Saturday 22 August 2015

சந்திப்பு 2 பாலுமகேந்திரா

இயக்குனர் பாலுமகேந்திரா மீது அதிகமாக நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. அவர் சிறந்த கேமராமேன், மூன்றாம் பிறை என்ற நல்லதொரு படத்தை இயக்கியிருந்தார். அவ்வளவுதான் அவர்மீது வைத்திருந்த மதிப்பு. ஆனால் முள்ளும்மலரும் மாதிரியான படங்களில் அவர் கேமராவின் அழகு சாதாரண ரசிகனான என்னை பிரமிக்க வைத்தது. நடிகர்-நடிகைகள் அத்தனை அழகாக இருந்தார்கள், கருப்பான ரஜினி கூட களையாக இருந்தார்.
பாலுமகேந்திரா மீதான மதிப்பு கூடாமல் போனது ஏன் என எண்ணினால் அவர் இயக்கிய அனேகமான படங்கள் சற்று மிகையாகப் பாராட்டப்பட்டு விட்ட மீடியம் படங்கள்தாம். இன்னொரு முக்கிய விஷயம் ஷோபாவின் தற்கொலை.






இந்த பிம்பங்களை உதறி பாலுமகேந்திராவையும் நல்லதொரு திரைக்கலைஞராக மனது ஏற்கப்பழகியிருந்தது. அழியாத கோலங்கள், வீடு, மறுபடியும் போன்ற படங்கள் மூலம் தன்னை தனித்துவம் வாய்ந்த ஒருவராக பாலுமகேந்திரா பதிவு செய்திருந்தார்.
அவரை முதல்முறை சந்தித்தது கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போது தியாகராய நகரில் கோமல் ஸ்வாமிநாதனின் சுபமங்களா சார்பில் கூட்டம் ஒன்றுநடைபெற்றது.இதில் கலந்துக் கொள்ள என் வீட்டில் தங்கியிருந்த ஜெயமோகனுடன் சென்றேன். அப்போது கோவையில் லில்லி தேவசகாயம் பெயரில் விருதுகள் அளிக்கப்பட்டன. இன்குலாப்புக்கு விருது கொடுத்ததால் தாம் அந்த விருதை வாங்க மாட்டேன் என ஜெயமோகன் மறுத்திருந்தார். இதனால் அவர் பலரின் கோபத்திற்கு ஆளாகியிருந்தார்.
இக்கூட்டத்தில் ஜெயமோகன் பேசும் போது அறிவுமதி போன்ற சிலர் அவர் மீது பாய்ந்தனர். கடும் வாக்குவாதம் கைகலப்பாக முடியக் கூடிய சூழல். ஜெயமோகனை அழைத்து அல்லது இழுத்து நான் வெளியே வந்துவிட்டேன். அப்போது ஒரு கார் வந்து எங்களை ஏற்றிக் கொண்டது. அந்தக் கார் பாலு மகேந்திராவின் கார்தான். அறிவுமதி அவர் உதவியாளராக இருந்தார். அறிவுமதி பேசுவது தப்பு என பாலு மகேந்திரா கூறினார். யூ ஷூட் பி வெரி கேர்புல் என ஜெயமோகனுக்கு அறிவுரை கூறினார்.நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எங்களை ஓரிடத்தில் இறக்கிவிட்டு சென்று விட்டார்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் 2011 -ல் குங்குமம் வார இதழில் நான் பணியாற்ற நேர்ந்த போது, பாலுமகேந்திராவை பேட்டி எடுக்க விரும்பினேன். காரணம் அவர் தமிழ்த்திரைப்படங்களைப் பாதுகாக்க புனே திரைப்படப் பயிற்சி மையம் போல் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என ஒரு கருத்தை ஒரு கூட்டத்தில் கூறியதாக புதிய பார்வை இதழில் வெளியான ஒரு செய்திதான் அவரை சந்திக்கத் தூண்டியது. இதழின் பொறுப்பாசிரியர் திரு. முருகன் அவர்கள் அனுமதியளித்ததும் பாலு சாரின் வீட்டுக்குப் போனேன்.
சாலி கிராமத்தில் முதன்முதலாக அந்த வீட்டு வாசலில்மிதித்த போது வாசல் திறந்திருந்தது. நடிப்பு பயிற்சிக்காக அங்கு வந்த சிலர் வெளியே வந்தார்கள் .சார் இருக்காரா எனக் கேட்டேன், இருப்பதாக கூறினார்கள். காத்திருந்தேன். அவர் உதவியாளர் ஒருவர் வந்து விவரம் கேட்டார், பத்திரிகை பேட்டிக்காக வந்திருப்பதாக சொன்னேன். 5 நிமிடங்களில் வெளியே வாசல் அருகே வந்து நின்ற பாலுமகேந்திரா உங்களை யார் உள்ளே விட்டது பேட்டியெல்லாம்கிடையாது போய்ட்டு வாங்க என விரட்ட ஆரம்பித்தார். எனக்கு அவமதிப்பாகவும் மரியாதைக் குறைவாகவும் பட்டது. வாழ்க்கையில் ஆயிரமாயிரம் புறக்கணிப்புகளும் விரட்டுதல்களும் சந்தித்தவன் தான்நான். ஆனால் காரணமே இல்லாமல் நான் யார் எனக்கூட தெரியாமல் இப்படி பேசுகிறாரே என கோபம். சில சமயம் நான் பாலுமகேந்திராவை விட பெரிய கலைஞன் என எண்ணிக் கொள்வேன். அப்படித்தான் அன்றும் தோன்றியது.
சார் நான் எழுத்தாளன், சிற்றிதழாளன், என் நாவலுக்காக தேசிய விருது வாங்கியிருக்கேன், நீங்க நேசிக்கும் அதே சினிமாவை நானும் வெறித்தனமா நேசிச்சு அத்தனை உலகப் படங்களையும் பார்த்திருக்கிறேன். இயக்குனர் மகேந்திரனே என்னைப் பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார் என என்னைப் பற்றி வார்த்தைகளை வீசியதும் சற்று கூர்மையாக என்னைப் பார்த்து அமைதியானார் பாலுமகேந்திரா, ஜெயமோகனுடன் காரில் ஏற்றிச் சென்ற சம்பவத்தையும் நினைவுகூர்ந்தேன். உள்ளே வாங்க என்று அழைத்துச் சென்று அமர வைத்து சாரி என்றார்.
ஒரு படைப்பாளிக்கு அவர் தரும் மரியாதை அவர் மீதான மதிப்பை உயர்த்தியது. பேட்டிக்காக வருபவர்கள் தம்மீது அவதூறுகளை இறைத்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார். ஏழு ஆண்டுகளாக பத்திரிகைக்கு பேட்டி தரவில்லை என்றும் கூறினார். எனக்காக குங்குமம் இதழில் பேட்டியளிக்க ஒப்புக் கொண்டார். கேள்விகளை தாளில் எழுதிக் கொடுத்தேன். தேநீர் வரவழைத்து உபசரித்து அனுப்பி வைத்தார். மீண்டும் சாரி என்றார்

