Thursday 31 May 2012

காமத்துப் பால்

காமம் பொங்கி வழியும் முகங்களும் கண்களும் மூடி மறைக்கும் மனங்களும் நித்தம் காணும் காட்சிகளாகி விட்டன.நடிகைகளின் வாளிப்பான உடல்களும் இணையத்தில் கிடைக்கும் நிர்வாணமும் நம்மை அலைக்கழிக்கின்றன. சுடியும் ஜீன்சும் டைட்சும் அணிந்து நடமாடும் பெண்களால் நமது இருப்பு குலைந்து விடுகிறது. புடவை கட்டியவர்களும் இடுப்பின் இறக்கத்தையும் புட்டத்து மேடுகளையும் கண்ணில் படச் செய்து மார்பின் திரட்சியால் மதிமயக்குகின்றனர். எங்கு நோக்கினும் காமமே தெரிகிறது நமக்கு. பள்ளிக்குச் செல்லும் சிறுமி முதல் அலுவலகம் செல்லும் பெண் மட்டுமின்றி பிள்ளைகள் பெற்ற தாய்மார்களும் தப்பவில்லை இந்த காமத்தின் கணையிலிருந்து. பெண்ணின் விரலைத் தொட்டுப் பார்க்கவே பல வித்தைகள் செய்கின்றனர் பயலுகள். கைக்குலுக்கவும் கையுடன் கையை இறுக்கிக் கோர்த்து பலப்பரீட்சை செய்யவும் அழைப்புகள் ஏராளமாக ஆண்களின் தரப்பில் நீளுகின்றன. பெண்களும் கூச்சமில்லாமல் தொட்டுப் பழகுகின்றனர். தி.நகரிலும் புரசைவாக்கத்திலும் வரிசையாக அமர்ந்திருக்கும் இளைஞர்களிடம் மருதாணி பூச பெண்கள் கை நீட்ட அவள் கையை தன் தொடை மேல் வைத்து மெல்ல நீவி விட்டவாறே மருதாணி பூசும் அந்த இளைஞனின் மனநிலை என்னவாக இருக்கும் என்றே யோசிக்கிறேன். வருமானமில்லாமல் திருமணமில்லை என்ற நிலை ஆண்களுக்கு வரதட்சணை இல்லாமல் வரன் இல்லை என்ற நிலை பெண்களுக்கு. திருமணம் இல்லாமல் பாலியல் உறவு இல்லை என்பது சமூகம்.

மணமாகி சேர்ந்து வாழும் பலரும் சேர்ந்து படுப்பதில்லை. தாலியின் எல்லையைத் தாண்டி முறை தவறினால் அது சட்டத்திலும் தப்பு என தண்டிக்கப்படும்.

பின் என்ன தான் செய்வான் ஆண் என்னதான் செய்வாள் பெண்........பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது, மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது என்று எம்ஜிஆர் பாடி வைத்தார்.

பெண்ணின் உடல் ஆணின் இலக்கு ஆகி விட்டது. ஆணிடமிருந்து கிடைக்க கூடிய அன்பை விட அவனால் கிடைக்க கூடிய வசதியான வாழ்க்கையும் ஆடம்பரமும்தான் பல பெண்களின் இலக்காகி விட்டது. இதனால் கொலைவெறிகள் அதிகமாகி விட்டன.


நண்பர்களே இப்பகுதி காமத்துக்காக எனது அர்ப்பணிப்பு.

காமம் தொடர்பான கட்டுரைகள், ஓஷோவின் எண்ணங்கள், காமத்தைத் தூண்டும் சமூகத்தின் மீதான விமர்சனம், பாலியல் குற்றச்சாட்டுகளின் அசல் முகங்கள், திரைப்படங்களில் காட்சி ரீதியாக கிடைக்க கூடிய பாலியல் பிம்பங்கள், காமத்தில் ரசிக்க கூடிய விஷயங்கள், குற்றங்களை உருவாக்கும் கள்ளத் தொடர்புகள் என எதை வேண்டுமானாலும் பேசலாம். நிறைய இருக்கு பகிர்ந்துக் கொள்ள. பொறுத்திருங்கள்.

Monday 28 May 2012

மகாகவி இக்பாலின் கவிதை

சினாயில் பூத்த லில்லி மலர்
- மகாகவி இக்பால் 


தமிழாக்கம்- செந்தூரம் ஜெகதீஷ்


அவன் கருணையாலும் பிரகாசத்தாலும்
உலகம் சுடர்கிறது.
கடந்த காலமும் நிகழும் அவன் புகழைப் பாடுகிறது.
ஒவ்வொரு விடியலின் வெள்ளி ரேகைகளுடன்
சூரியன் அவனுக்கு நன்றி செலுத்துகிறது.
என் உள்ளத்தின் சுடரால் நான் ஒளிர்கிறேன்.
ரத்தக் கண்ணீருடன் என் கண்களில் தாகம் பெருகுகிறது.


உலகம் அன்பினால் பிணைக்கப்பட்ட முடிவற்றதொரு சங்கிலித் தொடர்.
காதலின் கவிதையால் அதன் வழவழப்பு கூடுகிறது.
நிகழ், கடந்தகாலம், எதிர்காலம் என எதுவாயினும்
காதலின் கணம்தான் நிலைத்து விடுகிறது.


துலிப் மலர்களின் நிறத்தைப் பூசுகிறது காதல். 
உள்ளத்திலோ அதன் நெருப்பின் வெப்பமே ஆளுகின்றது.
பூமியின் இதயத்தை ஊசியால் குத்திப் பார்த்தால்
அன்பின் ரத்தம் அதன் நாளங்களில் ஓடுவதை உணரலாம்.


