Monday 3 August 2015

இந்திய சினிமா - வழி தெரியாத வழிகாட்டி -Dev Anand's GUIDE

ஆர்.கே.நாராயண் எழுதிய கைடு கதையை படமாக்கி நடித்தவர் தேவ் ஆனந்த். அந்தப் படம் சினிமா வரலாற்றில் ஒருமுக்கியமான படம்.குமுதம் தீராநதி ஆகஸ்ட் இதழில் நான் எழுதிய கட்டுரை இது......




நடிகன் இயக்குனராகவும் இருக்க முடியும் என்பதை பாலிவுட்டில் பலர் நிரூபித்துள்ளனர். இதில் ராஜ்கபூர், தேவ் ஆனந்த், குருதத், பிரோஸ் கான், மனோஜ்குமார் போன்றோரின் படங்கள் குறிப்பிடத்தக்கவை.
தேவ் ஆனந்தின்  இளைய சகோகதரர் விஜய் ஆனந்தும் மூத்த சகோதரர் சேத்தன் ஆனந்தும் நடிகர்கள்தாம். அவர்கள் இருவரும் சில நல்ல படங்களையும் இயக்கியுள்ளனர். இந்த சகோதரர்களில் ஒருகட்டத்தில் தேவ் ஆனந்துக்கும் சேத்தன் ஆனந்துக்கும் முரண்பாடு வலுத்தது. ஆர்.கே.நாராயணின் தி கைடு நாவலை படமாக்க நினைத்திருந்த சேத்தன் ஆனந்த் அந்தப் படத்திலிருந்து விலகி வேறொரு படம் எடுக்கப் போய் விட்டார். அதனால் தனது இளைய சகோதரனுக்கு படம் இயக்கும் வாய்ப்பை அளித்தார் தேவ் ஆனந்த்.திரைக்கதையை இருவரும் எழுதினார்கள். வஹிதா ரஹ்மான் கதாநாயகியாக நடித்தார். இசை எஸ்.டி.பர்மன். பாடல்கள் ஷைலந்தர்.
இப்படத்தின் ஆங்கில பதிப்பும் ஒன்று தயாரிக்க தேவ் ஆனந்த் திட்டமிட்டார். பெர்ல் எஸ் பக் என்ற ஆங்கில எழுத்தாளர் கதைவசனம் எழுத தேட் டானியலவஸ்கி என்ற இயக்குனர் இயக்குவதாக முடிவானது. வஹிதா ரஹ்மானுக்கு ஆங்கிலப் பயிற்சியையும பெண் எழுத்தாளரான பெர்ல் எஸ் பக் செய்துக் கொண்டிருந்தார்.
இந்தப் படத்தை தயாரிக்கும் போது நிகழ்ந்த சில சம்பவங்களை தேவ் ஆனந்த் தமது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். சேத்தன் ஆனந்துடன் வலுத்த மோதலால் படப்பிடிப்பில் தமது கதாபாத்திரத்தில் ஈடுபாட்டுடன் நடிக்க முடியாமல் போன தேவ், முதலில் ஆங்கிலப்படத்தை முடிக்க முடிவு செய்தார். இந்த முடிவை அறிவித்ததும் சேத்தன் ஆனந்தும் ஹகீகத் என்ற படத்தை நடிகர் ராஜ்குமாரை வைத்து இயக்க சென்று விட்டார். அப்போதுதான் இந்திப்படத்தை இயக்க தமது கோல்டி என்ற தம்பியான விஜய் ஆனந்தை இயக்குனராக்க தேவ் ஆனந்த் முடிவு செய்தார்.
இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சியளித்தது. பைத்தியக்காரத்தனம் என்றனர். இத்தனை பெரிய படத்தை இவர் தாங்குவாரா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு தேவ் ஆனந்த் கூறிய விளக்கம்இது "மகத்தான கலைப்படைப்புகள் யாவும் பைத்தியக்காரத்தனத்திலிருந்து தோன்றியவைதாம். உன்னுள்ள பித்தின் ரேகை ஒன்று ஓடிக்கொண்டிருக்க வேண்டும், இயல்புகளிலிருந்து அது தளைகளை உடைத்துக் கொண்டு செல்ல வேண்டும்" அத்தகைய பைத்தியக்கார கலைஞர்கள்தாம் வரலாற்றைப் படைக்கிறார்கள் என்று தேவ் ஆனந்த் உறுதியாக நம்பினார்.1965ஆம் ஆண்டு வெளியாகி இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துவிட்டது.
கைடு படம் என்ன சொல்கிறது?
ராஜூ ஒரு சுற்றுலா வழிகாட்டி.தொல்பொருள் ஆய்வாளரான ஆங்கிலேயர் மார்க்கோ தமது இளம்  மனைவி ரோசியுடன் ஆராய்ச்சிக்காக வருகிறார்.கணவரின் ஆய்வு காரணமாக தனிமைக்கு தள்ளப்படுகிறாள் ரோசி. சுற்றுலா வழிகாட்டியான ராஜூ அவளை நெருங்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. அப்போது ரோசியின் கடந்த காலத்தை அவன் அறிகிறான். ரோசி ஒரு வேசியின் மகள். தாயைப் போல தொழில் செய்ய மனமில்லாமல் ஒருவனுக்கு மனைவியாக வாழ ஆசைப்படுகிறாள். இதையடுத்து நிறைய பணம் வாங்கி கிழவரான மார்க்கோவுக்கு அவள் தாய் மணமுடித்து விடுகிறாள். மார்க்கோவுடன் ரோசி மகிழ்ச்சியாக இல்லை. அவனிடமிருந்து விலக நினைக்கிறாள். ரோசியை ராஜூ தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான், சமூகம் அவளை ஒரு விலைமாதுவின் மகளாகவே பார்க்கிறது. அவள் கணவர் மார்க்கோவும் ரோசியைத் தேடி வருகிறார். அப்போது ராஜூவுக்கு வருமானம்இல்லை. வசதி இல்லை. வேறு வழியில்லாமல் ராஜூவுக்கு ஏற்படும் அவமதிப்பையும் துன்பத்தையும் தவிர்க்க ரோசி மீண்டும் கணவருடன் செல்கிறாள். மனமுடைந்த ராஜூ பணம் சம்பாதிக்கும் வெறியுடன் ஒரு மோசடி வழக்கில் சிக்கிக் கொள்கிறான்.பணம் கையாடல் செய்ததாக அவன் கைது செய்யப்படுகிறான். 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
சிறையிலிருந்து விடுதலையான ராஜூ மன நிம்மதியின்றி அலைகிறான்.
சுற்றுலா வழிகாட்டியான ராஜூவுக்கு தன் வாழ்க்கையை எந்த திசையில் நகர்த்துவது என்று வழி தெரியவில்லை.துறவு மேற்கொள்ள முடிவு செய்கிறான். ஆன்மீகத்தில் அவன் நாட்டம் அதிகரிக்கிறது. இதனால் காவி கட்டி அவன் ஊர் ஊராகத் திரிகிறான்.
துன்பம் இல்லை, இன்பமும் இல்லை
நாட்களும் இல்லை, உலகங்களும் இல்லை
மனிதனும் இல்லை, இறைவனும் இல்லை
நான் மட்டுமே இருக்கிறேன். நான். நான். என்ற தரிசனம் அவனுக்கு ஏற்படுகிறது.
ஓரிடத்தில் அவன் ஒரு பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறான். அப்போது அவன் சொன்ன வாக்கு பலித்தது என்பதால் அவனிடம் விசேஷமான சக்தியிருப்பதாக ஊர் நம்புகிறது.
