Sunday 1 July 2018

படித்தது -மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள்

மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள்

என் இளம் பருவத்தின் போது வாசித்த புத்தகங்களில் மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள், மீராவின் கனவுகள் கற்பனைகள் காகிதங்கள், சிற்பியின் ஒளிச்சிற்பம், வைரமுத்துவின் திருத்தி எழுதிய தீர்ப்புகள், இன்குலாப் கவிதைகள் போன்ற புத்தகங்களுக்கு முக்கிய இடம் உண்டு. எழுத்தின் பக்கமும் இலக்கியத்தின் பக்கமும் என்னை இழுத்ததில் இந்தப் புதுக்கவிதை புத்தகங்களுக்கு பெரிய பங்கு உண்டு. அன்றைய இளம் படைப்பாளிகளும் வாசகர்களும் இது போன்ற கவிதை நூல்களை கையில் வைத்திருப்பார்கள். அன்னம், அகரம், விஜயா பதிப்பகம், போன்ற பதிப்பகங்கள் இத்தகைய நூல்களைப் பதிப்பித்தன. 
மு.மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் வந்த புதிதிலேயே வாசித்தவர்களில் நானும் ஒருவன். 
கவிஞர் எஸ். அறிவுமணி புரசைவாக்கத்துப் பேனாக்காரன் என்றொரு கவிதைத் தொகுப்பை போட்டிருந்தார். அவர் வீட்டுக்குப் போய் பார்த்த போது அன்புடன் பழகி நட்புடன் ஒட்டிக் கொண்டார்.
அந்தக் காலத்தில் கவிதைப் புத்தகம் போட்டாலேயே பெரிய கவிஞர் என்ற பிரமிப்பும் மரியாதையும் இருந்தது. அப்படி நினைத்திருந்த அறிவுமணி இப்படி ஒரு பிள்ளை மனத்துடன் இருப்பார் எனநினைக்கவில்லை.
அறிவுமணியின் உதவியால் பலரதுநட்பு  கிடைத்தது. பேராசிரியர் பெரியார்தாசன், சூர்யராஜன்,மு.நந்தா போன்றவர்களுடன் நல்லநட்புநிலை உருவானது. ஒருமுறை பிரசிடன்சி காலேஜ் அழைத்துப் போய் கவிஞர் மு.மேத்தாவை அறிமுகப்படுத்தினார். 
மேத்தாவை அப்போது புதுக்கவிதையின் தாத்தா என எதுகைக்காக பாராட்டுவார்கள். அந்தக் கால கவிஞர்கள் போல் அவர் பேனாவுடன் போஸ் கொடுக்கும் படங்கள் அவரை பெரிய கவிஞராக சித்தரித்தன.






மேத்தா தமது கண்ணீர் பூக்களுக்கான ஒரு விமர்சன வாசக கூட்டத்தை நடத்தினார். சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் நடைபெற்ற அக்கூட்டத்தில் நானும் பங்கேற்று கண்ணீர்ப் பூக்களில் எனக்குப் பிடித்த கவிதைகளை வாசித்து கருத்துகளை முன்வைத்தேன். 
இதைத் தொடர்ந்து மாதவரம் பள்ளி ஒன்றில் நடைபெற்ற கவியரங்கில் மு.மேத்தா என்னை கவிதை பாட அழைத்தார். அதுவரை முழுதாகஒரு கவிதையைக் கூட கவிதை எனக் கூறும்படி எழுதவில்லை. மேத்தா தலைமையில் பாடப்போகிறோம் என்று ஒரு கவிதையை எழுதினேன். உருவகம் மேத்தா பாணிதான்.
எனக்கொரு அம்மா வேண்டும் என்ற அக்கவிதை தாய்க்காக ஏங்கும் ஒரு தாயில்லா பிள்ளையின் உருக்கமான குரலாக வெளிப்பட்டது.அது மேத்தாவின் உள்ளத்தைத் தொட்டது. தொடர்ந்து அறிவுமணி நடத்திய குறிஞ்சி இலக்கிய வட்டக் கூட்டத்தில் மு.மேத்தா, நா.காமராசன் , முத்துலிங்கம் போன்ற கவிஞர்கள் முன்னிலையில் கவிபாடினேன். 

இன்குலாப்புடன் நெருங்கிப் பழக ஆரம்பித்த போது மேத்தாவிடமிருந்தும் அவர் போன்ற கவிஞர்களிடமிருந்தும் விலக ஆரம்பித்தேன்.நாளையே தமிழ்நாட்டில் புரட்சி வெடிக்கப் போகிறது என்று மூளைச்சலவைக்கு ஆளானேன். கம்யூனிசப் புத்தகங்கள், தீவிரமான எழுத்துகள், ரஷ்யமொழிபெயர்ப்புகள் தவிர வேறு எதையுமே படிக்கத் தோன்றவில்லை. 

