Wednesday 27 April 2016

பதிப்பாளர்கள் தேவை





 ஒரு வேண்டுகோள்


இணையத்தில் எழுதப்படும் பெரும்பாலான எழுத்துகள் பதிப்புக்கு வருவதேயில்லை. புத்தக வடிவில் நூலகங்களுக்கோ வாசகர்களுக்கோ அவை கிடைப்பதி்ல்லை. இணைய வடிவில் நானும் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை விரிவாகவும் ஆழமாகவும் எழுதி வருகிறேன்.
1 பயணம்- எனது பயண அனுபவங்கள் தொடர்
2 அரிதினும் அரிது கேள்- சினிமா பாடல்கள் பற்றிய தொடர்
3. சந்திப்பு -நான் சந்தித்த அபூர்வ மனிதர்கள் தொடர்
4. சினிமா கட்டுரைகள்
5 இலக்கியக் கட்டுரைகள்
6.மொழிபெயர்ப்புகள்
7 புத்தக விமர்சனங்கள், திரைப்பட விமர்சனங்கள்
போன்றவற்றை ஓரிரு மணி நேரத்தில் நூல்வடிவில் தொகுப்பது எளிதானது. இவற்றை யாராவது பதிப்பாளர் நண்பர்கள் நூலாக்கம் செய்து எனக்கும் சில பிரதிகள் தந்தால் மகிழ்ச்சியடைவேன். ராயல்டியை விருப்பம் போல தரலாம். அல்லது இவற்றை நூல்களாக மாற்றுவதற்காக யாராவது பொருள் உதவி, ஆலோசனைகள் வழங்கினாலும் நன்றியுடன் ஏற்றுக்கொள்வேன்.
இணையத்தில் எப்போதும் பார்க்கலாம் என்றாலும் இணையமே தெரியாத வாசகர்களைக் குறித்தும் நான் கவலைப்பட வேண்டியிருக்கிறது. நண்பர்கள் தொலைபேசி எண்ணைத் தெரிவி்த்து ஆலோசனைகளையும் உதவிகளையும் அனுப்பி வைக்கலாம்
எனது இணைய பக்கத்தில் கருத்து பகுதியில் பதிவிடலாம் அல்லது தனிப்பட்ட முறையில் எனக்கு இமெயில் மூலம் அனுப்பலாம். உடனே பதில் வரும் என்று மட்டும் எதிர்பார்க்கவேண்டாம் .எனது வசதியைப் பொருத்து கட்டாயம் பேசுவேன்.பதிலளிப்பேன்.
இமெயில் முகவரி- jagdishshahri@gmail.com

Friday 22 April 2016

தெறி -விஜய்


விக்கியுடன் ஆல்பர்ட் திரையரங்கில் தெறி படம் பார்த்தேன். அதன் 100 கோடி ரூபாய் வசூலில் எனது 140 ரூபாயும் சேர்ந்தது.

இயக்குனர் மகேந்திரன் பரிதாபம். பாவம். ஆக்சன் மசாலா படங்களுக்கு எதிராக திரைப்பட இயக்கத்தை பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்தினம், ருத்ரய்யா, ஜெயபாரதி போன்ற மேன்மை மிகக கலைஞர்களுடன் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய ஒரு ஜாம்பவான் அதே மசாலா படத்திற்கு வில்லனாக பலியாகியுள்ளார். சினிமா ரசிகர்கள் கண்ணீர் விட வேண்டும்.

மற்றபடி தெறி வழக்கமான விஜய் படம்தான்.  
easily predictable எளிதில் கணிக்க கூடிய காட்சியமைப்புகள், திருப்பங்கள். கிளைமேக்ஸ்.குத்து பாடல்கள்.  ஒரே ஒரு மெலடி பாடல் -உன்னாலே உன்னாலே அதுகூட ஜிவிபிரகாஷ்குமாரின் பழைய பாடல்களின் சாயலில். படத்தில் பிடித்தது ராஜேந்தர் என்ற விஜயின் அழைப்பும் ராஜேந்தராக நடித்த மொட்டை ராஜேந்திரனின் நடிப்பும்தான். சமந்தா அழகு. சிரித்துக் கொண்டே இருக்கிறார், விஜய் வழக்கம் போல தெறிதான். ஆக்சனும் ஆட்டமும் இருக்கும் வரை விஜய்க்கு என் செல்லக்குட்டி விக்கி போல ஏராளமான ரசிகர்கள் இருப்பார்கள்.

வீட்டில் லீவு நாட்களில் போர் அடிக்குது தினமும் பத்து ரூபாய் டிக்கட்டாவது வாங்கி என்னை தெறியில் கொண்டு போய் விட்டு விடு என்கிறான் விக்கி.. பத்து ரூபாய் டிக்கட் எல்லாம் தியேட்டரி்ல் கொடுப்பார்களா என்று தெரியவில்லை.
எனக்கு வீட்டுக்குப் போய் ரஜினியின் பாட்ஷா படத்தையோ  எம்ஜிஆரின் பழைய படத்தையோ பார்க்க வேண்டும் போல இருந்தது. விஜயின் உழைப்பும் ஹீரோயிசமும் பிடித்திருந்தாலும் நடிப்பில் இன்னும் அவர் கவரவே இல்லை. ரோமன்ஸ் காட்சிகள் போரடிக்கின்றன. ஆனாலும் அவர் ஒரு ஸ்டார். அவருக்கு விக்கி போன்ற பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனது கருத்து முக்கியமல்ல. மகேந்திரனே செல்லாக்காசான பிறகு என் கருத்துக்கு என்ன மதிப்பு

பின்குறி்ப்பு
ஒருவழியாக விக்கியின் ஆசையை நிறைவேற்றினேன். பின்னி மில்லில் விஜயின் 60வது படத்தின் படப்பிடிப்புக்கு அழைத்துப் போனேன் .பாதுகாவலர் விடவில்லை. ஆனாலும் பேசியதில் அவர் நட்புடன் விக்கியை அனுப்ப ஒப்புக் கொண்டார். நான் வெளியே காத்திருக்க உள்ளே போய் விக்கி ஆட்டோக்கார தோழர்களுடன் படம் எடுத்த விஜய்யை கண்டு ரசித்திருக்கிறான். வெளியே நின்ற நான் விஜய்க்கு திரண்ட ரசிகர்களைப் பார்த்து வியந்து நின்றேன். ஒரு மனிதன் மீது இத்தனை மனிதர்கள் பிரியம் வைத்திருப்பது அந்த மனிதருக்கு கடவுள் கொடுத்த வரமா சாபமா என்று புரியவில்லை. வரம் இத்தனை பணமும் புகழும் கொட்டுவதால், சாபம் தனிப்பட்ட வாழ்க்கை என எதுவும் இல்லாமல் எல்லாமே பொதுவாழ்க்கையாக ஆகி விடுவதால்.நான் நிம்மதியாக ஒரு டீக்கடையில் தேநீர் அருந்தி வீட்டுக்குத் திரும்பினேன். யாருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை .என்ன ஒரு நிம்மதி....அடடா .....


Wednesday 20 April 2016

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்- டாப் டென் தமிழ்

நான் வாசித்த புத்தகங்களில் வாசகர்களுக்குப் பரிந்துரை செய்யத்தக்க பத்து மிகச்சிறந்த தமிழ் நூல்களை இங்கு பட்டியலிடுகிறேன். தவறாமல் இவற்றை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எல்லோருக்கும் தெரிந்த கம்பராமாயணம், திருவாசகம், நாலாயிரத்திவ்ய பிரபந்தம், திருவாசகம், தேவாரம், கந்தசஷ்டி கவசம், திருமந்திரம், திருக்குறள், சங்க இலக்கியம், பாரதியார் கவிதைகள் போன்றவற்றை இங்கு பட்டியலிடவில்லை. இவை படிக்காமல் எதுவும் இல்லை.
நவீன இலக்கியம் சார்ந்தே எனது பட்டியல்
தமிழில் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்கள் பல ஆயிரமாயிரம் உண்டு. பத்து மட்டுமே தேர்வு செய்ய சொன்னால் எனது தேர்வு இதுதான்.

சிறுகதைகள்
1  மௌனி கதைகள்
2. புதுமைப்பித்தன் கதைகள்
3 கு.ப.ரா. கதைகள்
4. அசோகமித்திரன் சிறுகதைகள்
5. லாசரா சிறுகதைகள்
6. ஆதவன் சிறுகதைகள்
7. ஜெயகாந்தன் சிறுகதைகள்
8. நா.பார்த்தசாரதி சிறுகதைகள்
9. சி.சு.செல்லப்பா சிறுகதைகள்
10. பிரபஞ்சன் சிறு கதைகள்

- இவை தவிர ந.பிச்சமூர்த்தி கதைகள், பி.எஸ்.ராமையா, கநாசு, ;சுந்தர ராமசாமி, தஞ்சை ப்ரகாஷ். சுப்ரமண்ய ராஜூ ,கிருஷ்ணன் நம்பி,.திலீப்குமார், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சூர்யராஜன், ஷாராஜ், அம்பை ,தமயந்தி , ஆகியோரின் சிறுகதைகளும் எனக்குப் பிடிக்கும்.


நாவல்கள் 
ஒரே எழுத்தாளரின் பல நாவல்கள் பிடித்தவையாக உள்ள போதும், தலா ஒன்று வீதம் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

1.ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
2. இடைவெளி -சம்பத்
3. கரைந்த நிழல்கள் -அசோகமித்திரன்
4. பாற்கடல் - லா.ச.ராமாமிர்தம்
5. பாரீசுக்குப் போ - ஜெயகாந்தன்
6. நெற்றிக்கண் -நா.பார்த்தசாரதி
7. மண்ணில் தெரியுது வானம் -ந.சிதம்பர சுப்பிரமணியம்
8. மோக முள் - தி.ஜானகிராமன்
9. என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ- சுஜாதா
10. விஷ்ணுபுரம் -ஜெயமோகன்

இவை தவிர ஜி.நாகராஜன், கி.ராஜநாராயணன், ர.சு.நல்லபெருமாள், ப.சிங்காரம் , ந.சிதம்பரசுப்பிரமணியம். நாஞ்சில் நாடன், பூமணி, வண்ணநிலவன், இந்திரா பார்த்தசாரதி,  பாலகுமாரன்  நாவல்களும் முக்கியமானவையே.எனது கிடங்குத் தெருவை விரும்பினால் நீங்கள் இதில் இணைத்துக் கொள்ளலாம்.

கட்டுரைகள்
1.தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது - சி.சு.செல்லப்பா
2. விரிவும் ஆழமும் தேடி.. .சுந்தர ராமசாமி
3 அனுமன் -வார்ப்பும் வளர்ப்பும் -மு.ஹரிகிருஷ்ணன்
4. வெங்கட்சாமிநாதன் கட்டுரைகள் அனைத்தும்
5. எனது பர்மா வழி பயணம் - வெ.சாமிநாத சர்மா
6 எனது கலையுலக அனுபவங்கள் - ஜெயகாந்தன்
7  அசோகமித்திரனின் சினிமா கட்டுரைகள்
8. கோவை ஞானி கட்டுரைகள் அனைத்தும்
9. கநாசு கட்டுரைகள் அனைத்தும்
10 . மணிக்கொடி காலம் -பி.எஸ்.ராமையா

இவை தவிர எம்.ஏ.நுக்மான் கட்டுரைகள் , வல்லிக்கண்ணன் கட்டுரைகள், கலாநிதி நா.சுப்பிரமணியம் கட்டுரைகள், மயிலை சீனி வேங்கடசாமி கட்டுரைகள், எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரைகள், சாரு நிவேதிதா கட்டுரைகள் , ஆல்பட், அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, வேதசகாயகுமார், பாலகுமாரன். பிரபஞ்சன், ஷோபா சக்தி , ஷாஜி, போன்ற பலரது கட்டுரை, விமர்சன நூல்களை விரும்பி வாசித்து ரசித்திருக்கிறேன்.

