Tuesday, 25 August 2015

அரிதினும் அரிது கேள் 17 பித்தென்று சிரிப்பது உள்நினைவு......

ஒரு தலைராகம் படத்தை எத்தனையோ முறை பார்த்திருப்பேன்.எனது வயதில் உள்ள பலரும் அந்தப் படத்தை பலமுறை பார்த்திருப்பார்கள்.





புதுமுக நடிகர்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்களுக்காக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரவே மாட்டார்கள். எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி , ஜெய்சங்கர்,முத்துராமன்,சிவகுமார் என யாராவது ஒருவரே நாயகனாக இருக்க வேண்டும். அல்லது மகேந்திரன், பாரதிராஜா, பாலசந்தர், ஸ்ரீதர் என மிகப்பெரிய டைரக்டர் படமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தியேட்டருக்கு செல்வார்கள் ரசிகர்கள். இப்போது கண்ட கழுதையும் நடிக்கலாம், கண்ட நாயும் டைரக்டராகிவிடலாம். திறமையான இளைஞர்களை நான் குறிப்பிடவில்லை. அவர்கள் எப்போதும் இருப்பார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சாட்டை, எதிர்நீச்சல், தங்கமீன்கள், ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,  போன்ற நல்ல படங்களும் வரத்தான் செய்கின்றன.
ஒருதலை ராகம் படத்தில் அனைவரும் புதுமுகங்கள், ஹீரோ சங்கர் மலையாள நடிகர். நடிகை ரூபா கன்னட நடிகை.






கதைவசனம் பாடல்கள்,இசை என பல துறைகளை கைப்பற்றிய டி.ராஜேந்தர் யார் என்றே யாருக்கும் தெரியாது. இயக்குனர்கள் ராபர்ட் ராஜசேகரும் புதியவர்கள். தயாரிப்பாளர் இவர்களை நம்பி படம் எடுத்தது ஆச்சரியம்தான், அப்போது இளையராஜா கொடி கட்டி பறக்கத் தொடங்கிய காலம். எம்.எஸ்.வியும் தன் பங்குக்கு உச்சத்தில் இருந்தார். இதில் டி.,ராஜேந்தரின் இசை சக்கைப் போடு போட்டதுதான் இப்படத்திற்கு முதல் வெற்றிக்கான காரணமாகி விட்டது.

லீனா மீனா கீதா ராதே ரேகா என பெயர்களைப் பட்டியலிட்டு முதல் பாடல் ஒலித்த போதே தியேட்டரில் விசில் பறந்தது.
கூடையிலே கருவாடு என்ற பாடு அரவாணிகள் பாடுவதாக அமைந்தது. மலேசியா வாசுதேவன் அதை அற்புதமாக பாடியிருந்தார்.
வாசமில்லா மலரிது என்ற எஸ்.பி.பியின் பாடல் இடைவேளைக்கு முன் வந்த போது மக்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள்

அதற்குப் பின்னர் 4 பாடல்கள் இடம் பெற்றன. கடவுள் வாழும் கோவிலிலே பாடலை பாடிய ஜெயச்சந்திரன் பிரமாதமான அழுத்தம் தந்து ரசிகர்களை கசிந்துருக வைத்தார்.
இது குழந்தை பாடும் தாலாட்டு பாடிய எஸ்.பி.பி இனிய தாலாட்டுக் கவிதை ஒன்றை வாசித்தார். டி,ஆர் படித்த தமிழ் அவருக்கு கை கொடுத்தது




இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்

நடைமறந்த கால்கள்தன்னில் தடயத்தைப் பார்க்கிறேன்
வடம் இழந்த தேர் அது ஒன்றை நாள் தோறும் இழுக்கிறேன்.
விடிந்து விட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணைக் கண்டு உலகை நான் வெறுக்கிறேன்.


உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுருவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது

இதையடுத்து டி.எம்.எஸ். பாடிய இரண்டு பாடல்கள் இடம் பிடித்தன. நான் ஒரு ராசியில்லா ராஜா செம ஹிட்டான பாட்டு என்றாலும் இறுதிப்பாட்டான என் கதை முடியும் நேரமிது பாடல்தான் என் உள்ளத்தில்இடம் பிடித்த அற்புதமான பாடல்,

என் கதை முடியும் நேரமிது
என்பதை சொல்லும் ராகமிது
அன்பினில் வாழும் இல்லமிது
அணையே இல்லா வெள்ளமிது

இதயத்தில் ரகசியம் இருக்கின்றது-அது
இதழ்களில் பிறந்திட தவிக்கின்றது
உலகத்தை என் மனம் வெறுக்கின்றது அதில்
உறவென்று அவளை நினைக்கின்றது.

உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே-அதில்
பிரிவுகள் என்பது இருக்காதே
ஒளியாய் தெரிவது வெறும் கனவு அதன்
உருவாய் எரிவது என் மனது


பேதமை நிறைந்தது என் வாழ்வு அதில்
பேதையும் வரைந்தாள் சில கோடு
பித்தென்று சிரிப்பது உள்நினைவு அதன்
வித்தொன்று போட்டது அவள் உறவு
ரயில் பயணத்தில் துணையாய் அவள் வந்தாள்
உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்
துயில் நினைவினை மறந்திடும் விழி தந்தாள்
துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள்

இந்த படம் வந்த போது முதல்நாளி்ல் பார்த்து வந்தவன் என் பால்ய ஸ்நேகிதன் ரமேஷ். எனது உறவுக்கார பையன்தான். என் வயதுதான். இருவரும் நிறைய படங்கள் பார்ப்போம். இந்தப் படம் அவனுக்கு மிகவும் பிடித்துப் போக என்னையும் புரசைவாக்கம் ராக்சி தியேட்டருக்கு அழைத்துப் போனான்,( இப்போது அந்த இடத்தில்தான் சரவணா ஸ்டோர்ஸ் இருக்கிறது) பல முறை பித்துப்பிடித்தது போல் இந்தப் படத்தை நாங்கள் பார்த்தோம்,


சங்கர் பெல்பாட்டம் பேண்ட், ஏகப்பட்ட தலைமுடி என இருந்தாலும் அந்தப் பாத்திரத்திற்கு பாந்தமாக பொருந்திப் போனார்.






ரூபா ஒரு அற்புதம். உடல் முழுவதும் சேலையால் மூடிக் கொண்டு கண்களாலேயே தனது காதலையும் தவிப்பையும் வெளிப்படுத்தினார்.





சந்திரசேகர் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்து ஒரு ஜோடிப் புறாவின் கதை சொல்லி மாணவர்களை உருகி அழ வைத்தார்.தும்புவின் காமெடியையும் ரசித்தார்கள்.

இப்படத்தின் மூலம் டி,ராஜேந்தர் ஸ்டாராகி விட்டார். அவர் அடுத்து இயக்கிய வசந்த அழைப்புகள், ரயில் பயணங்கள், நெஞ்சில் ஒரு ராகம், ராகம் தேடும் பல்லவி, மைதிலி என்னைக் காதலி போன்ற படங்கள் தமிழ் சினிமாவுக்கும் திரையிசைக்கும் வரப்பிரசாதமாக அமைந்தன. ஆனால் உயிருள்ள வரை உஷாவுக்கு பிறகு அவர் மச்சி அவ துப்பினா எச்சி என தடம்புரண்டு விட்டார்.இன்று வரை அவரை டண்டணக்கா எனத்தான் கிண்டலடிக்கிறார்கள். ஆனால் எங்களுக்குத் தெரிந்த ராஜேந்தர் ஒளியாய் தெரிவது வெறும் கனவு அதன் உருவாய் எரிவது என் மனது என எழுதத் தெரிந்தவர். பித்தென்று சிரிப்பது உள்நினைவு அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு என மயக்க தெரிந்தவர்







பின்குறிப்பு
படங்கள் வர்த்தக நோக்கில் பயன்படுத்தப்படவில்லை. இணையத்தில் கிடைத்தவையே. அதற்குரியவர்களுக்கு நன்றி.


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...