அண்மையில் பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் தமது மகன் அஜிதன் தம்மைப் போலவே சிந்திப்பதாகவும், பல நேரங்களில் அஜிதன் பேசும்போது தமது குரலையே கேட்பது போலவும் எழுதியிருக்கிறார்,
எனக்கென்று பிள்ளை இல்லாத குறையைத் தீர்க்க வந்தவன் விக்கி. அவனை நான்தான் தாய் தகப்பனுக்கு மேலாக வளர்த்திருக்கிறேன். ஆனால் அவன் என்னைப் போல வளரவில்லை என்பதுதான் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. எனது தரித்திரம் என்னோடு தொலையட்டும். கோடீசுவரர்களும் புகழ் மிக்கவர்களும் தமது குழந்தை தம்மைப் போல இருக்க ஆசைப்படட்டும்.அத்தகுதி எனக்கு சிறிதும் இல்லை.
விக்கி விஜய் ரசிகன். எனக்கோ கமல் ரஜினிக்குப் பிறகு எந்த ஹீரோவுடனும் மனம் ஒட்டவில்லை. கார்த்திக் கொஞ்சம் பிடிக்கிற மாதிரி வந்து காணாமல் போனார். பிரபுவின் துள்ளல் பிடிக்கும். அப்புறம் அஜித்தின் சிரிப்பு பிடிக்கும். விஜய் நடித்த சில படங்களும் பிடிக்கும் என்றாலும் ஒரு ஹீரோ வர்ஷிப் அளவுக்கு யாரையும் நிறுத்தவில்லை. எம்.ஜி.ஆர். சிவாஜி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், முத்துராமன், கமல், ரஜினி அவ்வளவுதான் எனக்குப் பிடித்தவர்கள்.
ஆனால் விக்கியின் உலகம் புதிது. அவனுக்கு சைக்கிளில் விஜய் படம் ஒட்ட வேண்டும். கணினியில் அத்தனை விஜய் ஸ்டில்களையும் டவுன்லோடு பண்ண வேண்டும். விஜய் பிறந்த நாளில் அவனே கணினியில் டிசைன் செய்த போஸ்டரை பத்து இருபது பிரிண்ட் அவுட் எடுத்து தெரு முழுக்க வீடு வீடாக அவனே போய் ஒட்ட வேண்டும். வாழ்நாளில் ஒருமுறையாவது விஜய்யை சந்தித்து கைக்குலுக்கி போட்டோ எடுக்க வேண்டும். இதற்கு உதவாத என்னை காறித்துப்புகிறான். சீ....நீயெல்லாம் எழுத்தாளரா....மீடியாவில் இருக்கியா என்று கேட்கிறான். இவனுக்காகவாவது நா.முத்துக்குமாரிடம் மானம் மரியாதையை விட்டு தலைவா ஆடியோ ரிலீசுக்கு ஓசி பாஸ் கேட்கலாமா என பல முறை யோசித்து வழக்கம் போல கைவிட்டு விட்டேன். நா. முத்துக்குமாரை கடுமையாக நான் விமர்சித்தாலும் அதை துடைத்துப் போட்டுவிட்டு அவர் எங்கேயோ அடைய முடியாத உயரத்துக்குப் போய்விட்டார். எந்த முகத்தை வைத்து அவரிடம் பேசுவது?
எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்......தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான் என்று பாடிய வாலியையும் எம்ஜியாரையும் நினைத்து சிரித்துக் கொள்கிறேன்.
எனக்குப் பிறக்காததாலோ என்னவோ விக்கி என்னைப் போல் இல்லை.
அவனை என் உலகமான இலக்கியத்திற்குள் கைப்பிடித்து கூட்டி வர முயற்சி செய்தேன், பல முறை சென்னை புத்தகக் கண்காட்சிகளுக்கு அழைத்துச் சென்றேன். ஒரு புத்தகம் கூட அவன் ஒருமுறை கூட வாங்கவில்லை. கலர் பென்சில், டிராயிங் கிட், கேம்ஸ் டிவிடி பாப்கார்ன், ஜூஸ், ஐஸ்கிரீம், பிட்சா சாப்பிட்டதுடன் அவன் புத்தகக் காட்சி அனுபவம் தீர்ந்துவிடும்.
இதுவரை அவன் ஒரு புத்தகம் கூட வாசித்ததில்லை, பள்ளியிலேயே ஒழுங்காகப் படிக்கவில்லை.
எனக்குப் பிடித்த சில விஷயங்கள் விக்கிக்குப் பிடிக்கும். நான் ஆணையிட்டால் பாட்டையும் முகமது ரபி பாடிய ஒரு பாட்டையும் மன்னாடே பாடிய ஒரு பாட்டையும் அடிக்கடி கேட்பான். எல்லா பாடல்களிலும் முக்கியமான ஒற்றுமை அதில் குழந்தைகள் நடித்திருப்பதுதான்.
என்னைப் போல அவனும் உணவில் ருசி கண்டவன். அவன் சாப்பிடாத ஓட்டல் சென்னையில் இல்லை. எங்கே எந்தப் பண்டம் ருசியாயிருக்கும் என்று என்னை மாதிரியே கரெக்டாக சொல்லி விடுவான்.
புத்தியுள்ள மனிதன் எல்லாம் வெற்றி பெற்றதில்லை வெற்றி பெற்ற மனிதன் எல்லாம் புத்திசாலி இல்லை என்றால் முதல் வரி எனக்கும் அடுத்த வரி விக்கிக்கும் பொருந்தட்டும். அவன் என்னைப் போல இடியட்டான புத்திசாலியாக இருப்பதைவிட நார்மலான வெற்றியாளனாக வாழட்டும்.
வாழ்க்கையை விட பெரிது என்னதான் இருக்கு....முத்துக்குமாரும் ஜெயமோகனும் அடைந்த வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கலாம். அதுதான் எனது தோல்விக்கும் காரணம் என்று விக்கி என்றைக்காவது உணர்வான். அது போதும் எனக்கு.