Sunday 23 August 2015

சந்திப்பு 3 - சூர்யராஜன்

சூர்யராஜனுடன் எனதுநட்பு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவது.இது எனக்கே ஆச்சரியம். என்னுடன் ஒருவராவது இத்தனை காலம் தொடர்ந்து பிரியாமல், அதே பிரியத்துடன் இருக்கிறாரே என்று.





எண்பதுகளின் தொடக்கத்தில் நான் ஒரு பிரபல ஜவுளிக்கடையில் பணி புரிந்துக் கொண்டிருந்தேன். கதை, கவிதைகளில் ஆர்வம் இருந்தது .ஜெயகாந்தனையும் புதுமைப்பித்தனையும் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்த காலம் அது. என்னுடைய சில கவிதைகள் தாய், சாவி, முத்தாரம், தினமலர் போன்ற சில இதழ்களில் பிரசுரமாகியிருந்தன. அப்போது வைரமுத்து திருத்தி எழுதிய தீர்ப்புகளும் வைகறை மேகங்களும் வெளியிட்டிருந்தார். மு.மேத்தாவின் கண்ணீர் பூக்களும் சிற்பியின் ஒளிச்சிற்பமும் இன்குலாப் கவிதைகளும் , நா.காமராசனின் கருப்பு மலர்களும் அப்துல்ரகுமானின் பால்வீதியும் மீராவின் கனவுகள், கற்பனைகள், காகிதங்களும் பிரபலமான கவிதைத் தொகுப்புகளாக விளங்கின. நான் ஏராளமான கவிதை நூல்களை வாங்கி்ப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் எஸ்,அறிவுமணியின் கவிதைகள் அப்போது மனதை கவர்ந்தன. அவர் புரசைவாக்கத்தில் இருந்ததால் மிகவும் நெருக்கமானவர் போல் தோன்றினார். எளிதாக பார்க்க முடியும் போல பட்டது. அப்போது நாங்கள் இருந்த வாடகை வீட்டின் கூடத்திலேயே அவ்வப்போது இலக்கியக்கூட்டங்கள் நடத்துவோம், ஏழெட்டு நண்பர்கள் வருவார்கள். புலவர் சங்கரலிங்கம்( அவர் மகன் பூங்குன்றன்தான் இப்போது முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிச் செயலர்)
டி.ஆர்.சுதா, லீலாவதி, சீதா, நரசிம்ம மூர்த்தி, சேகர் என எனது நட்பு வட்டம் விரிவடைந்துக் கொண்டே இருந்தது.

அப்போது ஒரு கூட்டத்தை பெரிதாக ஏற்பாடு செய்யத் திட்டமிட்டோம். சென்னை அண்ணாசாலை தேவநேயப் பாவாணர் நூலகத்தின் சிறிய அறையை வாடகைக்குப் பிடித்தோம். கவிதை வாசிப்போர் பட்டியலும் தயார். அப்போது தலைமை ஏற்க யாரை அழைப்பது என யோசித்த போது உடனடியாக அறிவுமணியின் பெயர் நினைவில் எழுந்தது. அவர் வீட்டுக்கே போய் விட்டேன். ரத்தினசபாபதி தெருவில் சிறிய அறையில் இருந்த அறிவுமணி உடனடியாக கூட்டத்திற்கு வர ஒப்புக் கொண்டார்,அடுத்த சில நாட்களில் அவர் இனிமையான நண்பராகி விட்டார். அவர் மூலம் எனக்கு பல நண்பர்கள் வாய்த்தனர். அதில் முக்கியமானவர்கள் சூர்யராஜன், நந்தா, பேராசிரியர் பெரியார்தாசன்.

சூர்யாவும் நந்தாவும் இரட்டையர்கள் போல் எங்கும் ஒன்றாகவே காணப்பட்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. அபாரமான திறமைசாலிகள்,பேச்சில் வல்லவர்கள், ஆழமான படி்பபாளிகள். அற்புதமான படைப்பாளர்கள்.