கவிதைகள்
1 ந.பி்ச்சமூர்த்தி கவிதைகள்
2.பிரமிள் கவிதைகள்
3.பசுவய்யா கவிதைகள்
4. அபி கவிதைகள்
5.நகுலன் கவிதைகள்
6.தேவதேவன் கவிதைகள்
7.வில்வரத்தினம் கவிதைகள்
8.கௌரிஷங்கர் கவிதைகள்
9 கல்யாண்ஜி கவிதைகள்
10 சுகந்தி சுப்பிரமணியம் கவிதைகள்


இவை தவிர பாரதிதாசன் கவிதைகள்,  இலங்கைப் பெண் கவிஞர்கள் , சேரன் கவிதைகள், வ.ஐ.செ.ஜெயபாலன் கவிதைகள், பிரம்மராஜன் கவிதைகள், இன்குலாப் கவிதைகள், விக்ரமாதித்யன் கவிதைகள், ஷங்கர் ராம சுப்பிரமணியம் கவிதைகள், வைரமுத்து. மீரா, மு.மேத்தா, நா.காமராசன்,  கவிதை நூல்கள், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி, புலமைப்பித்தன், வைரமுத்து பாடல்கள் , என பட்டியல் நீளும்

தமிழில் வந்த மொழிபெயர்ப்புகள்

1. நிரபராதிகளின் காலம் -சிக்ப்ரீட் லென்ஸ்
2. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல் சாங்கிருத்யாயன்
3. புதிய குழந்தை -ஓஷோ ( தமிழாக்கம் செந்தூரம் ஜெகதீஷ்)
4. காதல் தேவதை -மாசோக் ( தமிழாக்கம் -செந்தூரம் ஜெகதீஷ்)
5. செம்மீன் -தகழி சிவசங்கரன் பிள்ளை
6  அபாயம் -ஜோஷ் வாண்டலூ
7. அந்நியன் -ஆல்பர்ட் காம்யூ
8. கரம்சோவ் சகோதரர்கள் -தாஸ்தயவஸ்கி
9. புத்துயிர்ப்பு -லியோ டால்ஸ்டாய்
10. அந்தோன் செக்கவ் கதைகள்

இவை தவிர மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்ட ரஷ்ய நாவல்கள், விடியல் பதிப்பகம், கருப்புப்பிரதிகள் ,அலைகள் பதிப்பகம் , காலச்சுவடு. சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்றவை வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவையும் தவறாமல் படிக்கப்பட வேண்டியவை

வாசிக்க வேண்டிய புத்தகங்கள்.....

வழக்கம் போல பழைய புத்தகக் கடைகளில் எனது மாதச்சம்பளத்தின் எனது பங்கில் பெரும்பகுதியை செலவழித்துக் கொண்டிருக்கிறேன். கண்ட கண்ட புத்தகங்கள் வாங்குவதும் படிப்பதும் படிக்காமல் வீசியெறிவதும் படித்ததை பாதுகாத்து வைப்பதும் எனது அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக மாறி விட்டது. படிக்கிற ஆர்வத்தால்தான் எழுதுவதும் குறைவாக இருக்கிறது.நிறைய நிறைய எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாள நண்பர்கள் மிகக்குறைவாகப் படிப்பவர்கள் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான்.
ஒரு கட்டத்தில் பழைய புத்தகக் கடைகளிலிருந்து ஏராளமான மாத நாவல்களை அள்ளி வந்தேன். பாலகுமாரன், சுஜாதா, தமிழ்வாணன், ராஜேஷ்குமார். இந்திரா சவுந்திரராஜன், தேவிபாலா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ரமணி சந்திரன், அருணா நந்தினி, இரா.கீதாராணி, ஸ்ரீஜா வெங்கடேஷ்,   என சுமார் 300 நாவல்களை பல நாட்களாக பொறுமையாகப்படித்தேன். மூன்று அல்லது நான்கு மட்டும் மனம் கவர்ந்தன.தாஜ்மகாலை குண்டு வைக்கப் போகும் காதலன் ஒருவன் கதையை சுபா எழுதியுள்ளனர். இதேபோல் கற்பனையில் கிறங்க வைக்கும் பரத்-சுசிலா வை ரசிக்க முடிந்தது.சங்கர்லால் நாவல்கள் மீது சிறுவயதிலிருந்தே மயக்கம். பெண் எழுத்தாளர்களின் கதைகள் பெரும்பாலும் முறையற்ற குடும்ப உறவுகள் அல்லது குடும்பச்சிக்கல்களை மையமாகக் கொண்டிருந்தன. சுஜாதாவின் அப்சராவும் நைலான் கயிறும் மாத நாவலாக வந்ததால் புறக்கணிக்க முடியாதவை. ஜெயகாந்தன் கூட ராணி முத்துவில் வாழ்க்கை அழைக்கிறது எழுதியிருக்கிறார். கல்பனாவிலும் அவருடைய ஊருக்கு நூறு பேர் போன்ற சிறந்த படைப்புகள் வெளியாகியுள்ளன. குடும்ப நாவல் கல்கி, நா.பா. போன்றோரின் படைப்புகளை வெளியிட்டு ஆச்சரியப்படுத்துகிறது. விலை 30 ரூபாய் என்பது அதிகம்தான்.
இதே போல் ஆங்கிலப் புத்தகங்கள். பைபிள் முதல் சூபியிசம் வரை நான் தேடித்தேடிப் படித்த தேர்ந்த புத்தகங்கள் பட்டியல் மிகப்பெரியது. ஆனால் அதற்கு ஈடாக குப்பைகளையும் நிறையவே படிக்க நேர்ந்தது. மிகப்பெரிய குப்பை என்றால் ஆங்கிலத்தில் வெளியாகும் மில்ஸ் அண்ட் பூன்ஸ், மற்றும் சுய முன்னேற்ற நூல்கள்தான்.
நாவல்கள் அசத்துகின்றன. ஆங்கிலத்தில் பல நாவல்களை முடிக்க முடியாமல் பாதியிலேயே நிறுத்தியிருக்கிறேன். கண்களில் வழியும் நீரும்
( கண்கோளாறு ) மனச்சோர்வும் பணப்பற்றாக்குறையும் காரணம். ( பணம் தேவைப்படும் போது உடனடியாக கைகொடுத்து உதவி சில நூறு ரூபாய்களை தருவது ஆங்கில நாவல்கள்தாம் )

மருத்துவத்துறையை மையமாக வைத்த ராபின் குக்கின் கிரைம் கதைகள், ஹிட்லரின் காலத்திலும் ரஷ்யாவின் புரட்சி காலத்திலும் நிகழ்ந்த சம்பவங்களை எழுதிய டாம் கிளான்சியின் நாவல்கள், சுயசரிதையைப் போல் எழுதப்பட்ட சால்பெல்லோவின் ஹெர்சாக், ஹென்றிமில்லரின் டிராபிக் ஆப் கேன்சர், உளவாளிகளை வைத்து எழுதப்பட்ட ஜான் லீ கெரியின் நைட் மேனஜர் போன்ற நாவல்கள், வழக்கறிஞர் தொழிலை வைத்து நீதித்துறையின் குற்ற  வழக்குகளை ஆராய்ந்து எழுதப்பட்ட ஜான்கிரிசிமின் நாவல்கள் போல  ஏராளமான புத்தகங்கள் மனம் கவர்ந்தவையாக உள்ளன. டால்ஸ்டாய், தஸ்தயோவஸ்கி, காப்கா, சார்த்தர், ஆல்பர்ட் காம்யூ, ஹெமிங்வே, நபகோவ், என நீளும் இலக்கிய வாசிப்புகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த புத்தகங்களின் வரிசையில் தற்போது படித்துக் கொண்டிருப்பது  ஜான் கிரிசிமின் சேம்பர் என்ற நாவல் .

பெரும்பாலான ஆங்கில நாவல்கள் படமாகவும் எடுக்கப்படுகின்றன.ஜான் கிரிசிமின் 8 நாவல்கள் படமாகியுள்ளன. அத்தகைய படங்களையும் தேடிப்பிடித்து பார்த்து விடுகிறேன். டாம் கிளான்சியின் கிளியர் அண்ட் பிரசன்ட் டேஞ்சர், பேட்ரியட் கேம்ஸ் போன்ற நாவல்களை படமாகவும் பார்த்து ரசித்திருக்கிறேன்.

வாசி்ப்பது ஒரு வரம். ஒரு தவம். அதில் குப்பையும் வரலாம் மாணி்க்கப்பரல்களும் தெறிக்கலாம்,வைரங்களும் கிடைக்கலாம். யாராலும் கொள்ளையடிக்க முடியாத பெரும் செல்வம் இது.
விழித்திருந்து பெற்ற அறிவு கற்றலால் மேம்பட்ட ரசனை பயிற்சியால் பக்குவப்பட்ட எழுத்து என புதிய பயணத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது.

