Tuesday 29 September 2015

சந்திப்பு - 4 மு.ஹரிகிருஷ்ணன்





பேராசிரியரும் எழுத்தாளருமான திரு மு.ஹரிகிருஷ்ணன் பற்றி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட அனுமன் வார்ப்பும் வனப்பும் என்ற நூல் மூலம் அறிந்தேன்.
பொதுவாக சிறுவயது முதலே விஷ்ணுவின் தசாவதாரங்கள் மீது ஒரு காவிய மயக்கம் கொண்டவன் நான். அதிலும் ராமன், கிருஷ்ணன் ஆகிய இரண்டு அவதாரங்களும் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இருபெரும் காப்பியங்களுடன் தொடர்பு கொண்டவை என்பதால் இந்த பாத்திரங்கள் மனதை விட்டு அகலாதவை. அதில் ராமாயணத்தில் ராமனுக்கு தோழனாக வரும் அனுமனின் பாத்திரமும் அலாதியானது. இதுவரை உலகில் படைக்கப்பட்ட கதாபாத்திரங்களில் அனுமனைப்  போல் ஒரு பாத்திரமில்லை என்று ஹரிகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். அவரது புத்தகம் வாசிக்க வாசிக்க ஆன்மீகத்தைத் தாண்டி கம்பனின் தமிழ்ச்சுவையுடன் எனக்கு அன்பு, அறிவு, பணிவு, அடக்கம், ஞானம்,சேவை,மனத்தூய்மை உள்ளிட்ட ஏராளமான பண்புகளைக் கற்றுத் தந்தது.ஹரிகிருஷ்ணனின் தீவிர தேடலும் ஆய்வும் கம்பராமாயணத்தில் திளைத்த அவரது மேதைமையும் என்னை புத்தக வாசிப்பின்போது பல இடங்களில் அழவைத்தன. அனுமனும் லட்சுமணனும் பேசும் இடம், அனுமனும் குகனும் சந்திக்கும் இடம், அனுமனும் ராமனும் சந்திக்கும் இடம், அனுமனும் பரதனும் சந்திக்கும் இடம் என கம்பராமாயண்த்தின் காட்சிகளை அவர் விவரித்தது போல் யாரும் விவரித்ததில்லை. அத்தனை உணர்வுப்பூர்வமாகவும் இலக்கியச் சுவையுடனும் டிகேசி கூட கூறியதில்லை.
இந்தப் புத்தகத்தைப் படித்த வேகத்தில் 2011ம் ஆண்டில் குங்குமம் பத்திரிகைக்கு ஹரிகிருஷ்ணன் அவர்களைப் பேட்டியெடுக்க அனுமதி பெற்றேன். என் சொந்த செலவிலேயே பெங்களூர் சென்று அவர் வீட்டை  தேடிப்பிடித்து ஒரு மழைக்கால மாலையில் ஆட்டோவில் போய்ச்சேர்ந்தேன். சுவையான காபியுடன் உபசரித்து அவர் பேசினார். புத்தகத்தில் இருந்த கனிவு அவரது பேச்சிலும் இருந்தது.
மிகப்பெரிய மேதைமை மிகவும் அடக்கமும் அமைதியும் கொண்டிருக்கும் என்பதை அனுமனிடமிருந்து மட்டுமல்ல திரு ஹரிகிருஷ்ணனிடமிருந்தும் நான் கற்றுக் கொண்ட தருணம் அது.
சில காரணங்களால் அந்தப் பேட்டி குங்குமம் இதழில் இடம் பெறவில்லை, கதாகாலட்சேபம் மாதிரியிருக்கு என நிராகரிக்கப்பட்டது. அதை இப்பகுதியில் இணைக்கிறேன். நீங்களே படித்து விட்டு முடிவு செய்யுங்கள்.




Friday 18 September 2015

ஈழப் பெண் கவிஞர் ஔவை கவிதைகள்

ஔவை-யின்
எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை - கவிதைகள்
வெளியீடு காலச்சுவடு




வழக்கமான ஈழக்கவிதைகள் என நினைத்துப் படிக்க ஆரம்பித்தால் வேறு ஒரு தளத்தில் ஔவையின் கவிதைகள் பயணிப்பது புரிகிறது. காதல், காமம், அன்பு, பிறந்தமண் மீதான பாசம், புலம் பெயர்தலின் போது ஏற்படும் குற்ற உணர்வு போன்ற நுட்பமான பதிவுகளாலும் எளிய வரிகளாலும் ஒரு இனிய ஸ்நேகிதியைப் போல் தன் உலகிற்குள் அழைத்துச் செல்கிறார்.
உண்மையாய் இரு அதுவே காதல் என்று ஓரிடத்தில் கூறும் இவர் இன்னொரு இடத்தில் அன்பால் நிரம்பியது என் இதயம். அன்பைத் தேடு பூவாய் மலர்வேன் என்கிறார்.
