக்கை எரிய விட்ட போது அவர்கள் பதறாமல் சாவதானமாக ஆடைகளை திருத்தி எழுந்ததை கூறுகிறார்.செக்ஸ் பற்றி மனம் திறந்து பேசுவதும் பாலியல் பிறழ்வுகள்,மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணம் நுகர்தல் போன்றவை பாவங்கள் அல்ல என்று கூறுகிறார் குஷ்வந்த் சிங். -------------------- இன்று வாசித்த புத்தகம் 19 சி.மோகன் கட்டுரைகள். தமிழ் இலக்கிய உலகில் நீண்ட காலமாக இயங்கி வரும் நண்பர் சி.மோகன் புதிய பார்வை,தீராநதி போன்ற இதழ்களில் எழுதிய கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து இது தொடர்பாக அவரிடம் நேரிலும் பாராட்டி இருக்கிறேன். இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளை மீண்டும் ஒரே மூச்சாக இரண்டரை மணி நேரத்தில் வாசித்து முடித்தேன்.மனதுக்குள் தஸ்தாயவஸ்கி, ஜி.நாகராஜன், சம்பத் ஆகிய மூன்று ஆளுமைகள் தான் மனம் முழுவதையும் ஆக்ரமித்துள்ளனர்.இதற்கு சி.மோகன் மேற்கோள் காட்டும் காஃப்காவின் வரிகள்தான் காரணம்.மகிழ்ச்சி தரும் எழுத்தை விடவும் துன்பத்தையும் வலியையும் தருகிற எழுத்தே பெரிது என்று காஃப்கா கூறுகிறார். "நம்மை விட அதிகமாக நாம் நேசிக்கும் ஒருவரின் மரணத்தைப் போலவோ தற்கொலையைப் போலவோ ஆழ்ந்த துயரம் விளைவிக்கக் கூடிய புத்தகங்களே நமக்குத் தேவை. நமக்குள் படிந்திருக்கும் உறைபனிப் பாறையைப் பனிக் கோடாரியால் பிளப்பதாக ஒரு புத்தகம் இருக்க வேண்டும் "என்று கூறுகிறார் காஃப்கா. தஸ்தாயவஸ்கி குறித்து சில கட்டுரைகளை செம்மைமாக எழுதியிருக்கிறார் மோகன் .இந்தக் கட்டுரைகள் தஸ்தாயவஸ்கி எழுத்தை முதல் முறையாக வாசிக்க வரும் வாசகனை கைப்பிடித்து அந்த மாய உலகினுள் அழைத்துச் செல்லும்.தஸ்தாயவஸ்கியை படிக்கத் தொடங்கிய அந்த நாள் தன் முதல் காதலை விட முக்கியமானது என்று ஹென்றி மில்லர் கூறுகிறார். கடவுள் என்ற கைவிளக்கை ஏந்திய தஸ்தாயவஸ்கி சரணடைதல், துன்பங்களை ஏற்றல்,குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று ஆன்மசுத்தி அடைதல் ஆகியவற்றிலேயே மனித விமோசனம் தங்கியிருந்த தென கருதினார் என்று குறிப்பிடுகிறார் சி.மோகன். இதே போன்று ஜி.நாகராஜன் இறுதி நாளில் கூட இருந்த அனுபவத்தை சி.மோகன் பதிவு செய்துள்ளார்.ஜி.நாகராஜனின் அழுகிய உடல் மதுரையில் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப் பட்டது என்று சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் சி.மோகனின் பதிவு அப்படி ஒன்றும் ஜி.நாகராஜன் அனாதையாக சாகவில்லை என்று உறுதி செய்து ஒரு நிம்மதிப் பெருமூச்சை விடச் செய்கிறது. மிகவும் குளிராக இருக்கிறது.