Thursday 30 August 2012

அறம்அழியும்காலம்

அறம் அழிந்து வரும் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். அறம் என்பதைப் பற்றி நமது குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்ந்து போதிக்கத் தவறி விட்டோம். மாரல் சயன்ஸ் என்ற வகுப்பும்  ஆங்கிலோ இந்திய பள்ளிகளின் மதப்பிரச்சார மேடையாகவே மாறிவிட்டது.
ராவணன் அடுத்தவன் மனைவியை கவர்ந்து சென்றான். இது அறத்தை மீறிய செயல். அதனால்தான் ராமன் அவனைக் கொன்றான். அறம் என்பது தனக்குரியதையும் தனக்கு உரிமை இல்லாததையும் அறிவது.
அறத்தை அறியாத சமூகத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம். சென்னை அரசு மருத்துவமனையில் குழந்தையை எலி கடித்துவிட்டு இறந்ததாக பரபரப்பான செய்திகள் வந்ததும் அவசரம் அவசரமாக எலிகளையும் நாய்களையும் மாநகராட்சி அலுவலர்கள் வேட்டையாடத் தொடங்கிவிட்டார்கள்.
எங்கள் வீட்டருகில் ஜெனரல் காலின்ஸ் ரோடு என்று ஒன்று இருக்குது. பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்ட வீதி இதுதான். இந்த வழக்கில்தான் தியாகராஜ பாகவதரும் கலைவாணரும் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர். இந்த வீதியில் நானும் ஜெயமோகனும் பல இரவுகள் கொசுக் கடியை பொருட்படுத்தாமல் பல மணி நேரம் நள்ளிரவு வரை இலக்கியம் பேசியிருக்கிறோம். அந்த பிரசித்தி பெற்ற வீதியில்தான் நான்கைந்து பள்ளிகள் இயங்குகின்றன. செங்கல்வராயன் பள்ளி, ஓக்ஸ் பள்ளி. பிரெசிடென்ட் ஸ்கூல். சற்றுத் தள்ளி செயின்ட் பால்ஸ் சுற்றி வந்தால் செயின்ட் ஜோசப், டவுட்டன் காரி, பெயின்ஸ் ஸ்கூல் என  கிட்டதட்ட 30 பள்ளிகள் சூழ்ந்த பகுதி இது. காலையிலும் பிற்பகலிலும் இங்கு மாணவ மாணவிகளை சீருடையில் அணி அணியாக பார்க்கலாம், போதாதற்கு வெட்னரி காலேஜ், ஜெயின் காலேஜ் என்றும் சில கல்லூரிகளும் இங்கு உண்டு.இந்த ஜெனரஸ் காலின்ஸ் வீதியின் முனையில் எப்போதும் குப்பைக் கொட்டிக் கிடக்கிறது. வார்டு எண் 58 என எழுதப்பட்ட குப்பைத் தொட்டிகள் நான்கைந்து காலியாக இருக்கிறது. வண்டி வண்டியாக அள்ளப்படாத குப்பைக் குவியல்கள் பள்ளி வாயிலருகே குவிக்கப்பட்டிருக்கிறது. எலிகள் ஏராளம். கிரிமினல்கள் நடமாட்டமும் அதிகம். சில ஆட்டோ டிரைவர்களும் வேன் ஓட்டுனர்களும் இளைப்பாறும் இடம். அதனாலேயே அங்கு குற்றவாளிகளும் வருகிறார்கள். மாலை இருட்டைப் பயன்படுத்தி செயின் பறிப்பு சம்பவங்களும் இங்கு அதிகமாக உண்டு. அவ்வப்போது போலீசார் நடமாட்டம் இருந்தாலும் டூவீலரில் வரும் இளசுகளை குறிவைத்து பணம் கறப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.
என் மனைவி 25 ஆயிரம் ரூபாய் பையை தொலைத்துவிட்டதும் இதே தெருவில் தான். அவளது கவனக்குறைவை பயன்படுத்தி எவனோ தட்டிச் சென்றுவிட்டான், வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் கொடுத்தால் யாரும் அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை. மீடியா என்றெல்லாம் சொல்லியும் புண்ணியமில்லை. வாழ்க காவல்துறையின் சேவை.

போலீசை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டாலே நகரம் குற்றவாளிகள் இல்லாமல் சுத்தமாகி விடும் என்று தோன்றுகிறது.

அது சரி அறம் பற்றி பேச வந்து இதையெல்லாம் ஏன் பேசுகிறேன் என்று கேட்கும் சந்தேகப் பிராணிகள் சற்றுப் பொறும். அறம் என்பதற்கு அரசு மருத்துவமனைகளின் அடித்தட்டு மக்களிடம் அர்த்தம் கேட்டுப் பாருங்கள். யார் கழுத்திலாவது செயின் இருந்தால் கழுத்துடன் அறுத்துவிட்டு வருவார்கள். கர்ப்பிணியாவது நோயாளியாவது எவன் செத்தால் என்ன எவ்வளவு புடுங்க முடியும் என்பதுதான் அவர்கள்  அறிந்த அறம்.ஏமாந்தால் பிறந்த குழந்தையை கடத்துவார்கள்.







Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...