Thursday 1 December 2016

அஞ்சலி- கவிஞர் இன்குலாப்

கவிஞர் இன்குலாப்பை எனக்கு 80 களில் இருந்தே தெரியும். அவர்தான் என்னை முதன்முதலாக வழிநடத்தியவர். கவிதையை புரட்சிகரமாக எழுதும் பித்து அந்தக் கால இளம் கவிஞர்கள் பலருக்கும் இருந்தது. எனக்கும்தான். அப்போது எங்களுக்கெல்லாம் ஆதர்சமாக இருந்தவர் இன்குலாப். கண்மணி ராஜம் கவிதையில் பீட்டர் சாலை பெரிய சாலைஎன்று தொடங்கும் அந்த வர்ணனை மனதுக்குள் எத்தனையோ அதி்ர்வுகளை ஏற்படுத்தியது. மனுசங்கடா என்று அவர் பாடும் போது மேடையில் மார்க்சீய உணர்வு பெருகி பார்வையாளர்களை எழுச்சியுறச் செய்தது. சோசலிக் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்ற சில மொழிபெயர்ப்புகளையும் இன்குலாப் செய்திருந்தார். அதே போல் இன்குலாப் கவிதைகள் என்று அகரம் பதிப்பகம் வெளியிட்ட தொகுப்பில் இளவேனில் எழுதிய நீண்ட முன்னுரை கவிதைகள் குறித்த ஒரு அற்புதமான ஆவணமாகவே இருக்கிறது.
இன்குலாப்பை செந்தூரம் இதழுக்காக சந்தித்து  நீண்ட பேட்டி ஒன்று எடுத்திருக்கிறேன். அது இரண்டு இதழ்களில் தொடர்ச்சியாக வந்தது. நான் எப்போது அழைத்தாலும் பிரியத்துடன் ஒரு ரூபாய் கூட வாங்காமல் கூட்டத்திற்கு வந்து அருமையாகப் பேசி கடைசி வரை இருந்துவிட்டு செல்வார். ஜானி ஜான் கான் தெருவில் இருந்த அவர் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் அருமையான டீ ஒன்றை தருவார். அப்போது அவர்  பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். தொண்ணூறுகள் வரை இன்குலாப்பின் சிஷ்யன் எனக்கூறுமளவுக்கு அவருடன் நெருங்கி பழகியவன் தொண்ணூறுகளில் ஓஷோவால் மார்க்சியம், புரட்சி கோஷங்களில் இருந்து விலக ஆரம்பித்தேன். ஜெயமோகன், சுந்தர ராமசாமி, கோவை ஞானி, பிரபஞ்சன், பெரியார்தாசன் என்று பலருடன் நட்பு வட்டம் வளர்ந்ததில் இன்குலாப்பின் இடம் விலகிப் போனது.
பல ஆண்டுகளாக நானும் தொடர்ச்சியாக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இலக்கியம், சினிமா குறித்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் .கிடங்குத்தெரு என்ற மிக முக்கியமான படைப்பையும் தமிழுக்கு தந்துள்ள திருப்தி இருக்கிறது. பல மொழிபெயர்ப்புகளையும் செய்து வருகிறேன். ஊடகத்துறையில் மனுஷ்யப்புத்திரன், டாக்டர் கவுசல்யா போன்றவர்கள் இன்று அடிக்கடி தென்படுவதற்கு ஒரு வகையில் நானும் காரணம்.
ஆனால் நான் காணாமல் போய்விட்டதாக பலரும் கருதுவதுண்டு. என் இயக்கம் ஒருநிமிடம் கூட ஓய்ந்ததில்லை.
பல ஆண்டுகள் கழித்து சென்னை பல்கலைக்கழக வாயில் அருகே கவிஞர் இன்குலாப்பை சந்தித்த போது மிகவும் மகிழ்ச்சியுடன் பேசினார். ஜெகதீஷ் நீங்க எப்படிப்பட்ட ஆக்டிவான ஆளு நீங்க எங்கே காணாமல் போயிட்டீங்க , நீங்க இல்லாதது இலக்கியத்திற்கு மிகப் பெரிய இழப்பு என்று  அவர்  கேட்டார். தன் உலகை விட்டு வெளியுலகை அவர் எட்டியே பார்க்கவில்லை என்றுதான் எண்ணிக் கொண்டேன்.
அவர் மறைவு வரை மீண்டும் அவரை சந்திக்கவில்லை.அதற்காக மிகவும் வருந்துகிறேன். இன்குலாப் எப்போதும் மதிக்கக்கூடிய ஆளுமை. முரண்பட்டாலும் கூட.

எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி குறைவாக இருக்கும் மனிதர்களில் இன்குலாப்பின் இடம் முதலிடம்தான். கடைசி இடத்தைக் கூட கொடுக்க முடியாத ஒருவர் இருக்கிறார். யார் என்பதை நீங்களே ஊகி்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...