அபத்த
வாழ்வும் தற்கொலை எண்ணமும்
( ஆல்பர்ட்
காம்யூவின் தத்துவார்த்த தர்க்கத்தை பின்தொடர்ந்து.......)
வாழ்க்கை
அபத்தமானது என்பதை சுயசிந்தனை கொண்ட மனிதன் ஒருமுறையாவது உணர்ந்திருப்பான். வாழ வேண்டுமா
இல்லையா என்ற கேள்வி ஒரு தத்துவார்த்த பிசாசாக விஸ்வரூபமெடுத்து ஹேம்லட்டை போல தன்னை
உலுக்கிக் கொண்டிருப்பதை அவன் கட்டாயம் உணர்ந்திருப்பான்.
தற்கொலை
உணர்வு மிகவும் ஆரோக்கியமான மனிதர்களுக்கும் நேரிடுகிறது. பாலியல் இன்பம், புகழ், பணம்,
ராஜபோக வாழ்வு எல்லாம் இருந்தும் நடிகைகள் தற்கொலை செய்வதைப் படிக்கிறோம்.
மனம்தான்
தற்கொலையின் விதை ரகசியமாக வளரும் மண். அது வளர்வதே நமக்குத் தெரியாது என்பது உளவியல்
நிபுணர்களின் கருத்து. திடீரென ஒருநாள் காலையில் ஒருவர் தூக்குமாட்டிக் கொள்வதோ, கடலிலோ
ரயிலிலோ பாய்ந்து உயிரை விடுவதோ அந்தக்கணத்தில் நிகழ்ந்த தீர்மானம் போல தெரிந்தாலும்
அக்கணத்திற்கான மனநிலையை அவன் பலமுறை அடைந்திருக்கிறான். தள்ளிப் போட்டும் தவிர்த்தும்
வந்திருக்கிறான்.
ஆல்பர்ட்
காம்யூ இருத்தலியலின் நவீன வாழ்க்கை சிக்கல்களை எழுதிய படைப்பாளி. தமது படைப்பு அனுபவம்,
தத்துவார்த்த தேடல் மூலம் அவர் தற்கொலையின் வேர்களை இனம் காண முயற்சிக்கிறார்.
தி மித்
ஆப் சிசிபஸ் என்ற அவரது கட்டுரை தொகுப்பு இத்தேடலில் திளைக்கிறது.
படைப்பு
மனதுக்குள் ரகசியமாக கிளர்வதைப் போலத்தான் தற்கொலை உணர்வும் முளைத்து வருகிறது என்கிறார்
காம்யூ.
சிசபஸ்
ஒரு கிரேக்க வீரன்.அவனுடைய கதை குறியீட்டுத் தன்மை கொண்டது. பெரும் பாறை ஒன்றை மலை
உச்சிக்கு உருட்டிக் கொண்டு போன அந்த பலசாலி வீரன் உச்சியை அடைந்தாலும் பாறையை அதன்
இடத்தில் பொருத்தி விட முடியாமல் தன் கரங்களால் தாங்கி சுமந்தபடி மலைமுகட்டில் நிற்கிறான்.
கையை விட்டால் பாறை அவனையும் சேர்த்து உருட்டிக் கொண்டு போய் அதலபாதாளத்தில் தள்ளி
அவனை புதைத்து விடும். எனவே வாழ்நாள் முழுவதும் உருண்டுவிடாதபடி அந்தப் பாறையைத் தாங்கிப்
பிடிக்கும் சாபத்திற்கு ஆளாகிவிட்டான். தற்கொலை செய்பவனின் மனநிலையை சிசபசுடன் பொருத்துகிறார்
காம்யூ,
வீணாகிப்
போன உழைப்பும் அவநம்பிக்கையும் எஞ்சும் சிசபசை கடவுள் கண்டித்தாராம். வாழ்க்கையை வீணடித்துவிட்டாயே
என்று மனதும் கண்டிக்கிறது.
வாழ்க்கை
பலமுறை அபத்தமாக இருக்கிறது. மனிதன் அபத்தமானவனாக இருக்கிறான். அபத்தமான இந்த வாழ்க்கையை
நுட்பமான உணர்வுடைய மனிதன் மறுக்கிறான். இயற்கையின் விதியாக இதை அவன் ஏற்கவில்லை. அப்படி
விதிக்கப்பட்டால் அதை நான் தூக்கியெறிகிறேன் என்று தற்கொலையாளனும் ஒரு கலகக்காரனாகிறான்.
காரணங்களால் நிறைந்திருக்கும் உலகில் வாழ்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருப்பினும் எனக்குப்
பிடிக்காத ஒரு வாழ்க்கையை நான் சுமக்க கட்டாயப்படுத்தப்படும்போது தற்கொலை என்பது அதிலிருந்து
விடுதலை அளிப்பதுடன் நிர்ப்பந்த வாழ்வுக்கு எதிரான கலகமாகவும் காட்சியளிப்பதாக ஆல்பர்ட்
காம்யூ விவரிக்கிறார்.
படைப்பாளிகளிடம்
தற்கொலை உணர்வும் இத்தகைய கலகத்தன்மையும் அதிகமாக காணப்படுகிறது. தஸ்தயேவஸ்கியின் டைரி
ஆப் மேட்மேன் கதையில் வரும் கிரிலோவையும் காப்காவின் குற்ற உணர்வு கிறித்துவத்தின்
அறத்திற்கு எதிராக கிளர்ந்து அவரது விசாரணை கதையில் உச்சத்தை தொட்டதையும் காம்யூ அபாரமான
வாசக ஞானத்துடன் விவரிக்கிறார்.
தற்கொலை
மட்டுமின்றி கொள்கைக்காக மதங்களுக்காக அரசியலுக்காக நிகழ்த்தப்படும் கொலைகளையும் ஆல்பர்ட்
காம்யூ மன நிர்ப்பந்தமாக காண்கிறார். அத்தகைய வெறித்தனமான செய்கைகளுக்கு சிறுவயது முதலே
கொலையாளியின் மனம் தயாராகி வருவதை அவர் குறிப்பிடுகிறார். திடீரென அது தன் வன்முறையை
ஒருநாள் கட்டவிழ்த்துவிடுகிறது.
தற்கொலை
செய்பவன் தனக்கும் தன் குடும்பத்திற்கும் தீங்கு இழைத்துக் கொள்கிறான். ஆனால் கொலையாளியோ
இச்சமூகத்திற்கே தீங்கு விளைவித்து மனித உயிர்களின் மதிப்பையே குறைத்துவிடுகிறான்.
----------------------------