அப்போது திரைப்பட முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். எனக்கும் திரைப்பட ஆர்வம் இருந்தபடியால் அவர்களுடன் நெருங்கிப் பழகினேன், சில மாதங்களில் என் வாழ்வில் என்றும் நீங்காத இடத்தை இருவரும் பெற்று விட்டனர்

சூர்யாவுடன் என் நட்பு இறுக்கமானது. அடுத்தவரின் மூச்சுக்காற்றை அழுத்தாத அளவுக்கு இறுக்கமும் சுதந்திரமும் மிக்கது. பல மகிழ்ச்சியான மற்றும் துயரமான தருணங்களில் சூர்யாவுடன் தான் நான் இருந்திருக்கிறேன். இன்றும் அவர்தான் என் நண்பர்கள் வரிசையில முதலிடத்தில் இருக்கிறார்,

சூர்யாவுக்கும் எனக்கும் இன்னொரு நண்பர் உடன்பிறவா சகோதரனாக வந்து இணைந்தார். அவர்தான் எழுத்தாளர் பிரபஞ்சன். அப்படி இணைந்த இன்னொருவர் மறைந்த பாடலாசிரியர் எம்ஜி வல்லபன்

சூர்யாவுக்கு சினிமா, இலக்கியம் இரண்டிலும் நல்ல பரிச்சயம். பரிச்சயம் என்பதை விட அனுபவம் என்றும் அனுபவம் என்பதை விட ஆழமான அனுபூதி என்றும் கூறலாம், மூச்சாக சுவாசித்தார். அவரிடம் நான் பல அற்புதமான பழக்கங்களை கற்றுக்கொண்டேன். படிப்பது, படம் பார்ப்பது என்ற அம்சங்கள் இன்றுவரை என் வாழ்வில் பிரிக்கமுடியாமல் இருப்பதற்கு காரணம் சூர்யாதான்,

சூர்யாவின் தாய் எனக்கொரு தாய் போலத்தான் இருந்தார். சில சங்கடமான சூழல்களால் அவர் வீட்டிற்கு அதிகமாக செல்ல முடியாத போதும் பார்க்கும் போதெல்லாம் என்னை குற்ற உணர்வால் தவிக்க வைத்தார். தன் மகனை நல்ல ஆளாக்கி பார்க்க அவர் துடித்த துடிப்பு ஓரளவுக்கு என் மூலம் நிறைவேறியதால் அவர் முகம் முழுவதும் ஒளிவீசியது. எனக்கும் திருப்தியாக இருந்தது.ஆனால் அவர் மறைந்து விட்ட போது நான் சூர்யாவின் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டேன்.

சூர்யாவின் குடும்பம் எனக்கு அந்நியமானதல்ல. அவர்கள் யாவரும் ஏதோ ஒரு இனம் புரியாத ரத்த உறவுகள் போல தான் இன்றும் தோன்றுகிறது. அத்தனை தூரம் நாங்கள் பழகியிருக்கிறோம் , சூர்யாவின் சில பழக்க வழக்கங்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் பல முறை கருத்தியல் ரீதியாக அவர் எனக்கு எதிராகப் பேசிய போதும் நான் ஒருபோதும் அவரை விலக்க நினைத்ததில்லை. விலகவும் நினைக்கவில்லை,

சூர்யா என்ற மனிதரைப் பற்றி பலவித மாறுபட்ட அபிப்ராயங்களை கேட்டிருக்கிறேன். யாரும் அவர் திறமையையும் நல்ல உள்ளத்தையும் மறுக்கவில்லை. அதைமட்டும்தான் அவரிடம் நான் எதிர்பார்த்து செல்கிறேன்,

சூர்யாவைப் பற்றி எழுத இந்த இடம் போதாது. ஒரு புத்தகமே எழுதலாம், ஆனால் நல்ல நட்புக்கு நூற்றுக்கணக்கான சொற்களால் ஆராதனை செய்வதை விட ஒரு துளி கண்ணீராலும் ஒரு சிறு புன்னகையாலும் ஆராதிப்பதில் நம்பிக்கை உடையவன் நான். இதுபோதும்.















No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...