மனிதனின் உதடுகளில் இருந்து அன்பின் பாடல் ஒலிக்கிற போது.
தானே பூட்டிக் கொண்ட கதவுகளை அவன் திறக்கிறான்.
உலகம் கடவுளால் படைக்கப்பட்டிருந்தாலும் மனிதனால்தான் பராமரிக்கப்படுகிறது.
ஒருவேளை இந்த விளையாட்டில் இருவருமே பங்குதாரர்கள் போலும்.


எல்லா உள்ளங்களும் அன்பின் வளையத்தில் வரவில்லை.
எல்லா மனிதர்களும் அன்பின் அடையாளங்களை வெளிப்படுத்துவதில்லை.
லில்லி மலரின் இதயம் பல நேரங்களில் கிழிந்து அதில் ரத்தம் சிந்துகிறது.


காற்றில் இலக்கற்றுத் திரியும் எய்த ஒரு அம்பைப் போல
நான் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அலைபாய்கிறேன்.
எல்லாமே என் கண்ணுக்குப் புலப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது.


என் விருப்பத்தின் மாறும் மனநிலைகளுக்கேற்ப
யாரோ யாழ் மீட்டுகின்றனர்.


தோட்டத்தில் இருக்கும் வானம்பாடி கதறி அழுகின்றது.
அதன் மண்ணிலிருந்து துயரத்தைத் தவிர வேறு எதுவும் முளைக்கவில்லை.
தலைமுறைகளைக் கடந்தும் பாலைவன முட்கள் உதிரவில்லை.
ரோஜாக்கள் இளமை பூத்திருக்கும்போதே இறந்து விடுகின்றன.


எத்தனைக் காலம்தான் கூட்டுப் புழுவாய் உள்ளுக்குள் போராடுவாய் என் நெஞ்சமே.
ஒருமுறை உன் உள்மனத் தீயால் உன்னையே நீ எரித்து விடு.
உன் மணல் துகள்களால் ஒரு பலமான உடலை உருவாக்கு.
கனத்த பாறையாய் மாறி கடும் புயல்களைத் தாங்கு,
வலியின் தன்மை அறிந்த உன் இதயம் மலை போல உறுதி கொள்ளட்டும். ஆனால் அதன் இடையே ஒரு நதி பாடிச் செல்லட்டும்.




இறைவா...இவ்வுலகம் எத்தனை கோடி இன்பம் கொண்டது.
ஒவ்வொரு அணுவும் இருப்பால் மெய்சிலிர்த்துக் கொண்டிருக்கிறது.
காம்பிலிருந்து முகிழ்த்த ரோஜா மொட்டு கூட
வாழ்க்கையைப் பெற்றுவிட்ட பரவசத்தால் புன்னகைக்கிறது.


நேற்றிரவு செத்துக் கொண்டிருந்த புழு ஒன்று என்னிடம் சொன்னது,
நாளை காலை நான் சாம்பலாகி விடுவேன் என்றாலும் இன்று
வாழ்வின் தீயில் என்னை ஒருகணமேனும் எரியவிடு.


இன்று காலை வானம்பாடி ஒன்று பரவசத்தால் பாடிக் கொண்டிருந்தது.
என் இதயத்தில் புதைத்து வைத்திருந்த ஒரு கண்ணீர்த் துளியை, ஒரு பெருமூச்சை, ஓர் அழுகையை, ஒரு சோகப் பாடலை அது கிளறிவிட்டது.


அதன் பாடல் -


எனது பாடலுக்குள் வாழ்க்கையின் துன்பத்தைத் தீர்க்கும் போதையைத் தேடாதீர்கள்.
ஒரு ரோஜாவைப் போல ரத்தம் சொட்டும் இதயமும் அதன் முட்களும் தவிர என்னிடம் 
வெளி்ப்படுத்தவோ விற்பனை செய்யவோ எதுவும் இல்லை.


என்னுடன் வாழும் பறவைகளை நான் அறியவில்லை.
என் கூடு தனிமை கொண்டுள்ளது என்றது.


------------------------------------------------------------------------


எல்லா செல்வங்களையும் நான் நிராகரித்தேன்.
எல்லா அதிகாரங்களையும் மறுக்கிறேன்.


ஒரு தரிசனம் நாடி நான் சினாய் மலைக்கு வந்தேன்.
கடவுள் மனிதனைத் தேடிக் கொண்டிருப்பதை அறிந்து 
அவனை நாடி நான் வந்தேன்.


நாம் எல்லா குற்றங்களையும் மூடி மறைத்துதானே ஞானம் தேடுகிறோம்.
சந்தேகங்களின் வலைகளில் சிக்கி நம்பிக்கையைத் தேடுகிறோம்.
ஒன்றை நம்பி வேறொன்றுக்காக வாழ்ந்து
மற்றொன்றை தேடி இன்னொன்றுக்காக இறக்கிறோம்.


--------------------------------------------------------------------------
ஒரு ரோஜாவிடம் கேட்டேன்.
எதற்காக இந்த சோகம் ரோஜா மொட்டே
சுத்தம் செய்யும துடைப்பம் முதல் சிரிக்கும் தோட்டம் வரை உன்னைச் சுற்றி எவ்வளவோ இருக்கிறது. ஏன் அழுகிறாய் என்றேன்.
பனித்துளியும், வீசும் மாருதமும் வானம்பாடியின் பாடலும் காதலும் உன்னை நாடுகின்றன. உன் உள்ளம் எதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது என்று கேட்டேன்.


உதிர்ந்துக் கொண்டிருந்த அந்த ரோஜா ஏமாற்றத்துடன் சொன்னது
நமது வாழ்க்கை காற்றில் கரையும் சுகந்தம் 


என் இதயம் வலியால் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது
வானம்பாடியுடன் பலமணி நேரம் பேசுகிறேன்.
மலர்கள் மௌனமாயிருந்தாலும் அவற்றின் மொழியை அறிகிறேன்.


