Tuesday 18 August 2015

அரிதினும் அரிது கேள் 16 நீள்விழி தன்னில் திறந்திருக்கும் இன்ப நூலகம் எனக்காக......

இந்தியில் யாதோன் கீ பாரத் என்ற படம் தர்மேந்திராவும் ஜீனத் அமனும் நடித்தது. தமிழில் இது எம்ஜிஆர். லதா நடிப்பில் நாளை நமதேயாக மாறியது. இந்தியில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன். தமிழில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இந்தியில் இப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான நசீர் ஹூசேன். இவர் பியார் கா சாயா, ஹம்கிசீசே கம் நஹின் போன்ற படங்களையும் இயக்கியவர். பாடல்களுக்கு முக்கியத்துவம் தருபவர். அண்ணன்-தம்பி, காதலன்-காதலி பிரிந்து சென்று சேர்வதுதான் இவரது கதைக்களம். இசையை இழைத்து உணர்ச்சிகரமாக எடுப்பதில் வல்லவர். நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் யாதோன்கீ பாரத்தும் ஹம் கிசீசே கம் நஹின் படத்திற்கும் நிச்சயம் இடமுண்டு. ஷோலேக்குப் பிறகு அம்ஜத்கான் வில்லன்தனம் செய்த படம் ஹம் கிசீசே கம் நஹின்.
யாதோன் கீ பாரத் பழி வாங்கும் கதைதான். சிறுவயதில் பிரிந்துப் போன மூன்று சகோதரர்கள் ஒன்று சேர்வார்கள். இந்தியில் தர்மேந்திரா, விஜய் அரோரா. தாரிக் நடித்த வேடங்களில் தமிழில் எம்ஜிஆர் 1, எம்ஜிஆர் 2 தெலுங்கு நடிகர் சந்திரமோகன்
                       

தமிழில் இந்தப்படத்தை எடுப்பதில் ஒரு ஆபத்து இருந்தது. என்னதான் ஆக்சன் படமாக இருப்பினும் இசையில்லாமல் இந்தப் படத்தை கற்பனை செய்யவே முடியாது. ஆர்.டி.பர்மன் உச்சத்தில் இருந்த காலம் அது.அவர் இசைக்கு இந்தியாவே ஆடிப்பாடியது. தமிழில் எம்.எஸ்விக்கோ இலையுதிர் காலம். பலநூறு படங்களில் தனது சாதனையை முடித்து ஓய்விற்கு செல்லும் நிலையில் இருந்தார். பாடல்களை இந்திக்கு இணையாக கொண்டு வரவேண்டிய சவால் இருந்தது. படத்தின் இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் இந்தியில் ஜீலி போன்ற படங்களையும் சில சீரியசான படங்களையும் இயக்கியிருந்தார். ஜூலிக்கும் ஆர்.டி பர்மன்தான் இசை. இந்நிலையில் இந்த சவாலை அவர் மெல்லிசை மன்னரை நம்பி ஏற்றுக் கொண்டார். எம்ஜிஆருக்கும் இசை அறிவு இருந்தது. இந்தியுடன் ஒப்பிட்டால் இதை விட அது நன்றாயிருந்தது என யாரும் கூறிவிடக்கூடாது என்பதற்காக இந்திப் பாடல்களைத் தழுவாமல் அதை அப்படியே விட்டு விட்டு புத்தம் புதிய இசையை தரும்படி எம்எஸ்.வியிடம் எம்ஜிஆர் கேட்டுக் கொள்ள மெல்லிசை மன்னரும் அருமையான ஆறு பாடல்களுடன் வந்துவிட்டார். அன்பு மலர்களே என்ற முதல் பாடலை பி.சுசிலா பாடினார். இரண்டாவது பாடலான நான் ஒரு மேடைப்பாடகன் பாடலை டி.எம்.எஸ். எஸ்.பி.பி மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்கள். மூன்றாவது பாடலான நீல நயனங்களில் பாடலை ஜேசுதாசும் பிசுசிலாவும் பாடினார்கள். 







 நான்காவது பாடலான  என்னை விட்டால் யாருமில்லை பாடலை ஜேசுதாஸ் பாடினார். ஐந்தாம் பாடலான
காதல் என்பது காவியமானால் பாடலை ஜேசுதாசும் பிசுசிலாவும் பாடினார்கள். கடைசிப்பாடலான அன்பு மலர்களே பாடலை டி.எம்.எஸ் , எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இணைந்து பாடினார்கள். 