Monday 11 April 2016

சந்திப்பு 10 - ஷாராஜ்

ஒரு மீள் பதிவு
தமிழுக்கு என் வணக்கம் 

கவிஞர் ஓவியர் - ஷாராஜ் Shahraj Strokes

எழுத்தாளர், கவிஞர், ஓவியர் என்று பன்முகத்தன்மை கொண்ட நண்பர் ஷாராஜை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளது. அதற்கு காரணம் எதைப்பற்றியும் மனம் விட்டு வயது வித்தியாசம் பாராமல் அவருடன் உரையாட முடியும். சம அளவில் மனத்தை அவருடன் பொருத்தி வைக்க முடியும். அவர் பேசுவதில் அர்த்தமும் அழகும் இருக்கும். ஆனால் சற்று விரக்தியும் கலந்திருப்பதை நிதர்சனமாக உணர்ந்திருக்கிறேன். முட்டாள்கள் கோலோச்சும் உலகில் நுட்பமான அறிவாளிகள் ஓரம் கட்டப்படுவதும் ஒதுக்கப்படுவதும் அடையாளமற்றுப் போவதும் குறித்த பிரக்ஞை கூட அவருக்கு இருக்குமா என்பதும் சந்தேகம்தான். ஆனால் விரக்திக்கு அதுதான் காரணமா என யோசித்திருக்கிறேன்.
கோவையில் 2016 ஏப்ரல் மாதம் 7ம் தேதி சந்தித்தேன். போன் செய்ததும் என்னை சந்திக்க கேரள எல்லையில் அமைந்துள்ள வேலந்தாவளம் தாண்டிய தனது சொந்த ஊரான ஒழலபதியிலிருந்து பஸ்பிடித்து கோயமுத்தூருக்கு வந்து சேர்ந்தார். டூவீலரில் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து அவரை அழைத்துச் சென்று ரயில் நிலையம் எதிரே இருந்த கே.ஆர்.எஸ் பேக்கரியில் டீயும் கேக்கும் சாப்பிட்டபடி அவருடன் பேச ஆரம்பித்த போதே அந்த பழைய நட்பு அப்படியே அட்சரம் பிசகாமல் இருப்பதை உணர முடிந்தது. உருவத்தில் ஷாராஜ் மிகவும் இளைத்துப் போயிருந்தார் என்றாலும் எண்ணங்கள் வலிமை பெற்ற நபராக என் முன்னே அமர்ந்திருந்தார்.
தொண்ணூறுகளில் கோவை ஞானியின் நிகழ் இதழுக்கும் அவர் வ.உ.சி பூங்காவில் ஞாயிறுதோறும் நடத்திய களம் கூட்டத்திற்கும் ஒரு அதிதியைப் போல் அடிக்கடி கலந்துக் கொண்டிருக்கிறேன். அப்போது பலர் எனக்கு நட்பாகினர்.குறிப்பாக வை.கி.துறையன் என்ற பெரியவர் .திருக்குறள் அபிமானி. உள்ளத்தால் பொன்னானவர்.
இந்த களம் கூட்டத்தில் வந்த முக்கியமான சிலரில் ஷாராஜ் வித்தியாசமானவர். நிறைய விவாதிக்கக்கூடியவர். நன்றாக வாசிப்பவர். எளிதில் பழகக்கூடியவர் .
அப்போது அவர் பணியாற்றிக் கொண்டிருந்த வெரைட்டி ஹால் ரோட்டிற்கு அடிக்கடி போவேன். நிறைய டீ சாப்பிட்டபடி நிறைய பேசுவோம். காதல், காமம், இலக்கியம், ஆன்மீகம், சினிமா என எதைப்பற்றியும் ஷாராஜூடன் பேசுவது இயல்பாக இருக்கும். சந்திப்பை சாக்காக வைத்து பணம் பறிக்கும் நண்பர்களில் அவரை சேர்க்க முடியாது. ஒரு ரூபாய் கூட கேட்க கூச்சப்படுவார். என்னை மாதிரியேதான். சென்னையில் என்வீட்டிற்கும் ஷாராஜ் வந்திருக்கிறார்.சினிமாவில் எழுத வேண்டும் என்ற ஆசை அவருக்கும் இருந்திருக்கும். திடீரென வணிக ரீதியான எழுத்துக்களை எழுத முயற்சிப்பார். எல்லாமே ஒரு பரிசோதனைதான் அவருக்கு
இம்முறை சந்தித்த போது அவர் கவனம் முழுவதும் தாந்திரீகம், யோகா, ஆன்மீகம் மற்றும் அவை சார்ந்த ஓவியங்களின் பால் திரும்பி நிலைகொண்டிருப்பதை அறிந்தேன். சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர சுகன் இதழில் வெளியான அவர் பேட்டியிலும் ஓவியங்களைப் பற்றியே அதிகம் பேசியிருந்தார்.
வ.உ.சி பூங்கா மூடியிருந்த உச்சிவெயில் வேளையில் அருகில் இருந்த வனவிலங்குப் பூங்காவுக்குள் டிக்கட் வாங்கி நுழைந்தோம். வாடையை மறைக்க முகத்தில் கர்ச்சீப்பை கட்டிக் கொண்ட ஷாராஜ் அங்கு தனது சிறிய லேப் டாப்பில் பதித்த ஓவியங்களை எனக்குக் காட்டினார். ஓவியம் பற்றி அதிக ஞானமில்லாத நான் சில கோடுகளை மட்டும் புரிந்துக் கொள்ள முயற்சித்தேன்.
எனக்கு ரயிலுக்கு நேரமாகும் வரை பேசிக்கொண்டிருந்து விட்டு பிரிந்த ஷாராஜின் நினைவுகள் நாங்கள் சாப்பிட்ட காந்திபுரம் ஹரிபவனம் உணவின் ருசியைப் போல சென்னை வரை என்னுடன் வந்து சேர்ந்தது.
பின்னர் ஒரு பேருந்து விபத்தில் நண்பர் ஷாராஜ் படுகாயம் அடைந்து தனது காலை இழந்த துயரமான செய்தியை அறிந்து இன்றுவரை வேதனைப்படுகிறேன். கோவை அரசு மருத்துவமனையில் நானும் நண்பர் ஆர்.கே. ரவியும் சந்தித்து பேசினோம். அவரது குடும்பத்தினருக்கும் அன்பு சகோதரிக்கும் என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. இருப்பினும் நான் பிரார்த்தனைகள் செய்தேன். ஷாராஜ் உயிருக்கு ஆபத்து நேராதிருக்க மருதமலை முருகனை வேண்டிக் கொண்டேன். அவருக்கு உதவ மனம் கோடி இருந்தாலும் பையில் சில நூறுகளே இருக்கின்றன. என்ன செய்ய.....

நான் நம்பியபடியே ஷாராஜ் மீண்டு வந்துவிட்டார் .மீண்டும் முகநூலில் அவர் பதிவுகளைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சியடையும் உள்ளங்களில் எனதும் ஒன்று. அவர் நீடுழி வாழவும் நலம் பெறவும் என்றும் வாழ்த்துவேன்.

Thursday 7 April 2016

பயணம்-6 மருதமலை, கோவை




 
 மருதமலை மாமணியே முருகய்யா.....
தேவரின் குணம் காக்கும் வேலய்யா என்ற பாடல் தேவரின் தெய்வம் படத்தில் இடம்பெற்றது. மதுரை சோமு தாமே திரையில் தோன்றி பாடிய இப்பாடலை குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் எழுதியவர். கவியரசர் கண்ணதாசன்
35 வயது வரை கோவில்களுக்குச் செல்வதையே தவிர்த்து வந்த நாத்திகவாதியாகவும் மார்க்சீய ஈடுபாடு கொண்டவனாகவும் இருந்த என்னை மாற்றியதில் இந்தப் பாடலுக்கும் பங்கு உண்டு. ஓஷோவைப் படித்ததும், கம்பராமாயணத்தி்ல் திளைத்ததும் ஆன்மீக வாசலை எனக்குத் திறந்தன. மருதமலை மாமணியே முருகையா என்ற மதுரை சோமுவின் உருக்கம் என்னை தடுத்தாட்கொண்டது.மருதமலை கோவிலில் 90 களின் தொடக்கத்தில் சில நண்பர்களுடன் அதன் படிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நினைவுகள் தோன்றின. அப்போது எனது குடும்பத்தில் நிலவிய  துன்பம் தீர மருதமலை கோவிலில் வேண்டிக் கொண்ட ஒரு தோழியின் நினைவும் அலைக்கழித்தது. இம்முறை டூ வீலரில் மலைப்பாதையில் சென்றது தனி அனுபவம். சில்லிட்ட காற்றுடன் கண்ணுக்கு எட்டிய வரை திறந்த வெளியாக காட்சியளித்தது ஊர்.

 மதுரை சோமுவும் ஓஷோவும் இல்லாவிட்டால் நான் வறட்டு நாத்திகவாதியாகவே இருந்திருப்பேன் என்று நினைக்கையில் கண்ணீர் துளிர்க்கிறது. பக்தி என்பதை விட ஆன்மீக அனுபவம் என்றுதான் இதனைக் கூற விரும்புகிறேன்.

இத்திருத்தலம் பற்றிய குறி்ப்பு ஒன்றை காணலாம்.....

கோயமுத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன் இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.
முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலை, முற்காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான திருமுருகன்பூண்டி கோயில் கல்வெட்டுகளில், மருதமலை கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன.[1]
முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்தார். பல மூலிகைகளின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பற்றிய அவரது குறிப்புகள் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகிறது.

 ( விக்கிப்பீடியா )

மருதமலை அருகிலேயே பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
பாரதியாரில் படித்த பல மாணவ-மாணவிகள் ,துணைவேந்தராக இருந்த திரு.சிற்பி உள்ளிட்ட பலருடன் நட்பு இருந்தது. அவர்களை சந்திக்க அடிக்கடி முன்பு அங்கு செல்வதுண்டு. இதே பாரதியார் பல்கலைக்கழகத்தில் எத்தனையோ காதல் கதைகளையும் பார்த்திருக்கிறேன். இப்போதும் எதிரே உள்ள மகளிர் விடுதியிலும் சாலைகளின் நிசப்தங்களிலும் காதலர்களின் நடமாட்டத்தை காண முடிந்தது. அன்று வேறு காதலர்கள். இன்று வேறு காதலர்கள்.ஆனால் காதல் மட்டும் அப்படியே உள்ளது. கல்வி உள்ள இடமெல்லாம் காதலாக மாற்றிய மாணவர் செல்வங்களுக்கு ஒரு வார்த்தை என்னை மாதிரி கண்ணீர் சிந்தும் காதல்களை வளர்க்காதீர்கள் . தெளிவாகவும் திடமாகவும் காதலியுங்கள். வாழ்ந்தால் சாதகப்பறவைகளைப் போல் காலம் முழுவதும் இணைந்து வாழுங்கள். அல்லது நட்பின் கைக்குலுக்கல்களுடன் விலகி விடுங்கள். மன்மதன் அம்பு தைத்த இடங்களில் காயங்கள் ஆறுவதே இல்லை.

 எனனைப் போல அவளும் வந்ததுண்டா அந்த இடங்களுக்கு
அந்த கணங்களுக்கு ?


கோயமுத்தூர் முழுவதும் இரு சக்கர வாகனத்தில் சுற்றி சுற்றி வந்தேன். ரயில நிலையம், டவுண் ஹால், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட முக்கிய இடங்களுடன் எனது நினைவுகளில் தங்கிப் போன லாலி ரோட்டில் வடவள்ளி அருகே உள்ள தனபால் நூலகம், வேளாண் பல்கலைக்கழகம் அருகே உள்ள பயிரியல் பூங்கா, வ உசி பூங்கா, உ்க்கடம் பேருந்து நிலைய பழைய புத்தகக் கடைகள், கிராஸ்கட் ரோடு என இலக்கில்லாமல் எங்கெங்கோ திரிந்த போது கோவை அன்றைக்குப் பிடித்தது போலவே இன்றைக்கும் பிடிக்கிறது. கோவை மக்கள் அருமையானவர்கள். உணவோ ருசியிலும் ருசி. பேக்கரிகள் பிரமாதம். வெயில் மட்டும் தான் நினைவுகளைப் போலவும் சென்னையைப் போலவும் சுட்டது.