அந்தப் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. மழை இல்லை. விவசாயிகள் பட்டினி கிடக்கிறார்கள். அவன் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வேண்டுதல் செய்தால் மழை பெய்யும் என உள்ளூர் பூசாரிகள் வதந்தியைக் கிளப்பி விட மக்கள் ராஜூ மீது தங்கள் நம்பிக்கையைத் திணிக்கிறார்கள்.மக்களின் அன்பு அவனை ஆட்கொள்கிறது. ஒருபுறம் ரோசியும் அவன் தாயும் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தனது பாவங்களைத் தீர்க்க ஒரு புனிதமான காரியத்திற்காக உண்ணாவிரதம் இருப்பது என ராஜூ முடிவு செய்கிறான். மக்களின் வாழ்க்கைக்காக தனது உயிரைத் தியாகம் செய்ய முடிவு செய்ய ராஜூ விழிப்புணர்வை அடைகிறான். 12 வது நாளில் அதிசயமாக மழை பெய்கிறது. ஆனால் ராஜூவின் ஆன்மா இறைவனுடன் கலந்துவிடுகிறது. அவன் உடலைக்கண்டு ரோசி கதறி அழுகிறாள்.
ஆன்மா இறப்பதில்லை, அதன் உடல் மட்டுமே இறக்கிறது என்ற பகவத் கீதையின் சாரத்துடன் படம் முடிகிறது.
தேவ் ஆனந்த் இப்படத்தில் நடித்த போது அவர் நடித்த ஹம்தோனோ, சிஐடி, ஆஸ் பாஸ், அஸ்லி நக்லி, ஹவுஸ் நம்பர் 44 போன்ற பல படங்கள் சக்கைப் போடு போட்டன. உச்சத்தில் இருந்த அவர் காவி கட்டி நடித்து கடைசியில் இறந்துவிடுவதாக கதை அமைக்கப்பட்டால் படம் ஓடாது என்று பலரும் எச்சரித்தனர். ஆனால் தேவ் ஆனந்த் படத்தின் கதை மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். திருமணமான கதாநாயகியை காதலிப்பதையும் இந்திய மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று ஜாம்பவான்கள் பலர் தேவ் ஆனந்தை எச்சரித்தனர். ஆனால் இந்திய மக்கள் இக்கதையை ஏற்கும் மனநிலைக்கு தயாராகி விட்டதாக நம்பினார் தேவ் ஆனந்த்.
அடுத்தவன் மனைவியை காதலிப்பது, காதலியால் நிராகரிக்கப்படுவது, குற்றம் புரிவது, சிறை செல்வது, ஆன்மீக விழிப்பைப் பெற்று பொதுமக்களுக்காக தனது உயிரைத்தியாகம் செய்வது என பல தளங்களுக்கு நகரும் இப்படம் தேவ் ஆனந்த் என்ற மகத்தான நடிகரை புடம் போட்ட பொன்னாக மாற்றியது. மிகை உணர்வுகள் இல்லாத யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் தேவ் ஆனந்த்.





இப்படத்தின் கதாநாயகி வஹிதா ரஹ்மான் படத்தில் அழகழகான புடைவைகளை கட்டிக் கொண்டு பேரழகியாக காட்சியளித்தார். ஒரு காட்சியில் இரவுநைட்டியில் மார்புகள் பிதுங்க புரண்டு படுத்தார். அநேகமாக அவர் நடித்ததில் அதிகபட்ச கவர்ச்சி காட்சி இதுதான்.
கணவனுக்கும் காதலனுக்கும் இடையே உணர்ச்சிப் போராட்டம் நடத்தும் போது, கணவன் மார்க்கோ ஒரு பழங்குடியின பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை அறிந்து துடிதுடிப்பார். காதலனின் ஆழமான காதலையும் அவர் புரிந்துக் கொள்பவராக இருப்பார்.ஆனால் மீண்டும் கணவனிடமே திரும்பிச் சென்று காதலனை கைவிட்டு இயல்பான இந்தியப் பெண்ணாக மாறுவார்.