சிதையில் போய் படுத்துக் கொண்டால்தான் இந்தக் குளிர் தீரும் என்று ஜி.நாகராஜன் தம்மிடம் கூறியதைப் பதிவு செய்துள்ளார் சி.மோகன். மேலும் பல ஆளுமைகள் சி.மோகனின் எழுத்தால் நினைவுகளில் புத்துயிர் பெறுகின்றனர்.சுந்தர ராமசாமி, ஆதிமூலம்,ஆனந்த குமாரசாமி, நிமாய் கோஷ்,எம்.பி. சீனிவாசன்,கோபிகிருஷ்ணன் போன்றோரின் நினைவுகள் போற்றி பாதுகாக்க வேண்டியவை.சி.மோகனின் அத்தனை எழுத்துகளும் நான் வாசிக்க விரும்பும் எழுத நினைக்கும் எழுத்துகளாக இருக்கின்றன. ஒரு சில விஷயங்களை மட்டும் என்னால் உடன்பட முடியவில்லை. தமிழில் மிகச்சிறந்த நாவல்களே இல்லை என்று கூறுகிறார்.என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. நான் எழுத முயற்சி செய்தேன். சுந்தர ராமசாமி எழுதி விட்டார். --------------------------- இன்று வாசித்த புத்தகம் 20 திரும்பிப் பார்க்கையில்... ஷாஜி. திரையிசை தொடர்பான கட்டுரைகள் மூலம் கவனம் பெற்றவர் ஷாஜி. டி.எம்.எஸ். பற்றி சிறப்பாக எழுதியவர் சீர்காழி கோவிந்தராஜன் குறித்து மட்டமாக எழுதினார் .பொதுவாக ஜெயமோகன்,ஷாஜி மாதிரி மலையாள மனம் படைத்தவர்களுக்கு தமிழக கலைஞர்கள் மீது ஒருவித கேவலமான எண்ணம் இருப்பதை அவதானித்திருக்கிறேன்.இக்கட்டுரை தொகுப்பில் பிரபஞ்சனை குறித்த கட்டுரையில் தன் மீது பிரபஞ்சன் ஏன் கோபம் கொண்டார் என புரியவில்லை என்கிறார் ஷாஜி. எனக்கு இதுதான் காரணம் என்று தோன்றியது. ஜெயமோகன், சாரு நிவேதிதா ஷாஜி போன்றவர்கள் தமிழ் மணிக்கொடி எழுத்தாளர்களை தயிர்வடை எழுத்து என்று கூறுவதற்கு வெட்கப்படவில்லை . தமிழில் இரண்டு நாவல்கள் தான் எழுதப்பட்டன என்று கூறத் தயங்கவில்லை. விஷ்ணுபுரத்தை தன் தோளில் சுமந்து உயர்த்திப் பிடித்த பிரபஞ்சனைத் தூக்கி எறிய சிறிதுகூட நாணவில்லை.புதுமைப்பித்தன் மீது மூத்திரம் அடிப்பதும் பிறகு அவரை உயர்த்திப் பிடிப்பதும் தமிழ்ச் சூழலில் தான் நிகழும். பிரபஞ்சன் மீது உண்மையான மதிப்பையும் பிரியத்தையும் எஸ்.ராமகிருஷ்ணனிடம் பார்த்தேன்.அவரது கடைசி காலங்களை சிரமமின்றி கழிக்க பத்து லட்சம் ரூபாய் நிதித் திரட்டி தந்தார்.அந்த விழாவில் உணவு இடைவேளையின் போது பிரபஞ்சன் என்னுடன் இருந்தார் .சார் தயவுசெய்து இந்தப் பணத்தை பத்திரமாக வைத்து உங்கள் ஆடம்பரம் குறைத்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.அப்போது அவர் கண்கலங்கியது.ஆமாம் ஜெகதீஷ் எஸ்.ரா.