Sunday 31 May 2015

அரிதினும் அரிது கேள் 3 ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா......

இளையராஜா இசையமைத்த தொடக்க கால படங்களில் ஒன்று இளமைக்கோலம். கே.பாக்யராஜ் கதை வசனம் எழுதிய படம். சுமன்,ராதிகா,பிரதாப் ஆகியோர் நடித்தது. குமுதத்தில் எழுதும் தொடரில் அண்மையில் இப்படம் பற்றி பாக்யராஜ் குறிப்பிட்டிருந்தார்.
இப்படத்தில் வச்சபார்வை தீராதடி( ஜேசுதாஸ்) நீ இல்லாத நேரம் ( மலேசியா வாசுதேவன், சுஜாதா) போன்ற பாடல்கள் இனிமையானவை. கேட்க கேட்க மீண்டும் கேட்க தூண்டுபவை. நீ இல்லாத நேரம் பாடலில் இளையராஜாவின் வயலின்களும் இதர இசைக்கருவிகளும் செய்த மாயாஜாலம் மிகச்சிறப்பானது.


       



இவை ஒருபுறமிருக்க இப்படத்தின் உச்சகட்ட இசை இன்பத்தை தரும் பாடல் ஒன்றும் உண்டு. ஸ்ரீதேவி என்வாழ்வில் அருள் செய்ய வா என்ற அந்தப்பாடலை பாடியவர் ஜேசுதாஸ். பாடலாசிரியர் கண்ணதாசன்.

ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட்செல்வமே அருள் தெய்வமே
மலர் பூங்குழல் கலைமணி
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா,,,

மானைப் போன்ற கண்கள் இரண்டும் எனைப்பார்க்குமா?
வானுலாவும் மஞ்சள் மேனி மழை சேர்க்குமா...
வீணை தரும் நாதம் துணையாகுமா
இணையில்லா கலைவாணி கருணை பொங்குமா......

ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்யவா

கோவில் வாசல் தேடித் தேடி அலைபாய்ந்ததேன்
தேவ தேவி உன்னைத் தேடி
மனம் ஓய்ந்ததே
இங்கே உன்னைக் கண்டேன்...நல்ல நேரமே
இணையில்லா கலைவாணி கருணை பொங்குமா

டண்டண மணியோசை பொங்க
தண்டை தனது தாளம் கொஞ்ச
மிருதுவான மேனியோடும் அமுதமான ஜாடையோடும்
இளைய தோகை அழகு மங்கை
திரண்டு குலுங்கும் இரு கோவைப் போன்ற இதழ்களோடு
சிறந்ததொரு விருந்து என
துணை வருவது
அருள் தருவது
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா......

இப்பாடல் காதலியைக் காண ஏங்கும் ஒருவன் காதலியைப் பாடுவது கடவுளை எண்ணிப் பாடுவதாக காதலியின் தந்தை கற்பனை செய்கிறார். தன் மகளை இவனுக்கு மணமுடித்தால் எப்படியிருக்கும் என்றும் அவர் பாடல் நடுவே கற்பனை செய்வார். தந்தையாக நடித்தவர் கல்லாப்பெட்டி சிங்காரம்.
பெண்களை ஏமாற்றும் சுமன். ஒருதலையாக காதலிக்கும் பிரதாப். சுமனிடம் ஏமாறும் ராதிகா என்று முக்கோணக் காதல் கதை.பாக்யராஜூக்கு பெயர் கொடுத்த படம். அவரை இயக்குனராகவும் உயர்த்திய திரைக்கதை அறிவு இப்படத்தில் சிறப்பாக வெளிப்பட்டு இருந்தது.ஜேசுதாசின் இளமையான குரல் உச்சரிப்பு இசையை மேம்படுத்துகிறது. அற்புதமான பாடகர் அவர்.
அண்மையில் இப்படத்தின் டிவிடி துல்லியமான பிரிண்ட் வெளியாகியுள்ளது. இதில் மீண்டும் மீண்டும் இப்பாடல் எனது இல்லத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.


Saturday 30 May 2015

பயணம் 3 மும்பை



     





மும்பைக்கு முதலில் போனது 27 அல்லது 28 வது வயதில் .தென் ஆப்ரிக்காவில் ராஜூ என்று எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபனுக்கு அடுத்து எடுக்க நினைத்த படத்திற்கு தலைப்பு வைத்திருந்தார். அந்த தலைப்பு என் தம்பி ராஜூ தென் ஆப்ரிக்கா சென்றதுடன் சரியாகிவிட்டது. அவனை மும்பை விமான நிலையத்தில் வழியனுப்பவே நானும் அம்மாவும் சென்றிருந்தோம். உறவினர் வீட்டில் தங்கினோம். அந்தப் பகுதிக்கு குர்லா என பெயர்.
குர்லாவில் நிறைய சினிமா தியேட்டர்கள் இருந்தன. நான் சிறுவயது முதலே சினிமா பைத்தியம்தான். அப்போது குர்லா ரயில் நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சுவரொட்டி கவனத்தை ஈர்த்தது. லட்சுமிகாந்த் பியாரேலால் கச்சேரி விளம்பரம் அது. கிஷோர் குமார், மகேந்திர கபூர், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, முகமது அசீஸ், ஷபீர் குமார், அனுராதா போட்வால் என பிரபல பாடகர்கள் நடிகர்-நடிகைகள் பங்கேற்பதாக விளம்பரம் .குறைந்தபட்ச டிக்கட் ரூ 100 தான்.(( அப்போது என் அபிமான பாடகர் முகமது ரபி மறைந்துவிட்டார் ))
இரவு 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். வழிகேட்டு குர்லாவிலிருந்து சர்ச் கேட் ரயில் நிலையம் சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற அரங்கில் போய் இசை நிகழ்ச்சியை ரசித்தேன். அப்போது பிரபலமாக இருந்த நடிகைகள் டிம்பிள் கபாடியா  உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி அது.
இரவு 12.30 மணி்க்கு நிகழ்ச்சி முடிந்தது. மனம் மணக்கும் இசையுடன் ரயிலேறி குர்லா வந்து இறங்கும் வரை கவலையே இல்லை. ஆனால் குர்லா ரயில் நிலையத்திலிருந்து வீடு வரை செல்லும் போது இருட்டில் வழியும் புரியவில்லை.வழி கேட்கவும் ஆளில்லை. கால் போன பாதைகளில் நடந்த போது நாய்கள் குரைத்தன. ஒரு கோவில் அருகே பெரிய ஆலமரத்தின் அடியில் பத்து இருபது ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் சீட்டாடிக் கொண்டிருந்தனர். அவ்வளவுதான் குலை நடுங்கிவிட்டேன் ஒருவன் அதட்டி வா என இந்தியில் அழைத்தான். நல்லவேளை இந்தி தெரியும் என்பதால் சரளமாக பேசினேன். புது ஆள் என்றால் மிரட்டுவார்கள் என மும்பைக்காரன் போல சரளமாக இந்தியில் பேசினேன். சினிமா பார்த்துவிட்டு வருவதாக கூறினேன் .இரவில் தனியாக இப்படி வராதே எனக்கூறி அனுப்பிவிட்டனர்.