Monday 4 April 2016

சார்லி சாப்ளின் பேட்டி

 

 

 

 

'நாம் பல நேரங்களில் அழக்கூடாது என்பதற்காகவே சிரித்துத் தொலைக்கிறோம்!'' - சாப்ளினுடைய இறுதி நேர்காணல்

யதார்த்தம் என்று சொல்லப்படுவதன் மீது எனக்கு ஆர்வமே கிடையாது. 'Make Beleive' தான் என் படங்கள். சில நேரங்களில் உண்மையின் உள்ளே ஊடுருவிப் போவது ரொம்பவும் போரடிக்கிற விஷயமாகிவிடும். எனவேதான் சிட்டி லைட்ஸ்-ல் ஓர் அழகான இளம் பெண் எப்படி ஒரு ஏழையை நேசிப்பாள் என்று யோசித்து, யதார்த்தத்திற்காக நம்பத்தகுந்த சூழ்நிலைகளை தேவையின்றி திணிக்க வேண்டியதாகிவிட்டது. 
தி கவுன்டஸ் படமெடுக்கிற போது நான் கோமாளித்தனமான காட்சிகளே எழுதவில்லை. கசப்பான விஷயங்களைப் போதுமான அளவு உருவாக்கத் தெரிந்தால் அதை எல்லோரும் விரும்புகிறார்கள் போலும். எனது இந்தப் படம் அப்படிப்பட்டதுதான். ரொம்பவும் யதார்த்தபாணி படம். படப்பிடிப்பின் போதே கூட யாராவது ஏதாவது வேடிக்கை செய்தாலும் படப்பிடிப்பை கேன்சல் செய்து விடுவேன். என் சுய உற்சாகம் கூட அடைப்பட்டுப்போனது. 
நாம் படைக்கிற கதாபாத்திரத்தின் ஆழத்துக்குப் போனால் அது நம் சுய உற்சாகத்தையே அல்லவா கொன்றுவிடுகிறது! எனக்கு ஆழங்கள் வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன். அவை சுவாரஸ்யம் மிக்கவை என்றும் நான் நம்பவில்லை. இந்தப் படம் எனக்கு ஒரு சாகசம். 
இதற்கு முன் நான் பெரிய நட்சத்திரங்களைப் போட்டு படமெடுத்ததில்லை. நான்தான் என்னுடைய நட்சத்திரம். இதைச் சொல்வதில் எனக்கு ஒளிவு மறைவு ஏதுமில்லை. மார்லன் பிராண்டோவை இப்படத்தில் போட்டதற்கு காரணமே அவர் நகைச்சுவை உணர்வற்ற இறுகிய மனிதராக இருந்ததுதான். அவர் நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்று தோன்றியிருந்தால் நான் அவரைப் போட்டிருக்க மாட்டேன் போலும்! 
மிகவும் கட்டுக் கோப்புடன் யதார்த்த பாணியில் உருவாக்கப்பட்டதாலோ என்னவோ இப்படம் என் மற்ற படங்களைவிட அதிக கோமாளித்தனமானதாகத் தோன்றுகிறது. 
சிந்தனை என்பது ஜடமானது. அது தேங்கிய குட்டை. அறிவு ஜீவித்தனமும் பெரிய விஷயமல்ல. தே ஆர் ஸ்டேல். வெரி ஸ்டேல். அப்புறம் - விரக்தி - இதைத்தான் நிறையப் பேர் யதார்த்தம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ''இது நிஜ வாழ்வைப் பிரதிபலிக்கிறது'' என்பார்கள். ஆனால் வாழ்க்கை என்பது ஒரு கல்லறையிலிருந்து இன்னொரு கல்லறைக்கு போவதல்ல. அதைப் போலவே மனிதர்களும் வாழ்க்கையைக் கூடுமானவரை அசிங்கமாகவும், துயரமாகவும் சித்தரிப்பது, நன்மைக்காக என்று சொன்னால் கூட அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வாழ்க்கையை மைக்ரோஸ்கோப் கொண்டு பார்த்தால் அது அச்சுறுத்துவதாகத்தான் இருக்கும். எனவே நாம் ரொமாண்டிஸத்தை விரும்புகிறோம். 
சாகசமும் கற்பனையுமற்ற வாழ்க்கையை வாழ்வதைவிட சிறையில் கிடப்பதோ, பூமிக்கடியில் பிணமாக இருப்பதே மேல். 
என் ட்ராம்ப் கதாபாத்திரம் வெற்றியடைந்ததன் ரகசியமே அதுதான். எதையும் எளிதாக்கிக் கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல், எந்த விஷயத்தையும் ரசிக்கப் பழகுதல். இதுவே நான் மிகவும் அனுபவித்து செய்த கற்பனை. விரக்தி - இதைத்தான் நிறையப் பேர் யதார்த்தம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். 
1914-ல் நான் ஹாலிவுட்டுக்குப் போனேன். அப்போது என் வயது 24 ஆன போதும் 18 வயது இளைஞனைப் போல இருப்பேன். மிகவும் மெலிந்த இளைஞன் - ரொம்பவும் சீரியஸ், அடிக்கடி நெர்வஸாகி விடுவேன். முதன் முதலாக நான் நடித்தக் காட்சி ஒரு பார்ட்டியில் இடம் பெற்றது. அங்கு நான் ஒரு ஏழை. எனக்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடி எல்லாவித அசட்டுத்தனங்களும் செய்வேன். பெண்களைப் பார்த்து தொப்பியை உயர்த்துவேன். எனக்கு உண்மையில் தேவை ஒரு இடம். அதைத்தேடி உட்காருவேன். ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைப்பேன். ஒரு அழகான இளம் பெண் என் காலை மிதித்து விடுவாள். அவள் 'ஸாரி' சொல்லும் முன்பு எழுந்து என் தொப்பியை எடுத்து ஸாரி என்பேன். இதுதான் அக்காட்சி. இதில் நடித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று எனக்குள் உயிர்ப்பு வந்தது. என் கதாபாத்திரம் எனக்குக் கிடைத்துவிட்டது. இதுதான் - இந்தக் கதாபாத்திரம்தான் எனக்கு ஏற்ற ஒன்று. இத்தனை நாள் நான் தேடிக்கொண்டிருந்தது இதைத்தான். இந்த டிராம்ப் கேரக்டர் என்னை மிகவும் கவர்ந்தது. யாரிடமும் எதுவும் வெளிக்காட்டாமல் பரபரப்பாக நடித்து முடித்தேன். 
டிராம்ப் கதாபாத்திரம் என்னையே பிரதிபலித்தது. ஒரு காமிக் மனநிலையை, இயல்பாக என்னுள் இருந்த ஒன்றை அது தட்டிவிட்டது. அதன் அசட்டுத்தனம் என்னை ஈர்த்தது. எந்த கோமாளிக் கூத்தையும் நான் செய்யலாம் அல்லவா? 
மனிதர்கள் இக்கட்டான சந்தர்ப்பங்களில் தான் வேடிக்கையாக நடந்துகொள்கிறார்கள். ஒருமுறை கென்னடி ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பின்னால் அமர்ந்திருந்த அவரது கட்சிக்காரர்கள் சிலர் அவருக்கு எதையோ தெரிவிக்க அவர் இன் பண்ணியிருந்த சட்டையை இழுத்துவிட்டனர். கென்னடி பேச்சை நிறுத்தாமலே, திரும்பிக் கூட பார்க்காமலேயே ஒரு அனிச்சைச் செயலாய் அதைச் சரிசெய்துகொண்டார். 
மீண்டும் அவர்கள் அவருடைய சட்டையை இழுக்க, மீண்டும் அதை அவர் சரிப்படுத்தினார். இது மிகவும் வேடிக்கையாகவும் மனித இயல்பாகவும் இருந்தது. தன் சட்டையை அப்படியே விட்டு விடவும் அவர் தயாராக இல்லை. அதை ஒரு பெரிய பிரச்னையாக்கவுமில்லை. 
மனிதம் எனும் பூமத்திய ரேகையை யாராலும் அழித்துவிட முடியாது. தன் இருப்பை வெளிப்படுத்திவிடும் அது. சக மனிதனுக்காக அனுதாபமின்றி ஒருவன் நகைச்சுவை செய்ய இயலாது. இந்த அனுதாபம், பணிவு, விட்டுக் கொடுத்தல் எல்லாவற்றையும் நான் பணமில்லாத ஒரு சராசரி மனிதனின் மீது அமைத்துக்கொண்டு என் ட்ராம்ப் கதாபாத்திரத்தை உருவாக்கிக் கொண்டேன். 
என் இளமைப் பருவம் துயரமானது. விரக்தி, ஏமாற்றம் இவற்றுடன் பட்டினியும் கிடந்தேன். என்னைச் சுற்றி நிறைய வெண்ணையும் ரொட்டியும் இல்லாமல் இல்லை. ஆனால் நான் பட்டினி கிடந்தேன். வறுமையின் சோர்வும் அவமானமும் மட்டுமின்றி நோயுற்ற என் தாயையும் சுமந்து வீதி வீதியாக அலைந்திருக்கிறேன். எனது இந்த ஆரம்பச் சூழல்களால் துயரத்தில் நகைச்சுவை என்பது என் இன்னொரு இயல்பாக ஆகிப் போனது. குரூரம் கூட காமெடியின் அம்சமாகிவிட்டது. 
நாம் பல நேரங்களில் அழக்கூடாது என்பதற்காகவே சிரித்துத் தொலைக்கிறோம். ய·ப்ளோர் வாக்கர் படத்தில் வயதான ஒரு கிழவன் உடல் நடுங்க தள்ளாடியபடி வருவான். நான் அவனிடத்தில் ஒரு இசைக் கருவியைத் தந்து வாசிக்கச் சொல்வேன். நடுங்கும் கரங்களால் அதை வாங்கி வாசிக்க இயலாமல் அவன் உடம்பே ஆடிக் கொண்டிருக்கும். முதுமையின் இந்த கோரத் தாண்டவம் உண்மையில் அழ வைக்கும் விஷயம். ஆனால் திரையில் இக்காட்சியைப் பார்த்த எல்லாருமே சத்தம் போட்டு சிரித்தார்கள். 
ஒரு சூழ்நிலைக்கு ஆட்படுகிறபோது ஒரு மனிதனுக்கு தனிப்பட்ட எண்ணம் ஏதும் இல்லையெனினும் இருப்பது போல காட்டிக் கொள்வான். அது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்கிற பாசாங்கு அது. என் டிராம்ப் கதாபாத்திரம் அப்படிப்பட்டதுதான். அவன் எப்போதும் இயல்பாகவும், பரபரப்பின்றியும் இருப்பான். ஒரு கடையில் ஸ்டாக்கிங் போட்ட ஒரு செயற்கைக் காலைப் பார்த்தாலும் ரொம்பவும் மென்மையாக தொட்டுப் பார்ப்பான். 
அவன் எண்ணம் அப்பாவித்தனமான ஒரு பாசாங்கு. அப்போது நான் மிகமிக குரூரமான செயல்களை செய்தாலும் மக்கள் கரவொலி எழுப்புவார்கள்! 
பல நேரங்களில் எனது இந்தத் தொழில் துணுக்குகள் என் துயரமிக்க நாட்களின் வெளிப்பாடாய் அமைந்தது. எதுவும் நிகழாமல், எதுவும் ஒர்க் அவுட் ஆகாமல், எதை எதையோ, முயன்று தோற்று, நாளுக்கு நாள் அதிக ஏமாற்றமும் சோர்வும் மிஞ்சிய நாட்கள் அவை. எதுவும் நிகழாமல், எதுவும் ஒர்க் அவுட் ஆகாமல், எதை எதையோ, முயன்று தோற்று, நாளுக்கு நாள் அதிக ஏமாற்றமும் சோர்வும் மிஞ்சிய நாட்கள் அவை. 
என் கதாபாத்திரம் இதுதான் என்று தீர்மானித்து விட்டேன். பணம் எனக்கு மிகவும் தேவைப்பட்டது. ஒரு வெற்றிதான் வறுமைச் சிறையிலிருந்து என்னை விடுதலை செய்யும் என்று உணர்ந்தேன். என் காமிக் உலகை நான் படைக்கத் தொடங்கினேன். அப்போது எதுவும் செய்ய முடியும் என்ற தைரியம் எனக்குப் பிடிப்பட்டது. ஒரு கதையை வைத்திருந்தேன். இதை நன்றாக பண்ண முடியும் என்று தோன்றியது. அதில் டிராம்ப் ஒரு போலீஸ்காரன். அவன் தன் லத்தியால் ஒரு தடியனை அடிக்கிறான். அந்தத் தடியனோ போலீசைவிட பலசாலி. அவன் என்னை திரும்பி அடிப்பான். அவன் அடிக்க, நான் அடிக்க மீண்டும் அவன் அடிக்க, நான் அடிக்க காட்சி நன்றாக வந்திருந்தது. 
ஆனால் கிளைமாக்ஸை எப்படி அமைப்பது? எப்படி இந்தத் தடியனை நான் அடித்து வீழ்த்தப் போகிறேன்? அப்போது தான் அந்த விளக்குக் கம்பத்தைப் பார்த்தேன். சட்டென்று ஒரு யோசனை உதித்தது. நான் அவனை அடிப்பேன். அவன் அசையாமல் நிற்பான். தன் பலத்தைக் காட்ட அவன் விளக்குக் கம்பத்தை வளைப்பான். நான் சட்டென்று அவன் முதுகின் மீது தாவி ஏறி அவன் தலையை விளக்கின் உள்ளே திணித்து கேஸை திறந்து விடுவேன். இது பிரமாதமாக அமைந்து விட்டது. 
சூழலிலிருந்து உருவானதால் அது நிஜமாகவே நல்ல காட்சியாகி விட்டது. ஒரு நல்ல காட்சி என்பது தன்னுடன் நிற்பதில்லை. அது மேலும் மேலும் அலையெழுப்பிச் செல்லும். 
மூடைப் பொறுத்தே ஒருவனுக்கு படைப்பாற்றல் எழுகிறது என்று நான் நினைக்கிறேன். இசை, அமைதியான கடல், ஆக்ரோஷமான கடல், ஓர் அழகான வசந்தகாலப் பகல் நேரம், இப்படி இருக்கிறபோது 'ஓ! நான் ஏதாவது செய்ய வேண்டுமே' என்ற உந்துதல் எழுகிறது. 
படைப்புக்குரிய இன்ஸ்பிரேஷன்களால் ஒரு படைப்பாளி எப்போதும் களைப்படைவதில்லை. திடுமென எழுந்து யாரும் எதுவும் படைத்துவிடுவதுமில்லை. நீ உன் மன நிலையால் கதவுகளைத் திறக்கும் போதுதான் படைப்பு நிகழ்கிறது. ஒரு எலும்புக்கூடு கிடைக்கும். 
அப்புறம் அதற்கு சதை கூட்ட ஒவ்வொரு நாளும் சிரத்தை எடுக்கலாம். உனக்குள் ஒரு மகத்தான சுய உற்சாகம் வேண்டும். தன்னிலை உணர்கிற பிரக்ஞை வேண்டும். இது எல்லாப் படைப்பாளிகளுக்கும் பிறக்கிற ஒற்றைப் பிள்ளை! திடீரென்று வாழ்க்கையைக் கண்டு பிடித்தல் - வாழ்க்கையைப் பிரதிபலித்தல். 
நான் என் டிராம்ப் கதாபாத்திரத்தை ரொம்பவும் நேசிக்கிறேன். அதை இனி எப்போதும் என்னால் மறு பரிசீலனை செய்ய இயலாது. அவன் எப்படி பேசுவான், என்று அவனுக்கே தெரியாது. அவன் குரல் எது? அவன் ஒரு வாக்கியத்தை எப்படி உச்சரிப்பான்? ஸாரி. 
டிராம்ப் ஒசையை விரும்புபவனல்ல. அவன் மெளனமானவன். அதற்காக அவனை நீங்கள் பின்புறம் உதைக்கலாம். 
இந்த மெளனம் என்கிற படைப்பைப் படைத்த படைப்பாளி யாரோ எனக்கு தெரியாது. ஆனால் அதைவிட அதிகம் பேசகிற வார்த்தையை நான் அறிந்ததில்லை. மெளனத்தில் அற்புதங்கள் செய்யலாம். அது நம்பும்படி இருக்கும். வெறும் அசைவு போதும். அதுவே ஒரு பறவையின் சிறகைப் போன்றது. பேசிய வார்த்தைகள் எரிச்சலூட்டுபவை. ஒலி என்பதே செயற்கையானது - வெளிப்படையானது. அது எல்லாவற்றையும் நிஜமற்ற போலித் தன்மைக்கு சுருக்கி விடுகிறது. மெளனம் கவிதையின் வெளிப்பாடு. என்னுடையது காமிக் கவிதை. பேசும் படங்களில் நான் என் சொல்வன்மையை இழந்து விடுவேன் என்று எனக்கு நன்கு தெரிகிறது. 
