Thursday 20 August 2015

சந்திப்பு 1 சுந்தர ராமசாமி


எழுத்தாளர் சுந்தர ராமசாமியை எனக்கு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தவர் நண்பரும் விமர்சகருமான திரு வேதசகாயகுமார்.அப்போதே சுந்தரராமிசாமிக்கு சிற்றிதழ்களில் மட்டும் அதிகமாக எழுதிக் கொண்டிருந்த என் பெயர் தெரிந்திருந்தது என்பது எனக்கு ஆச்சரியம் .தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நான் எனது மாமாவின் நிறுவனத்திற்காக விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றி சுடிதார். நைட்டி சாம்பிள்களுடன் ஊர் ஊராக அலைந்துக் கொண்டிருந்தேன்.அப்படி ஊர் ஊராகப் போகும் நாட்களில் ஓய்வு நேரத்தில் எழுத்தாளர்களையும் பழைய புத்தகக் கடைகளையும் திரையரங்குகளையும் நாடிச் செல்வது வழக்கமாக இருந்தது. மனதுக்கு அதில்தான் மகிழ்ச்சி கிடைத்தது.கோவிலுக்கு செல்லும் பழக்கம் இல்லை. திருப்பதிக்கே போனாலும் சாமி கும்பிடாமல்தான் திரும்பி வருவேன்.
நாகர்கோவிலில் வேதசகாயகுமாரைப் பார்க்கவும் போனேன். அவர் எனக்கு ஏற்கனவே சில நண்பர்கள் மூலம் பாலக்காட்டு சித்தூர் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த போது அறிமுகம் ஆகியிருந்தார். தமிழில் இலக்கிய விமர்சனம் என்ற அடர்த்தியான சிறிய புத்தகத்தை எழுதியிருந்தார்.அவர் மீது இயல்பாகவே மதிப்பு இருந்தது. அவர் வீட்டில் என்னை உபசரித்து காலை உணவருந்த வைத்து, அவர் தான் சுந்தர ராமசாமி வீட்டுக்கு அழைத்துப் போனார். அதுவரை சுந்தர ராமசாமி என்பவர் என் ஆதர்ச எழுத்தாளராக ஏதோ ஒரு கனவு தேசத்தில் வாழ்பவராகத்தான் தோன்றினார். ஜே.ஜே.சில குறிப்புகள் படித்து தமிழில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த நாவல் இதுதான் என்று கூவித்திரிந்துக் கொண்டிருந்தேன். பசுவய்யா கவிதைகள், சுந்தரராமசாமியின் பல சிறுகதைகள், கட்டுரைகள், அவர் ஆசிரியராக இருந்த காலச்சுவடு இதழ்கள் என நிறையப் படித்திருந்தேன். அப்போது அவர் தசராவின் கணையாழி இதழில் கேள்வி பதில் பகுதியை எழுதிக் கொண்டிருந்தார். இளையராஜா பாடல்கள் பற்றியும் அவர் அதில் எழுதியதாக நினைவு, நாசர் இயக்கிய அவதாரம் படத்தில் ஒரு டூயட் பாடலை சிலாகித்தும் குறிப்பிட்டிருந்தார்.  இத்தகைய சூழலில் அவரை நான் சந்திக்க சென்றேன். முதலில் கண்ணன் வரவேற்றார். அவரது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று காட்டினார். அங்கேதான் முதன் முதலாக சு.ராவை பார்த்தேன். ஒரு வெள்ளை சட்டையோ ஜிப்பாவோ அணிந்து வேட்டி கட்டியிருந்தார். வெண்தாடி, கண்ணாடி, சிரிக்கும் முகம் ஆழ்ந்து நோக்கும் கண்கள், அன்பு கனிந்த பேச்சு வாங்க ஜெகதீஷ் என மலர்ந்து வரவேற்றது இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.

வேதசகாயகுமார் போன பிறகும் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக பேசினார். தமிழ் இலக்கியச்சூழல் பற்றியே அதிகமாக பேச்சு இருந்தது. கோவையிலிருந்து வந்ததால் கோவை ஞானி பற்றிவிசாரித்தார். சென்னை வாழ்க்கை எப்படி எனக் கேட்டார். ஜி.நாகராஜன் பற்றிய தமது அனுபவங்களை விவரித்தார். சிற்றிதழ்களில் புதிதாக எழுதுபவர்களில் யார் சிறப்பாக எழுதுகிறார்கள் எனக் கேட்டார். நானும் ஷாராஜ், வாமு கோமு போன்ற சில பெயர்களை அவரிடம் கூறினேன். தஞ்சை ப்ரகாஷ் பற்றியும் குறிப்பிட்டேன். ஜெயமோகன் பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ஜெயமோகன் தருமபுரியில் அல்லது திருப்பத்தூரில் இருந்தார்.