மீண்டும் பாதை தெரியாமல் தடுமாறி ஒருவழியாக ஒரு குறுக்குப் பாதையில் புகுந்து நான் செல்ல வேண்டிய இடத்தை கண்டுபிடித்துவிட்டேன். அது மும்பையில் என் முதல் இரவு, 18 நாட்கள் அங்கு தங்கியிருந்ததில் அனைத்து பாதைகளும் அந்தப் பகுதியில் அத்துப்படியாகிவிட்டன. அருகிலேயே சாந்தா குரூஸ் விமான நிலையம் இருந்தது. சியான், தாதர், அந்தேரி பகுதிகளும் பரிச்சயமாகிவிட்டன.
கார் ஏற்பாடு செய்து மும்பையின் சித்தி விநாயகர் ஆலயம், மெரீன் டிரைவ்ஸ், கேட்வே ஆப் இந்தியா, தாஜ் ஓட்டல், மகாலட்சுமி கோவில் , பாலி ஹில்ஸ், பான்த்ரா, லிங்கிங் ரோடு , சவுபாட்டி கடற்கரை என அனைத்து இடங்களுக்கும் என்னையும் அம்மாவையும் உறவினர்கள் சுற்றிக்காண்பி்த்து விட்டனர். மீனாட்சி சேஷாத்திரியின் தீவிர ரசிகனாக இருந்த நான் அவர் நடித்த இனாம் தஸ் ஹசார் படத்தை வீட்டுக்கு அருகே இருந்த ஒரு தியேட்டரில் பார்த்து ரசித்தேன்.டிக்கட் அப்போது 20 ரூபாய்
தொடர்ந்து மும்பை ராயல் தியேட்டரில் மேரா சாயா என்ற பழைய படத்தை பார்த்தேன். சுனில் தத், சாதனா நடித்தது.இசை மதன் மோகன்
1 தூ ஜஹான் ஜஹான் சலேகா மேரா சாயா சாத் ஹோகா
2 நைனோ மே பத்ரா சாயே
போன்ற இனிமையான லதா மங்கேஷ்கரின் பாடல்கள் இன்றும் நினைவில்  இருக்கின்றன.

2
மும்பைக்கு இரண்டாவது முறை போனது எனது நிறுவனத்தின் உரிமையாளருடன் சுடிதார் கொள்முதல் செய்ய....அதுவும் 1993ம் ஆண்டு.அன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்.மும்பையில் இறங்கிய போது தாதர் ரயில் நிலையத்தின் வெளியே வெள்ளக்காடு சூழ்ந்திருந்தது. அடை மழை. முழங்கால் வெள்ளத்தில் தலையில் சூட்கேசை வைத்து ஹிந்துமாதா திரையரங்கம் வரை நடந்து சென்றேன். முதலாளி டாக்சி பிடித்துப் போய்விட்டார். நான் தங்குவதற்கு ஹிந்துமாதா திரையரங்கு அருகே உள்ள சிந்திக்களின் தர்மசாலாவில் சிறிய லாக்கர் வசதி இருந்தது. ஹாலில் படுக்கை. ஆனால் அங்கே போவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மழை, வெள்ளம், பசி என கிட்டதட்ட மூன்று மணியளவில் சாப்பிட்டு ஒரு குட்டித்தூக்கம் போட்டால் இரவாகி விட்டது. மாலையில் ஹிந்துமாதாவில் ஒருபடம் பார்த்தேன். படத்தின் பெயர் நினைவில்லை. அனேகமாக அது ஒரு பி கிரேட் இந்திப்படம். நிறைய சண்டைகள்,கற்பழிப்புகள்
அடுத்த சில நாட்களிலேயே மும்பையில் மழைக்காலம் என்றால் எப்படி என்று தெரிந்துவிட்டது. பின்னர் ஒரு முறை அமிதாப்பச்சன் மவுசமி சட்டர்ஜி நடித்த மன்ஜில் என்ற படத்தின் பாடல் காட்சியில் மும்பை மழையை படமாக்கியதைக் கண்டு எனது மழை அனுபவங்களை நினைத்துக் கொள்கிறேன்.
ரிம் ஜிம் கிரே சாவன்
சுலக் சுலக் ஜாயே மன்
என்று கிஷோர் குமார் பாடிய குல்சாரின் பாடல்.
இசை ஆர்.டி.பர்மன்
கிஷோர் குமார் ஒரு நிகழ்ச்சியில் மழையை்ப் பற்றி அறைக்குள் பாடுவதாக அமைந்த இதே பாடல் லதா மங்கேஷ்கர் குரலில் மீண்டும் ஒருமுறை மும்பை மழையில் படமாக்கப்பட்டது.
இப்பாடல் எனக்கு ஏன் மிகவும் பிடித்திருக்கிறது எனப்புரியவில்லை. அமிதாப்பின் கவித்துவமான நடிப்பா,மவுசமி சட்டர்ஜியின் முந்தானை காற்றில் பறக்க ஈர ரவிக்கையுடன் தெரியும் அவர் மார்பழகா, இதமான இசையா. மழையில் நனைய வைத்த ஒளிப்பதிவா அல்லது இவை எல்லாமுமா எனத் தெரியவில்லை. கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர் ஆகியோரின் குரலைப் பற்றி தனியாக சொல்லத்தேவையில்லை அப்பாடலுக்கு அவர் களின் தனித்தனித் குரல்-தனித்தனி பாவனைகள், உச்சரிப்புகளுடன் படமானது ஒரு வரப்பிரசாதம்.