Countess படத்திலும் ஒரு காட்சி இருந்தது. மார்லன் பிராண்டோ தன் அறையில் அமர்ந்திருப்பார். அவர் மனைவி வருவாள். அவர் டிராயரில் இருக்கிற பிராவை பற்றி விசாரிப்பாள். அவர் பேச மாட்டார். தன் தலையைத் தொடங்கப்போட்டு அறையை விட்டு வெளியேறி விடுவார். அவர் முகத்தை உயர்த்தி புருவம் விரித்து ஒரு பார்வை பார்ப்பார். ஒரு பார்வையைவிட பெரிய அசைவு எது? 
என் கதை அறிவு சொல்லப்படாதவற்றின் மீதுள்ளது. மிகவும் சாதாரண இடத்தில், உள்ளுக்குள் இழையோடும் மெளனத்தின் மீது தான் என் ஆர்வம். மரபுரீதியான வார்த்தைகளிலும் செயல்களிலும் இல்லாத மெளனம். நான் மிகவும் விரும்பிய காட்சி ஒன்று உள்ளது. இதைச் செய்ய எனக்கு ரொம்பவும் விருப்பம் உள்ளது. 
ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகி பிரிய நேரிடுகிறது. அவள் தன் கணவனுடன், அவன் தன் மனைவியுடன், அவர்கள் வெறுமனே ''ஹலோ'' என்று நலம் விசாரித்துக் கொள்வார்கள் - ஒரு தலையசைப்பு - ஒரு பார்வை அப்புறம் நகர்ந்து விடுதல். அந்த அற்புதமான நெருக்கம், அந்தக் கொடூரமான பிரிவு எல்லாமே அந்த அசைவில், அந்த மெளனத்தில் தெரிந்துவிடும். 
'த கவுண்ட்ஸ்' தவிர என் மற்ற படங்களில் 'சிட்டி லைட்ஸ்' தான் என் மிகச் சிறந்த படம் என்று நான் நினைக்கிறேன். கண்ணில்லாதவரின் கதை ஒன்றை எடுப்பது என் நீண்ட நாள் ஆசை. 
பிரியமானவள் இதில் பூ விற்கிற குருட்டுப்பெண் ஒரு ரோஜாவை எடுத்து நீட்டுகிறாள். நான் அவள் கண்ணில்லாதவள் என்றறியாமல், ''நான் இந்தப் பூவை எடுத்துக்கொள்கிறேன்'' என்று வேறொரு பூவைக் காட்டுகிறேன். ''எது?'' என்பாள் அவள். ''முட்டாள் பெண் இது கூடவா அவளுக்குப் புரியவில்லை'' என்று எண்ணுவேன். அவள் கையிலிருந்த பூ தரையில் விழுந்துவிடும். அவள் அதை தன் கைகளால் துழாவியபடி தேடுவாள். நான் அதை எடுத்துக் கொள்வேன். அவள் இன்னமும் தேடிக் கொண்டிருப்பாள். அப்போது நான் உணர்ந்துகொள்வேன். அந்த டிராம்ப் (நான்) அப்போது அந்தப் பூவை கண்ணருகில் வைத்துப் பார்ப்பான். தன் கண்ணிலும், அவள் கண்ணிலும் வைத்து வெறுமனே ஒரு பார்வை பார்ப்பான். 
'கோல்ட் ரஷ்' வேறுவித அனுபவம். அது வேதனையான காலமாகிவிட்டது. கோல்ட் ரஷ் என்றால் தங்கத்தைத் தேடுவது. அப்புறம் என்ன? இந்த வடதுருவக் கதைகள் தான் எத்தனை மந்தமானவை? இதில் எப்படி காமெடி பண்ணுவது? நான் பனியைப்பற்றி யோசித்தேன். 
டோனர் என்பவரின் குழு பனியின் மீது பயணம் செய்த போது பசியில் வாடி சாவு, நரமாமிசம் சாப்பிடுதல், ஷூவை சாப்பிடுதல் என்றெல்லாம் அவதிப்பட்டதைப் படித்தேன். 
எனக்கு இது பிடித்துப்போனது. இதிலும் காமெடிக்கான விஷயம் இருக்கிறது. 
என் ஷூவை குழம்பு வைப்பது போன்ற காட்சியை நான் எடுக்க முடிவு செய்தபோது எனக்கு அதில் தயக்கம் இருந்தது. இது மிகையானது போல தோன்றியது. ஆனால் இது ஒரு உண்மை சம்பவத்தின் ஆதாரத்துடன் அமைந்த காட்சி, மேலும் ஒரு சீரியஸான சூழ்நிலையை வேடிக்கையானதாகப் பண்ணுவது சுவாரஸ்யமானது என்று எண்ணினேன். அந்த ஷூ கடினமானது. இரண்டு நாட்களாகப் படப்பிடிப்பு தொடர்ந்தது. அந்த பெரிய தடிமனான மனிதராக என்னுடன் நடித்தவர் இனிமேலும் இந்த எழவெடுத்த ஷூவை சாப்பிட என்னால் முடியாது'' என்று சொல்லி விட்டார். 
'த கிரேட் டிக்டேட்டர்' எடுக்கையில் நான் ஹிட்லரைப் பற்றி அதிகம் படிக்கவில்லை. அவன் நகைச்சுவை உணர்வில்லாத மனிதன் என்றும் தன் அதிகார பலத்தினால் அவன் மிகவும் ஆபத்தானவன் என்றும் அறிந்திருந்தேன். அவனது அந்த அகன்ற பார்வை, மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும் புருவத்தை அசைத்தல், தன் கையை மடக்கி முஷ்டியை உயர்த்துதல் எல்லாமே அவன் எத்தனை தன்னம்பிக்கை அற்றவன் என்று எடுத்துக்காட்டியது. அவனுக்கு உதவியாளனாக ஒரு கறுப்பன் ''நீங்க செய்தது சரி பாஸ்'' என்று சொல்வது போல படத்தில் அமைத்தேன். நிஜத்தில் அப்படி ஒரு ஆள் அவனுக்கு இருந்திருக்கக் கூடும். 
இன்னொரு பெரிய காமெடியை செய்யவும் எனக்கு விருப்பம் உள்ளது. அது பெரிய பாசாங்குகளைக் கிண்டலடிப்பது. பைபிள், மைக்கலாஞ்சலோ, புராதன ரோம் நகரம் மாதிரி... 
இதில் நான் ஒரு சின்ன ரோல் மட்டும் செய்யலாம் என்று நினைக்கிறேன். பேசும் படத்தின் யுகத்தில் வசனங்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்க ஆரம்பித்தால் இயக்கத்தில் கறை விழுந்துவிடும். ஏற்கனவே சாப்ளினுக்கு வயதாகிவிட்டது. அவர் டெக்னிக் பழைய பாஷனாகிவிட்டது என்கிறார்கள் என் விமர்சகர்கள். அதற்காக, நாம் கேமராவைத் தலை கீழாகப் பிடித்தோ, தட்டாமாலை சுற்றியோ படமெடுக்க முடியாதே! Box Office எனும் மாயாஜாலம் அப்படியெல்லாம் நிகழ்ந்துவிடுவதில்லை. ஒரு கேமரா செய்கிற எல்லா வித்தைகளையும் கொண்டு மனித உணர்வுகளை பிரதிபலிக்க என்னால் முடியும். 
மக்கள் எளிமையை விரும்புகிறார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உலகம் ரொம்பவும் சிக்கலானது. மனித இதயங்களில் எத்தனையோ ஆக்கிரமிப்புகள். (அப்புறம் இந்த சினிமா வெடி குண்டுகள் வேறு... இவை நிஜமல்ல). 
மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும். அவர்கள் பிரக்ஞையின்றியே நல்ல தீர்ப்பு வழங்கி விடுகிறார்கள். அவர்களின் விமர்சனமும் மென்மையானதுதான். பொதுவாக அவர்கள் விமர்சிப்பதே இல்லை. இது மோசமான படம். இதை எடுத்தவன் மிகவும் மட்டமானவன், என்று விமர்சகன் ஒருவன் எழுதக் கூடும். மக்கள் அப்படியல்ல. ''அந்தப் படத்துக்கு போக வேண்டாம் அந்தப் படம் சரியில்லை!'' என்று மட்டும் சொல்வார்கள். 
சினிமாவில் மிகவும் முக்கியமானது 'க்ளோசப்'. யாராவது புன்னகைக்கிற போது, யாரையாவது பார்க்கிறபோது, ஒரு நல்ல க்ளோசப் உலகின் முடிவாகவும் எல்லாவற்றின் புதிய ஆரம்பமாகவும் ஆகிவிடுகிறது! ஒரு 'க்ளோசப்' வருகிற போது அதன் நாடகத்தன்மைக்காக அதற்கு இணையாக வேறொரு க்ளோசப் போடுவது என்கிற நவீன உள்ளடக்கத்தைக் கூட சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அப்படியாயின் மனிதர்கள் 'வளவள' வென்று பேசுவதையே காட்ட வேண்டி வரும். டயலாக் முடிந்து க்ளோசப் வருமானால் அது தன் முக்கியத்துவத்தையே இழந்து விடும். நடிகனின் மூக்கு நுனிமீது கேமராவை செலுத்த யாராலும் முடியும். அது எளிதான விஷயந்தான் ஆனால் சரியான உணர்வின் போது போக வேண்டுமே! நான் நடிப்பை மிகவும் நேசிக்கிறேன். கேமரா நடிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. 
உண்மையிலேயே நான் 'க்ளோசப்' ஐ அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. மிகவும் அந்தரங்கமான, உணர்வுபூர்வமான கணங்களில் மட்டுமே அதைப் பயன்படுத்தி வருகிறேன். 
என் முந்தைய நாடக அனுபவம் கேமராவை ஒரு கூடுதல் பயனாகவே காணச் சொல்கிறது. நான் அதையே பின்பற்றுகிறேன். நாடக ஓட்டம் மீதுதான் என் நாட்டம். தூரத்தின் இடைவெளி முதலியவற்றை கேமராவின் மூலம் கையாள விரும்பியிருக்கிறேன். சினிமாவைப் பொறுத்தவரை என்னை யாராவது ஒரு சட்டம் இயற்றச் சொன்னால் உரை முதலிலும் கேமரா பின்னரும் என்றுதான் எழுதி வைப்பேன். 
கதை தன் மாய வலையை வளர்த்துக்கொள்ள நீ அவகாசம் தர வேண்டும். இல்லாவிட்டால் அது தன் நிஜத்தையே கூட இழக்க வேண்டிவரும். ஒரு விதையை மண்ணில் போட்டு வளர்ப்பது போன்றது இது. 
இசை, அமைதியான கடல், ஆக்ரோஷமான கடல், ஓர் அழகான வசந்தகாலப் பகல் நேரம், இப்படி இருக்கிறபோது 'ஓ! நான் ஏதாவது செய்ய வேண்டுமே' என்ற உந்துதல் எழுகிறது. 
நான் ஒரு நடிகனா? இயக்குனரா? நான் இயக்கனராகவே இருக்க விரும்புகிறேன். அது ஏனென்றால் எவ்வளவு பெரிய நடிகனுக்கும் தன்னால் இதைச் செய்ய முடியுமா என்ற பயம் வந்துவிடும். வேறு யாரோவாக தன்னை எண்ணிக்கொண்டு நடிப்பதில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு நிமிடமும் உன் சுயம் உன்னை உறுத்தி இடைஞ்சல் செய்யக் கூடும். நடிப்பாற்றல் மிகவும் அபூர்வமான செயல். எப்போதாவது ஒரு முறை ஒரு நல்ல நடிகன் தனக்கும் தன் பாத்திரத்திற்கும் இடையில் அந்த பேலன்சை செய்து விடுவான். அது ஒரு மாயாஜாலம் போல நிகழ்ந்துவிடும். 
சில நேரங்களில் கேமரா மாஜிக் செய்துவிடும். ஒரு முறை ஒரு நாடகத்தில் என்னால் சரியாகச் செய்ய முடியவில்லை. ஆனால் அதையே திரையில் பண்ணிப் பார்த்த போது என் குறை புரிந்தது. இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் கேமரா, க்ளோசப் முதலியவற்றை நான் நாடியிருக்கிறேன். 
'சிட்டி லைட்ஸ்' படத்தின் இறுதிக் காட்சியில் நான் ஒரு 'க்ளோசப்' வைத்திருந்தேன். அந்தக் குருட்டுப் பெண் தன் பார்வையை அடைந்துவிடுவாள். அவளுக்கு பார்வை வர பல சிரமங்கள் பட்ட டிராம்ப் ஒரு ஏழை. ஆனால் அவன் பெரிய வசதிமிக்க பணக்காரன் என்று அவள் எண்ணிக் கொண்டிருப்பாள். எனவே அவள் பூ விற்கிறபோது எதிரே நிற்கிற டிராம்ப் தான் தன் காதலன் என்று அவளுக்குத் தெரியாது. ஒரு கணம் அவள் கைகள் அவள் மீது படும். சட்டென்று அந்த ஸ்பரிசம் அடையாளம் காட்டிவிடும். ''அடக் கடவுளே! இவனா அந்த மனிதன்?'' என்பாள் அவள். 
இந்தக் காட்சியை படமாக்க நான் பல டேக்குகள் எடுத்தேன் (கிட்டத்தட்ட 100 டேக்குகள் எடுத்ததாக ஒரு புள்ளி விபரக் குறிப்பு தெரிவிக்கிறது!) அவை எல்லாமே செயற்கையாகவும் மிகையாகவும் ஓவர் ஆக்டிங்காகவும் அமைந்தன. இம்முறை தவறக்கூடாது என்றொரு உறுதி எடுத்தேன். அது ஒரு அருமையான விழிப்புணர்வை எனக்கு அளித்தது. நான் என்னை விட்டு விலகிப் போய் அந்தக் கதாபாத்திரத்தை கவனித்தேன். 
அவள் என்னை நினைக்கிறாள் என்று அவன் எந்த முயற்சியுமின்றி கவனித்துக் கொண்டிருந்தான். எனக்கு பிடிபட்டுவிட்டது. அப்போதுதான் மிகவும் தூய்மையான ஓர் இடைச்செருகலாக அந்தக் 'க்ளோசப்' ஷாட் இடம் பெற்றுவிட்டது. ஆம்! நான் 'க்ளோசப்'-களை இடைச்செருகல்களாகவே கருதுகிறேன். நான் செய்தவற்றிலேயே ரொம்பவும் சுத்தமான இடைச்செருகல் இதுதான். 
எனக்கு வயதாகிவிட்டது. உண்மைதான். ஆனாலும் நான் ரொம்பவும் உற்சாகமானவன். என் வயதை நான் மிகவும் ரசித்து அனுபவிக்கிறேன். வயதின் காரணமாக பல பயங்களை என்னால் எளிதாக விட்டுவிட முடிகிறது. எனக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது. நட்பினால் நான் கட்டுப்பட்டது கிடையாது. முதல் காரணம் நான் ரொம்பவும் கூச்ச சுபாவம் உள்ளவன். அடுத்து நான் பிஸியாக இருக்கிறேன். நான் ரொம்பவும் சோகமாக இருப்பதாக எல்லோரும் நினைக்கிறார்கள்.இல்லை! துளி கூட சோகம் இல்லை. துணை நாடி நான் சிறுவயதில் தவித்திருக்கிறேன். இப்போது என் தனிமையே எனக்கு நிறைவளிக்கிறது. நான் அடுத்த மனிதனுடனோ, அடுத்தவன் என்னுடனோ உடன்பட்டு நிற்க முடியவில்லை. 
என்னை எப்போதும் தாங்கி நிற்பது சினிமாதான். என்னைப் பற்றி ஒரே ஒரு நபர்தான் மிகவும் சரியான கணிப்பு வைத்திருக்கிறார். அவர் 'ஜேம்ஸ்பாண்ட்' சீன் கானரி! 
இத்தனைக்கும் அவர் என் நெருங்கிய நண்பர் கூட அல்ல! ஒரு ஸ்டூடியோவில் சிறிது நேரம் பேசியதுடன் சரி. அவர் என்னைப் பற்றி நல்லதொரு விமர்சனம் செய்தார். 
''சாப்ளின் கவனமாக இருக்கிறார்!'' என்று கூறினார் அவர். ஆம்! நான் என் தொழிலைப் பற்றி கவனமாக இருக்கிறேன். என்னைப் பற்றி கவனமாக இருக்கிறேன். இதைவிட சிறப்பாக என்னால் செய்ய முடியுமா? முடியாது. எனவே இப்போது என் கையிலிருப்பது இந்த அருமையான தொழிலான சினிமா மட்டும்தான். இதில் உண்மையிலேயே நான் கவனமாக இருக்கிறேன். 
தமிழில்- செந்தூரம் ஜெகதீஷ்
செந்தூரம் சினிமா சிறப்பிதழில் பிரசுரமானது.

