Tuesday 1 September 2015

உலக சினிமா - கிளியோபாட்ரா - அழகின் அரசியல்


குமுதம் தீராநதி - செப்டம்பர் 2015 இதழில் பிரசுரமானது







ஒரு ஊர்ல ஒரு அழகி. அவள் அழகால் இரண்டு நாடுகள் போரிட்டன. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அரசியலில் தனது அழகை வைத்து தலைவர்களை மயக்கி அவள் அதிகாரம் செலுத்தினாள்.இறுதியாக அவள்  பகைவர்களால் சிறையில் அடைக்கப்பட்டாள்.
இது  எகிப்து ராணியான கிளியோபாட்ராவின் கதை.கிளியோபாட்ரா 18 வயதில் எகிப்துக்கு ராணியாக முடிசூட்டப்பட்டாள். அந்தக்காலத்து எகிப்திய மரபின்படி தனது தம்பியை மணமுடித்து ஆட்சி செய்தாள். எகிப்தை எதிரிகளிடமிருந்து காக்க அவள் அண்டை நாடான கிரேக்க சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசரை காதல் வலையில் வீழ்த்தினாள். சீசர் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டதும் உற்ற நண்பனான புரூட்டசே கோடாரியால் வெட்டி சாய்த்ததும் எகிப்து திரும்பிய கிளியோபாட்ரா மீண்டும் பதவியைக் கைப்பற்றிய சீசரின் ஆதரவாளர் மார்க் ஆன்டனியை காதலிக்க தொடங்கினாள். மார்க் ஆன்டனிக்கு எதிராக சீசரின் மகன் ஆகஸ்டஸ் சீசஸ் படையெடுத்து வர போரில் தோல்வி அடைந்த ஆன்டனி தன் காதல் தேவதையின் மடியில் தற்கொலை செய்து உயிர்த்துறக்கிறான். சிறைக்கைதியாக வாழ விரும்பாத எகிப்து ராணி கொடிய நாகப்பாம்பை கடிக்க வைத்து அதன் விஷம் பாரித்த நிலையில் உயிர்துறந்தாள்.
இது சரித்திரம் சொல்லும் கதை. இதை சினிமாவாக கற்பனை செய்துபாருங்கள். இத்தனை பிரம்மாண்டமான கேன்வாசில் கதையை திரையில் சொல்ல முடியும். முடிந்திருக்கிறது.1963 ஆம் ஆண்டில் வெளியான கிளியோபாட்ரா திரைப்படம் சிறிதும் சமரசமின்றி கண்முன்னே இருநாடுகளின் வரலாற்றையும் அழகின் அரசியலையும் அழகால் அழிந்த சக்கரவர்த்திகளையும் 70 எம்.எம். பெரிய திரையில் கண்முன்னே கொண்டு வந்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஜோசப் மான்க்ரிவைஸ். இப்படத்திற்காக பெரும் பொருட்செலவில் போடப்பட்ட பிரம்மாண்டமான செட்டுகளை மீண்டும் போட வேண்டிய நிலையில் இந்தப் படத்தி்ன் செலவை சமாளிக்க முடியாமல் புகழ்ப்பெற்ற படநிறுவனமான டிவென்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் கிட்டதட்ட திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இன்றைய கணக்கில் கூறுவதானால் 125 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதுடன் விமர்சன ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் பின்னர் இப்படத்தின் முக்கியத்துவத்தை உலகம் உணரத் தொடங்கி விட்டது. ஒரு திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை பாடமாக திரையுலக மாணவர்களுக்கு கூற வேண்டுமானால் இந்தப் படத்தை விட சிறந்த உதாரணம் வேறில்லை என்று படத்தின் இயக்குனர் ஜோ ஒரு முறை குறிப்பிட்டார்.
4 அகடமி விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை இப்படம் தட்டிச் சென்றது.