எனக்கு மிகப்பெரிய உதவியை செய்திருக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது கையில் பணமில்லை. பிரபல மூத்த நடிகர் ஒருவர் 5லட்சம் ரூபாய் கொடுத்து உதவியதாக பிரபஞ்சன் கூறினார். இந்த புத்தகத்தில் இயக்குனர் மிஷ்கின் உதவியதாக ஷாஜி கூறுகிறார். மிஷ்கினும் உதவி இருக்கலாம். இத்தொகுப்பில் எனக்கு பிடித்த கட்டுரைகள் சில உள்ளன. ரித்விக் கட்டக் பற்றிய இரண்டு கட்டுரைகள் சிறப்பாக எழுத ப்பட்டுள்ளன.சத்யஜித் ரேக்கும் ரித்விக் கட்டக்குக்கும் கருத்து வேறுபாடு இருக்கவில்லை என்றும் ரே கட்டக்கின் ரசிகராக இருந்தார் என்றும் ஷாஜி கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தொகுப்பில் பல அருமையான கவிதைகளையும் மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறார் ஷாஜி. அந்த கவிதைகள் மீண்டும் மீண்டும் படிக்கத் தக்கவை. -------------------- இன்று வாசித்த புத்தகம் 21 ஒத்திகைகள் பார்வையாளர்களுக்கல்ல...சூர்யராஜன் Suriya Rajan. இருசம்மா என்ற சிறுகதையை செந்தூரம் இதழில் எழுதிய நண்பர் சூர்யராஜன் இதயத்துக்கு நெருக்கமான நண்பர்.35 ஆண்டுகளைக் கடந்து இணக்கம் குறையாத நட்பு அது.எனது அறிவுத் திரியை சுடர விட்ட தீபமாகவே நான் அவரை மதிக்கிறேன். என் ஆசான் என்றுகூட சொல்வேன். இந்தப் புத்தகம் என்னிடம் உள்ள போதும் மூர்மார்க்கெட்டில் பார்த்து வாங்கி வந்தேன். மீண்டும் வாசித்த போது இப்போது எங்களுடன் இல்லாத இரண்டு நண்பர்களின் நினைவு கண்கலங்க வைத்தது.கல்யாணசுந்தரம் என்ற நண்பர் சூர்யாவின் எழுத்துகளுக்காகவே சிந்தனாலயா பதிப்பகம் ஆரம்பித்து வறுமையே வெளியேறு என்ற சூர்யாவின் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். இந்த கட்டுரை தொகுப்பையும் அவரே 2007ம் ஆண்டு வெளியிட்டார். ஒரு நாவல் எழுதவும் ஆசைப்பட்ட கல்யாணசுந்தரம் வீட்டுக்கு நண்பர்களுடன் செல்லும் போது நாவலிஸ்ட் என்று நக்கலடிப் பார் கவிஞர் மு.நந்தா.நான் இழந்து தவிக்கும் இன்னொரு நல்ல நண்பர் நந்தா.அவர் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார். "கல்யாணசுந்தரத்தின் வீட்டையொட்டி ஒரு தோட்டம் இருந்தது. பேருக்குத்தான் அது தோட்டமே தவிர ஒரே ஒரு நாவல் மரம்தான் அங்கே இருந்தது. அதுதான் எங்கள் போதிமரம். " என்று நந்தா அழகாக பதிவு செய்து விட்டார். இத்தொகுப்பில் சினிமா என்றால் சத்யஜித் ரே,குருதத்,ஹிட்ச்காக் என்றும் இலக்கியம் என்றால் கு.ப.ரா., க.நா.சு.,பிரமிள்,அசோகமித்திரன் என்றும் தனிப்பட்ட அனுபவங்கள் என்றும் செறிவான கட்டுரைகளை சூர்யராஜன் எழுதியுள்ளார்.இதில் மகளும் ஒருநாள் தாயாவாள் என்ற கட்டுரை நெகிழ வைக்கும். "பெண் போகும் பொழுது கொண்டு செல்வது சீர்செனத்தி மட்டுமல்ல....