அவனது கருணைக் கடலின் ஒரு நீர்க்குமிழ் நம் வாழ்க்கை.
அவனது ஈரம் தான் நமது வேர்களை நனைக்கிறது.


ஒ என் இதயமே நீயே என் கடல், என் படகு, என் பயணம்.
தூசியிலிருந்து பூத்த மலரா நீ அல்லது வானிலிருந்து விழுந்த பனித்துளியா
எது நன்மை எது தீமை என எப்படி உரைப்பேன் உனக்கு
சிக்கலான் உண்மையல்லவா அது
வெளியே தான் ரோஜாவும் முள்ளும் தெரிகின்றன.
தண்டின் உள்ளே ரோஜாவும் இல்லை, முள்ளும் இல்லை.


எங்கிருந்து நான் வந்தேன். என் எதிர்காலம் என்ன
நான் யார்
நதியின் ஒரு அலை போன்றவன் நான்.
உள்நோக்கித் திரும்பாவிட்டால் நான் நானாக இல்லை.


அன்பு ஒவ்வொரு இதயத்தையும் நாடி வருகிறது.
ஒரு இதயத்தைக் காயப்படுத்தி இன்னொன்றை காயம் ஆற்றுகிறது.


நான் முத்தாக இருப்பவனா அல்லது அதன் சிப்பியா
நான் மதுவா அல்லது அதன் கோப்பையா எனக்குத் தெரியாது.
இதயத்திலிருந்து ஆசைகள் எழுவது எதனால்
விளக்கில் எங்கிருந்து ஒளி வருகிறது.


யார் நமது காலடியை முன்வைக்கிறார்.
நமது கண்களின் வழியாக பார்த்துக் கொண்டிருப்பது யார்.
எதனை அவர் பார்க்கிறார்.


என் மூலத்தைப் பற்றிய அறிவு எனக்கு இல்லை.
என் கல்லறைக்குப் பிறகு என் இலக்கையும் நான் அறியவில்லை.


மொட்டுக்குள் சிக்கியிருக்கும் ரோஜாவின் முனகலை நான் கேட்டேன்.
படைப்பின் சங்கிலியில் பிணைக்கப்பட்ட கைதி நான் என்றது.


விதி எழுதும் கதையை நம்மால் திருத்த முடியாது.
வாழ்க்கை மூன்றாக தரப்பட்டிருக்கிறது. ஒன்றை பெறுகிறோம். ஒன்றை போற்றுகிறோம் ஆனால் மூன்றாவது ஒன்றை கொன்று விடுகிறோம்.


நமது சொந்த மாடல்களை வைத்து இறைவனின் அடையாளத்தைத் தேடுகிறோம். 
நமது சட்டகங்களில் அவனது உருவத்தை வைத்து வணங்குகிறோம்.
நமது அழகால் அவன் கருணையை உருவாக்குகிறோம்.
நம் சொந்த பிம்பங்களிலிருந்து நம்மால் தப்பவே முடிவதில்லை.
எங்கே திரும்பினாலும் அவன் முகத்தில் நாம் வணங்குவது
நம்முடைய சொந்த முகத்தைத்தான்.


முன்பு அன்பு நிறைகொண்டிருந்த உலகில் இப்போது
மரணத்தின் மௌனம் ஆட்சி செய்கிறது.
என் இதயம் எப்போதோ எரிந்து விட்டது.
அதன் சாம்பல் மட்டுமே எஞ்சியிருக்கிறது.
என் ஆசைகளின் செல்வம் எங்கே களவு போனது
என் வலிகளின் புதையல்களைக் கூட யாரோ திருடிப் போய் விட்டார்.


நம் அறிவு தகரத்தையும் தங்கமாக மாற்றும்
கல்லையும் கண்ணாடியாக்கும் நமது கலை.
கவியின் ரசாயனம் விஷத்தைக் கூட அமுதமாக மாற்றுகிறது.
எனவே என் அலையும் எண்ணங்களை கவிதையிடம் திருப்பினேன்.
என் இதயத்தில் ஒளிரும் சில உண்மைகளை அறிந்தேன்.
அன்பையும் வாழ்க்கையையும் பாட எனது உதடுகளைத் திறந்தேன்.
என் வெளிப்பாடு அதன் ரகசியத்தை மேலும் மூடிமறைத்தது.


கடைசியாக காரணத்தின் துரத்தல்களிலிருந்து தப்பினேன்.
காதலின் வீதியில் ஒரு ராப்பிச்சைக்காரனாகப் பாடுகிறேன்.
எத்தனை சோகத்துடன் என் பாடல் ஒலிக்கிறது.


இக்பால் வானத்தை வளைப்பவனாக இல்லை.
அந்த தத்துவ ஞானி, கவிஞன் இப்போது பித்தனாகி விட்டான்.








