தி சந்தானம் எழுதிய நீ மற்றும் நான் -கவிதைகள்
இன்று வீட்டில் இருந்த பழைய புத்தகங்களை சுத்தம் செய்து அடுக்கும் போது ஒரு சிறிய கவிதைப் புத்தகம் மயிலிறகு போல் என் மடியில் வந்து விழுந்தது. அதுதான் இந்த கவிதைப் புத்தகம். அகரம் பதிப்பகம் 1993ல் வெளியிட்டது. அப்போதைய விலை ரூ 12.
எண்பதுகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறுபத்திரிகை மற்றும் பெரிய பத்திரிகைகளில் கவிதை எழுதியவர் சந்தானம் என்று தெரிகிறது.இப்போது அவர் கவிதை எழுதுகிறாரா என்ன செய்கிறார், எங்கே இருக்கிறார் ,அவர் யார், முகம் எப்படி எதுவும் எனக்குத் தெரியாது.
கவிதைகளும் அப்துல் ரகுமான்,மீரா, சிற்பி, புவியரசு,மு.மேத்தா பாணிதான். ஆனாலும் இந்த நூலை குறிப்பிடக் காரணம் முன்னே சொன்னது போல் அது ஒரு மயிலிறகு மாதிரிதான்.
அக்காலக் கட்டத்தில் ஒரு பெண்ணின் மடியில் தலைவைத்து என் கண்ணீரை எல்லாம் கொட்டுவதற்காக நான் உருகி, தற்கொலையைத் தவிர எதையும் நினைக்காத நாளில்லை.அத்தருணத்தில் என்னை சிரிக்கவைப்பதாக சத்தியம் செய்த தோழி ஒருத்தி பிரிவதற்கு சில நாட்களுக்கு முன் தந்த புத்தகம் அது. அவளுக்குத் திருப்பித் தர மறந்துவிட்டேன்.
புத்தகத்தில் உள்ள ஆல்பர்ட ் காம்யூவின் மேற்கோளைத்தான் அவள் தன் பிரிவுக்கான காரணமாக பச்சை மையில் அடிக்கோடிட்டு தந்தாள்.
ஆல்பர்ட் காம்யூ மேற்கோள் ஆங்கிலத்தில் இருந்ததை தமிழில் தருகிறேன்
என்னை வழிநடத்தாதே என்னால் பின்தொடர இயலாது
என்னைப் பின்தொடராதே வழிநடத்தவும் என்னால் ஆகாது
என் கூட வா. என் நண்பனாக இரு.
இதற்காகத்தான் இந்தப் புத்தகம் மிகவும் பழம்பெரும் பொக்கிஷம்
போல் என்னிடம் உள்ளது.
தி.சந்தானத்தின் கவிதைகள் குறித்து கவிஞர் மீரா எழுதிய முன்னுரையில் இருந்து சில வரிகளே இந்நூலுக்கான விமர்சனமாக கொள்ளலாம்.
முன்னுரையில் -கவிஞர் மீரா
நிராகரிப்பின் சின்ன சின்ன விசும்பல்கள் என்னுள்ளே என்னுள்ளே....
இந்த கவிதைதான் இப்போது என்னுள்ளே என்னுள்ளே...
No comments:
Post a Comment