என் மனைவி கைவளையல்களை கழற்றினாள் .நீங்கள் கண்ணீர்ப்பூக்களைப் படிக்கிறீர்கள் என்று மேத்தா எழுதியிருந்தார். இன்குலாப் ஒரு கூட்டத்தில் கேட்டார் உங்கள் மனைவி அடகுவைத்த வளையல்களைத் திருப்பிக் கேட்டதால் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறீர்களா மேத்தா ....

ஒரு கவியரங்கில் மேத்தா முன்னிலையில் சிவப்புக் கவிதை படித்த போது பழனி பாரதி என்னை ஏமாற்றி விட்டார் .ஆனால் ஜெகதீஷ் சின்னத் தீக்குச்சியாக சுட்டார் என்று பாராட்டினார்,.இன்னொரு கூட்டத்தில் எங்களுக்கு மேத்தாக்களும் வைரமுத்துகளும் தேவையில்லை மார்க்சுகளும் லெனின்களும் தான் தேவை என்று அவர் முகத்துக்கு எதிரேயே படித்த போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு மேத்தா ஒதுங்கினார். கவிஞர் நந்தாவின் நாளை வேறு சூரியன் நூல் வெளியீட்டு விழாவுக்கு வருமாறு அழைக்க நான், சூர்யராஜன், நந்தா மூவரும் பிரசிடன்சி கல்லூரி போய் மு.மேத்தாவை சந்தித்த போது, அதுதான் ஜெகதீஷ் இருக்காரே நான் எதற்கு என நழுவினார்.

பலபலப் பல ஆண்டுகள் கழித்து மு.மேத்தாவை தஞ்சையில் சந்தித்தேன். சுந்தர சுகன் உயிருடன் இருந்தபோது தமது தாயாரின் நினைவாக நடத்திய கூட்டத்தில் நான் கலந்துக் கொண்ட போது மு.மேத்தாவும் வந்திருந்தார். அடையாளம் கண்டு பேசினார். வயதான தோற்றத்துடன் இருந்த மேத்தா என்னைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இப்போது நான் கம்யூனிசத்தை விட்டும் வெகு தூரம் விலகி ஓஷோவுக்கு வந்து ஓஷோவை விட்டும் வெகு தூரம் வந்துவிட்டேன். அதன் சாயையை அவர் என்முகத்திலும் பேச்சிலும் கண்டுபிடித்திருக்கக் கூடும்.

கண்ணீர்ப்  பூக்களை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் புரட்டிப் பார்க்கிறேன் சொல் அலங்காரங்கள் ,சின்ன சின்ன நுட்பங்கள் அப்படியே இருக்கின்றன .சின்ன வயசில் ருசித்து சாப்பிட்ட ஒரு பலகாரம் போல இன்றும் கண்ணீர்ப் பூக்கள் இனிக்கின்றன. ஆனால் அத்தகைய கவிதைகளில் இருந்தும் நான் வெகுதூரம் விலகி வந்துவிட்டேனே.தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி கவிதையை இப்போதும் ஒதுக்காமல் படிக்க முடியும்.அதே போல் செருப்புடன் ஒரு பேட்டியும் நல்ல வார்ப்புதான்.

இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த ஒரு நல்ல கவிதை

விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்.

அக்காலத்தில் வரதட்சணைக் கொடுமையைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை. இக்கால கவிஞர்கள் பெண் வீட்டார் சப்பையான ஒரு பெண்ணுக்குக் கூட மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இருக்கா , அரசு உத்தியோகம் இருக்கா, பேங்க் பேலன்ஸ் இருக்கா என கேட்டு செய்யும் அளப்பறைகளை எழுதினால் என்ன...

மு.மேத்தா இப்போதும் காலாவதியாகி விடவில்லை. ஆனால் அவருடைய காலத்தில் அவர் முடிசூடா மனனன்தான்.

ஆனாலும் வண்ண நிலவன் போல் மேத்தாவை நோக்கி வீசப்படும் ரோஜாக்களில் என்னுடையதும் ஒன்றாக இருக்கட்டும்  என்று கூற ஆசைப்படுகிறேன். 

2 comments:

  1. மேத்தா புதுக்கவிதை மேதாவி!

    ReplyDelete
  2. கவிஞர் மேத்தா பற்றிய உங்கள் பதிவு அவரது கவிதையொன்றை எனக்கு ஞாபகப்படுத்தியது…. அதே கண்ணீர் பூக்களில் இருந்து….நன்றி… ஜெகதீஷ் சார்… லிங் அனுப்பியுள்ளேன்...

    https://youtu.be/7gHhq3f4UgY

    ReplyDelete

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...