Monday 14 May 2012

ஓஷோ வாழ்வும் சேதியும்

ஓஷோ வாழ்வும் சேதியும்- இருபது வயது ஆகும் முன்பே நான் காரல் மார்க்சின் சிவப்புநூல்களையும் லெனினின் தடித்த புத்தகங்களையும் படிக்க ஆர்வம் காட்டினேன். மாஸ்கோ பதிப்பகம் சார்பாக மலிவு விலையில் அந்தப் புத்தகங்கள் நியுசெஞ்சுரி புக் ஹவுஸில் கிடைத்தன. அதே போல கார்க்கி, ஷோலக்கோவ், மாயகவாஸ்கி, அந்தோன் செக்கவ், புஷ்கின் நூல்களும் கிடைத்தன. டால்ஸ்டாயும் தஸ்தேயவஸ்கியும் தமிழ்ச்சூழலுக்கு அதிகமாக தெரியாத காலம் அது. மணிக்கொடி எழுத்தாளர்களின் ஆர்வமும் சில தமிழாக்கங்களும் டால்ஸ்டாயை ஓரளவு அறிமுகம் செய்திருந்தது. கநாசுவும் எழுதியிருந்தார். ஆனால் புத்தக சைசை பார்த்து பயந்து அப்போது போரும் அமைதியும் படிக்க முடியவில்லை. எப்படியோ அன்னா கரீனினாவை ஆங்கிலத்தில் படித்திருந்தேன். அடல்ட்ரி எனப்படும் பாலியல் பிறழ்வு புத்தகமாகத்தான் அப்போது அது தோன்றியது. புத்துயிர்ப்பு பற்றி சில இலக்கிய நண்பர்கள் ஆர்வத்துடன் பேசுவார்கள். இது 80களின் தொடக்க கால நிலை.
ஒருநாள் நானும் நண்பர் சூர்யராஜனும் பிரபஞ்சன் அவர்களின் கே.கே.நகர் வீட்டுக்குப் போனோம். அவர் கையில் பகவான் ரஜ்னிஷ் பதில்கள் என சிவப்பு அட்டை போட்ட புத்தகம் இருந்தது. அதை சூர்யா ஆர்வத்துடன் வாங்கிப் படித்தார். நான் அதைப் படிக்க விரும்பவில்லை.

சாமியார்களை எனக்குப் பிடிக்காத காலம் அது. ஓஷோ என்ற பெயர் அப்போது ரஜ்னிஷ் என்றே தெரிந்திருந்தது. ராணி வார இதழில் அல்லி பதில்கள் பகுதியில் பிரா பற்றியும் நடிகைகளின் நீச்சல் உடை பற்றியும் கேள்வி வருவதைப் போல தவறாமல் செக்ஸ் சாமியார் ரஜ்னிஷ் பற்றியும் கேள்வி-பதில் வரும். சில நேரங்களில் தினத்தந்தியிலும் இப்படிப்பட்ட அதிர்ச்சி தரும் கட்டுரைகள் வரும்.அதைப் படித்து கெட்டுப் போய், ரஜ்னிஷை நிராகரித்தேன்.ஆனால் சூரியாவின் வற்புறுத்தலால் அதைப் படிக்கலானேன். எனக்கு புதிதாக ஏதோ புரிவது போல தோன்றியது. அந்த புத்தகத்தை வெளியிட்டவர்கள் விலாசம் திருச்சியில் இருந்தது. திருச்சி எனது பால்ய கால ஊர் என்பதால் அங்கு போகும் போது ரஜ்னிஷ் டைம்ஸ் என இதழ் தமிழில் வந்துக் கொண்டிருந்தது. சுவாமி மோகன்பாரதி என்பவர் அதனை நடத்திக் கொண்டிருந்தார். விலை 2 ரூபாய். டாப்லாய்ட் நியூஸ் பேப்பர் வடிவில் அது இருந்தது. அதை நிறைய வாங்கி வந்தேன். அப்போது எழுத்தாளர் பாலகுமாரனும் அங்கு வந்து ரஜ்னிஷ் புத்தகங்களை வாங்கிப் போயிருந்தார்.

படிக்க படிக்க புதிய பரவசமும் சந்தோஷமும் அளித்தது ஓஷோவின் எழுத்து. படிப்படியாக காரல் மார்க்சும் லெனினும் என்னை விட்டு விலகிப் போனார்கள். கம்யூனிசப் பேயை ஓட்டி விட்ட பூசாரி ஓஷோதான். தன்னை ரஜ்னிஷ் என்று அழைக்க வேண்டாம் என்றும் ஓஷோ என்றழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியதால் ஓஷோ என்ற பெயரில் நான் நடத்தி வந்த செந்தூரம் சிற்றிதழில் அட்டையில் ஓஷோவைப் போட்டு அவரது எழுத்துகளை பதிப்பித்தேன். சிற்றிதழ் மற்றும் இலக்கிய வாசகர்களிடம் அதுதான் ஓஷோவைப் பற்றிய முதல் பதிவு. மோகன்பாரதியின் இதழ் சுழன்ற வட்டம் வேறு. ஒரு இலக்கியவாதியான நான் அதை நானறிந்த இலக்கிய வட்டங்களில் பரவலாக்கினேன். கவிஞர் புவியரசு செந்தூரத்தில் படித்தபின்தான் ஓஷோவை மொழிபெயர்க்க ஆர்வம் காட்டினார்.

புனே போக வேண்டும் என்றும் ரஜ்னிஷை பார்க்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் உள்ள அவர் நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்றும் என்னுள் தீராத தாகம் எழுந்தது.பல வருடங்கள் கழித்து நான் புனே போய் சேர்ந்த போது ஓஷோ மறைந்துவிட்டார்.

ஓஷோவிடம் நேருக்குநேராக பழகித்தான் அவரைப் பற்றி அறிய வேண்டிய அவசியமே இல்லாதபடி தமது நூல்களின் வாயிலாக அவர் தமது வாழ்வைப் பற்றியும் சேதியைப் பற்றியும் விரிவாகவே விளக்கியிருக்கிறார்.

ஓஷோவின் உலகினுள் நுழைவதற்கு முன்பு நாம் என்னவாக இருந்தோம் என்பதை முற்றிலுமாக மறந்துவிட வேண்டும். நமது தன்முனைப்பு, சாதி, மதம், ஒழுக்கம், ஆசை, பேராசை, எதிர்பார்ப்பு ஆகியவற்றுடன் ஓஷோவை அணுகினால் ஏமாற்றமே மிஞ்சும்.

உலகில் குழந்தை பிறக்கும் போது வங்கிக் கணக்குடன், அரசாங்க வேலையுடன், கார்களுடன் , நீண்ட ஆயுளுக்கான இன்சூரன்ஸ் பாதுகாப்புடன் பிறப்பதில்லை. தாய்ப்பாலை நம்பியும் தன்னை பெற்றவர்களை நம்பியும்தான் பிறக்கிறது.