இப்படத்தின் பலம் எஸ்.டி.பர்மனின் இசை. வழி தெரியாத வழிகாட்டியான ராஜூவுக்காக பின்னணியில் தாதா பாடிய பாடல் ஒன்று அற்புதமானது.
யஹான் கோன் ஹை தேரா முசாபர் தூ ஜாயேகா கஹான் என்ற அந்தப் பாடல் உனக்கென யார் இருக்கிறார்கள், பயணியே நீ போவது எங்கே என்று கேட்கிறது. முதுமை தொனிக்கும் தாதாவின் குரலில் இப்பாடல் ராஜூவின் தனிமையை மிகவும் அடர்த்தியாக்கி காட்டுகிறது.
முகமது ரபி-லதா மங்கேஷ்கர் பாடிய ஆஜ் பிர் ஜீனே கீ தமன்னா ஹை( இன்று மீண்டும் வாழ்வதற்கான எண்ணம் தோன்றியது )
முகமது ரபி பாடிய கியா சே கியா ஹோ கயா பேவபா...., தின் டல் ஜாயே ராத் ந ஜாயே போன்ற பாடல்களும் படத்தை மெருகேற்றின.
கிஷோர்குமார்-லதா மங்கேஷ்கர் பாடிய காத்தா ரஹே மேரா தில் என்ற பாடல் அந்தக் காலத்தின் சூப்பர் ஹிட் பாடல்



இப்படத்தின் இயக்குனர் விஜய் ஆனந்துக்கு அந்த ஆண்டின் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது உள்பட ஏராளமான விருதுகளும் பாராட்டுக்களும் கிடைத்தன.
இப்படத்தில் மனிதனின் உள் ஆற்றலையும் சக்தியையும் வெளிப்படுத்த தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக கூறியுள்ளார் தேவ் ஆனந்த்.
" பணம் இழந்து பிச்சைக்காரனாக, குற்றவாளியாக சமூகத்தாலும் காதலியாலும் நிராகரிக்கப்பட்ட ஒரு மனிதன் தனது ஆன்மாவின் அன்பு என்ற மாபெரும் செல்வத்துடன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்த விளையாட்டுதான் பலகோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் பிரம்மாண்டமான படங்களை விட உள்மனத்தை தொடும் சிறந்த திரைப்படங்களைப் படைக்கிறது."
----------------------
தேவ் ஆனந்தின் திரைப்படங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். கிளாசிக் எனப்படும் காவியங்கள் ஒன்று வணிகப்படங்கள் என்ற குப்பைகள் இரண்டு
தேவ் ஆனந்தின் புல்லட், வாரண்ட், ஹம் நவ்ஜவான்,ஸ்வாமி தாதா போன்ற படங்களை குப்பை என ஒதுக்கி விடலாம். இந்தப் படங்களைப் பார்த்து தேவ் ஆனந்தை எடை போட்டால் விரைவில் அவரை மறந்துவிடுவோம்.
ஆனால் வணிக ரீதியாக சில நல்ல படங்களையும் தேவ் ஆனந்த் அளித்திருக்கிறார்.அதில் கிளாசிக் வகையாக மாறிய படங்களும் உண்டு. ஜானி மேரா நாம் தமிழில் சிவாஜி -ஜெயலலிதா நடிப்பில் ராஜா என வந்துள்ளது. தேரே மேரே சப்னே அழகான ஒரு நடுத்தர குடும்பத்தின் அன்பையும் ஆசைகளையும் படம் பிடித்தது. ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அண்ணன் தங்கை பாசத்தை புதிய பரிமாணத்தில் விளக்கியது. இப்படத்தில் தம்மாரோ தம் பாடல் அந்தக் காலத்தில் செம ஹிட்டாகியது. இந்தப்பாடலின் ரீமிக்ஸிஸ் தீபிகா படுகோனே ஆடியிருக்கிறார். ஆனாலும் ஜீனத் அமன் போட்ட ஆட்டம்தான் டாப்.இந்த வரிசையில் ஜீவல் தீப், ஹீரா பன்னா, கேம்பிளர், பிரேம் பூஜாரி போன்ற படங்களும் தேவ் ஆனந்தின் சிறந்த படங்களாக மதிப்பிடப்படுகின்றன.
