Friday 20 April 2012

ரெய்னர் மரியா ரில்கே கவிதைகள்

இருட்டிலிருந்து நான் வந்தேன். எல்லா தீச்சுவாலைகளை விடவும் உன்னை நான் நேசிக்கிறேன் இருளே.! தீ எல்லோருக்கும் ஒளிவட்டங்களை ஏற்படுத்துகிறது. வெளியே உள்ள யாரும் அதனுள்ளே வசிக்க முடியாது. ஆனால் இருள் எல்லாவற்றையும் உள் இழுத்துக் கொள்கிறது. சகல அதிகாரங்களும் மனிதர்களும் அதில் அடங்கிப் போகின்றன. எனக்கு இரவுகளில் நம்பிக்கை உண்டு. முதலில் என் வாழ்க்கை என்னிடம் நல்லவிதமாகத் தான் இருந்தது. அது என்னை கதகதப்புடன் வைத்திருந்தது. தைரியம் அளித்தது. அப்படித்தான் அது எல்லா இளைஞர்களிடமும் உள்ளது. ஆனால் எனக்கு எப்படி தெரியும் ? வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாமல் நான் இருந்தேன். ஆண்டுக்கு ஆண்டு அது ஒன்றுமில்லை என்று ஆனது. நல்லதாக புதிதாக ஏதுமில்லை. பிரமிப்பு தருவதாகவும் இல்லை. மையம் இரண்டாக பிளவுபட்டது போல் இருந்தது. அது அதன் குற்றமல்ல. அது என் குற்றமும் அல்ல. இருவரிடத்திலும் அதிகமான பொறுமை இல்லை. மரணத்திடமும் அவகாசம் இல்லை. அது வருவதை நான் கண்டேன். என்ன கோரமான காட்சி அது. அது வந்து என்னை எடுத்துச் சென்றது. என்னுடையது என்று கூறத்தக்க எதையும் அது தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை. என்னுடையது என்று எனக்கு சொந்தமாக என்ன இருந்தது? என் துயரம் கூட என்னுடையதில்லை. அது விதி கொடுத்த கடன். விதி மகிழ்ச்சியை மட்டும் விரும்புவதில்லை. அது வலியையும் அலறல்களையும் கேட்டுப் பெறுகிறது. அதுவும் பாதி விலைக்கு கேட்கிறது. விதி என்னிடமிருந்து யாவற்றையும் இலவசமாகப் பெற்றுக் கொண்டது. நான் காலியானதும் அது வெளியேறியது. கதவு மட்டும் திறந்தே கிடந்தது. முதலில் பால்யகாலம் எல்லைகளற்று, கட்டுப்பாடுகளற்று, இலக்குகளற்று.பிறகு திடீரென பயங்கரம். வகுப்பறைகள், ஆசிரியர்கள். எல்லைகள், ஆக்ரமிப்புகள். பெரும் இழப்பிலும் உணர்ச்சியிலும் விழுதல் தோல்விகள் நசுக்கப்பட்டவன் இப்போது நசுக்குகிறான். தனது தோல்விக்கு அடுத்தவரை பழி தீர்க்கிறான். நேசிக்கப்பட்டு, அஞ்சப்பட்டு, அவன் மீள்கிறான், மல்லுக்கட்டி போராடி ஜெயிக்கிறான். பிறரை அடக்குகிறான். பிறகு வெளிச்சத்தில் அவன் தனித்து நிற்கிறான். முதலிடத்தை நோக்கிச் செல்வதாக நினைப்பு.... அப்போது கடவுள் தன் மறைவிடத்திலிருந்து வெடித்தெழுகிறார். தமிழாக்கம்- செந்தூரம் ஜெகதீஷ்

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...