பின்னர் நானே சொந்தமாக தொழில் தொடங்கி நண்பர்கள் தேவராஜன், சூர்யராஜனுடன் மும்பை போயிருக்கிறேன். பலமுறை மும்பை பயணங்கள். மாடி பஸ்ஸில் ஏறும் போது எனது பர்சை பிக்பாக்கெட் அடித்தவன் பர்சை கீழே தவறவிட்டான், அடுத்த பயணி சுட்டிக்காட்ட நான் பர்சை எடுத்து நிமிர்வதற்குள் அவன் தப்பி ஓடிவிட்டான்.
மற்றொரு முறை உல்லாஸ் நகரில் உள்ள 5ம் எண் சந்தையில் பெப்பர் போட்ட அப்பளம் வாங்க பிரபலமான கடை எது எனக்கேட்ட போது ஒருவர் கூப்சந்த் பசாரி கடைக்குப் போகச் சொன்னார்.வழி கேட்ட போது முன்னால் போய்க் கொண்டிருந்த ஒரு பாட்டியைக் காட்டி அவரைப் பின்தொடர்ந்து போகச் சொன்னார். அந்தப் பாட்டி சந்து பொந்து இடுக்குகளில் எல்லாம் புகுந்து மற்றொரு பிரதான சாலையை அடைந்த போது அந்தக் கடை அங்கு இருந்தது.

மற்றொரு முறை மும்பையின் பிரசித்தி பெற்ற சிவப்பு விளக்கு பகுதியான காமாதிபுராவுக்குள் போனேன். எந்த கெட்ட எண்ணமும் இல்லை பணமும் இல்லை. சும்மா பார்க்கத்தான். ஏராளமான அலிகள் மாமா வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். 100 ரூபாய்க்கு கூட பெண்கள் கிடைத்தனர். வீட்டு வாசலில் தலை நிறைய பூவும் உதட்டு நிறைய லிப்ஸ்டிக்கும் தொப்புள் தெரிய சேலையும் அணிந்து பலர் நின்றிருந்தனர் .சிலர் வெறும் உள்பாடி பாவாடையுடன் காட்சியளித்தனர். வீட்டினுள் சிறிய பாய் விரிக்கப்பட்டிருந்தது. குழந்தை அழும் குரல் கேட்டது. திண்ணையில் வயதான பெரியவர் ஒருவர் இருமிக் கொண்டிருந்தார். என்னை அழைத்த ஒரு இளம் பெண்ணின் முகத்தில் சோகம் பவுடரை விட அதிகமாக அப்பியிருந்தது.
ஜெயகாந்தன் எழுதிய இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் கதைதான் ஞாபகம் வந்தது. இதில் டால்ஸ்டாய் எழுதிய ஒரு வாசகத்தை ஜே.கே.மேற்கோள் காட்டியிருப்பார்
விபச்சார விடுதிகளுக்கு செல்லும் போது உங்கள் காதலிகளைத் தேடாதீர்கள், உங்கள் சகோதரிகளைத் தேடுங்கள்.....
இதை ஒரு முறை ஜே.கே.சபையில் கூறிய போது ஆச்சரியத்துடன்  என்னைப் பார்த்து புன்னகைத்தார். அது எந்த கதையில் எழுதினேன் என அவரால் நினைவுகூர முடியவில்லை.என்ன கதை எனக்கேட்டார். சொன்னேன். மேகலா வெளியீடாக வெளியான மாதநாவலான இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும் கதை என்று கூறிய போது எவ்வளவு கூர்ந்து வாசிக்கிறான் பாருங்கள் என்று நண்பர்களிடம் பெருமை பொங்க சொன்னார். அன்று முதல் ஜே.கேவுக்கு என் மீது தனிப்பிரியமே இருந்தது.