சுந்தர ராமசாமியுடன் கநாசு பற்றி பேசும்போது அவரது மொழிபெயர்ப்புகள் மிகவும் அவசரகதியில் மூலத்திலிருந்து விலகிச் செல்வதை சுட்டிக் காட்டினேன். இது அவரை ஆழமாக யோசிக்க வைத்தது. ஒப்புக் கொள்வது போலும் மறுப்பது போலவும் இருவிதமான பாவனைகளை அவர் வெளிப்படுத்தினார். நீங்க சொல்வது உண்மையாயிருக்கலாம். நீங்க நிறையப் படிக்கிறீங்க....ஆனாலும் ஜெகதீஷ், கநாசு மொழிபெயர்ப்பதற்காக தேர்வு செய்த படைப்புகள் யாவும் தமிழுக்கு கட்டாயம் வரவேண்டிய படைப்புகள்தானே. அவரைத் தவிர வேறு யாரும் அப்பணியைச் செய்யவில்லையே என தமது நண்பருக்காக சு.ரா வாதாடியதும் நான் மேற்கொண்டு விவாதிக்காமல் ஆமோதித்தேன்.
தமிழில் மூலப்பிரதியையும் மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை கூட வந்ததில்லையே எனக் குறிப்பிட்டார் சுந்தர ராமசாமி. கடைசியில் தமது கணையாழி பதில்கள் பற்றி கேட்டார். அய்யா அதை நிறுத்தி விடுங்கள் என்று நான் கேட்டுக் கொண்டேன். முன்னே இருந்த கணையாழிக்கு மதிப்பு இருந்தது. இப்ப இருக்கிற கணையாழிக்கு அந்த தராதரமே இல்லை. அதில் எழுதுவது உங்களுக்குத்தான் கௌரவக்குறைவு என்றேன். அப்படியா என சிரித்தார். அடுத்த மூன்று அல்லது நான்குமாதங்களில் சுந்தர ராமசாமி பதில்கள் பகுதி நிறுத்தப்பட்டது.

அன்றிரவு கண்ணன் தமது குடும்பத்தினருடன் ஒரு காரில் அழைத்துச் சென்று ஒரு மிகப்பெரிய உணவு விடுதியில் அற்புதமான விருந்து வைத்தார். கேட்டால் தமக்கு திருமண நாள் என்றார். வாழ்த்தி வந்து விட்டேன்

சுந்தர ராமசாமி கதைகள் தொகுப்பில் இல்லாத ஒரு கதை அப்போது என்னிடம் இருந்தது. அந்தக் கதையின் பெயர் ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. அது கல்கி தீபாவளி மலரில் வந்தது. அதன் பிரதியை அனுப்பும்படி சுரா கேட்டுக் கொண்டார். அதை அனுப்பிய போது அக்கதை தன்னிடம் இல்லை எனக்கூறி எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதை தமது அடுத்த தொகுப்பில் இணைத்துக் கொண்டார். ஆனால் கதையைத் தேடித்தந்ததாக அவர் வேறு ஒருவரின் பெயரை போட்டிருந்தார். என் பெயர் ஏன் விடுபட்டது என இன்று வரை எனக்குத் தெரியாது.

பின்னர் ஒருமுறை சென்னை எத்திராஜ் கல்லூரி அருகே உள்ள காஞ்சி ஓட்டலில் சுராவின் இல்ல திருமண விழாவுக்காக போயிருந்த போது அவரைப் பார்த்தேன் .ஆனால் பேச இயலவில்லை. தங்கர்பச்சான் உட்பட ஏராளமான நண்பர்களும் அங்கு இருந்தனர்.

பின்னர் சென்னையில் ஆதம்பாக்கத்தில தமது உறவினர் வீட்டிற்கு சு.ரா வந்திருந்த போதும் அவரை நேரில் பார்த்து சந்தித்துப் பேசியிருக்கிறேன். மூன்றாவது முறை நண்பர் ஜெயமோகனுக்காக சொல்புதிது இதழ் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்த போது, ஜெயகாந்தன் அவர்களையும் சுந்தர ராமசாமி அவர்களையும் ஒரே மேடையில் ஏற்ற வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்தேன். சு.ராவை அழைத்து வரும் பொறுப்பை ஜெயமோகன் ஏற்றுக் கொண்டார்.(அப்போது அவர் மாற்றலாகி தக்கலை சென்று விட்டார். )