புதிதாகப் பிறந்த குழந்தை பார்ப்பதற்கு பலவீனமாக தெரியும். ஆனால் யார் தம்மை ஆதரிப்பார், வளர்ப்பார் , உணவளிப்பார் எனத் தெரியாமல் அது பிறக்கையில் எத்தனை நம்பிக்கையும் பலமும் அதனிடம் வழங்கப்பட்டிருக்கிறது என்று உணரலாம்.
குருவிடம் செல்லும் போது நம்பிக்கையுடன் செல்வது அவசியம். பணம், கற்பு என எதையோ இழந்ததாக கூறுவோர் அதனை முன்பே வேறு பல குறுக்கு வழிகளில் இழந்துவிட்டவர்கள்தான். மா ஷீலா போன்றவர்கள் ஓஷோவை களங்கப்படுத்திய கதைகள் ...அதற்கு ஓஷோ அளித்த பதில்கள்.....காமத்தைப் பற்றிய ஓஷோவின் எண்ணங்கள், அவரது அறிவாற்றல், கருணை என எத்தனையோ விஷயங்கள் உள்ளன பேசுவதற்கு.


ஓஷோவிடம் என்ன கிடைக்கும் ?

ஓஷோவை அவரது நூல்களின் வழியாக சந்திக்கும் போது, பலவிதமான அடைமொழிகள் அவருக்குத் தரலாம் என்ற எண்ணம் வருகிறது. குறும்புக்கார பெருசு என்று பல முறை நினைத்திருக்கிறேன். ஆனந்தவிகடன் கார்ட்டூனுக்காக அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியம் அவர்களை எம்.ஜி.ஆர் அரசு சிறையில் அடைத்த போது, இத்தகைய அசடுகள்தான் உங்கள் முதலமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று கூறியவர் ஓஷோ.
மொரார்ஜி தேசாய் மூத்திரம் குடித்ததை அத்தனை நக்கலடித்திருக்கிறார்.
காந்தியின் ஒழுக்கத்தையும் நேருவின் சோசலிசத்தையும் இந்திரா காந்தியின் ஆணவத்தையும் காரல் மார்க்சின் கம்யூனிச கோட்பாட்டையும் ஓஷோ பலமுறை விமர்சித்திருக்கிறார். எந்த ஒரு அரசியல் கோட்பாட்டிலும் குப்பைத்தொட்டியிலும் அவருக்குப் பெரிதாக அக்கறை இருந்ததில்லை. மக்களின் மனங்களில் இத்தகைய அரசியல் தலைவர்களைப் பற்றியிருக்கும் பிம்பங்களை உடைப்பதிலும் கலைப்பதிலும் மட்டும்தான் ஓஷோவுக்கு கவனம் இருந்தது. அரசியல்வாதிகள் தான் நாட்டை சூறையாடியவர்கள் என்று பலமுறை பேசியிருக்கிறார். ஏழ்மையை வெறுத்தவர் அல்ல ஓஷோ. ஏழைகளால் விலைக்கு வாங்க முடியாத உன்னதங்கள் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கும் சமூக அமைப்புகளையும் அதன் காவலர்களையும் துச்சமாக தூக்கியெறிந்திருக்கிறார்.
முதலில் வாழ்க்கைக்கான வசதிகளை செய்துக் கொண்டு ஞானத்தையும் அறிவையும் தேடுங்கள் என்பார் ஓஷோ. கிழிந்த ஆடையும் வயிற்றில் பசியும் தோளில் குடும்ப சுமையும் இருக்கும் மனிதனுக்கு ஞானம் மட்டுமல்ல இயல்பான வாழ்க்கைக் கூட சித்திக்காது என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறார்.
ஓஷோவிடம் கிடைக்கும் முதல் அம்சம் மனிதாபிமானம்.
அவரது பல்வேறு உரைகளில் பல்வேறு விதங்களில் சகமனிதனுக்கான அக்கறையும் நேசமும் சுடர்விடுவதை உணராதவர்கள் கண்ணிருந்தும் குருடர்தான்.
மனிதன் மகிழ்ச்சியாக வாழப் பிறந்தவன். ஆனால் அவனை அப்படி வாழ விடாத சக்திகளை அவர் இருவகையாகப் பார்க்கிறார். ஒன்று புற ரீதியானது. அரசியல், மதம், வறுமை இப்படி. மற்றொன்று அகரீதியானது. பொறாமை, தன்முனைப்பு, காமம், அறியாமை, பேராசை என மனிதனை கேவலமானவனாக மாற்றும் உணர்வுகள். புத்தர், ஏசு, நபிகள் நாயகம், கிருஷ்ணா என எந்த தெய்வத்தை நீங்கள் வணங்கினாலும் அத்தனை தெய்வப் பிறவிகளும் ஞானிகளும் படைப்பாளர்களும் இந்த அகம் புறம் சார்ந்த இருவேறு எதிரிகளை எப்படி வென்றனர் என்பதை கூறுவதில்தான் ஓஷோவுக்கு கவனம் இருக்கும். அப்படியே அவர்களை கண்மூடி பின்பற்றுவதில் அவருக்கு உடன்பாடு இல்லை.
ஓஷோவிடம் கிடைக்கும் இரண்டாம் அம்சம் தத்துவார்த்த கலை உணர்வு.
தஸ்தயேவஸ்கி, டால்ஸ்டாய், சித்தர்கள், பாஷோ, பூக்கோ, நீட்சே, சிக்மண்ட் பிராய்டு, குருட்ஜிப், எட்கர் காய்ஸ், கலீல் கிப்ரான், மைக்கேல் நேமி, மிலன் குந்தேரா, தாகூர், ஜலாலுதீன் ரூமி, உமர்கய்யாம், ஜென்குருக்கள், ஆல்பர்ட் காம்யு, சார்த்தர்  என ஆங்கிலம் வழி கிடைத்த அத்தனை படைப்பிலக்கியங்களையும் தத்துவங்களையும் கற்றுத் தேர்ந்தவர் ஓஷோ. திருக்குறளும் பாரதியும் ஆழ்வார்களும் அவருக்கு ஆங்கிலம் வழியாக கிடைக்காமல் போனதற்கு மலையாளம், கன்னடம், பிரெஞ்ச், ருஷ்ய மற்றும் ஜெர்மனிலிருந்து கண்ட கண்ட குப்பைகளை கூட தராதரம் தெரியாமல் சகட்டுமேனிக்குத் தமிழில் மொழிபெயர்க்கும் தமிழர்களாகிய நாம்தான் வெட்கப்பட வேண்டும்.

