செந்தூரம் இதழுக்கு உயிர்மை விமர்சனம்

‘செந்தூரம்’ மாத இதழ்
பாண்டியன்

திரைப்பட இயக்குநர் ஸ்ரீதரை அட்டைப்படத்திலேயே போட்டு கௌரவ அஞ்சலி செலுத்தியிருக்கும் ‘செந்தூரம்’ மாத இதழ் (32 பக்க அளவு), இந்தி பின்னணிப்பாடகரான மகேந்திர கபூரைப் பற்றியும் கட்டுரை எழுதி அஞ்சலி செலுத்தியிருக்கிறது. இவ்விருவரின் சாதனைகளைப் படிக்கும்போது-அவர்கள் படைத்து நம் மனதைக் கவர்ந்த பாடல்கள் மலரின் வாசம் போல் மனத்தை நிறைக்கின்றன. மும்பைக் குண்டுவெடிப்பு பற்றிய தருண் தேஜ்பாலின் கட்டுரையின் சில பகுதிகள் அரசியலும் தீவிரவாதமும் தனி மனிதனை எப்படிப் பாதிக்கின்றன என்பதை ஆழமாக அலசுகிறது. ‘போன்சாய் வனம்’ என்ற குறுங்காவியம் கொடைக்கானல் தரும் அனுபவங்களை கவித்துவமாக விரித்துப் போடுகிறது.(‘வெப்பமண்டலர்களைப் பரவசிக்கும் தட்பநிலை’, ‘இவனுமோர் மனப்பிறழ்வன்’ என்ற உற்சாகமான வார்த்தைப்பிரயோகங்கள் சுவாரஸ்யமானவை) அதன் அடிக்குறிப்புத் தகவல்கள் (குளிர் பிரதேசங்களான மலைவாச ஸ்தலங்களில் விஷப் பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை. . ஆனால் உரிய சிகிச்சை மேற்கொள்ளாமல் பல வருடங்களுக்குப் பின்னர் சமவெளிக்கு இறங்கினாலும், உள்ளார்ந்திருக்கும் விஷ விளைவால் மரணிக்க நேரும்)எனச் சில அபூர்வத் தகவல்கள் கொண்டனவாக இருக்கின்றன. ‘நெடுங்சாலை’ என்ற சிறுகதை தற்கொலையை நோக்கிச் செல்லும் ஒருவனின் மனமாறுதலை நயம்படச் சொல்கிறது. எழுத்தாளர் வா.மு.கோமுவின் நேர்காணல் அவரது தனித்துவத்தை முழுமையாகக் கொண்டு வந்திருக்கிறது. அச்சமைப்பும் இதழ் நேர்த்தியும் கனத்த விஷயங்களுமாக மனதைக் கவரும் இதழாக ஜனவரி-2009 இதழ் வெளிவந்திருக்கிறது.