கேம்பிளர் படம் தாஸ்தாயவஸ்கியின் சூதாடி கதையை அடிப்படையாகக் கொண்டது.
மோசமான குப்பைப் படங்களில் தேவ் ஆனந்த் நடித்தும் இருக்கிறார். இயக்கியும் இருக்கிறார். இதில் ஹம் நவ்ஜவான் படத்தில் வக்கிரம் பிடித்த ஒரு வில்லன் இருக்கிறான் . அவன் பெண்களின் பேண்டீசை கழற்றுவதில் மன்னன். சீருடை அணிந்த பள்ளி மாணவிகளை தலைகீழாக கவிழ்த்து பேண்டீசை கத்தியால் வெட்டி எறிவான். அவனிடம் ஒருநாள் தபு சிக்கிக் கொள்வாள்.தபு இந்தப் படத்தில் பதின் பருவம் கொண்ட பெண்.ஸ்கூல் யூனிபார்மில் அவளை கடத்தி வரும் வில்லன் சட்டை பட்டனை கழற்றி உள்ளே கைவிடுவதும் பேண்டீசை வெட்டி எறிவதும் சற்று தூக்கலான செக்ஸ் காட்சியாக மாறியது.
இதே போன்று கேங்ஸ்டர் படத்தில் ஒரு கற்பழிப்பு காட்சியில் துணை நடிகை ஒருவரின் முழு மார்பும் தெரிய வில்லன் கற்பழித்துப் போட்டு போவான். பாதிரியாராக வரும் தேவ் ஆனந்த மேலாடை இல்லாத அந்தப் பெண்ணின் உடலை பார்த்து நிற்க அவர் மீது பழி வரும்.
இந்தக்காட்சிகள் சென்சாரில் எப்படி தப்பி வந்தன என்பது தெரியவில்லை. மிகச்சிறந்த படமான பிரேம் பூஜாரியின் சர்வதேச பதிப்பிலும் தேவ் ஆனந்த் நிர்வாணக்காட்சிகளை படமாக்கியிருந்தார்.
தேவ் ஆனந்த் மற்றும் அவர் சகோதரர்கள் சேத்தன் ஆனந்த், விஜய் ஆனந்த் ஆகியோர் இயக்கிய சிறந்த படங்களாக கைடு தவிர ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, பிரேம் பூஜாரி, ஜானி மேரா நாம், தேரே மேரே சப்னே, ஜீவல் தீப் , பனாரசி பாபு உள்ளிட்ட படங்களுடன் அவர்  பிறரின் இயக்கத்தில் நடிகராக பணியாற்றிய சில நல்ல படங்களும் உள்ளன. இதில் ஓரிரு படங்களை தேவ் ஆனந்தின் நண்பரான குருதத் இயக்கியுள்ளார்.
தேவ் ஆனந்தின் தொடக்க கால கருப்பு வெள்ளைப்படங்களில் முகமது ரபி பாடியிருக்கிறார். கைடு படத்தில் முகமது ரபியின் பாடல்கள் பேரானந்தம். ஆனால் அவரது பிற்காலப்படங்களில் கிஷோர் குமாரின் குரல் தேவ் ஆனந்தின் உடல் மொழிக்கு கச்சிதமாகப் பொருந்திப் போனது. எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் போன்ற இசையமைப்பாளர்கள் தேவ் ஆனந்துக்கு முகமது ரபியை விட கிஷோரின் குரல் அழகாக பொருந்திப் போவதாக நம்பினர். கிஷோர் குமார் பாட்டுப்பாட வாய்ப்பு தேடி மும்பை வந்த போது தேவ் ஆனந்த் தான் அவருக்கு முதல் வாய்ப்பை அளித்தார்.ஜித்தி படத்தில் இடம் பெற்ற கஜல் பாடல் ஒன்றை தேவ் ஆனந்துக்காக கிஷோர் குமார் பாடினார். எஸ்டி பர்மன் சில பாடல்களை தேவ் ஆனந்திற்காக பாடியிருக்கிறார். அதில் பிரேம் பூஜாரி பாடலும் கைடு படப் பாடலும் தனித்துவம் மி்க்கவை.