Sunday 13 May 2012

ஓஷோவும் ஜெயமோகனும்





ஓஷோவைப் பற்றி தனது இணைய பக்கத்தில் ஜெயமோகன்(www.jeyamohan.in  ) அண்மையில் எழுதிய கட்டுரைகளை காண நேர்ந்தது. நிமோனியா மாதிரி ஒரு ஓஷோமானியா நோய் எனக்கு இருப்பதாக பலமுறை அவர் நேராகவே கிண்டலடித்திருக்கிறார். ஓஷோவின் 700க்கும் மேற்பட்ட புத்தகங்களில் 600 புத்தகங்களை படித்துவிட்டேன். நிறைய பேசியும் எழுதியும் இருக்கிறேன். அதனால் அந்தப் பட்டம். தமிழ் அறிவுச் சூழலில் ஓஷோவை முதன் முதலாக தரமாக மொழிபெயர்த்து பரவலாக்கிய பெருமையும் எனக்குத்தான்.

90 களிலேயே ஜெயனுக்கு ஓஷோ மீது மரியாதை இல்லை என்பதை புரிந்துக் கொள்ள எனக்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை. காரணம் ஜெயமோகன் ஒரு ஒழுக்கவாதி. ஓஷோ தறுதலை, சுகவாசி, பெண்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியவர் என்பது அவர் எண்ணம். ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறுபவர் ஜெயன். அதை நானறிந்த வரை அவர் கடைபிடித்து வந்தார். அருண்மொழியைத் தவிர வேறு பெண்ணை மனத்தாலும் நினைக்காதவர். ஒரு முறை மட்டும் விளையாட்டாக ஐஸ்வர்யா ராய் மாதிரி பெண்ணால்தான் தன்னை மயக்க முடியும் என்றார்.அப்படி யாரிடமாவது மயங்கினாரா தெரியவில்லை.

மீடியாக்கள் வடித்த சித்திரப்படி ஓஷோ ஒரு செக்ஸ் சாமியார். இன்றைய நித்யானந்தாவுக்கெல்லாம் பிதாமகன் அவர்தான். ஆனால் நித்யானந்தன் ஒரு அயோக்கியன். ஓஷோ மகத்தான குரு. இந்த வித்தியாசம் புரிந்துக் கொள்ளப்பட வேண்டும்.ஓஷோவைப் பற்றி விரிவாக அடுத்தடுத்து எழுத நினைக்கிறேன். அதற்கு நன்றி ஜெயமோகனுக்கு.

ஜெயமோகனுக்கும் ஓஷோவைப் பற்றி செக்ஸ் சாமியார் என்ற இந்த பிம்பம்தான் மனதுக்குள் இருக்கும் என்பதை புரிந்துக் கொள்கிறேன்.ஏனெனில் அவர் காந்தியைப் போல ஒழுக்கம் சத்தியத்தின் ஒரு பகுதி என்று நம்புகிறவர்.

ஜெயன் பெரிதும் மதிக்கும் குரு நித்ய சைதன்ய யதி மீது எனக்கும் மரியாதை உண்டு. வாழ்வில் நான் நேரடியாக அறிந்த முதல் குரு அனுபவம் நித்ய சைதன்யாவுடையது.ஒருமுறை ஜெயமோகனிடம் நித்ய சைதன்ய யதிக்கு காம உணர்ச்சி இருக்குமா என்று கேட்டேன். துறவிகளுக்கு காமம் என்ற ஒருஉணர்வை கையாளும் மனப்பக்குவம் இருக்குமா அல்லது ஓஷோ கூறுவது போல காமத்திலிருந்து தான் கடவுளை அடைய முடியுமா என்பதுதான் என் குழப்பம்.
இந்தக் கேள்வியே ஜெயனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முதலில் பதிலைக் கூறாமல் தட்டிக் கழிக்க முயன்று அதெல்லாம் இல்லை. யதி அதையெல்லாம் கடந்த மகான் என்று கூறினார். எப்படி கடந்தார் என்பதுதான் என் கேள்வி.

காமத்தை அடக்காதீர்கள் என்கிறார் ஓஷோ. அடக்கினால் அது கடந்ததாக அர்த்தப்படாது. தீர்த்தால் அது ஒழுக்கமாகாது. காமமே இல்லாதவன் மனிதப் பிறவியாக இருக்க முடியாது. திருநங்கைகளுக்கும் காமம் உள்ளது. ஏசுவுக்கும் குருநானக்குக்கும் காமம் இருந்ததா என்பது பற்றி தகவல் இல்லை. புத்தர் சித்தார்த்தனாக இருந்த போது சிற்றின்பத்தில் திளைத்தவர்தான். யசோதரா என்ற மனைவியும் மகனும் அடைந்தவர்தான் புத்தர்.

