Thursday 19 April 2012

மணிக்கொடி எழுத்தாளர்- ந.பிச்சமூர்த்தி

தமிழ் புதுக்கவிதைக்கு பாரதிக்குப் பின்னர் அடித்தளம் அமைத்து வடிவமைத்ததில் ந.பி.யின் பங்கு குறிப்பிடத்தக்கது. மணிக்கொடியில் ந.பி எழுதியதென்னவோ 12 கவிதைகள்தான். ஆனால் இதுதான் தமிழின் ஆரம்பக்கால புதுக்கவிதை. இரட்டையர்கள் என்று அழைக்கப்படும் கு.ப.ராவும் நபியைப் போல் மணிக்கொடியில் கவிதைகள் எழுதிய போதும் கவிதைகளை விட கதைகளால் அதிகம் பேசப்பட்டார். இதே போல் ந.பி.யும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

 காபூலிக் குழந்தைகள், வானம்பாடி, பதினெட்டாம் பெருக்கு போன்ற கதைகள் தமிழ்ச்சிறுகதையின் தரத்தை உலக அளவுக்கு உயர்த்தியவை.
தமிழ்நாட்டின் தாகூர் என்றழைக்கப்பட்டவர் பிச்சமூர்த்தி.கும்பகோணத்தில் நடேச தீட்சிதர்-காமாட்சியம்மாளுக்கு நான்காவது மகனாக பிறந்தவர் ந.பி. அவருக்கு வேங்கட மகாலிங்கம் என்ற பெயர் சூட்டப்பட்டது. பள்ளிப்படிப்பும் பட்டப்படிப்பும் முடித்த ந.பிச்சமூர்த்தி சென்னை சட்டக் கல்லூரியில், படித்து வழக்கறிஞரானார். பின்னர் நவ இந்தியா பத்திரிகையிலும் பணியாற்றினார்.
வ.ரா. இயக்கிய ஸ்ரீராமானுஜர் என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்த ந.பிச்சமூர்த்தி ஆரம்பத்தில் ஆங்கிலத்தில்தான் கதைகளை எழுதிவந்தார். மேடையில் பாரதியின் பாடல்களைப் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர், கண்ணன் பாடல்களை படித்த பரவசத்தில் இனி தமிழில் மட்டும் எழுத வேண்டும் என்று உறுதியை மேற்கொண்டார்.வால்ட் விட்மனின் புல்லின் இதழ்களைப் போல தமிழிலும் கவிதைகளைப் படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் 1934ம் ஆண்டில் செய்யுள், தளை, எதுகை மோனை போன்ற விலங்குகளை உடைத்தெறிந்து கவிதையை விடுதலை செய்தார்.ந.பிச்சமூர்த்தி எழுதிய காட்டு வாத்து, குயிலின் சுருதி, வழித்துணை ஆகிய கவிதைத் தொகுப்புகள் அவரது வாழ்நாளிலேயே அச்சாகியுள்ளன. சி.சு.செல்லப்பா நடத்திய எழுத்து இதழ் புதுக்கவிதையை இயக்கமாக வளர்த்தது.
அறிவியல் புனைகதைக்காக சுஜாதாவை சிலாகிக்கும் நமக்கு அத்தகைய மரபையும் தமிழில் தொடங்கியவர் ந.பிச்சமூர்த்திதான் என்றால் ஆச்சரியமாக தெரியும். உண்மைதான். அவருடைய விஞ்ஞானக் கதையில் ரோபோவும் வருகிறது.அறிவியலை மனித வாழ்வின் அழிவுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று அறத்தையும் அறிவியலையும் இணைக்கிறார் பிச்சமூர்த்தி. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றியும் பிச்சமூர்த்தி எழுதியிருப்பதை அசோகமித்திரன் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை சாகித்ய அகடமி வெளியிட்டுள்ளது.
ந.பிச்சமூர்த்தி சென்னையில் மூன்று மகள்களுடன் வாழ்ந்து 1976ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி காலமானார். அவருடைய 136 சிறுகதைகள் ஞானக்கூத்தன் அழகிய சிங்கர் ஆகியோரின் முயற்சியால் மதிநிலையம் மூலம் மூன்றுதொகுப்புகளாக வந்துள்ளன. அதில் 50க்கும் மேற்பட்ட கதைகளை நான்தான் தேடிக் கொடுத்தேன்.
( கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதையல் என்ற பெயரில் வெளியான நிகழ்ச்சி. திரு.ஞானக்கூத்தனின் பேட்டியும் இடம்பெற்றது )

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...