தொடர்புக்கு:
கே. ஜெகதீஷ்,
சிருஷ்டி,
6, புரசை நெடுஞ்சாலை,
சென்னை-600 007.

மின் அஞ்சல்:
senthooramjagdish@gmail.com

குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன் ?

நமது கல்விமுறை மனப்பாடம் செய்வதையே மையமாகக் கொண்டு இயங்குகிறது. ‘படி... படி...’ என்று பெற்றோரும் பிள்ளைகளை வாட்டி வதைக்கும் காலத்தில் அமெரிக்காவில் நினைவு தவறுதல், கவனம் சிதைவுறுதல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஓஹியோவில் உள்ள தேசிய குழந்தைகள் மருத்துவமனை வெளியிட்ட அந்த ஆய்வில், ‘குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்’ என்பது குறித்த அதிர்ச்சியளிக்கும் விபரங்கள் உள்ளன. சின்ன வயதில் விளையாட்டின்போது சில குழந்தைகள் தலையில் லேசாக அடிபட்டு பின் சரியாகி விடுவதைப் பார்த்திருப்போம். ஆனால் இந்தக் காயம் ஆறியதால், அது முடிந்து விட்டதாக அர்த்தமில்லையாம். அது மூளைக்குள் ஊடுருவி அழுத்தமாக நினைவைத் தாக்கி, மறதியை அதிகரிக்கச் செய்கிறதாம். ‘‘லட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் இப்படி காயங்களுடன் வருகின்றனர். நாமும் சிகிச்சையளித்து குழந்தை குணமாகி விட்டதாக வீ¢ட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். ஆனால் அப்படி சிகிச்சை பெற்ற குழந்தைகளில் பலர் இந்த பாதிப்புக்கு ஆளாகி விடுகின்றனர்’’ என்கிறார் இந்த மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் கீத் யீட்ஸ். சில குழந்தைகளுக்கு ஓராண்டு வரை இந்த நினைவு மறதி பாதிப்பு நீடிக்கிறதாம். அடிபட்டு சரியாகிவிட்டாலும் அலட்சியமாக இருக்காமல் குழந்தையைக் கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தலைவலி, கோபம், எரிச்சல், சமநிலை குலைதல், படிப்பில் கவனமின்மை, அசதி, மறதி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக குழந்தையை பரிசோதிக்க வேண்டும் என்று அமெரிக்க நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். 8 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே இத்தகைய பாதிப¢புக்கு அதிகம் ஆளாகின்றனர். அடி. விபத்து போன்ற புறக்காயங்கள் மட்டுமின்றி, கடுமையான வன்முறையை சந்தித்தல், கோரமான விபத்துகள், படுகொலைகளைப் பார்த்தல், பயம், புறக்கணிக்கப்படுதல், அவமதிக்கப்படுதல் போன்ற அகரீதியான காயங்களும் குழந்தைகளுக்கு ஆழமான பாதிப்பை மூளைக்குள் ஏற்படுத்துவதாக இந்த ஆய்வு கூறுகிறது. குழந்தைகளை விளையாட அனுமதிக்காமல் வீட்டுக்குள் முடக்குவதும் அதிகமான படிப்புச் சுமையை ஏற்றுவதும் குழந்தையின் மூளையை மந்தமாக்கி விடுகிறது என்றும் உளவியல் நூல்கள் தெரிவிக்கின்றன. எனவே,குழந்தை மார்க் எடுக்கவில்லை என்பதற்காக தண்டிப்பதைத் தவிர்த்து, குழந்தையின் நடவடிக்கைகளை தாயுள்ளத்துடன் கண்காணித்து உதவி செய்தால், அவசியமான நேரத்தில் சிகிச்சையளித்தால், நிச்சயம் எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான்! முத்தாரம் இதழில் பிரசுரமானது.

Friday 1 April 2016

இந்திய சினிமா - ஆனந்த் - ஆனந்தம் அழிவற்றது.

குமுதம் தீராநதி ஏப்ரல் 2016 இதழில் வந்த எனது கட்டுரை இது....

இந்திய சினிமா


ஆனந்தம் அழியாதது - ANAND












செந்தூரம் ஜெகதீஷ்

இறப்பதற்கு முன்பு பார்க்க வேண்டிய 100 இந்திய படங்கள் வரிசையில் நிச்சயமாக இப்படம் இடம்பெற்றிருக்கும். அந்தளவுக்கு மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட இந்தி படம் இது.

புனே நகரில் சில வடநாட்டு நண்பர்களுடன் உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டே கேட்டேன். நீங்கள் பார்த்த இந்திப்படங்களிலேயே மி்கச்சிறந்த படங்கள் எது என்று...ஷோலே, கபி கபி போன்ற படங்களை ஓரிருவர் கூறினாலும் மற்ற அனைவரும் கோரஸாக கூறியது ஆனந்த் படத்தைத்தான்.

ஆனந்த் என்ற இப்படம் 1970ம் ஆண்டு வெளியானது. இதனை எழுதி இயக்கியவர் பிரபல இயக்குனர் ரிஷிகேஷ் முகர்ஜி. வங்காளியான இவர் நேரடியாக பல இந்திப்படங்களை இயக்கியுள்ளார். ராஜ்கபூரின் அனாரி இதில் முக்கியமான படம். ஆனந்த் படத்தை அவர் தமது நண்பரான ராஜ்கபூருக்கும் மும்பை நகருக்கும் காணிக்கையாக்குகிறார். ஏன் மும்பை....? படத்தில் ஆனந்த் பேசும் ஒரு வசனம் இது." மும்பை மாதிரி ஒரு நகரமேஇருக்க முடியாது.எத்தனை உயிர்ப்புடன் மனிதர்கள் நடமாடுகிறார்கள் ."-ஆனந்த் இப்படி கூற காரணம் உண்டு .அவன் புற்றுநோயால் 3 அல்லது 4 மாதங்களில் இறந்துவிடப் போகிறான்.

படத்தின் ஒவ்வொரு காட்சியாக விவரித்தால்தான் இந்தப்படத்தின் அழகும் ஆழமும் புரியும். ஆனந்தாக அப்போதைய சூப்பர் ஸ்டார் ராஜேஷ்கன்னாவும் , அவன் நண்பன் பாஸ்கராக புதிய சூப்பர் ஸ்டாராக வளர்ந்து வந்த அமிதாப் பச்சனும் இணைந்த படம். இரண்டு பெரிய நடிகர்கள் நடித்திருந்தாலும் சண்டைக்காட்சிகளோ காதல் டூயட்டுகளோ இப்படத்தில் இல்லை. இப்படத்திற்கு வசனம் எழுதியவர் குல்சார். பாடல்கள் குல்சார் மற்றும் யோகேஷ். இந்த யோகேஷ்தான் மனோஜ்குமார் படங்களுக்கும் அற்புதமான பாடல்கள் எழுதியுள்ளார். படத்தின் இசை திரையுலகின் மாபெரும் இசை மேதைகளில் ஒருவரான சலீல் சவுத்திரி. இப்படத்தில் வரும் நா ஜியா லாகே நா....என்ற லதா மங்கேஷ்கரின் தனிப்பாடலை பாலு மகேந்திரா தமது அழியாத கோலங்கள் படத்தில் நான் எண்ணும் பொழுதே ஏதோ சுகம் ஏதோ சுகம் கொள்ளும் மனதே என்று தமிழ்மக்களுக்கு வழங்கினார். தமிழில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய கங்கை அமரனின் பாடல் இது.

இப்படத்தில் முகேஷ் பாடிய இரண்டு அமரத்துவம் மி்க்க பாடல்கள் இடம் பெற்றன. கஹி தூர் ஜப் தில் சல்ஜாயே என்ற பாடலும் மேனே தேரே லீயே ஹி சாத் ரங்கு கே சப்னே சுனே சுரீலே சப்னே என்ற பாடல்கள் இன்றும் கேட்க தேனாக இனிப்பவை. இத்துடன் மறைந்த மன்னாடே பாடிய அபாரமான பாடல் ஒன்றும் உண்டு. அந்தப்பாடல் ஜிந்தகி கெஹ்சி ஹை பஹேலி ஹாயே.....

படத்தின் கதை இது....

படத்தின் ஆரம்பத்தில் டாக்டர் பாஸ்கர் ( அமிதாப் பச்சன் ) எழுதிய ஆனந்த் என்ற நூலுக்கு சரஸ்வதி புரஸ்கார் விருது அளிக்கப்படுகிறது. தான் பெரிய எழுத்தாளன் இல்லை என்று கூறும் பாஸ்கர், ஆனந்த் என்ற நண்பனைப் பற்றிய இக்குறிப்புகளே இந்த நாவல் என்கிறார். படம் பிளாஷ்பேக்கில் நகர்கிறது.

ஏழைகளுக்கு பல்வேறு சோதனைகளை நடத்தியும் கலர் கலராக மாத்திரைகளை கொடுத்தும் பணம் பறிக்கும் டாக்டர்கள் மத்தியில் மருத்துவத் தொழிலை சேவையாக கருதுபன் பாஸ்கர்.உப்பு வாங்கக்கூட காசில்லாத ஏழைகளிடம் மருந்து வாங்க சொல்ல முடியுமா என்று கேட்கிறான் பாஸ்கர்.

இவ்வுலகில் நாம் நோய்களை விரட்ட மருந்தை தருகிறோமா அல்லது ஒவ்வொரு அடியிலும் மரணத்தை தக்க வைக்க மருந்து தருகிறோமா என்றும் பாஸ்கர் கேட்கிறான்.

வீட்டில் பணியாள் திருமணம் செய்யும் படி பாஸ்கரிடம் கூறுகிறான். பாஸ்கர் ரேணு என்ற பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும்போது காதல் வயப்பட்டவன். ஆனால் அது சொல்லாத காதல் மனதுக்குள் மறைத்து வைத்துள்ளான்.

இதனிடையே ஆனந்த் (ராஜேஷ் கன்னா) என்ற தமது நண்பனை சிகிச்சைக்காக பாஸ்கரிடம் அனுப்புகிறான் டாக்டர் பிரகாஷ் குல்கர்னி. ( ரமேஷ் டியோ ) ஆனந்துக்கு புற்றுநோய். இன்னும் 4 மாதம்தான் அவனுக்கு ஆயுள். காப்பாற்ற முடியாது. ஆனால் வலியில்லாமல் சாக மருத்துவம் உதவலாம். நாளைக்கு டெல்லியிலிருந்து மும்பைக்கு ஆனந்த் வருவதாக டாக்டர் குல்கர்னி கூறும் போதே ஆனந்த் வந்துவிடுகிறான். அவன் கலகலப்பானவன். தனது முடிவு தெரிந்தும் அழவிரும்பாதவன். ஒருநாள் முன்னதாக வந்ததற்கு அவன் விளக்கம் தருகிறான். என் தாய் வயிற்றில் இருந்தபோது 9 மாதத்திலேயே பிறந்துவிட்டேன். சாகும்போதும் எனது ஆயுட்காலத்திற்கு முன்பே செத்து விடுவேன்.