மகாத்மா காந்தி தன் காம உணர்வுகளைப் பற்றி அவரே அவரது சுயசரிதையில் மனம் திறந்து எழுதியிருக்கிறார்.

ஆன்மீக வாழ்வுக்கும் பொது வாழ்வுக்கும் வரக் கூடிய பெரிய மனிதர்கள் காமத்தை எப்படி கடக்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. ஆனால் நித்ய சைதன்ய யதி மீது நான் ஏதோ பழிசுமத்துவதாக எண்ணிய ஜெயன் எரிச்சல் அடைந்தார். அவருக்கும் எனக்கும் நட்பு முறிந்த தற்கு எத்தனையோ காரணங்கள் இருப்பினும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.


குருவின் தன்மை பற்றியும் ஓஷோ எழுதியிருக்கிறார். முதல் குருவாக ஓஷோவையும் இரண்டாவதாக நித்ய சைதன்யாவையும் மூன்றாவதாக சூஃபி தர் நிர்வாகி தாதா ரத்தன்சந்த் அவர்களையும் நான் மானசீகமாக வரித்துக் கொண்டிருக்கிறேன். ஓஷோவைப் பார்க்கும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை.
ஓஷோவைப் பார்க்க வேண்டுமென்று தீராத தாகத்துடன் நான் 1990ம் ஆண்டில் புனே போன போது தேதி 20
19 ஜனவரியில்தான் ஓஷோ காலமானார். அப்போது நான் ரயிலில் இருந்ததால் எனக்குத் தெரியாமல் போனது. ஓஷோ ஆசிரமத்துக்குப் போன போது அதிகமான கூட்டம். ஓஷோவின் உடலைப் பார்க்கக் கூட முடியவில்லை. எங்கு பார்த்தாலும் பரபரப்பு. ஆனால் யார் முகத்திலும் இழவு வீட்டின் சோகம் இல்லை. பலர் ஒருவரை ஒருவரை அணைத்துக் கொண்டனர். சில வெளிநாட்டவர் அழுதபடி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக் கொண்டனர்.
சிலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். சிலர் தனிமையில் தியானத்தில் ஆழ்ந்திருந்தனர். ஓஷோ பிரசங்கம் செய்த நாற்காலி காலியாக இருந்தது. ஓஷோ பேச வருவார் என சிலர் சுற்றிலும் கொசுவலையால் மூடப்பட்ட அரங்கினுள் அமைதியாக காத்திருந்தனர்.
இசையமைப்பாளர்கள் கல்யாண்ஜி-ஆனந்த்ஜி, மகேஷ்பட் போன்ற பல பிரமுகர்களையும் அங்கு காண முடிந்தது.





ஓஷோவின் நாற்காலியை வணங்கிவிட்டு குருவின் சொற்களை நினைத்துக் கொண்டேன். மரணத்தையும் கொண்டாடுங்கள் என்று கூறியிருந்தார் ஓஷோ.

ஜிந்தகி கோ பியார் பஹூத் தியா ஹம்னே
மௌத் சே பீ முஹபத் நிபாயேங்கே ஹம்

SAFAR படத்தில் ஒலித்த கிஷோர் குமாரின் இந்தப் பாடல்தான் எனக்கு நினைவில் எழுந்தது. வாழ்க்கையின் மீது மிகுந்த பிரியம் செலுத்தி விட்டேன். இனி மரணத்தின் மீதும் அந்தப் பிரியத்தை செலுத்துவேன் என்று கூறும் பாடல் அது.


ஜே.கிருஷ்ணமூர்த்தி ஓஷோவை கிரிமினல் என்றாராம். ஜெயன் கூறுகிறார். உண்மையில் ஜே.கேவுக்கும் ஓஷோவுக்கும் நடந்த சண்டை (?) பற்றியும் ஒருவர் பற்றி மற்றவர் என்ன சொன்னார்கள் என்பதையும் ஜெயன் படித்திருக்கிறாரா ?
ஜே. கிருஷ்ணமூர்த்தி பெயரால் ஓஷோ ஆசிரமத்திற்குள் அழகான ஒரு தோட்டம் அமைக்கப்பட்டிருப்பதையாவது ஜெயன் அறிவாரா? அதை அன்று நான் நேரில் பார்த்தேன். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்களையும் நான் பெரும்பாலும் வாசித்து விட்டேன்.ஓஷோவுக்கும் ஜேகேவுக்குமான முரண்பாடு பகைமையற்றது. அது இரு நண்பர்களின் சண்டைதான்.ஆனால் நிச்சயம் ஜெயமோகன் மாதிரி ஒரு நண்பன் ஜெகதீஷ் மாதிரி ஒரு நண்பனிடம் செய்த சண்டையைப் போல் அல்ல அது.
ஜே.கே.மீது ஓஷோ எத்தனை மதிப்பு வைத்திருந்தார் என்பதற்கு அடையாளம்தான் அந்தத் தோட்டம்.
ஓஷோவை ஆழமாக வாசிக்க வாசிக்க அற்புதமான பல தருணங்கள், பல கணங்கள் நிகழும் என்பதை அனுபவப் பூர்வமாக நான் உணர்ந்திருக்கிறேன். ஹென்றி மில்லர் முதல் லாப்சங் லாமா வரை எட்கர் காய்சிலிருந்து நீட்சே வரை என்னை பல நூல்களை வாசிக்கச் செய்தவரும் ஓஷோதான். ஓஷோவைப் படிக்கும் போது தனியாக கதறி அழுதிருக்கிறேன். வாய்விட்டுச் சிரித்திருக்கிறேன். மௌனத்தில் உறைந்துப் போயிருக்கிறேன்.இத்தகைய எந்த ஒரு அனுபவத்தையும் ஜெயமோகனின் எந்த ஒருவரியும் ஏற்படுத்தியதில்லை.