எம்ஜிஆர் படங்களுக்கு அப்போது ஜேசுதாஸ் பாடிக் கொண்டிருந்தார். எஸ்.பிபியும் பாடினார் என்றாலும் இந்தப்படத்தில் சந்திரமோகனுக்கு எஸ்.பி.பியின் குரல் தரப்பட்டதால் இரட்டை வேடத்தில் நடித்த எம்ஜிஆருக்காக டி.எம்.எஸ், ஜேசுதாஸ் ஆகியோர் குரல் கொடுத்தனர்
இதில் அனைத்துப் பாடல்களும் இனிமையானவைதான். ஆனால் எனக்குப் பிடித்த பாடல்களில் காதல் என்பது காவியமானால் தனித்து நின்றது. காரணம் அதன் வரிகளும் டியூனும்தான். பாடல்கள் அனைத்தையும் எழுதியவர்
கவிஞர் வாலி 

காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும்-அந்த
கதாநயகன் உன்னருகே இந்த கதாநாயகி வேண்டும்

பெ-சாகுந்தலம் என்ற காவியமோ ஒரு தோகையின் வரலாறு 
அவள் நாயகன் இன்றி தனித்திருந்தால் அந்தக்காவியம் கிடையாது
நான்பாடும் இலக்கியம் நீயல்லவோ
நாள்தோறும் படித்தது நினைவில்லையோ
ஆண்-காதல் என்பது காவியமானால் கதாநாயகி வேண்டும் அந்த
கதாநாயகி உன்னருகே இந்த கதாநாயகன் வேண்டும்

நீலக்கடல் கொண்ட நித்திலமே இந்த நாடகம் உனக்காக- உந்தன்
நீள்விழி தன்னில் திறந்திருக்கும் இன்ப நூலகம் எனக்காக
சிங்காரக் கவிதைகள் படித்தேனேம்மா
உனக்கந்த பொருள்கூறத் துடித்தேனேம்மா.

பெ- வள்ளல் தரும் நல்ல நன்கொடை போல் என்னை தாங்கிய திருக்கரமே
இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால் வந்து
பாய்ந்திடும் வளைக்கரமே 
நீ தீண்டும் இடங்களில் குளிரானது
தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது


இதே போல் மற்றொரு பாடலான நீல நயனங்களில் பாடல் மூலத்தில் இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான சுராலியா ஹே தும் னே ஜோ தில்கோ என்ற பாடலுக்கானது. இதிலும் தமிழில் வேறொரு இனிய கானத்தை அளித்து சாதித்தார் மெல்லிசை மன்னர்
பெண்-
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது அதன்
கோல வடிவங்களில் பல கோடி நினைவு வந்தது. 
ஐவகை அம்புகள் கைகளில் ஏந்திட
 மன்மதன் என்றொரு மாயவன் தோன்றிட
ஆண்
கனவு ஏன் வந்தது.
காதல்தான் வந்தது
பருவம் பொல்லாதது பள்ளி கொள்ளாதது
நீல நயனங்களில் ஒருநீண்ட கனவு வந்ததோ அதன்
கோல வடிவங்களில் பலகோடி
நினைவு வந்ததோ

பச்சைக்கல் வைத்த மாணிக்க மாலை பக்கம் நின்றாடுமோ
பத்துப்பதினாறு முத்தாரம் தொடுக்க வெட்கம் உண்டாகுமோ

பெண்
அந்த நாள் என்பது கனவில்நான் கண்டது
காணும் மோகங்களின் காட்சி நீ தந்தது
நீல நயனங்களில் ஒருநீண்ட கனவு வந்ததே

மாயக்கண் கொண்டு நான் தந்த விருந்து மன்னன் பசி தீர்த்ததோ
மேலும் என்னென்ன பரிமாற என்று என்னை ருசி பார்த்ததோ
ஆண்
பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது
மீதி உண்டல்லவா மேனி கேட்கின்றது

இதில் கடைசி இரண்டு வரிகளில் வாலி மாயாஜாலம் பண்ணயிிருப்பார். பாதி இச்சைகளை பார்வை தீர்க்கின்றது மீதி உண்டல்லவா மேனி கேட்கிறது என்ற வரிகளை  என் உடலும் மனமும் உள்வாங்கிக் கொண்டுள்ளன. இளமைக்கு இதை விட ஆராதனை இல்லை. இதை விட அழகியல் இல்லை
ஜேசுதாசின் குரலும் பி சுசிலாவின் குரலும் இந்த இரு பாடல்களுக்கும் செய்து விட்ட மேன்மை என்ன என்பதையும் மெல்லிசை மன்னர் ஆர்.டி பர்மனுக்கு சளைத்தவரல்ல என்று நிரூபணம் செய்ததையும் இந்தப் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டுத்தான் தெரிந்துக் கொள்ள முடியும்.


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...