பெண்ணைப் பெற்ற தாய்க்கு புகுந்த வீட்டில் தன் மகள் எதிர்கொள்ள வேண்டிய மனிதர்கள் சந்தர்ப்பங்கள் இவை சுமுகமாக அமைய வேண்டுமே என்கிற ஆதங்கம் ( அவள் சுகமாகவே இருப்பாள் ) அந்தத் தாய் ஒரு பாட்டம் அழுதுத் தீர்க்கிறாள்.அந்த அழுகையின் மூலம் தன் வேதனையைக் கரைக்க முயற்சிக்கிறாள் அந்தத் தாய்.அந்தத் தந்தையோ இவளுக்கு கணவன்,பெண்ணுக்குத் தகப்பன் என்கிற முறையில் மனைவியின் அழுகையை சமாதானப்படுத்துவதாக பாவனை செய்து தன் வேதனையைக் கரைக்க முயற்சிக்கிறான் " என்று எழுதியுள்ளார் சூர்யராஜன். தனது மூத்த மகளுக்கு மணம் முடித்த நிலையில் அவர் தனக்காகவும் பெண்ணைப் பெற்ற அத்தனை தாயுள்ளங்களுக்காகவும் எழுதிய வரிகளாகவே இதனை நான் வாசித்தேன். ---------------------- இன்று வாசித்த புத்தகம் 22 ரெஹம் கான் பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி ரெஹம் கான். இப்போது நாற்பது வயதைக் கடந்த சுதந்திரமான பெண்ணாக வெளிநாட்டில் வசிக்கிறார். லிபியாவில் முதல் திருமணம் இளம் வயதிலேயே நடந்து விட்டது. கணவர் அடித்துத் துன்புறுத்தியவர். 12 ஆண்டுகள் குடும்ப வனமுறையைப் பொறுத்துக் கொண்டு மூன்று குழந்தைகளுடன் வாழும் ரெஹம் கான் ஒரு நாள் தன் மீதான அடக்குமுறைக்கு எதிராகப் பொங்கி எழுகிறார். போலீசை அழைத்து கணவரிடமிருந்து விடுதலை பெறுகிறார். அழகுக் கலை நிபுணராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தனது வாழ்க்கையை நடத்திச் சென்றவர் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானை இரண்டாம் கணவராக மணம் முடிக்கிறார். இம்ரான் கானின் அரசியலிலும் ஈடுபட்டு அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார். இந்த சுயசரிதையில் அவர் பல பொது விவகாரங்களைத் தான் விவாதித்து இருக்கிறார். பெண்களின் சுதந்திரம், நாட்டுப் பற்று போன்றவை இதில் உள்ளன. ஆனால் தனிப்பட்ட அந்தரங்க சம்பவங்கள் அதிகமாக இல்லை. அந்நிய ஆடவருடன் கைகுலுக்கவும் அனுமதி மறுக்கப்பட்ட குடும்பம், சமூகப் பின்னணி கொண்ட ரெஹம் கான் அரை சலாமுடன் தன்னிடம் கை நீட்டும் ஆடவர்களைத் தவிர்ப்பதைப் பதிவு செய்கிறார். 9 வயது சிறுமியாக இருந்த போது வயதான உறவினர் ஒருவர் லிப்டில் வைத்து உதட்டில் முத்தம் கொடுத்ததாக அதன் நினைவு இன்று வரை அருவருப்பு தருவதாக கூறுகிறார். ஆண்களைப் பற்றி கூறுகையில் தன் அன்பை அவர்களால் பெற முடியாத சூழல்களே அதிகம் என்றும் குறிப்பிடுகிறார். மூர் மார்க்கெட்டில் வாங்கி வந்த இந்த பெரிய புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து விட்டேன். அதற்கு காரணம் அழகான ரெஹம்கானின் முகமும் நெருடாத புத்தக ஆக்கமும்தான்.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...