காமாதிபுராவிலிருந்து வெளியே வந்த போது பாலியல் இச்சையை விட துயரம்தான் மேலோங்கியிருந்தது. எங்கேயாவது உட்கார்ந்து அழவேண்டும் போல இருந்தது. ஆண்களின் காமவெறி பெண்களின் உடல்தேவை மற்றும் பணத்தேவை பற்றிய சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.என் வாழ்நாளில் ஒருபோதும் பணம் கொடுத்து ஒரு பெண்ணிடம் சுகம் கேட்கமாட்டேன் என்று தோன்றியது.
3
மும்பைக்கு பல பயணங்கள், பல நினைவுகள். ராஜீவ் காந்தி ஸ்ரீபெரம்புத்தூரில்  கொல்லப்பட்ட மே 21ம் தேதி நானும் நண்பர் தேவராஜூம் மும்பை உல்லாஸ்நகரில் தங்கியிருந்தோம். கடைகள் யாவும் அடைக்கப்பட்டிருந்தன. தெருவெங்கும் காங்கிரஸ் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன. தேவராஜூக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாது. அவருடன் தமிழில் பேசவே பயமாக இருந்தது. இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது அப்பாவி சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்கள் போல், ராஜீவ் கொலைக்கு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று நாங்கள் பயந்தோம். குறைவாக பேசி அறைக்குள்ளேயே அதிக நேரம் இரண்டு நாட்களுக்கு பதுங்கியிருந்தோம்.சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. ஆபுஸ் மாம்பழங்களை வாங்கி வந்து மூன்று வேளையும் பிரெட்டும் மாம்பழமும் டீயும் சாப்பிட்டு பொழுதைக் கழித்தோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பியதும் முதல் வேளையாக ரயில் பிடித்து சென்னை திரும்பிவிட்டோம்.
மற்றொரு முறை ரயிலில் சென்னை திரும்பும் போது சரியான திட்டமிடல் இல்லாமல் கையில் இருந்த பணம் எல்லாம் செலவாகி விட்டது. மதியம் குண்டக்கல்லை நெருங்கும்போது பசி வாட்டியது. காலையும் ஏதும் சாப்பிடவில்லை. முன்பின் தெரியாத ஒரு பயணி எங்கள் நிலைமையைப் புரிந்துக் கொண்டு கையில் 200 ரூபாயை திணித்து குண்டக்கல்லில் இறங்கி சென்றுவிட்டார்.அவர் பெயர் கூட சொல்லவில்லை. ரயில்வேயில் பணிபுரிவதாக மட்டும் சொன்னார்.
2008ம் ஆண்டில் தீவிரவாதிகள் மும்பையைத் தாக்கிய செய்திகளை இராப்பகலாக தொலைக்காட்சி செய்திகளில் வடித்த போது மனதுக்குள் ரத்தம் வடிந்தது. நண்பர் தேவராஜனும் எங்க அம்மாவையே சுட்டது போல இருக்கு என வேதனையை வெளியிட்டார்.
என் விக்கியிடம் மும்பைத்தாக்குதல் பற்றி கதை கதையாக சொல்லியிருக்கிறேன். நானா பட்டேகர் நடித்து ராம்கோபால் வர்மா இயக்கிய 26-11 டெரரிஸ்ட் அட்டாக் படத்தையும் டிவிடியில் போட்டு காட்டியிருக்கிறேன் விழிகள் விரிய விரிய அந்த பயங்கரத்தை அவன் புரிந்துக் கொண்டான்.
பல கேள்விகள் கேட்டான். விளக்கம் சொன்னேன். கசாப்பை தூக்கிலிட்டதையும் சொன்னேன்.
கடைசியாக மும்பை சென்றது என் விக்கியுடன். அவனுக்கு இத்தனை பெரிய நகரம் எத்தனையோ ஆச்சரியங்களை வைத்திருந்தது. காரிலேயே அதிகமாக சுற்றினோம். மகாலட்சுமி கோவில், ஹாஜி அலி தர்காவுக்கு போனோம். அவன் தலையில் குல்லாய் அணிந்து செல்பியும் புகைப்படமும் எடுத்து வந்தான்.
கேட் வே ஆப் இந்தியாவில் புறாக்களுடன் அவன் ஓடி விளையாடியதும் தாஜ் ஓட்டலை கோவிலைப் போல் சுற்றி சுற்றி வந்ததையும் குறிப்பிடலாம்.

மும்பையில் பானி பூரி, குல்பி, லஸ்ஸி, பிரியாணி உட்பட எல்லாம் சாப்பிட்டது அவனுக்கு மிகவும் ருசியாக இருந்தது.ஆனால் எல்லாவற்றையும் விட அவன் விரும்பி சாப்பிட்டது பௌவா எனப்படும் அவல் உப்புமாதான்.
உல்லாஸ் நகரிலிருந்து கல்யாணுக்கும் கல்யாணிலிருந்து தாதருக்கும் ரயில் பிடித்து சென்னை திரும்பும் போது கூட்டத்தில் சிக்கினோம். மும்பை மின்சார ரயில்களில் உள்ள கூட்டம் முதல்வகுப்பிலும் குறையவில்லை.
ஒருவழியாக ரயிலைப் பிடித்து சென்னை திரும்பும் போது கடந்து செல்லும் வீடுகளையும் கட்டடங்களையும் ரயில்பாதைகளையும் பார்த்து மும்பைக்கு பை சொல்லிக் கொண்டேன்.
மீண்டும் வருவேன் மும்பை. உன்னுடன் உறவு ஒரு தொடர்கதைதான். அது என்றும் முடிவதில்லை.












Thursday 28 May 2015

பயணம் 2 பெங்களூரு





அண்மைக்காலங்களில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக தமிழ்நாட்டின் கவனம் பெற்ற நகரமாகிவிட்டது பெங்களூரு.
காவிரிப் பிரச்சினை, கன்னடர் தமிழர் அக்கப்போர் என பல்வேறு பிரச்சினைகளும் சென்னைக்கும்-பெங்களூருக்கும் இடையே உள்ள 350 கி.மீ. தூரத்தில் புகைந்துக் கொண்டிருக்கின்றன.
முதன் முறையாக 25 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு நண்பர் சூர்யராஜனுடன் சுற்றுலா சென்றேன். அப்போது எழுத்தாளர் சுஜாதா பெங்களூரில் இருந்தார்.ஒகனேக்கல் பற்றியும், பெங்களூரில் காபரே பார்த்ததையும் பெங்களூரை பெண்களூர் என்றும் அவர் கட்டுரைகள் எழுதியிருந்தார். அதுவே பெங்களூரைப் பற்றிய ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
கபன்பார்க், விதான் சவுதா, மெஜஸ்டிக் சர்க்கிள் ,கெம்பே கவுடா பேருந்து நிலையம், சில திரையரங்குகள், பழைய புத்தகக் கடைகள் எனத் திரிந்து நாங்கள் திரும்பி வந்துவிட்டோம். உணவி்ல் தித்தி்ப்பு கலந்திருந்தது பிடிக்கவில்லை.அன்று அங்கு வாங்கிய வெள்ளரிப்பிஞ்சுகளை சாப்பிட்டு பார்த்துதான் இன்று வரை நான் வெள்ளரியை விரும்பி சாப்பிடுகிறேன்.
அதன் பிறகு பலமுறை பெங்களூரு செல்ல நேர்ந்தது. ஒரு சில காரணங்களுக்காக. தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க ஒருமுறை, குடும்பத்துடன் ஒரு திருமணத்திற்கு சென்ற போது ஒருமுறை, சில உறவினர்களை அங்கு சந்திக்க சென்றபோது ஓரிரு முறை என ஆறேழு தடவை பெங்களூரு போயிருக்கிறேன்.