இதில் கிளியோபாட்ராவாக நடித்தவர் உலகப் பேரழகியான பிரிட்டன் நடிகை எலிசபெத் டெய்லர். மார்க் ஆன்டனியாக நடித்த ரிச்சர்ட் பர்ட்டனையே அவர் படப்பிடிப்பின் போது காதலிக்கத் தொடங்கிவிட்டார். இதனால் பத்திரிகைகளுக்கு சரியான கிசுகிசுக்கள் கிடைத்தன. ரிச்சர் பர்ட்டன் உட்பட 7 பேரை மணமுடித்து விவாகரத்தும் செய்தார் எலிசபெத் என்பது தனிக்கதை.நிஜவாழ்விலும் அவர் ஒரு கிளியோபாட்ராதான்.
எலிசபெத்தின் கால்கள் குட்டையானவை உடலுக்குப் பொருந்தாதவை. அவள் தலையும் குண்டானது.ஆனால் அந்தக் கண்கள் ஒரு சிறைக்கைதியின் கனவுகளைத் தூண்டக் கூடியவை.ஒரு உதவியாளனின் சுய கற்பனையைப் போன்றது.உண்மையில்லாதது,அடைய முடியாதது.மிகுந்த வெட்கத்துடன் மனிதத்தின் துடிதுடிப்புடன் எப்போதும் யாரையும் ஒரு சந்தேகப் பார்வையுடன் பார்க்க கூடியது என்று எலிசபெத்தை அறிஞர்கள் புகழ்கிறார்கள்.
படத்தில் அரசர்களை காதலித்த அவர் நிஜவாழ்வில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரோனால்ட் ரீகனுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
சிறுவயதிலிருந்தே திரைப்படங்களை மெய்மறந்து ரசித்தவர் எலிசபெத் டெய்லர். இதைப்பற்றி அவரே நினைவு கூர்ந்துள்ளார்.சிறுவயதில் சுருண்ட முடியுடன் திரையில் தோன்றிய தன் அழகை தானே பலமுறை ரசித்துக் கொண்டிருந்தாராம்.
மீன்துண்டுகளை வாயில் போட்டு விழுங்குவதைப் போல் ஆண்களை மயக்கி தன்னுள் விழுங்கியவர் எலிசபெத் டெய்லர் என்று மற்றொரு ஆய்வாளர் கூறுகிறார்.காலையில் உண்ட உணவை பிற்பகலில் துப்பிவிடுவதைப் போல் தாம் வரித்துக் கொண்ட ஆண்களை நிராகரிப்பதிலும் தயக்கமே  இல்லாதவர் என்றும் கூறப்படுகிறது.எளிதில் காதல் வசப்படக்கூடியவராக இருப்பினும் அவர் ஏமாளியாக இல்லை. கிளியோபாட்ராவின் படப்பிடிப்பில் இரண்டு மிகப்பெரிய நடிகர்களும் எலிசபெத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவாத புகார் அளித்தனர். ஆனால் ரிச்சர்ட் பர்ட்டன் மெல்ல மெல்ல எலிசபெத்தின் வலையில் விழுந்தார். படப்பிடிப்பு நடைபெற்ற மூன்று மாதங்களுக்குள் அவர்களின் நெருக்கம் படுக்கை வரை சென்றது.
கிளியோபாட்ரா 11 மொழிகள் பேசுவார். கலைகளில் நாட்டமுடையவர். மிகப்பெரிய அறிவுக்கூர்மை கொண்ட பெண். துணிச்சல்காரி. தன்அழகை விடபெரிய அதிகாரம் உலகில் இருக்க முடியாது என்ற துணிபு கொண்டவள். இதே குணாதிசயத்துடன் இருந்த எலிசபெத் டெய்லர் இந்தப் பாத்திரத்திற்கு அபாரமாக பொருந்திப் போனார்.