நூலிழை, சொல்லாமல் போகும் புதல்வர்கள், விஜிதரன் நினைவாக, இப்பொழுதே முத்தமிடு, ராஜினி உன்னிடம் என்ன குற்றம் கண்டனர்?,வீடு திரும்பிய என் மகன், கலியாணம், தாயின் குரல், என்னுடைய சிறிய மலர், மீள் வருகை 2 ,மீதமாக உள்ள வாழ்வு போன்ற கவிதைகள் ஆழமும் நுட்பமும் கொண்டவை. வாசக அனுபவத்தை மேன்மைப்படுத்துபவை.

தமிழ் இந்து நாளிதழ் 12-09-2015 இதழில் இப்போது படித்துக் கொண்டிருப்பது பகுதியில் அவ்வையின் கவிதை பற்றி எழுதிய குறிப்பையும் படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்




Monday 7 September 2015

துணிவே துணை – பால்ய கால நினைவுகளுடன் ஒரு திரைப்படம்







துணிவே துணை என்று கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் குறிப்பிடுவதுண்டு. அவருடைய சங்கர்லால் துப்பறியும் நாவல்களைப் படித்து வளராத மேதைகள் அரிது.எனது பள்ளிப்பருவத்திலும் தமிழ்வாணனின் கதைகளும் துப்பறியும் திரைப்படங்களும் மனதுக்கு நெருக்கமாக இருந்துள்ளன.
வணிகரீதியான திரைப்படங்களைப் பற்றி சினிமா ரசனை மிக்க யாரும் பேசுவதும் எழுதுவதும் இல்லை. அது கௌரவக் குறைவு அல்லது தங்கள் அறிவுக்கு இழுக்கு போலவும் எண்ணுகின்றனர். இத்தாலிய ஜெர்மனிய படங்களைப் பற்றி பேசுவது ஒரு பேஷன் ஆகி விட்டது. எனது நண்பர் இயக்குனர் சூர்யராஜன் சத்யஜித்ரே, ட்ரூபோட், பெலினி போன்ற பெயர்கள் எல்லாம் கெட்ட வார்த்தைகள் என்று எண்பதுகளில் கூறுவார். அப்போதைய திரைப்பட உலகம் அப்படி இருந்தது. ஆனால் இன்று எல்லா உதவி இயக்குனர்களும் உலகப்படங்களைப் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். பிரபல இயக்குனர்களும் அத்தகைய உதவி இயக்குனர்களையே விரும்புகிறார்கள்.
தமிழ் சினிமாவின் நீண்ட நெடிய வரலாற்றிலிருந்து அற்புதமான வணிகப்படங்களில் பத்து படங்களைப் பற்றி கூட ரசனையுடன் பேசத்தெரியாத பல இயக்குனர்கள் தாம் இன்று வணிக ரீதியான ஒரு தமிழ்த்திரைப்படத்தை எடுத்துவிடத் துடிக்கிறார்கள்.
துணிவே துணை என்ற வணிக ரீதியான படத்தை பற்றி எழுதும் போது இந்த எண்ணங்களுடன் எழுதுகிறேன்.
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் இரட்டை வேடத்தில் நடித்த துப்பறியும் கதைதான் இது. தமிழ்வாணனின் தலைப்பை பெற்று தயாரானது. ஆனால் கதை தமிழ்வாணனுடையது அல்ல. பஞ்சு அருணாசலம் தான் கதை வசனம்,பாடல்கள் கண்ணதாசன், இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதன். ஜெய்சங்கர், தெலுங்கு நடிகை ஜெயப்பிரபா, அசோகன், விஜயகுமார், சுருளிராஜன், ராஜசுலோசனா, அபர்ணா ஆகியோர் நடித்தது. தயாரிப்பாளர் பி.வி.தொளசிராமன். இயக்குனர்.எஸ்.பி.முத்துராமன்
1976ல் இப்படம் வெளியானது. டிவிடியில் இப்போதும் பார்க்கலாம். இப்படம் வெளியான போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.மாலையில் பள்ளி விட்டதும் நண்பன் சேகர் சினிமாவுக்கு அழைப்பான். அநேகமாக நாங்கள் பார்த்த படங்களையே மீண்டும் மீண்டும் ஆறு ஏழு தடவை பார்ப்போம். ரகசிய போலீஸ் 115, ஒரு தலைராகம், மன்மத லீலை, அன்னக்கிளி போன்ற அத்தகைய படங்களின் வரிசையில் துணிவே துணையும் இடம் பெற்றது. சென்னை புவனேசுவரி திரையரங்கில் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் டிக்கட்டில் இந்தப் படத்தை நாங்கள் ஏழு தடவை பார்த்தோம். படத்தின் வசனங்கள் மனப்பாடமாகிவிட்டன. நான் ஒரு வசனம் பேச சேகர் ஒரு வசனம் பேச இருவரும் படத்தின் காட்சிகளுடன் ஒன்றி விடுவோம்.
