Monday 30 April 2012

காதலியைக் கொல்லும் வெறி

அண்மையில் வெளியான திரைப்படப் பாடல்கள் பலவற்றில் காதல் தோல்வி, பெண்களால் ஏமாற்றப்பட்ட ஆண்கள், கொலைவெறி போன்ற சப்ஜெக்ட்டுகள் இடம்பிடித்துக் கொண்டிருக்கின்றன. இது முந்தைய காலத்திலும் இருந்தது. எங்கிருந்தாலும் வாழ்க பாடல்தான் தோற்றுப்போன காதலர்களின் தேசிய கீதமாக இருக்கிறது. ஆனால் ஒரு நுட்பமான வித்தியாசத்தை அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் இடையே நம்மால் உணர முடிகிறது.
முந்தைய தலைமுறை ரசித்த காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் பாட்டில் சுய இரக்கம் எஞ்சியிருப்பதை காணலாம். மலரே மலரே நீ யாரோ வஞ்சனை செய்தவர் தான் யாரோ...உன்னை சூடி முடித்ததும் பெண்தானே பின் தூக்கி எறிந்ததும் அவள்தானே என்று ஏ.எம்.ராஜா அருகில் வந்தாள் பாடலில் பாடியதும் சுய இரக்கம்தான். சொன்னது நீதானா என்று உருகும் பெண் குரல், நீயில்லாத உலகத்தில் நிம்மதி இல்லை என்றும் எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா என்றும் காதலால் கசிந்துருகியது. ஆணுக்கு பெண்ணாலும் பெண்ணுக்கு ஆணாலும் காதலில் இன்பமும் துன்பமும் ஏற்படுவது சங்க காலம் தொட்டும் அதற்கு முன்பும் இருந்தது என்றும் கூறலாம். ஆதாமின் முதுகெலும்பை உடைத்துத்தானே கடவுள் பெண்ணைப் படைத்தான்.
ஆனால் முன்பெல்லாம் காதலுக்காக கசிந்துருகிய காதலர்கள் இப்போது கொலை வெறிக்கு மாறியது எப்படி. அதுதான் இந்த தலைமுறையிடம் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய மாறுதல்.
கண்ணதாசனும் வாலியும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் பாட்டு எழுதிய காலங்களில் பெண் என்பவள் ஆணுக்குத் துன்பம் அளிப்பவளாக இருந்தாள். அதனால்தான் வசந்தமாளிகையில் சிவாஜிகணேசன், எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று கதறினார். புதிய பறவையில் பெண்ணைப் படைத்து கண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே என்று சபித்தார். காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளை தண்டிக்க என்ன வழி என்று அதே வசந்தமாளிகையில் கேட்டார் கண்ணதாசன். அதே போல வானம்பாடியில் கடவுளை அழைத்து வந்து காதலில் மிதக்க வைத்து ஆடடா ஆடு என்று ஆட்டி வைப்பேன் என்றும் அவன் பெண்குலத்தைப் படைக்காமல் நிறுத்தி வைப்பான் என்றும் கவியரசின் பேனா எழுதியது.
அன்பே வா படத்தில் பாடல் எழுதிய வாலி வான்பறவை தன் சிறகை எனக்குத் தந்தால் வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே காதலை வாழ வைப்பேன் என்றார்.
இந்தக் காதலர்கள் எல்லோரும் பெண்ணை கொல்ல வேண்டும் என்றும் பழிவாங்க வேண்டும் என்றும் கூறவில்லை. அளவற்ற காதலால் கடவுளையே திட்டினாலும் காதலியை குறை கூறவில்லை. காதல் உண்மையாக இருந்ததுதான் காரணம்.
ஆனால் இப்போதைய பாடல்களில் எவன்டி உன்னைப் பெத்தான் கையில் கிடைச்சா செத்தான் என்றும் அடிடா அவளை வெட்டுறா அவளை தேவையே இல்லை என்றும், வை திஸ் கொலைவெறிடி என்றும் வரிகள் இடம்பெறுகின்றன. இதனை இளைய தலைமுறையினர் பித்துப் பிடித்தது போல பாடித் திரிகின்றனர்.
என்னதான் நடக்கிறது.? ராணி இதழில் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தலைவர் பேட்டியளித்தார். அதில் ஆண்கள்தான் இப்போது பெண்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
பெண்களின் காதலில் உண்மை இல்லை. பாய்பிரண்டு செலவு செய்பவனாக மாறி விட்டான். போரடித்தால் ஈசியாக கழற்றி விட்டுவிடுவார்கள். செல் நம்பரை மாற்றுவதும் இடத்தை மாற்றிக் கொள்வதும் பெண்களுக்கு கை வந்த கலை. போனால் போகட்டும் என்று தொல்லை தராத சிலரை கட் பண்ணாவிட்டாலும் அவனை துன்புறுத்த வேறு வழிகளை கையாள்வார்கள். அவன் எதிரிலேயே வேறு பாய்பிரண்டுகளுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். வண்டியில் ஒருவனுடன் போகும்போதே இன்னொருவனுடன் மொபைலில் சிரித்தபடி போகும் பெண்களை சாலையில் நிறைய காண முடிகிறது.
அண்மையில் பார்த்த காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு பாட்டு வருகிறது. இட்ஸ் ஓவர் .இட்ஸ் கான் என்று அந்தப் பாட்டு போகிறது. உறவு முடிந்துவிட்டதால் பல ஆண்கள் இப்படித்தான் பெண்களை எண்ணி எண்ணி புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். காதலிக்காக தாஜ்மகால் கட்டியவன் இருக்கான். ஆனால் ஒரு செங்கல்லாவது எடுத்து வச்ச பொண்ணு இருக்காளா என்றும் ஒரு சினிமா பாட்டு கேட்கிறது.
அஜித் நடித்த தீனாவிலும் பெண்கள் உள்ளவரை ஆண்கள் ஜெயிப்பதில்லை என்று ஒரு வரி வருகிறது. சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்திலும் எம்மா எம்மா காதல் பொன்னம்மா பாட்டும் அதற்கு முன்பே மௌனம் பேசியதே படத்திலும் பெண்களின் துரோகம் பற்றி பாடித் தீர்த்து விட்டார். உனக்கும் எனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காதென்றாய் என விஜய்யும் யூத் படத்தில் கேட்டார்.
நான் ஒரு ராசியில்லாத ராஜா என்று டி.ராஜேந்தர் போல பாட இன்றைய தலைமுறை தயாராக இல்லை. எவன்டி உன்னைப் பெத்தான் என்றுதான் சிம்பு பாடுகிறார். இந்த மாற்றம் பெண்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றம் என்றுதான் தோன்றுகிறது.

பெண்களே ஜாக்கிரதை. ஆண்களின் கொலைவெறியை புரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் பின்னால் ஆண்களின் கண்ணீர் மட்டுமில்லை. ஆசிட் பாட்டில்களும் அரிவாள்களும் சுத்தி சுத்தி வருகின்றன.

அண்மையில் சிம்புவின் பாடலுக்காக அவரை போலீஸ் தேடிக் கொண்டிருக்கும் போது முன்பு எழுதிய இ்க்கட்டுரை அர்த்தமுள்ளதாகியுள்ளது.


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...