கிளியோபாட்ராவாக 65 முறை படத்தில் ஆடை மாற்றிய அழகி எலிசபெத் டெய்லர். மார்பின் பிளவு தெரியும் லோகட் கவுன்களில் அவர் மார்க் ஆன்டனியாக நடித்த ரிச்சர்ட் பர்ட்டனுடனும் சீசராக நடித்த ரெக்ஸ் ஹாரிசன் ஆகியோருடன் முத்தக் காட்சிகளில் நெருங்கி நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பூட்டினார்.
படத்தில் அவர் கிரேக்க தலைநகர் ரோமுக்கு வரும் காட்சி ஒன்று உள்ளது. சீசரை மயக்க ஒரு பாயில் சுருட்டி விடப்படும் எலிசபெத் டெய்லர், சீசரின் முன் உருண்டு புரண்டு அவரை மயக்கி நம்மையும் மயக்கி சீசரை மணமுடித்துவிடுவார். அதன்பின் சீசர் அவரை அதிகாரப்பூர்வ அரசியாக அறிவித்து ரோமுக்கு அழைத்து வருவார். எகிப்து ராணி தங்கள் அரசியாக வருவதை விரும்பாத ரோமானியர்கள் அரசியை வரவேற்க திரண்டுள்ள பிரம்மாண்டமான காட்சி படத்தின் முக்கியமான காட்சியாகும். கிளியோபாட்ராவை வி்ரும்பாத ரோமானிய மக்களும் அவள் பேரழகால் வசப்பட்டு உடனடியாக அவரை தங்கள் ராணியாக வரவேற்கும் காட்சி அழகு என்ற ஆயுதம் அரசியலில் எத்தகையது என்பதை உணர்த்துகிறது.
ஷேக்ஸ்பியரின் அந்தோணி கிளியோபாட்ரா நாடகத்தின் தன்மையுடன் சீசர் கொல்லப்படும் காட்சியும் இடம் பெறுகிறது. தமிழில் சிவாஜிகணேசன் சொர்க்கம் படத்தில் சீசராக நடித்து யூ டூ புரூட்டஸ் என வசனம் பேசி கைத்தட்டல் பெற்றார். ப்ரியா படத்தில் ரஜினிகாந்தும் சிவாஜியின் நடிப்பை பின்பற்றி சீசராக நடித்திருந்தார் .படத்தின் திரைக்கதைக்கு இந்தக் காட்சிகள் எந்தவகையிலும் பொருந்தவில்லை என்பதை இப்போதைக்கு விட்டு விடலாம்.
ஷேக்ஸ்பியரின் JULIUS CESAR ஒரு துன்பவியல் நாடகம். சீசருக்கு அரசு வட்டாரத்தில் எதிர்ப்பு வலுத்து அவரைக் கொல்ல அவரது படைத்தளபதிகள் திட்டமிடுவார்கள். சீசர் ஒரு அழகியின் காலடியில் மயங்கிக் கிடப்பதை சிறிதும் விரும்பாத அவர் மகன் அகஸ்டஸ் சீசர் தனது தந்தையைக் கொன்று அதிகாரத்தைக் கைப்பற்ற துடிக்கிறார். சீசரின் மிக நம்பிக்கைக்குரிய தளபதியும் நண்பனுமான புரூட்டஸ் இதற்கு பகடையாகப் பயன்படுத்தப்படுகிறான். சீசரை அனைவரும் வாளால் குத்தி சாய்க்கும் போது புரூட்டசிடம் காப்பாற்றுமாறு சீசர் கெஞ்சும் போது புரூட்டசும் மறைத்து வைத்திருந்த கோடாரியால் சீசரை வெட்டி சாய்க்கிறான்.
மிக நெருங்கிய நண்பன்தான் மிகப்பெரிய துரோகியாக மாறுவான் என்பது சரித்திரம் சொல்லும் சான்று
யூ டூ புரூட்டஸ் என்ற சீசரின் அந்த வசனம் காவிய அந்தஸ்து பெற்றது.