கதை மாத நாவல் டிடெக்டிவ் கதைதான். படத்தின் ஆரம்ப காட்சியில் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொன்வயல் கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு குற்றமும் நடக்கலே. அந்த ஊர்மக்கள் காளியம்மனுக்கு பயந்து ஒழுக்கமா இருக்காங்க,
இதுபோன்ற கதைகள் ஒவ்வொரு கிராமத்திலேயும் இருக்கு
ஆனால் பொன்வயல் கிராமத்திலே சற்று அதிகமா இருக்குது. ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லைன்னு ரெண்டு தடவை சொன்னா அதுல ஏதோ இருக்குன்னுதான் அர்த்தம்…..
ரகசிய போலீஸ் அதிகாரியான விஜயகுமார் அந்த கிராமத்தில் நடைபெறும் மர்மங்களை கண்டறிய செல்கிறார். ரயிலில் ஒருமொட்டை வில்லன் ஏறுகிறான். நாங்கள் மனப்பாடம் செய்த வசனங்கள் இதோ
என்னடா ஓடுற ரயிலில் ஏறுறான்னு பார்க்கறீயா....அது எனக்கு பொழுது போக்கு…..ஆமா நீங்க எங்கே போறீங்க
பொன்வயல் கிராமத்திற்கு போய் வரலாம்னு இருக்கேன்
நல்ல ஜோக். அங்கே போனவங்க யாரும் திரும்பி வந்ததாக சரித்திரமே இல்லை. அதனால்தான் சொல்றேன் அங்கே போகாதீங்க.
இரண்டு பேரும் சண்டை போடுவார்கள் .மொட்டை தப்பி, ரயிலில் இருந்து குதித்து விடுவான். இரவுநேரம், விஜயகுமார் அந்த ஊரில் இறங்குவார். ஸ்டேசன் மாஸ்டர் அறைக்கு வருவார்.தலை நரைத்த ஒரு வயதான ஸ்டேஷன் மாஸ்டர் இருப்பார். பழைய பேன் ஒன்று கிரீச்சிட்டு ஓடிக் கொண்டிருக்கும். காகிதங்கள் படபடக்கும். அவரிடம் ஊருக்கு போக வழி கேட்பார் விஜயகுமார். அப்போது படத்தில் மொட்டை படத்துக்கு மாலை போட்டிருப்பதை பார்த்து விஜயகுமார் அதிர்ச்சியடைவார். பெயர் வைத்தி, தோற்றம் மறைவு என எழுதப்பட்டிருக்கும். சார்….இவன்…..
இவன் என் மகன் .ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டான். அவனை ரயிலில் பார்த்ததாக பலர் சொல்வாங்க என்பார். அதிர்ச்சியுடன் விஜயகுமார் வெளியே வருவார்.இன்னொரு இளமையான ஸ்டேஷன் மாஸ்டர் வருவார். அப்போ அவரு....?
இல்லையே நான்தானே ஸ்டேஷன் மாஸ்டர் வாங்க பார்க்கலாம்….
மொட்டை வைத்தியின் படம் இல்லை. பேன் ஓடவில்லை, காகிதங்கள் படபடக்கவில்லை,
அவரா...?மகன் இறந்த சோகம் தாளாமல் இந்த பேன்லேதான் தூக்கு மாட்டி செத்துப் போனார். அவர் ஆவி நடமாடுவதா சொல்றாங்க என்பார் புதிய ஸ்டேஷன் மாஸ்டர்.
குழப்பத்துடன் வெளியே வந்து ஊருக்குள் போக மாட்டு வண்டியில் ஏறுவார். வழியில் அழகான இளம் பெண்( அபர்ணா ) ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை இங்கே வந்தாள் என பாடிக் கொண்டே வெள்ளைப்புடவையில் வண்டிக்கு முன்னே போவார். வாணி ஜெயராம் குரலில் அற்புதமான பாடல் இது....
அபர்ணாவை துரத்திக் கொண்டு விஜயகுமார் ஓடுவார். ஓடி ஓடி பிடிக்க முயன்றாலும் பிடிக்க முடியாது. மெல்லிசைமன்னரின் அதிர வைக்கும் பிஜிஎம், பாபுவின் பயமூட்டும் ஒளிப்பதிவு , ஆர் விட்டலின் திறமையான படத்தொகுப்பு என பாடலை கலக்கியிருப்பார் எஸ்.பி.முத்துராமன்.
திரும்பி வந்து பார்த்தால் வண்டிக்காரன் ரத்தம் கக்கி செத்துக் கிடப்பான். மாட்டு வண்டி அச்சு முறிந்து கவிழ்ந்து கிடக்கும். அதிர்ச்சியில் விஜயகுமாருக்கு மாரடைப்பு ஏற்படும் , அங்கேயே விழுந்து உயிரைவிட்டு விடுவார்.
அடுத்து விஜயகுமாரின் தம்பியான ஜெய்சங்கர், தனது அண்ணனின் மர்ம சாவுக்கு காரணம் அறிய அவரே கேட்டு வாங்கி அந்த கிராமத்துக்கு வருவார். அவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்தான். இம்முறையும் ஓடும் ரயிலில் மொட்டை ஏறுவான்.