மறுநாள் போன போது பதில்களை எழுதி வைத்திருந்தார். அப்போதும் அமர வைத்து பிச்சமூர்த்தி புதுமைப்பித்தன் பற்றி சிறிது நேரம் பேசினார். தமிழ் இலக்கியச் சூழல் பற்றி நான் கூறியவற்றை ஆர்வமாக கேட்டார்.

அந்த சிறப்பான பேட்டி குங்குமம் இதழில் பிரசுரமானது. அப்புறம் பாலு மகேந்திரா காலமாகிவிட்டார் என்று பத்திரிகையில் படித்த போது சாலி கிராமம் ஓடத்தான் கால்கள் துடித்தன. ஆயினும் வழக்கமாக மரண வேளைகளில் இறுதிச் சடங்குகளில் கலந்துக் கொள்வதை தவிர்த்து விடுவேன். இறந்த நபர் எனக்குள் வாழ்பவராக இருப்பதே இதன்முதன்மையான காரணம்


பாலுமகேந்திராவும் அழுத்தமாக என் மனதுக்குள் இடம் பிடித்துக் கொண்டார். அவருக்குள் இருந்த ஒரு மென்மையான மனிதன், உணர்ச்சிகரமான ஒரு கலைஞன், தவறாக மதிப்பீடு செய்யப்பட்ட ஒரு சாதனையாளன் இருந்ததை நான் புரிந்துக் கொண்டேன். கலை மீதான அவருடைய ஈடுபாடு ஒரு துளிக்கூட சந்தேகம் எழாத வகையில் நிஜமானது.

அவர் எனக்களித்த பேட்டி.........
காத்திருக்கவும் பதிவு செய்கிறேன்.




















No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...