கவியரசர் கண்ணதாசன் எழுதிய பல பாடல்களில் இயக்குனர் ஸ்ரீதர் படங்களுக்கு எழுதிய பாடல்களில் அழுத்தமான கதாபாத்திரங்களின் உணர்வுகள் பதிவாகியதால் அந்தப் பாடல்கள் தனித்துத் தெரிந்தன. நெஞ்சிருக்கும் வரை படத்தில் சிவாஜி கணேசன் கே.ஆர்.விஜயாவை காதலிப்பார்.ஆனால் தனது நண்பனுக்கு காதலியை தாரை வார்த்து அவரை சகோதரியாக ஏற்றுக் கொள்வார். சகோதரியாக நினைத்த சிவாஜியை சந்தேகிப்பார் கே,ஆர்.விஜயாவை மணந்த முத்துராமன். இதனால் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். ஒரு பண்புள்ள மனைவியாக அவரை கே.ஆர்.விஜயா அணைத்து அரவணைத்து ஒரு தாய் போல் கவனித்துக் கொள்ளும் பாடல் ஒன்றை கவிஞர் எழுதினார். இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர் பி.சுசிலா
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத்தானே கொண்டு வந்தேன் என் கண்ணோடு
என் கண்ணோடு
வாசலிலே உன் காலடி ஓசையை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
கண்ணில் நீரைக் காணாமல் கவலை ஏதும் கூறாமல்
என்னை எண்ணி வாழாமல் உனக்கென நான் வாழ்வேன்
காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்
காதல் என்றால் சேயாவேன்
கருணை என்றால் தாயாவேன்
கண்ணா உந்தன் நிழலாவேன்
உனக்கென நான் வாழ்வேன்
நாட்டில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் குடிபோதையில் உழலும் தங்கள் கணவருக்காக உருகி உருகி உயிராக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த தாய்க்குலத்தின் பெருமையை விளக்கும் இப்பாடல் மனைவியை தாயின் அந்தஸ்துக்கு உயர்த்தக் கூடிய உயர்ந்த அன்பை வெளிப்படுத்துகிறது.
No comments:
Post a Comment