அவன் பேசும் முன்பு ஜெய் பேசுவார்…அடடா வாங்க சார்….ரொம்ப நேரமா பேச்சுத்துணைக்கு ஆள் கிடைக்காமல் தனியா தவிச்சுட்டிருந்தேன்.
எங்கே போறீங்க…
பொன்வயல் கிராமத்துக்கு
அங்கே…
அங்கே போகாதீங்க உயிருக்கு ஆபத்து அது இதுன்னு சொல்லப்போறீங்க இதை சொல்லுறதுக்காகவா ஓடுற ரயிலில் ரிஸ்க் எடுத்து ஏறி வந்தீங்க ,கீழே விழுந்தா மொட்டை மண்டை எகிறிடுமோன்னு பார்க்கிறேன்.அதை விடுங்க நீங்க எங்கே போறீங்க…
நான் எங்கேயும் போவேன் எங்கேயும் வருவேன்
ஓகோ வித்தவுட் டிக்கட்…டிடி வந்தா போவீங்க போனா வருவீங்க
விளையாடாதீங்க போனவாரம் என் பேச்சை கேட்காமல் ஒரு போலீஸ் ஆபிசர் போனார்…..என்ன ஆனார்…..
ஓ அப்ப அவர் சாவுல உங்களுக்கும் பங்கு இருக்கு,,,,,உண்மையை சொல்லு நீ யார்….
இதே போல் சண்டை, மொட்டை தப்பி ஓட்டம்
ஸ்டேசனிலும் அதே போன்ற காட்சிகள். ஆனால் ஜெய் அதிர்ச்சியடைய மாட்டார் அவர் பேச்சை கேட்டு ஸ்டேசன் மாஸ்டர்களும் வண்டிக்காரன் கறுப்பனும்தான் அதிர்ச்சியடைவார்கள்.
அதே அபர்ணா. அதே பாட்டு ஆனால் ஜெய்சங்கர் பயப்பட மாட்டார். துணிவே துணை.
ஊருக்குள் வரும் அவருக்கு யாரும் தண்ணீர் கூட தரமாட்டா்கள். அசோகன் அவரது உடலை அளவெடுப்பார் மாப்ளே உனக்கு ஒரு சவப்பெட்டி செய்யனும் இல்ல.....
சுருளிராஜனுக்கு மண்ணைப் பொன்னாக்கும் வித்தையை கற்றுத்தருவதாக கூறி சில உதவிகளைப் பெற்று விடுவார் ஜெய்சங்கர். கிராமத்தில் உள்ள அழகான இளம் பெண் ஜெயப்பிரபா ஜெய்சங்கரை காதலிப்பார். ஆனாலும் வில்லன் கோஷ்டிகள் ஜெய்சங்கரை இறந்துவிட்டதாக கருதி உயிருடன் புதைக்க சுருளிராஜன் காப்பாற்றுவார்.
மற்றொரு ஜெய் சவப்பெட்டியுடன் ஊருக்குள் வருவார். சற்றே வயதான தோற்றம் முரட்டுத்தனம். தனது ஜென்ம விரோதியான அந்த ஜெய்சங்கரை தேடி சவப்பெட்டியுடன் வந்ததாக கூறுவார். புதைத்த இடத்தில் பிணம் இல்லை என்பதால் ஜெய் உயிருடன் இருப்பதாக நம்புவார்கள் வில்லன் கோஷ்டியினர்
இரண்டு ஜெய்சங்கர்களும் நேருக்கு நேர் மோதும் காட்சி வரும்.
அந்த ரவுடி ஜெய்சங்கரும் ஹீரோ ஜெய்சங்கரும் பாட்டு பாடுவார்கள்
அச்சம் என்னை நெருங்காது, யாரைக்கண்டும் மயங்காது
 I WILL MEET YOUR CHALLENGE
இந்தப்பாடலை டி.எம்.எஸ் உடன் எஸ்.பி.பியும் பாடியிருப்பார். நாளை நமதே போன்ற சில படங்களில் டி.எம்.எஸ். உடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய அழகான பாடல்களில் இந்தப்பாடலும் ஒன்று, கண்ணதாசன் வரிகளும் பாடலை ரசிக்க வைக்கின்றன.
ஒருவழியாக ஹீரோ ஜெய் சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்படுவார். புதைத்தால் மாயாஜாலம் தெரிந்த ஜெய் உயிருடன் வந்துவிடுவார் என சவப்பெட்டியுடன் எரித்துவிடுவார்கள். அதற்கு முன்பு வில்லன் ஜெய் சாமர்த்தியமாக சவப்பெட்டியை மாற்றிவிடுவார். பார்த்தால் வில்லன் ஜெய் ஒரு போலீஸ் அதிகாரி. ஜெய் போல் முக கவசம் அணிந்து வந்திருப்பார். அவர் விடைபெற அவர் வேடத்தில் எதிரிகளின் கோட்டையில் அடியெடுத்து வைப்பார் ஹீரோ ஜெய்
வில்லி ராஜசுலோசனா. கொள்ளைக் கூட்டத்தின் தலைவி.படையப்பா நீலாம்பரிக்கு அவர் தான் அக்கா. ஜெய்சங்கர் மீது ஆசைப்பட்டு மயங்குவார். ஜெய் அவரின் கள்ளக்கடத்தல்களையும் அதை மறைக்க பேய் பிசாசு, காளியம்மன் கோபம் என நாடகம் நடத்தப்படுவதையும் கண்டுபிடிப்பார்.