ஆனந்தின் உடைமைகள் ஒரு சிறிய சூட்கேஸ், ஒரு டேப் ரிக்கார்டர்

பாஸ்கரை ஆனந்த் பாபுமோசாய் என்றழைக்கிறான். இளம் பெண்கள் அவனை அப்படி அழைப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறானாம். பாபு மோசாய் என்றால் கூச்சமுள்ள நபர்.

தமக்கு மரணம் அருகில் இருப்பதை ஆனந்த் தெரிந்து வைத்திருக்கிறான். வாழ்க்கை மகத்தானதாக இருக்க வேண்டுமே தவிர நீளமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது அவன் கருத்து.அவனுக்கு சாவுதெரிந்திருந்தும் உயிர்ப்புடன் இருக்கவே விரும்பினான்.

மருத்துவமனையில் செவிலியரான சிஸ்டர் டிசோசாவை தாயாக மாற்றுகிறான். தூங்கு என்று டீச்சரைப் போல் அதட்டும் அவரிடம் தூங்கினால் எனது 6 மாத ஆயுள் 3 மாதமாக குறைந்துவிடும் என்கிறான் ஆனந்த். அடுத்த பிறவியில் நான் உன் மகனாக வேண்டும் என்கிறான். மருத்துவமனை விதிகளை மாற்ற முடியாதா என்று கேட்கிறான். மருத்துவமனை சூழலே நோயாளியை தன்னை நோயாளி என உணர வைக்கிறது என்று கூறி தனியாக வாழும் பாஸ்கர் வீட்டுக்கே குடி வந்து விடுகிறான்.

பாஸ்கர் தனது டைரியி்ல் இவ்வாறு எழுதுகிறான். அவன் மரணத்தைக் கண்டு சிரிக்கிறானா அல்லது தன்னைக் கண்டு சிரிக்கிறானா...தன் வாழ்க்கையைக் கண்டு சிரிக்கிறானா....

பணியாளிடம் சாப்பாடு பற்றி விசாரிக்கிறான் ஆனந்த் .நான் நிறைய பேசுவேன். நல்லா சாப்பிடுவேன் என்கிறான்.

டாக்டர் குல்கர்னியின் மனைவி சுமனை ( சீமா டியோ ) சகோதரியாக்கிக் கொள்கிறான். அவளுக்கு ஆனந்துக்கு என்ன நோய் என்று தெரியாது. மறைக்கிறார்கள். அவளோ புதிதாக உருவான சகோதரனுக்காக கடவுளை வேண்டுகிறாள். தனது குருஜியிடம் அழைத்துப் போகிறாள். ஆனந்தின்நோய் குணமாக ஆசி கேட்கிறாள். அந்த பாபா ஒரு மௌனி. வாழ்நாள் முழுவதும் பேசா மடந்தையாக வாழ்பவர். பேசாமல் வாழ என்னால் முடியாது என்கிறான் ஆனந்த். ஆனால் யாரையும் புண்படுத்தும் விதமாக நான் பேசாமல் இருக்க ஆசி கொடுங்கள் என்று பாபாவிடம் கேட்கிறான். பாபாவும் ஆனந்தின் கலகலப்பான சுபாவத்தைக் கண்டு மகிழ்கிறார். உடம்பு அழியக்கூடியது.ஆன்மா அழியாதது. ஆன்மாவை பீடித்த ஆனந்தம் அழியாதது. அழியாத ஆன்மாவுக்கு ஆசி கொடுங்கள் என்று கேட்கிறான் ஆனந்த்.

பணியாள் மூலம் டாக்டர் பாஸ்கர் ரேணுவை( சுமிதா சனியால் ) ஒருதலையாக காதலித்த விவரம் அறியும் ஆனந்த், ரேணுவின் வீட்டுக்கே தேடிப் போகிறான். அங்கு ரேணுவை சைட் அடிக்கும் வாலிபர்களை பயில்வான் தாரா சிங்கின் உதவியுடன் அடித்து விரட்டும் ஆனந்த் வயது வந்த பெண்ணை தனியா வீட்டில் வைக்கலாமா கல்யாணம் கட்டிக் கொடுங்கள் என்று ரேணுவின் தாயுடன் பாஸ்கருக்காக பெண் கேட்கிறான். ரேணுவிடமும் பாஸ்கரின் காதலைப் போட்டு உடைக்கிறான். ரேணுவும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறாள்.

ஆனந்துக்கு மற்றொரு பழக்கம் உண்டு. தெருவில் போகும் யாரையும் தனது பால்ய கால நண்பன் முராரி என பெயரிட்டு அழைப்பான். தான் முராரி அல்ல என்று அந்த நபர் விளக்கினாலும் நீ என் நண்பனாயிரு. முராரியாக இல்லாவிட்டால் என்ன என்பது ஆனந்தின் சுபாவம். அப்படி சிக்கிய ஒரு முராரிதான் நாடக நடிகரான இஷாரா பாய்.( நகைச்சுவை நடிகர் ஜானி வாக்கர்) அவர் ஆனந்தை நாடகத்தில் நடிக்க அழைத்துச் செல்கிறார். குஜராத்தி மொழி மட்டும் பேசும் நடிகையை ஆனந்துக்கு அறிமுகம் செய்து காதலிக்கிறாயா என்று கேட்கிறான். காதலில் ஆசை வைத்து குஜராத்தி மொழி படிக்க ஆனந்த் புத்தகங்களை வாங்கி வருகிறான். கடினமான மொழி இது. கற்றுக் கொள்ள ஒருவருஷமாகும். அதுவரை நான் இருக்க மாட்டேன். பரவாயில்லை. அடுத்த பிறவிக்கு இவளை ரிசர்வ் செய்துக் கொள்கிறேன்.அடுத்த பிறவியில் குஜராத்தியாக பிறக்கிறேன் என்கிறான்.

இஷா பாயின் நாடகத்தில் நாடகத்தனமாக ஒரு வசனக்காட்சி....பிறப்பும் இறப்பும் ஆண்டவனின் கையில்.மனிதன் வெறும் பொம்மலாட்ட பொம்மை. அவனால் என்ன செய்ய முடியும்....ஆனந்த் பரவசத்துடன் கைத்தட்டுகிறான்.

ஆனந்துக்கு உடல் நிலை மோசமடைகிறது. நீ போய் விட்டால் உன் குரலை எப்படி கேட்பேன் என்று கலங்குகிறான் பாஸ்கர். சில மாதங்களாகவே உன் குரலை கேட்டு கேட்டு இனி மௌனத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்கிறான் பாஸ்கர். அப்படியா சரி என் குரலை டேப்ரிக்கார்டரில் பதிவு செய்து வைத்துக் கொள் என்கிறான் ஆனந்த்.

முதலில் நீ கவிதை வாசி என்கிறான். பாஸ்கர் கவிதை வாசிக்கிறான். ஒலிநாடா ஓடிக் கொண்டிருக்கிறது. கவிதை முடிகிறது. ஒலி நாடா ஓடுகிறது. ஆனந்த் பேசவில்லை. வெறுமனே ஒலி நாடா ஓடுகிறது. பேசு என பாஸ்கர் செய்கையால் கூறுகிறான். ஆனந்த் பேசவில்லை. தாமதிக்கிறான். மேக்கப் போடுகிறான் பவுடர் போடுகிறான் நாடக நடிகர் பாணியில் மேக்கப் போட்ட பின்னர் தாம் நாடகத்தில் கேட்ட வசனத்தைப் பேசுகிறான்.

பிறப்பும் இறப்பும் ஆண்டவனின் கையில் இருக்கிறது. மனிதன் வெறும் பொம்மலாட்ட பொம்மை...அவனால் என்ன செய்ய முடியும்....ஹா ஹா ஹா என்று ஆனந்த் பேசுகிறான். ஒலி நாடா சுழன்று முடிவடைகிறது.

ஆனந்தின் நோய் பற்றி சுமனும் இஷா பாயும் அழுகிறார்கள், சுமன் சாய்பாபாவை வேண்டுகிறாள். இஷா பாய் அல்லாவை தொழுகிறார். டிசோசா ஏசுவிடம் பிரார்த்திக்கிறாள். பணியாள் குல தெய்வத்தை பிரார்த்திக்க ஊருக்குப் போகிறான். மருந்துகளின் பணி முடிந்து விட்டது. இனி ஆனந்தை மருந்து அல்ல பிரார்த்தனையாவது காப்பாற்றுமா என ஒவ்வொரு மனிதரும் விரும்பும் நிலை உருவாகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாத பாஸ்கர் கூட கடவுளிடம் ஆனந்த் உயிரைக் கேட்டு அழுகின்றான்.

ஆனந்துக்கு வலி இல்லையா....துன்பம் இல்லையா...இருக்கிறது. தனது கவிதைப் புத்தகத்தில் வாடிய ஒரு ரோஜா மலரிதழ் ஆனந்தின் இழந்த காதலை ஒரு கட்டத்தில் ரேணுவுக்கு விளக்குகிறது. அவன் காதலிக்கு திருமணமாகி மூன்றுமாதம் 7 நாட்களாகிறது. அவன் டெல்லியிலிருந்து மும்பை வந்தும் மூன்றாண்டுகள் ஏழு நாட்களே ஆகின்றன என்பதை அறிகிறாள் ரேணு.

துன்பத்தை தனக்குள் வைத்துக் கொண்டு சந்திக்கும் மனிதர்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியையே தர விரும்பிய ஆனந்த் கடைசியில் எல்லோரையும் அழவைத்து உயிரிழக்கிறான். இந்த இறுதிக்காட்சி திரையுலக கிளைமேக்ஸ்களில் அற்புதமானது .

ஆனந்த் உயிருக்குப் போராடுகிறான். பாஸ்கர் மருந்து வாங்கி வர வெளியே போகிறான். டாக்டர் குல்கர்னி, ரேணு சுமன் ஆகியோர் ஆனந்த் அருகில் இருக்கிறார்கள். சாகும் முன்பு தான் பாஸ்கரின் கவிதையை கேட்க வேண்டும் என்று விரும்புகிறான் ஆனந்த் ......ஒலிநாடா ஓடுகிறது. பாஸ்கரின் குரலில் மரணம் ஒரு கவிதை, விளங்காத புதிர் என்ற கவிதை வரிகள் ஒலிக்கின்றன. ஆனந்த் அலறலுடன் உயிர் துறக்கிறான். பாஸ்கர் ஓடி வருகிறான். ஒலிநாடாவில் டேப் சுழல்கிறது. குரல் இல்லை( ஆனந்த் விட்ட இடைவெளி ) உன் பேச்சை நீ நிறுத்தக்கூடாது பேசு என்று கதறுகிறான் பாஸ்கர். பாபுமோசாய் என்று ஆனந்தின் குரல் டேப்ரிக்கார்டரில் பாஸ்கரை அழைக்கிறது...

பாபு மோசாய்.....பிறப்பும் இறப்பும் மனிதர்கள் கையில் இல்லை. இது ஆண்டவனின் கையில் இருக்கிறது. மனிதன் வெறும் பொம்மலாட்ட பொம்மை....அவனால் என்ன செய்ய முடியும்....ஹா..ஹா...ஹா என ஆனந்தின் குரல் ஒலிக்க ஒலிநாடா சுழன்று முடிவடைகிறது.

ஆனந்தம் அழிவற்றது. ஆனந்த் அழிவற்றவன் என்று படம் முடிகிறது.


 

 
 
 

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...