ஒவ்வொரு முறையும் ஓஷோவின் புத்தகத்தை எடுக்கும் போதெல்லாம் அது என்னை எப்படியெல்லாம் அலைக்கழிக்குமோ எப்படியெல்லாம் என் வாழ்க்கையை மாற்றிவிடுமோ என்று பதற்றத்துடனே படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் ஓஷோமானியா என்றால் இருக்கட்டும்.

ஓஷோவின் பல புத்தகங்கள் தமிழில் வந்துள்ளன. அதில் நான்கைந்து புத்தகங்களை நானும் மொழிபெயர்த்திருக்கிறேன். இதில் நான் ஒரு வெண்மேகம், புதிய குழந்தை, நம்பிக்கை நட்சத்திரமாய் ஆகியவை அதிகம் சேதமில்லாமல் அச்சாகி விட்டன. ஆனால் ஹைகூ கவிதை பற்றிய பிரபஞ்ச ரகசியம் என்ற ஓஷோவின் புத்தகம் பதிப்பாளராலும் அவரது நண்பர்களாலும் சிதைக்கப்பட்டு விட்டது. அதே போல நான் 90 சதவீதம் மொழிபெயர்த்த ஒரு புத்தகம் இன்னொருவர் பெயரில் வந்துள்ளது.இந்தப் புத்தகங்களுக்காக கவிதா பதிப்பக உரிமையாளர் திரு.சொக்கலிங்கம் எனக்கு அளித்த நட்பு உதவி பத்தாயிரம் ரூபாய்க்குள் தான் இருக்கும். எத்தனைப் பிரதிகள் விற்றன என்பதையெல்லாம் எழுதுபவனால் ஒருபோதும் பதிப்பாளரிடம் வெள்ளை அறிக்கை கேட்க முடியாது.


ஓஷோவைப் பற்றிய ஜெயமோகனின் கருத்துகளுக்கு வரிக்கு வரி எதிர்வினையாற்றும் அளவுக்கு எனக்கு பொறுமையோ, மன ஊக்கமோ, கால அவகாசமோ, வாழ்க்கை வசதிகளோ இல்லை. இன்டர்நெட் ரீசார்ஜ் செய்யவே பணமின்றி தவிக்கும் நிலை எனக்கு. நினைத்தபோதெல்லாம் பிளாக்கை அப்டேட் செய்யவும் என்னால் முடியாது. ஆகவே ஜெயமோகனின் கருத்துகள் வலுவாகத் தெரியலாம். வாசக நண்பர்கள் ஓஷோவைப் படிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அதுமட்டும்தான் என் கோரிக்கை.முடிந்தால் ஜெயமோகன் நூல்களையும் படித்துப் பாருங்கள் ஆணவத்துக்கும் ஆன்மீகத்துக்குமான வித்தியாசம் புரியும். ஈரமற்ற அறிவின் சிரிப்பையும் அகந்தையையும் ஜெயமோகனிடம் காண முடியும். அதே சமயம் கண்ணீர் கசிய வைக்கும் ஞானத்தின் தெளிவை ஓஷோவிடம் நிச்சயம் காண முடியும்.

ஓஷோவை நன்கு அறிந்தவன் என்று எனக்கு என் மீது நம்பிக்கை உண்டு. நானறிந்தவரை ஓஷோ ஒரு ஜீனியஸ். ஒரு மகான். ஒரு அற்புதமான குரு. ஒரு அறிஞர். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் மனிதர். ஏசுவையும் புத்தரையும் சமகாலத்தில் சந்தித்த பரவசத்தை அளிப்பவர்.

ஓஷோவே கூறியது போல அவரை பின்பற்றுபவர்களை வைத்தோ, அவரது நூல்களை நுனிப்புல் மேய்பவர்களை வைத்தோ அவரை கணித்து விட முடியாது. ஓஷோவுடன் மானசீகமாக நிகழும் அனுபவம்தான் அவரைப் பற்றிய உணர்வை உருவாக்கும்.

பாலக்காடு அருகில் வசிக்கும் நண்பர் மனோகரனிடம் ஒருமுறை ஓஷோவைப் படிக்கும்படி கேட்டுக் கொண்ட போது முதலில் மறுத்து பின்னர் படித்தார். படித்து விட்டுசொன்னைார் இனி ஓஷோவை மட்டும் படித்தால் போதும் என்ற உணர்வு எழுகிறது என்று.

ரயிலில் நான் வைத்திருந்த ஓஷோவின் புத்தகத்தை வாங்கிப் படிக்க ஆரம்பித்த சக பயணி புத்தகத்தை திருப்பிக் கொடுக்காமல் அதன் விலையைக் கொடுத்து கெஞ்சி கூத்தாடி அந்தப் புத்தகத்தை வாங்கிப் போனார். இப்படி எத்தனையோ அனுபவங்களைக் கூற முடியும். இவை ஒரு போதும் ஜெயமோகனின் புத்தகங்கள் தராது.

என்னுடைய வாசிப்பு அனுபவம் அறிந்தவர்களுக்கு நான் கூற விரும்பும் செய்தி இதுதான் .ஒருவர் வாழ்நாளில் கம்பனையும் ஓஷோவையும் படித்தால் போதும். தஸ்தயேவஸ்கி கூட தேவைப்பட மாட்டார். ஜெயமோகன் மாதிரி அறிவாளிகளை சுலபமாக தூக்கி கடாசிவிடலாம். அதைவிட கொஞ்சம் கண்ணதாசனும் பாரதியும் இருந்தால் தேவலாம்.

நான் வணங்கும் திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் அருளால் ஓஷோவின் புகழ் ஜெயமோகனின் பெயரை விடவும் அதிக காலத்திற்கு நிலைத்திருக்கும்.
சலாம் அலேக்கும்.

















Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...