கிளைமாக்ஸ் காட்சியில் ஹெலிகாப்டர் சண்டை எல்லாம் உண்டு. இறுதிக்காட்சிகளில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பின்னணி இசையில் ஒரு காவியமே படைத்திருப்பார்.
சாதாரண வணிக ரீதியான படம்தான். ஆனால் பதின் பருவங்களில் இந்தப் படம் ஒரு அற்புதம். தமிழ்த்திரையுலகம் பார்த்தறியாத அழகான நாயகியர் ஜெயப்பிரபாவும் அபர்ணாவும்
ஜெயப்பிரபா ஜெகன்மோகினி படத்தில் ஜெயமாலினியால் ஆட்டிப்படைக்கப்படும் நரசிம்ம ராஜூவின் மனைவியாக நடித்தவர்.
தமிழில் பெண் ஜென்மம் போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். முகத்தின் கீழ் ஒரு மச்சம் அழகோ அழகு.
முதலிரவு காட்சியில் முந்தானையை நழுவ விட்டு ஜெயப்பிரபா ஜெய்சங்கருடன் சரசம் ஆடும் காட்சி எங்கள் இரவுகளை அலைக்கழித்திருக்கிறது.
அதே போல் அபர்ணாவும் அபாரமான அழகி. எஸ்.பி.முத்துராமனின் ஆடு புலி ஆட்டம் போன்ற படங்களில் அபர்ணாவை ரசிகர்கள் பார்த்து மெய் மறந்திருக்கலாம். நான் வாழ வைப்பேன் படத்தில் ரஜினியுடன் ஆகாயம் மேலே பாதாளம் கீழே பாட்டுக்கு அரைகுறை ஆடைகளில் ஆட்டம் போட்டிருப்பார்.
அபர்ணாவுக்காகவும் இந்தப்படத்தை நாங்கள் விரும்பி பார்த்தோம்.ராஜசுலோசனா மாளிகையில் ஜெய்சங்கருக்கும் ஜெயபிரபாவுக்கும் கல்யாணம் நடக்கும்போது அபர்ணா ஒரு கேபரே ஆடுவார்.எல்,ஆர்.ஈஸ்வரி குரலில் கிக்கான பாட்டு
சினிமா பார்க்கும் அனுபம் என்பது இத்தகையது. ஒரு ரூபாய் டிக்கட், இரு அழகான நாயகியர். விரும்பி பார்க்க கூடிய நடிகர்கள், இசை நடனம் சண்டை பாடல்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மனதை அலைக்கழிக்காத கதையமைப்பு என வணிக ரீதியான படங்களின் வெற்றிகளுக்கு காரணமாக உள்ள அம்சங்கள் இன்றைய திரைப்படங்களில் குறைந்து விட்டன.
எனவேதான் இந்தப் படமும் 39 ஆண்டுகளுக்கு முன்பு வணிகரீதியான படமாக இருந்து இன்று என்னைப் போன்ற, சேகரைப் போன்ற நடுத்தர வயதினருக்கு ஒரு பால்ய கால சகியைப் போல மறக்கமுடியாத பதிவாகி விட்டிருக்கிறது.
துணிவே துணையை கட்டாயம் ஒருமுறை பார்க்க பரிந்துரை செய்யலாம். இப்போதும் அதன் அழகான அம்சங்கள் அப்படியே இருக்கின்றன.
இந்தப் படத்திற்கு தீவிர சினிமா காதலர்களும் இலக்கியவாதிகளும் மட்டமான விமர்சனம் எழுதுவார்கள் அல்லது புறக்கணிப்பார்கள்.
தமிழ்வாணன், சுஜாதா, சாண்டில்யன், போன்ற எழுத்தாளர்கள் , துணிவே துணை போன்ற திரைப்படங்கள் எனக்கு உரமிட்டு அஸ்திவாரமிட்டு எனது வாசக அனுபவத்தையும் திரைப்பட அனுபவத்தையும் தொட்டிலிட்டு தாலாட்டியதை மறந்துவிட முடியாது.
நேற்று போல் இன்று இல்லை….அதற்காக நேற்று இல்லாமலும் இன்று இல்லைதானே

Tuesday 1 September 2015

உலக சினிமா - கிளியோபாட்ரா - அழகின் அரசியல்


குமுதம் தீராநதி - செப்டம்பர் 2015 இதழில் பிரசுரமானது







ஒரு ஊர்ல ஒரு அழகி. அவள் அழகால் இரண்டு நாடுகள் போரிட்டன. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அரசியலில் தனது அழகை வைத்து தலைவர்களை மயக்கி அவள் அதிகாரம் செலுத்தினாள்.இறுதியாக அவள்  பகைவர்களால் சிறையில் அடைக்கப்பட்டாள்.