ஜெயகாந்தனை நண்பர் அன்புவுடன் சந்தித்த போது உடனடியாக ஒப்புக் கொண்டார். ஒரு பைசா கூட பெறாமல் தனது காரில் நேரத்திற்கு நிகழ்ச்சிக்கும் வந்துவிட்டார். சு.ராவும் ரயில் பிடித்து ஆதம்பாக்கம் வந்து விட்டார். அங்கிருந்து ஆட்டோ வைத்து அவர் நிகழ்ச்சிக்கு வந்தார். நாங்கள் அழைக்கப் போயிருந்தோம். சில காரணங்களால் ஜெயமோகனால் வர இயலவில்லை
வஐசெ ஜெயபாலன், பிரபஞ்சன், சா.கந்தசாமி உள்பட ஏராளமானோர் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். இறுதி உரை சுராவா ஜேகேயா என பல நண்பர்கள் பிரச்சினை எழுப்பி ஈகோவைக் கிளப்பிவிட முயன்றனர். ஆனால் சுராவிடம் இதை நாசூக்காக சொன்ன போது தயக்கமே இல்லாமல் ஜே.கே மகத்தான எழுத்தாளர் அவர்தான்இறுதியில் பேச வேண்டும் என்றார்.இதையே ஜேகேவிடம் காதைக் கடித்த போது அவரும் சொல்லி வைத்தாற் போல் சுராவே இறுதியாகப் பேச வேண்டும் என்றார். கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பது சரிதான்.
ஒருவழியாக ஜெயகாந்தன் இறுதியாகப் பேசுவது என முடிவானது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுராவை சந்திக்க முடியாமல் போனது. தக்கலை போய் ஜெயமோகன் வீட்டில் தங்க நேர்ந்த போதும் அவர் பத்னாபபுரம் அரண்மனைக்கு அழைத்துச் சென்று காட்டிய போதும் சுராவை சந்திக்க முடியாமலே திரும்பி வந்துவிட்டேன்.

திடீரென சன் டிவியில் நான் இரவில் பணிபுரிந்த நாளில் சு.ரா இறந்துவிட்டார் என கண்ணன் அனுப்பிய குறுஞ்செய்தியை விடியற்காலையில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.ஒரு ஸ்க்ரோல் போடவும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.  வேலையை ராஜினாமா செய்யும் மனநிலையுடன் விரக்தியுடன் வீடு திரும்பிவந்தேன்.
அப்போது சூர்யா மலையாள டிவியில் சுகுமாரன் பணிபுரிந்து வந்தார்.
அவர்கள் கேமராவை வைத்து சுராவீட்டில் லைவ்வாக அவர் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள். அன்றும் இரவுப் பணிக்கு பத்து மணிக்கு வரவேண்டிய நான் இரவு ஏழு மணிக்கே அழைக்கப்பட்டேன். அன்று காலையில் ஏழுமணி செய்திகளில் போட வேண்டிய சுரா மரணம் குறித்த செய்தியை இரவு எட்டு மணி செய்திகளுக்காக எழுதிக் கொடுத்தேன்.

சுரா மறைந்துவிட்டார் என்பதை ஏற்கவே மனது ஒப்பவில்லை. அந்தசிரித்த முகம் இன்றும் மனதுக்குள் நிற்கிறது. நான் வாசித்த தமிழ் எழுத்தாளர்களில் என் காலத்தில் நான் சந்தித்தவர்களில் எம்.வி.வெங்கட்ராம், சி.சு.செல்லப்பா, சிட்டி, கோவை ஞானி,அசோகமித்திரன், சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், லா.ச.ரா, பிரமிள். பிரபஞ்சன் உள்ளிட்டோர் மீது அளவுகடந்த மரியாதை என்றும் எனக்கு இருக்கும்.

எனக்குப் பிடித்த மௌனியும், நா.பாவும் புதுமைப்பித்தனும் பிச்சமூர்த்தியும் குபாராவும் இன்னும் பலரும் உயிருடன் இருந்த போது நான் அவர்களை சந்திக்க முடியாத காலத்தின் இடைவெளியும் தூரத்தின் இடைவெளியும் இருந்தது.
சுந்தர ராமசாமியின் மறைவுக்குப் பிறகு அவரைப் போல் ஒரு எழுத்தாளரையும் கண்டதில்லை அவரைப் போல் ஒரு புன்னகைக்கும் முகத்தையும் கண்டதில்லை. கண்ணனை சந்திக்கும் போதெல்லாம் எனக்குத் தவிர்க்க முடியாமல் சுராவின் நினைவு வந்துக் கொண்டே இருக்கும்.

எனக்குப் பிடித்த சு.ராவின் வரிகள்......











No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...