2007ம் வருடம் மைசூரில் எனக்கு கிடங்குத் தெரு நாவலுக்காக பாஷா பாரதி விருது அறிவிக்கப்பட்டதையடுத்து விருதைப் பெற மனைவியுடன் சென்றேன். விமானம் ரயில் நட்சத்திர ஓட்டலில் அறை உணவு கார் என எல்லா வசதிகளையும் மத்திய அரசின் மொழி ஆய்வு மையமான சி.ஐ.ஐ.எல்
செய்து கொடுத்தது.25 ஆயிரம் ரொக்கத்துடன் எளிமையாக நடந்த விழாவில் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன், நீல.பத்மனாபன், கொல்கத்தா கிருஷ்ணமூர்த்தி , கரம் ஹவா என்ற இந்திப்படத்தின் இயக்குனர் உட்பட பலரை சந்திக்க வாய்ப்பு அமைந்தது. மைசூர் அரண்மனை, அம்மன் கோவில், பிருந்தாவனம் பூங்கா  உள்ளிட்ட இடங்களை பார்த்து காரிலேயே பெங்களூர் வந்து விமானம் மூலம் சென்னை திரும்பினோம்.விமான நிலைய சோதனையில் கையில் இருந்த அவார்டு ஷீல்டு என்ன என அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது.





அதன் பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு 2012ல் குங்குமம் இதழில் பணியாற்றிய போது பேராசிரியர் ஹரிகிருஷ்ணன் அவர்களை பேட்டியெடுக்க அரிச்சந்திர மயானம் அருகே உள்ள ராஜாஜி நகருக்கு அவர் வீடு தேடி மழையில் ஆட்டோவில் சென்றேன். அனுமன் பற்றி அவர் எழுதிய கம்பராமாயண பேருரைகளை கிழக்குப் பதிப்பகம் புத்தகமாக போட்டுள்ளது. அத்தனை அற்புதமான புத்தகம் மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை அது அளித்திருந்தது.
அந்தப் பேட்டியை ஏனோ குங்குமம் ஆசிரியர் நிராகரி்த்து விட்டார். அவர் எனது படைப்புகளை நிராகரிப்பதையே ஒரு வழக்கமாக வைத்திருந்தார். வைதேகி, வெ,நீலகண்டன் போன்றவர்களுக்காக மட்டுமே அவர் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார்.அவர்கள் எதை எழுதினாலும் பிரசுரம் செய்து விட்டார்.அவர்கள் திறமைமிக்கவர்கள் என்பதை நான் மறுக்க மாட்டேன்.

அண்மையி்ல் ஒரு திருமணத்திற்காக பெங்களூரு போன போது ஊரின் ஈர்ப்பும் கவர்ச்சியும் அப்படியே இருந்தது. பெண்கள் அழகழகாக ஆடைகள் அணிந்து நடமாடினார்கள். மல்லேஸ்வரம், மெஜஸ்டிக் சர்க்கிள் போன்ற இடங்களை சுற்றிப்பார்த்து டெம்ப்டேசன் , சப்னா புக் ஹவுசில் சில கன்னட திரைப்பட டிவிடிக்களை வாங்கிக் கொண்டேன்.
உணவு தித்திப்பாகத்தான் இருந்தது. மல்லேஸ்வரம் எட்டாவது கிராசில் ஜனதா ஓட்டலில் மசால்தோசை சாப்பிடும் அளவுக்கு பிடித்திருந்தது. சாம்பாரை விட்டு சட்னியுடன் சாப்பிட்டேன். இங்குதான் எங்கோ அபிநய சரஸ்வதி பழைய நடிகை சரோஜா தேவி இருப்பதாக ஞாபகம். அவரை சந்திக்க ஆவல் இருப்பினும் நேரம் இல்லை.அன்பே வா படத்தில் அவர் பாடிய லவ் பேர்ட்ஸ் பாடலை நினைத்துக் கொண்டே சென்னை திரும்பிவிட்டேன். திரும்பும் போது பேருந்து பயணம் .ஓசூர் மீனாட்சி பவனில் தோசை சாப்பிட்ட போதுதான் பெங்களூர் ஜனதா பவன் தோசையை மறக்கவே முடிந்தது. தித்திப்பில்லாத சாம்பாருடன் தமிழ்நாட்டு தோசை.
பின்னர் ஆம்பூரில் ஸ்டார் பிரியாணி கடையில் ருசியான பிரியாணி சாப்பிட்டு மாலையில் சென்னை வந்துவிட்டேன்.

பெங்களூருவில் திரு.ஹரிகிருஷ்ணன், நண்பர் பாவண்ணன், போன்றோரை சந்திக்க வேண்டும். அருகே தருமபுரி மொரப்பூரில் உள்ள நண்பர் தங்கமணி வீட்டுக்கு போக வேண்டும் என்றெல்லாம் நினைத்தாலும் அது நிறைவேறுவதில்லை

சென்னையைத் தொட்டு பூந்தமல்லியில் மீண்டும் தோசை சாப்பிட்ட போது பெங்களூர் தோசை குமட்டலாக இருந்தது.நினைவிலிருந்து அதை விரட்டி விட முயன்றேன்.

பெங்களூரு எனக்குப் பிடித்த நகரம் என சொல்ல மாட்டேன். கன்னடம் தெரியாமல் அங்கு இருக்க முடியாது. ஆனால் எனக்கு கன்னடம் கற்க ஆர்வம் இல்லை. அதைவிட மலையாளம் கற்று எங்கோ தலைசேரியில் சுற்றித்திரியும் ஆசைகள் உண்டு.

