இது  எகிப்து ராணியான கிளியோபாட்ராவின் கதை.கிளியோபாட்ரா 18 வயதில் எகிப்துக்கு ராணியாக முடிசூட்டப்பட்டாள். அந்தக்காலத்து எகிப்திய மரபின்படி தனது தம்பியை மணமுடித்து ஆட்சி செய்தாள். எகிப்தை எதிரிகளிடமிருந்து காக்க அவள் அண்டை நாடான கிரேக்க சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசரை காதல் வலையில் வீழ்த்தினாள். சீசர் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டதும் உற்ற நண்பனான புரூட்டசே கோடாரியால் வெட்டி சாய்த்ததும் எகிப்து திரும்பிய கிளியோபாட்ரா மீண்டும் பதவியைக் கைப்பற்றிய சீசரின் ஆதரவாளர் மார்க் ஆன்டனியை காதலிக்க தொடங்கினாள். மார்க் ஆன்டனிக்கு எதிராக சீசரின் மகன் ஆகஸ்டஸ் சீசஸ் படையெடுத்து வர போரில் தோல்வி அடைந்த ஆன்டனி தன் காதல் தேவதையின் மடியில் தற்கொலை செய்து உயிர்த்துறக்கிறான். சிறைக்கைதியாக வாழ விரும்பாத எகிப்து ராணி கொடிய நாகப்பாம்பை கடிக்க வைத்து அதன் விஷம் பாரித்த நிலையில் உயிர்துறந்தாள்.
இது சரித்திரம் சொல்லும் கதை. இதை சினிமாவாக கற்பனை செய்துபாருங்கள். இத்தனை பிரம்மாண்டமான கேன்வாசில் கதையை திரையில் சொல்ல முடியும். முடிந்திருக்கிறது.1963 ஆம் ஆண்டில் வெளியான கிளியோபாட்ரா திரைப்படம் சிறிதும் சமரசமின்றி கண்முன்னே இருநாடுகளின் வரலாற்றையும் அழகின் அரசியலையும் அழகால் அழிந்த சக்கரவர்த்திகளையும் 70 எம்.எம். பெரிய திரையில் கண்முன்னே கொண்டு வந்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஜோசப் மான்க்ரிவைஸ். இப்படத்திற்காக பெரும் பொருட்செலவில் போடப்பட்ட பிரம்மாண்டமான செட்டுகளை மீண்டும் போட வேண்டிய நிலையில் இந்தப் படத்தி்ன் செலவை சமாளிக்க முடியாமல் புகழ்ப்பெற்ற படநிறுவனமான டிவென்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் கிட்டதட்ட திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இன்றைய கணக்கில் கூறுவதானால் 125 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதுடன் விமர்சன ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் பின்னர் இப்படத்தின் முக்கியத்துவத்தை உலகம் உணரத் தொடங்கி விட்டது. ஒரு திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை பாடமாக திரையுலக மாணவர்களுக்கு கூற வேண்டுமானால் இந்தப் படத்தை விட சிறந்த உதாரணம் வேறில்லை என்று படத்தின் இயக்குனர் ஜோ ஒரு முறை குறிப்பிட்டார்.
4 அகடமி விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை இப்படம் தட்டிச் சென்றது.
இதில் கிளியோபாட்ராவாக நடித்தவர் உலகப் பேரழகியான பிரிட்டன் நடிகை எலிசபெத் டெய்லர். மார்க் ஆன்டனியாக நடித்த ரிச்சர்ட் பர்ட்டனையே அவர் படப்பிடிப்பின் போது காதலிக்கத் தொடங்கிவிட்டார். இதனால் பத்திரிகைகளுக்கு சரியான கிசுகிசுக்கள் கிடைத்தன. ரிச்சர் பர்ட்டன் உட்பட 7 பேரை மணமுடித்து விவாகரத்தும் செய்தார் எலிசபெத் என்பது தனிக்கதை.நிஜவாழ்விலும் அவர் ஒரு கிளியோபாட்ராதான்.
எலிசபெத்தின் கால்கள் குட்டையானவை உடலுக்குப் பொருந்தாதவை. அவள் தலையும் குண்டானது.ஆனால் அந்தக் கண்கள் ஒரு சிறைக்கைதியின் கனவுகளைத் தூண்டக் கூடியவை.ஒரு உதவியாளனின் சுய கற்பனையைப் போன்றது.உண்மையில்லாதது,அடைய முடியாதது.மிகுந்த வெட்கத்துடன் மனிதத்தின் துடிதுடிப்புடன் எப்போதும் யாரையும் ஒரு சந்தேகப் பார்வையுடன் பார்க்க கூடியது என்று எலிசபெத்தை அறிஞர்கள் புகழ்கிறார்கள்.