துரோகத்தின் வலிகளை உணரும் போதெல்லாம் நாமும் நம்முடன் பழகிய புரூட்டஸ்களை நினைத்துக் கொள்கிறோம்.
சீசரைக் கொன்றுவிட்ட நிலையில், மக்களிடம் அதைப்பற்றி உரை நிகழ்த்தும் புரூட்டஸ் சீசர் அழகியின் பிடியில் சிக்கி நாட்டை சீரழித்து விட்டதாகவும் அவரைக் கொன்றால்தான் நாட்டை காக்க முடியும் என்றும் கூறி மக்களின் மனங்களை மாற்றி விடுவார்.
அப்போது சீசரை கொன்றது துரோகிகள் என மக்களிடம் வாதாடுவார் மார்க் ஆன்டனி. துரோகிகளின் பேச்சை நம்பாதீர்கள் எனக்கூறி ஏழைகள் கண்ணீர் சிந்தும் போதெல்லாம் சீசரும் கண்ணீர் சிந்தியதை தாம் உடனிருந்து பார்த்ததை விளக்கி மக்களை நெகிழச் செய்வார் ஆன்டனி. சீசருக்காக கண்ணீர் சிந்துங்கள் என மக்களிடம் அவர் எழுச்சி உரையை நிகழ்த்துவார். மக்களும் ஆன்டனியின் பேச்சை ஏற்று புரூட்டசை நிராகரித்துவிடுவார்கள்.
ஷேக்ஸ்பியரின் இந்த வரலாற்று நாடகத்தை உணர்ச்சிப் பிரவாகமாக படத்தில் காட்டவில்லை என்றாலும் இப்படம் புரூட்டஸ் பற்றியோ ஆன்டனி பற்றியோ சீசரைப் பற்றியோ அல்ல, கிளியோபாட்ராவை பற்றியது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அரசு ஆட்சியை கைப்பற்ற தன்னை மரபின்படி மணந்த தம்பியை கொன்றவள் கிளியோபாட்ரா, உடன்பிறந்த சகோதரியையும் தாயையும் கொன்றார். வாரிசுகள் யாருமில்லாத நிலையை உருவாக்கி தன்னை தனிப்பெரும் அரசியாக ஆக்கிக் கொண்டாள். சீசரை மயக்கி ரோமாபுரி ராணியானாள். பின்னர் ஆன்டனியை மணந்து அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டாள். ஆனால்  அழகின் அதிகாரம் நீண்ட ஆயுள் கொண்டதல்ல. மார்க் ஆன்டனி அவள் மீதுள்ள காதலால் தற்கொலை செய்துக் கொள்ள சிறையில் அடைக்கப்படும் கிளியோபாட்ராவும் நாகப்பாம்பின் விஷத்தால் உயிரிழக்கிறாள்.
அவள் நாகப்பாம்பு கடித்து சாகவில்லை. பாம்பு கடித்தால் உடலில் நீலம் பாரித்து உடல் உப்பி விடும் என்பதால் தன் அழகு குலைந்த நிலையில் சாக கிளியோபாட்ரா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
எகிப்தின் பாரம்பரிய தாவரங்கள் பற்றி அபார அறிவு பெற்றிருந்த கிளியோபாட்ரா மிகவும் கொடிய விஷச் செடிகளை வரவழைத்து அதை அரைத்து தன் அழகு குலையாமல் உயிர் இழந்தார் என்றும் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடைசி வரை ராணியாகவே வாழ விரும்பி, உலகையே தனது அழகால் ஆட்டிப் படைக்க முயன்ற ஒரு பேரசி கைதியாக வாழ விரும்பாத கதைதான் கிளியோபாட்ராவின் கதையும்.அதையொட்டிய திரைப்படமும் வரலாற்று குறிப்புகளை மீறாமல் மிகுந்த நேர்த்தியாக எடுக்கப்பட்டது.இது என்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் சினிமா ரசிகர்களுக்கும் பரவசமூட்டும் அனுபவம்தான்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...