பயணம் 1 கோயமுத்தூர்







கோவைக்கு முதன் முதலில் எனது 19வது வயதில் சென்னையிலிருந்து வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரசில் மதியம் ரயில் ஏறினேன்.அப்போது டிக்கட் விலை 30 ரூபாய்தான். கையில் 80 ரூபாய் இருந்தது. ரயிலேறிய காரணம் வீட்டை விட்டு ஓடிப்போவது. அப்பாவின் பார்ட் டைம் சம்பளம்தான் எனது கையில் இருந்த பணம். அதற்காக என் அப்பா இன்று வரை என்னை வெறுப்புடன் பார்க்கிறார். அதுபோகட்டும். பயணத்தின் நோக்கம் எனக்குள் மலர்ந்திருந்த ஒரு காதல். அதன் பின்னர் கோவைக்கு இனி போவதில்லை எனுமளவுக்கு பல குழப்பங்கள், துயரங்கள்...ஆனால் காவிரியில் குளிக்கும் போது திருச்சி நண்பன் மதன் தூண்டுதலில் மீண்டும் திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பஸ் ஏறினேன்.டிக்கட் விலை 2 ரூபாய்தான். அங்கிருந்து தாராபுரம் பிறகு கோவை. இதுபோல் நாலைந்து பயணங்கள், வேலைக்கான தேடல்கள், வீட்டில் அந்நியமாதல் போன்ற பல்வேறு தகிப்புகளுடன் இளமைக்காலம் வெந்து வேக, ஆறேழு ஆண்டுகளுக்குப் பின் நான் காதலி்த்த அந்தப் பெண்ணை மணம் முடித்த போது எனக்கு வயது 25. அப்போது எனது ஊதியம் 250 ரூபாய்.
கோவை எனது மாமியார் வீடு அமைந்த நகரமாகி விட்டது. மாமனார் நல்ல மனம் படைத்தவர். ஆனால் அவரால் சம்பாதிக்க முடியவில்லை. சம்பாதித்ததையெல்லாம் குடும்பத்திற்காக செலவழித்து விட்டார் .சற்று ஊதாாிதான். மகளுடைய திருமணத்திற்கு பொட்டு தங்கத்தையும் அவரால் போட முடியவில்லை. அவ்வளவு ஏன் அவர் சாவுக்கே பணம் இல்லை. கிட்டதட்ட பத்தாயிரம் ரூபாய் செலவழித்து அவருக்கு நான் சாவு எடு்த்தபோது 4 ஆயிரம் சம்பாதிக்கும் நிலையை எட்டியிருந்தேன்.

கோவையை அடுத்த பரிணாமத்தில் நான் பார்த்தது தொழில் நிமித்தமாக அங்கு அனுப்பப்பட்ட போது. ஞானியுடன் ஏற்பட்ட நட்பு, விஜயா பதிப்பகம் திரு,வேலாயுதத்தின் வாங்க என்னும் குளிர்ச்சியான அழைப்பு எழுத்தாளர்கள் சி.ஆர்.ரவீந்திரன், ஷாராஜ், வாமு கோமு, நாஞ்சில் நாடன் போன்றவர்களுடன் உருவான நட்பு, பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய கவிஞர் சிற்பி அவருடைய மாணவர்கள் என நீடித்த அந்த நட்பு வட்டத்தால் அடிக்கடி கோவை போய்க்கொண்டிருந்தேன்.
அப்போது மற்றொரு காதல் மலர்ந்தது. எனக்கும் கல்லூரி மாணவி ஒருவருக்கும் உடல் ரீதியாக மலர்ந்த நெருக்கத்தை என்ன செய்வது எனத் தெரியாமல் நாங்கள் வடவள்ளி அருகே உள்ள ஒரு கோவிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
பிரபல மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் மகன் மூலமாக அங்கு குடியிருந்த சிட்டியை  சந்தித்து நாங்கள் பேசினோம்.
பிடி தனபால் நினைவு நூலகத்தில் அவள் புத்தகம் எடுக்கப் போகும்போது நானும் போவேன். கிருஷ்ணா ஸ்வீட்சில் எங்கள் முதல் முத்தத்தை கொண்டாட பால்கோவா வாங்கி பகிர்ந்துக் கொண்டோம்.ஒரு சில நாட்களில் அந்தக் காதல் பிரிந்தது. கண்ணீருடன் பிரித்துக் கொண்டோம். குடும்பம் இடையூறாக இருந்தது. குடும்பத்தை விட்டு பிரிய அவளுக்கும் மனம் இல்லை . காதலித்து மணந்தவளை கைவிட எனக்கும் விருப்பம் இல்லை
அவள் கட்டளையை ஏற்று கோவைப்பக்கம் போவதையே நிறுத்திக் கொண்டேன். எப்போதாவது போக நேர்ந்தாலும் ஓரிரு நாட்களில் சென்னைக்கே ஓடி வந்துவிடுவேன்.வை.கி.துறையன் என்ற அற்புதமான மனிதரை சந்தித்ததுதான் கோவையில் எனக்கு மகிழ்ச்சி தந்தது.அவர் இப்போது எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை.
கடந்த 20 ஆண்டுகளில் சென்னை வாழ்க்கை பல மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்தது. கோவை மெல்ல தூரமாகி சென்று விட்டது.
இந்த பழைய நினைவுகளுடன் கடந்த வாரம் கோவைக்குப் போயிருந்தேன். நாங்கள் நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடினேன். சாய்பாபா காலனியில் நண்பர் ராஜாவின் பழைய புத்தகக் கடைக்குப் போனேன். விஜயா பதிப்பகம் சென்று அங்கு வேலாயுதம் அய்யாவின் மகன் சிதம்பரத்தை சந்தித்தேன். தற்செயலாக அங்கு சி.ஆர். ரவீந்தரையும் சந்திக்க நேர்ந்தது.
கோவை பெருநகரமாக விஸ்வரூபம் எடுத்திருந்தது. நான் சினிமா பார்த்த பல தியேட்டர்களை காணவில்லை. புத்தகக் கடைகள் இருந்த போதும் எனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைக்கவில்லை. அல்லது புத்தகங்களுக்கான தேவை எனக்கு இல்லாமல் போய்விட்டது. ஜானி நீரோ சாகசம் புரியும் முத்துகாமிக்ஸ் மற்றும் சில மாத இதழ்களை மட்டும் விஜயா பதிப்பகத்தில் வாங்கிக் கொண்டேன்.
ரயில் நிலையம் எதிரே ஆர்.ஹெச்.ஆர் ஓட்டலில் சாப்பாடு அருமையாக இருந்தது. டூ வீலர் கிடைத்ததால் ஊரை ஒரு சுற்று சுற்றி விட்டேன். அன்று இரவே சென்னை புறப்பட்டு விட்டேன்.