படத்தில் அரசர்களை காதலித்த அவர் நிஜவாழ்வில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரோனால்ட் ரீகனுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
சிறுவயதிலிருந்தே திரைப்படங்களை மெய்மறந்து ரசித்தவர் எலிசபெத் டெய்லர். இதைப்பற்றி அவரே நினைவு கூர்ந்துள்ளார்.சிறுவயதில் சுருண்ட முடியுடன் திரையில் தோன்றிய தன் அழகை தானே பலமுறை ரசித்துக் கொண்டிருந்தாராம்.
மீன்துண்டுகளை வாயில் போட்டு விழுங்குவதைப் போல் ஆண்களை மயக்கி தன்னுள் விழுங்கியவர் எலிசபெத் டெய்லர் என்று மற்றொரு ஆய்வாளர் கூறுகிறார்.காலையில் உண்ட உணவை பிற்பகலில் துப்பிவிடுவதைப் போல் தாம் வரித்துக் கொண்ட ஆண்களை நிராகரிப்பதிலும் தயக்கமே  இல்லாதவர் என்றும் கூறப்படுகிறது.எளிதில் காதல் வசப்படக்கூடியவராக இருப்பினும் அவர் ஏமாளியாக இல்லை. கிளியோபாட்ராவின் படப்பிடிப்பில் இரண்டு மிகப்பெரிய நடிகர்களும் எலிசபெத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவாத புகார் அளித்தனர். ஆனால் ரிச்சர்ட் பர்ட்டன் மெல்ல மெல்ல எலிசபெத்தின் வலையில் விழுந்தார். படப்பிடிப்பு நடைபெற்ற மூன்று மாதங்களுக்குள் அவர்களின் நெருக்கம் படுக்கை வரை சென்றது.
கிளியோபாட்ரா 11 மொழிகள் பேசுவார். கலைகளில் நாட்டமுடையவர். மிகப்பெரிய அறிவுக்கூர்மை கொண்ட பெண். துணிச்சல்காரி. தன்அழகை விடபெரிய அதிகாரம் உலகில் இருக்க முடியாது என்ற துணிபு கொண்டவள். இதே குணாதிசயத்துடன் இருந்த எலிசபெத் டெய்லர் இந்தப் பாத்திரத்திற்கு அபாரமாக பொருந்திப் போனார்.
கிளியோபாட்ராவாக 65 முறை படத்தில் ஆடை மாற்றிய அழகி எலிசபெத் டெய்லர். மார்பின் பிளவு தெரியும் லோகட் கவுன்களில் அவர் மார்க் ஆன்டனியாக நடித்த ரிச்சர்ட் பர்ட்டனுடனும் சீசராக நடித்த ரெக்ஸ் ஹாரிசன் ஆகியோருடன் முத்தக் காட்சிகளில் நெருங்கி நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பூட்டினார்.
படத்தில் அவர் கிரேக்க தலைநகர் ரோமுக்கு வரும் காட்சி ஒன்று உள்ளது. சீசரை மயக்க ஒரு பாயில் சுருட்டி விடப்படும் எலிசபெத் டெய்லர், சீசரின் முன் உருண்டு புரண்டு அவரை மயக்கி நம்மையும் மயக்கி சீசரை மணமுடித்துவிடுவார். அதன்பின் சீசர் அவரை அதிகாரப்பூர்வ அரசியாக அறிவித்து ரோமுக்கு அழைத்து வருவார். எகிப்து ராணி தங்கள் அரசியாக வருவதை விரும்பாத ரோமானியர்கள் அரசியை வரவேற்க திரண்டுள்ள பிரம்மாண்டமான காட்சி படத்தின் முக்கியமான காட்சியாகும். கிளியோபாட்ராவை வி்ரும்பாத ரோமானிய மக்களும் அவள் பேரழகால் வசப்பட்டு உடனடியாக அவரை தங்கள் ராணியாக வரவேற்கும் காட்சி அழகு என்ற ஆயுதம் அரசியலில் எத்தகையது என்பதை உணர்த்துகிறது.
ஷேக்ஸ்பியரின் அந்தோணி கிளியோபாட்ரா நாடகத்தின் தன்மையுடன் சீசர் கொல்லப்படும் காட்சியும் இடம் பெறுகிறது. தமிழில் சிவாஜிகணேசன் சொர்க்கம் படத்தில் சீசராக நடித்து யூ டூ புரூட்டஸ் என வசனம் பேசி கைத்தட்டல் பெற்றார். ப்ரியா படத்தில் ரஜினிகாந்தும் சிவாஜியின் நடிப்பை பின்பற்றி சீசராக நடித்திருந்தார் .படத்தின் திரைக்கதைக்கு இந்தக் காட்சிகள் எந்தவகையிலும் பொருந்தவில்லை என்பதை இப்போதைக்கு விட்டு விடலாம்.