தன்னுடன் கதாநாயகியாக கருப்பு வெள்ளைப்படங்களில் நடித்த கல்பனா கார்த்திக்கை மணம் முடித்துக் கொண்ட தேவ் ஆனந்துக்கு தமது கதாநாயகிகள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. குறிப்பாக ஜீனத் அமன் மீது. ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் ஜீனத்தை அவர்தான் அறிமுகம் செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் ஜீனத் தேவ் ஆனந்தை கைவிட்டு ராஜ்கபூருடன் ஐக்கியமாகி அவரது சத்யம் சிவம் சுந்தரம் படத்தில் முற்றும் துறந்த கோலத்தில் நடித்ததும் தேவ் ஆனந்த் மனம் உடைந்துவிட்டார்.இதே போல் ஆரம்ப காலங்களில் கருப்பு வெள்ளைப்பட கதாநாயகியான சுரையா மீதும் தேவ் ஆனந்த் ஒருதலைக்காதல் கொண்டு ஏமாற்றம் அடைந்தார்.
முதிர்ந்த வயதிலும் படத்தை இயக்க முயன்றவர் தேவ் ஆனந்த் அமீர்கானை வைத்து அவர் இயக்கிய கிரிக்கெட்டை மையமாக கொண்ட அவ்வல் நம்பர் , ஜாக்கி ஷராப் மீனாட்சி சேஷாதிரியை வைத்து இயக்கிய சச்சே கா போல் பலா, ஜீனத் அமனுடன் அவர் நடித்த இஷ்க் இஷ்க் இஷ்க், அம்பானியின் குடும்பப் பெண்ணாக மாறிய டீனா முனிம் நடித்த தேஸ் பர்தேஸ்  போன்ற படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்ற படங்கள். ஆனால் அவரது மே சோலா பரஸ்கீ, லவ் அட் டைம்ஸ் ஸ்குவேர்,  மிஸ்டர் பிரைம் மினிஸ்ட்ர் (2005) போன்ற இறுதிக்காலப்படங்கள் எடுபடவில்லை.2011ம் ஆண்டில் தேவ் ஆனந்த் காலமானார்.
பணம், புகழ் அந்தஸ்து எல்லாம் இருக்கும்போது உலகம் தலைக்கு மேல் வைத்து உன்னைக் கொண்டாடும். அது இறங்கி விடும்போது காலில் ஒரு புழுவைப் போல் மிதித்து நசுக்கி விடும் என தேவ் ஆனந்த் ஒருமுறை குறிப்பிட்டார். ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த அவரது புகழும் வெற்று அஞ்சலிகளால் நசுக்கப்பட்டது.
கைடு படம் தேவ் ஆனந்தின் திரையுலகப் பயணத்தில் ஒரு மைல்கல். உலகின் சிறந்த படங்களில் ஒன்று கைடு. அது இந்தியாவில் எடுக்கப்பட்டதாலும் இந்தி பேசுவதாலும் அகிரா குருசோவா போன்ற சர்வதேச இயக்குனர்களின் சிறந்த படங்களுக்கு நிகராகாது என கருதினால் அது அபத்தமானது.
மிகச்சிறந்த நடிகரும் படைப்பாளருமான தேவ் ஆனந்த் எப்போதும் என்போன்ற ரசிகர்களால் நினைக்கப்படுவார்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...