ஏற்கனவே இதே போல் ஒரு அனுபவத்தை கோவைக்கு சென்று அனுபவித்ததை ஒரு கவிதையாக எழுதியிருக்கிறேன்

என்னைப் போல்
அவளும் வருவதுண்டா
அந்த இடங்களுக்கு
அந்த கணத்துக்கு?


2

கோயமுத்தூர் நகரம் எனக்கு ஏன் பிடிக்கிறது என்ற உளவியல் ரீதியான காரணங்கள் ஒருபுறமிருக்க அந்நகரில் மனிதர்களை மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் பேசும் தமிழ் அழகாக இருந்தது. பெண்கள் செழுமையாக இருந்தார்கள். பிச்சைக்காரர்கள் அதிகமில்லை. திருடர்கள் யாரையும் பார்க்கவில்லை. வீதிக்கு வீதி டாஸ்மார்க் குடிமகன்கள் இல்லை. சிலுசிலுவென குளிர்ந்த காற்று, கோடையிலும் வெக்கை இல்லை.புழுக்கம் இல்லை.உணவு ருசியாக இருந்தது. பேக்கரிகள் பளபளப்பாக இருந்தன. தேநீர் அமிர்தமாக இருந்தது. ஜவுளிக்கடைகள் பெருகியிருந்தன. ஒப்பணக்கார வீதியிலும் ஆர்.எஸ்.புரத்திலும் மக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு உடைகளை வாங்கிச் சென்றனர். வீடுகள், குடியிருப்புகள், கடைகள்,அடுக்குமாடிகள்,வாகனங்கள் பல மடங்கு பெருகியிருந்தன. பேருந்தில் எளிதாக ஏறிச்செல்ல முடிந்தது. ரயில் நிலையம் ஊருக்குள் இருந்தது. ஆட்டோக்காரர்கள் அதிக ஆசை கொண்டவர்களாக இருப்பினும் உழைப்பாளியை மதிக்கும் மனம் காரணமாக பணம் அதிகமாக தருவது பொருட்டாக இல்லை.
கோவைக்கு போய் பத்து நாட்களாவது தங்க வேண்டும். அவளை ஒருமுறையாவது சந்தித்து பேச வேண்டும்.அருகில் உள்ள மேட்டுப்பாளையம் வனபத்திரகாளி கோவிலுக்கு செல்ல வேண்டும். ஊட்டியில் சுற்றித்திரிய வேண்டும், பழனி, உடுமலை, பொள்ளாச்சி,பாலக்காடு போன்ற ஊர்களுக்குப் போக வேண்டும். குருவாயூர் செல்ல வேண்டும், பொள்ளாச்சி நசன், ஷாராஜ் போன்ற நண்பர்களை சந்திக்க வேண்டும். ஞானி அய்யாவை ஒருமுறை சந்தித்து ஒருநாள்  முழுவதும் அவருடன் கழிக்க வேண்டும் என்றெல்லாம் பல ஆசைகள் மனதுக்குள் வட்டமடிக்கின்றன. அவை நிறைவேற விடாதபடி மனமும் பணமும் குறைவுபட்டு போக அடுத்த முறை பார்க்கலாம் என ஒத்திப் போட்டுக் கொண்டே சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறேன். அப்படித்தான் இம்முறையும் சென்னைக்குத் திரும்பினேன்.ஆனால் நினைவுகளில் ஈரம் இருந்தது. கண்ணீரின் ஈரமா காலத்தின் தூரமா எனப்புரியவில்லை












Saturday 23 May 2015

ஹிட்ச்காக்- மரணம் எனும் மர்ம வில்லன்





 


ஆல்பிரட் ஹிட்ச்காக் 1899ம் ஆண்டி ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தார்.பொதுவாக 13 என்பது மேற்கத்திய உலகினருக்கு அதிர்ஷ்டமில்லாத எண்.

ஆனால் இவருக்கு இதுவே ராசியான எண்ணாக அமைந்துவிட்டது.

பிரிட்டனில் சில மௌனப்படங்களை இயக்கிய பிறகு அவர் ஹாலிவுட்டுக்கு 
வந்தார்.1956ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர் சினிமா கலையின் புதிய 
சகாப்தத்தை உருவாக்கினார். 

ரசிகர்களை திகிலடைய வைக்கும், 
முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட 
திரைக்கதைகளையே அவர் படமாக்கினார். 

ஆனாலும் காட்சி வழியே கதை 
சொல்லும் பாணியால் உலகையே வியக்க வைத்தார். தஸ்தவஸ்க்கியின் கிரைம் அன்ட் 
பனிஷ்மென்ட் எப்படி ஒரு மர்ம நாவல் போல தெரிந்தாலும் அதைக் கடந்த 
தத்துவார்த்தப் பிரச்சினைகளைப் பேசுகிறதோ அதைப் போலவே, ஹிட்ச்காக்கின் 
திரைப்படங்களும் தத்துவ சாயை கொண்டிருந்தன. 

மரணபயம், அச்சம், துரோகம் போன்ற காரணங்களால் அந்தப் படங்கள் உளவியல் மற்றும் சமூகவியல் ஆவணங்களாகவும் கருதப்பட்டன.

ஹிட்ச்காக் ஹாலிவுட்டுக்கு வந்த போது ஸ்டூடியோ முறை பிரபலமாக 
இருந்தது.தயாரிப்பு, விநியோகம், திரையிடுதல் போன்ற சகல விஷயங்களிலும் 
ஈடுபட்டு பிரம்மாண்டமான நெட்வொர்க்கை கொண்டிருந்த 5 முன்னணி 
ஸ்டூடியோக்களில் நடிகர்கள் உட்பட அனைவரும் மாதச் சம்பளத்துக்கு வேலை 
பார்த்துக் கொண்டிருந்தனர். ஸ்டூடியோ முத்திரைக்காகவே படங்கள் பாராட்டும் 
புகழும் பெற்றன.