ஷேக்ஸ்பியரின் JULIUS CESAR ஒரு துன்பவியல் நாடகம். சீசருக்கு அரசு வட்டாரத்தில் எதிர்ப்பு வலுத்து அவரைக் கொல்ல அவரது படைத்தளபதிகள் திட்டமிடுவார்கள். சீசர் ஒரு அழகியின் காலடியில் மயங்கிக் கிடப்பதை சிறிதும் விரும்பாத அவர் மகன் அகஸ்டஸ் சீசர் தனது தந்தையைக் கொன்று அதிகாரத்தைக் கைப்பற்ற துடிக்கிறார். சீசரின் மிக நம்பிக்கைக்குரிய தளபதியும் நண்பனுமான புரூட்டஸ் இதற்கு பகடையாகப் பயன்படுத்தப்படுகிறான். சீசரை அனைவரும் வாளால் குத்தி சாய்க்கும் போது புரூட்டசிடம் காப்பாற்றுமாறு சீசர் கெஞ்சும் போது புரூட்டசும் மறைத்து வைத்திருந்த கோடாரியால் சீசரை வெட்டி சாய்க்கிறான்.
மிக நெருங்கிய நண்பன்தான் மிகப்பெரிய துரோகியாக மாறுவான் என்பது சரித்திரம் சொல்லும் சான்று
யூ டூ புரூட்டஸ் என்ற சீசரின் அந்த வசனம் காவிய அந்தஸ்து பெற்றது.
துரோகத்தின் வலிகளை உணரும் போதெல்லாம் நாமும் நம்முடன் பழகிய புரூட்டஸ்களை நினைத்துக் கொள்கிறோம்.
சீசரைக் கொன்றுவிட்ட நிலையில், மக்களிடம் அதைப்பற்றி உரை நிகழ்த்தும் புரூட்டஸ் சீசர் அழகியின் பிடியில் சிக்கி நாட்டை சீரழித்து விட்டதாகவும் அவரைக் கொன்றால்தான் நாட்டை காக்க முடியும் என்றும் கூறி மக்களின் மனங்களை மாற்றி விடுவார்.
அப்போது சீசரை கொன்றது துரோகிகள் என மக்களிடம் வாதாடுவார் மார்க் ஆன்டனி. துரோகிகளின் பேச்சை நம்பாதீர்கள் எனக்கூறி ஏழைகள் கண்ணீர் சிந்தும் போதெல்லாம் சீசரும் கண்ணீர் சிந்தியதை தாம் உடனிருந்து பார்த்ததை விளக்கி மக்களை நெகிழச் செய்வார் ஆன்டனி. சீசருக்காக கண்ணீர் சிந்துங்கள் என மக்களிடம் அவர் எழுச்சி உரையை நிகழ்த்துவார். மக்களும் ஆன்டனியின் பேச்சை ஏற்று புரூட்டசை நிராகரித்துவிடுவார்கள்.
ஷேக்ஸ்பியரின் இந்த வரலாற்று நாடகத்தை உணர்ச்சிப் பிரவாகமாக படத்தில் காட்டவில்லை என்றாலும் இப்படம் புரூட்டஸ் பற்றியோ ஆன்டனி பற்றியோ சீசரைப் பற்றியோ அல்ல, கிளியோபாட்ராவை பற்றியது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அரசு ஆட்சியை கைப்பற்ற தன்னை மரபின்படி மணந்த தம்பியை கொன்றவள் கிளியோபாட்ரா, உடன்பிறந்த சகோதரியையும் தாயையும் கொன்றார். வாரிசுகள் யாருமில்லாத நிலையை உருவாக்கி தன்னை தனிப்பெரும் அரசியாக ஆக்கிக் கொண்டாள். சீசரை மயக்கி ரோமாபுரி ராணியானாள். பின்னர் ஆன்டனியை மணந்து அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டாள். ஆனால்  அழகின் அதிகாரம் நீண்ட ஆயுள் கொண்டதல்ல. மார்க் ஆன்டனி அவள் மீதுள்ள காதலால் தற்கொலை செய்துக் கொள்ள சிறையில் அடைக்கப்படும் கிளியோபாட்ராவும் நாகப்பாம்பின் விஷத்தால் உயிரிழக்கிறாள்.
அவள் நாகப்பாம்பு கடித்து சாகவில்லை. பாம்பு கடித்தால் உடலில் நீலம் பாரித்து உடல் உப்பி விடும் என்பதால் தன் அழகு குலைந்த நிலையில் சாக கிளியோபாட்ரா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
எகிப்தின் பாரம்பரிய தாவரங்கள் பற்றி அபார அறிவு பெற்றிருந்த கிளியோபாட்ரா மிகவும் கொடிய விஷச் செடிகளை வரவழைத்து அதை அரைத்து தன் அழகு குலையாமல் உயிர் இழந்தார் என்றும் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடைசி வரை ராணியாகவே வாழ விரும்பி, உலகையே தனது அழகால் ஆட்டிப் படைக்க முயன்ற ஒரு பேரசி கைதியாக வாழ விரும்பாத கதைதான் கிளியோபாட்ராவின் கதையும்.அதையொட்டிய திரைப்படமும் வரலாற்று குறிப்புகளை மீறாமல் மிகுந்த நேர்த்தியாக எடுக்கப்பட்டது.இது என்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் பரவசமூட்டும் அனுபவம்தான்.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...