Sunday 9 August 2015

அரிதினும் அரிதுகேள் 15 மௌனம் என்பது மொழியின் பதம்...

ஜேசுதாசின் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன் நான். அவரது தீவிர ரசிகன் என்றும் சொல்லலாம். எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ் சினிமாவை டி.எம்.எஸ்க்கு பிறகு கைப்பற்றிய அற்புதமான பாடகர். அவர் மீதும் எனக்கும் கிறக்கம் உண்டு என்றாலும் ஏனோ ஜேசுதாஸ் ஒருபுள்ளி அதிகமாக பிடிக்கும். அதற்கு காரணம் புரியவில்லை. என் குரலையும் ஜேசுதாஸ் குரல் போல மாற்றிக் கொள்ள முயன்றிருக்கிறேன். அவரைப் போல உச்சரிக்க பழகியிருக்கிறேன். அந்தமான் காதலியில் அவர் திருக்கோவிலே ஓடி வா என்பதை தெருக்கோவிலே ஓடி வா என பாடியதாக கிண்டலடித்தவர்கள் உண்டு. தெருவிலும் கோவில் உண்டு இருக்கட்டும் என வாதிட்டவன் நான். ஜேசுதாஸ் என்ன உச்சரித்தாலும் அது அமுதம். எப்படி உச்சரித்தாலும் தேவாமிர்தம் என மயக்கம் கொண்ட காலங்கள் உண்டு. பழனிக்குப் போயிருந்த போது ஒருமுறை பேருந்திலிருந்து இறங்கியதும் கண்ணில் பட்டது டாக்டர் சிவா பட போஸ்டர், திருச்சியிலிருந்து சென்னைக்குப் பதிவு செய்திருந்த ரயில் டிக்கட்டை ரத்து செய்துவிட்டு அன்றிரவு டாக்டர் சிவாவை பத்தாவது அல்லது பதினைந்தாவது முறை பார்க்கப் போய்விட்டேன். காரணம் ஜேசுதாசின் மலரே குறிஞ்சி மலரே பாட்டு.
ஜேசுதாஸ் பாடிய உன்னிடம் மயங்குகிறேன் போன்ற பழைய பாடல்களை நான் மெய்மறந்து கேட்டு ரசித்தவன். அதில் வாழ்வு என் பக்கம் என்ற படத்தில் முத்துராமனும் லட்சுமியும் பாடுவதாக ஒரு பாடலை ஜேசுதாசும் சசிரேகாவும் பாடினார்கள்.பாடலாசிரியர் கண்ணதாசன், இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். லட்சுமி படத்தில் ஒரு பேசா மடந்தை. முத்துராமன் அவரை மணமுடித்து முதலிரவில் பேச வைக்கப் போவதாக சவால் விட்டு பாடும் பாடல் வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு .....லட்சுமியின் வெட்கம் கலந்த புன்னகை, பாட்டுக்கேற்ற ஹம்மிங்,,,,இளமை முத்துராமனின் முதிர்ந்த ஆனால் பக்குவப்பட்ட கண்ணியமான தோற்றம் என பாடலை அற்புதமாக படைத்திருப்பார்கள் இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் பஞ்சு

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு
தென்றல் பேசும் அதை மூடும் மலர்களின் மீது


நாணம் என்பது ஒருவகை கலையின் சுகம்
மௌனம் என்பது மொழியின் பதம்
தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே


வீணை பேசும்....


காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் வருவது கவிதைக் கலை
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே
வாழ்வில் ஒன்றான பின்னே
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே

பாடலின் இறுதியில் ஒரு நீண்ட ஹம்மிங்குடன் ஜேசுதாசும் சசிரேகாவும் முடிப்பார்கள். பாடல் இனிய வசந்தத்தின் நீரோடை போல மனதுக்குள் சலசலத்தபடியே இருக்கிறது.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...