தவறான குற்றத்தின் வலைக்குள் வந்து சிக்கிக் 
கொள்ளும் ஹிட்ச்காக்கின் கதாபாத்திரங்கள் தாஸ்தயவஸ்கியின் நாவல் 
பாத்திரங்களுக்கு நிகரான மதிப்பைப் பெற்றன.

ஆசை, பொறாமை, சந்தேகம் போன்ற குணங்களால் ஏற்படக் கூடிய வன்முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உணர்ச்சியின் மிகுதியால் நிகழ்ந்துவிடும் கொலை போன்ற குற்றங்களின் மறுபக்கத்தை ஹிட்ச்காக்கின் படங்கள் ஒளியூட்டின.

இதனால்தான் தாஸ்தயவஸ்கி, காப்காவுக்கு இலக்கியத்தில் உள்ள இடம் சினிமாவில் ஹிட்ச்காக்குக்கு உண்டு என்றார் திரைப்பட மேதை ட்ரூபோ.

ஹிட்ச்காக்கை பேட்டி கண்ட அவர் அதை ஒரு புத்தகமாக்கியிருக்கிறார். 
திரைப்படத்தின் நுட்பங்களை அறிய விரும்பும் ரசிகர்களுக்கு அந்தப் படம் ஒரு 
பிரமாதமான ஆவணம். 

திரைப்படம் குறித்த ஹிட்ச்காக்கின் ஆழமான 
எண்ணங்கள் அதில் பதிவாகியுள்ளன.அவருடைய திரைக்கதை உத்திகள் ரசிகர்களுக்கு 
அதிகபட்ச திகிலையும் தவிப்பையும் ஏற்படுத்தும் நோக்கம் உடையவை. 

அழகான பெண்களை கொலை செய்வதற்கு ஏற்ற கதாபாத்திரங்கள் என்று தனது படப் பாத்திரங்களைப் பற்றி ஹிட்ச்காக் கூறுகிறார்.

ஓர் அழகான பெண் அநியாயமாக கொலை செய்யப்படும் போது ஏற்படும் அனுதாபம் 
மொத்தமும் அவளுக்கு கிடைத்துவிடும் என்ற அவரது கணிப்பு சரியானதுதான். 

சைக்கோ படத்தில் கதாநாயகி ஷவரில் குளி்க்கும்போது கொலை செய்யப்படும் அந்த 
பிரசித்திப் பெற்ற காட்சி சினிமா ரசிகர்களால் மிகவும் சிலாகிக்கப்படுகிறது.

அழகான கழுத்து வெட்டுவதற்கு ஆசையைத் தூண்டுவது என்ற விதமாக படுகொலை 
படங்களின் தந்தையான ஹிட்ச்காக் கூறுவார் என்றாலும் அவர் உண்மையில் 
போலீஸ்காரர்களைப் பார்த்தால் பயந்த சுபாவம் உடையவராகவே இருந்தார்.

ஒரு படத்தின் வில்லன் எவ்வளவு வெற்றிகரமாக செயல்படுகிறானோ அந்த அளவுக்கு படம் வெற்றி பெரும் என்பது அவர் கணிப்பு. 

மிகச் சாதாரணமான பின்புலங்களில் மிக அதீதமான நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக காட்டுவது அவருக்குப் பிடித்தமானது. 

இருள் கொண்ட திகிலான ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒரு கொலை நடப்பதைக் 
காட்டுவதை விட மக்கள் புழுங்கும் இடத்தில், கூட்டத்தின் இடையே வில்லன் 
புகுந்து கொலை செய்து தப்பிச் செல்வது பரபரப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு 
அறிந்த ஹிட்ச்காக் இந்த உத்தியையே பின்பற்றினார். 

தி மேன் ஹூ நியு டூமச் படத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் கொலை நடக்கும் போது ஏற்பட்ட பரபரப்பை நினைத்துப் பாருங்கள். 

ரசிகர்களை அது அந்தளவுக்கு திடுக்கிட வைத்தது.

தனக்கு வலுவான விஷூவல் மைன்ட் இருப்பதாக ஹிட்ச்காக் ஒருமுறை கூறினார். 

படத்தின் திரைக்கதை தயாரானதும் அதை முழுவதுமாக காட்சி வடிவில் கற்பனை செய்துக் கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு அந்த திரைக்கதையை புரட்டிக் கூடப் பார்க்க மாட்டாராம். அதை தன்
உள்ளத்தால் அணு அணுவாக அறிந்து வைத்திருப்பதாக அவர் கூறுவார்.

ஹிட்ச்காக் படங்களில் பெண்களுடனான மனித உறவுகளுக்கு கூடுதல் அழுத்தம் தரப்பட்டிருந்தது.

குறிப்பாக தாயுடன் மனிதன் கொள்ளும் உறவு அவருடைய படங்களில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.

நடிகர்களை மந்தையைப் போல் நடத்தியவர் என்று ஹிட்ச்காக் மீது புகார் உண்டு.

ஆனால் நடிப்புக்கு என வந்துவிட்ட பிறகு அவர்கள் திரைக்கதைக்கு நியாயம் 
செய்ய வேண்டும் என்றும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் 
வலியுறுத்தியவர் ஹிட்ச்காக்.

60 ஆண்டு திரையுலக வாழ்வில் 53 படங்களை இயக்கியவர் ஹிட்ச்காக்.

Rear Window, A Man who knew too much, 39 Steps, Psycho, Vertigo, Rebecca போன்ற படங்கள் அவருடைய சாதனைகளாக கருதப்படுகின்றன.

அகடமி விருதுகள் அவருக்கு பலமுறை நிராகரிக்கப்பட்ட போதும் ஸ்பெல் பவுண்ட் என்ற படத்தின் இசைக்கு அகடமி விருது கிடைத்தது.

கலிபோர்னியாவில் தமது இறுதிக்காலத்தைக் கழித்த அவர் 80 வது வயதில் 1960ம் ஆண்டில் காலமானார். 

எந்த வித திடுக்கிட வைக்கும் மர்மம் இல்லாமல் இயற்கையாகவே அவர் உயிர் பிரிந்தது. 

ஆனாலும் மரணமும் எப்போது வரும் என்று தெரியாத ஒரு மர்ம வில்லன்தானே.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...