Friday 30 December 2016

பயணம் 7 -பாலக்காடு

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா என்ற பாடல் வியட்நாம் வீடு படத்திற்காக கண்ணதாசன் எழுதியது. ஆனால் அது எம்.எஸ்.விக்காக எழுதப்பட்டிருக்கலாம். ஏனென்றால் எம்.எஸ்.வி பாலக்காடு மாவட்டம் பாறா பகுதியைச் சேர்ந்தவர். சில நாட்களுக்கு முன்பு பாலக்காடு சென்றிருந்தேன். ஒரு இலக்குமில்லாத பயணங்களில் இதுவும் ஒன்று நினைத்தபோது நினைத்த ஊருக்குப் போய்விடுவேன். கோவை போனதும் எங்கே போகலாம் என யோசித்து பாலக்காடு சென்றேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஊராக இல்லை. ரயில் நிலையம் முதல்  பேருந்து நிலையம் வரை பல மாற்றங்கள்,
ரயிலில் மதுக்கரை, கஞ்சிக்கோடு என பார்த்த பகுதிகளை மீண்டும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ரயிலில் காய்கறிகளை கவரில் போட்டு விற்பது இன்றும் தொடர்கிறது. திரும்பி வரும் போது கோவைக்கு கே.எஸ்.ஆர்டிசி பேருந்து செல்ல வேண்டும் என டவுன் பஸ்ஸில் ஏற்றி விட்டார்கள்.
அதற்கு முன்பு  சில மணி நேரங்களுக்கு ஊரை
சுற்றி வந்தேன். இரண்டு கடைகளில் பழைய மலையாள டிவிடிக்கள் வாங்கினேன். ராமு காரியாட்டின் நெல்லு அதில் ஒன்று பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தது. கனகதுர்காவும் ஜெயபாரதியும் நடித்த படம். அதே போல் கமல்ஹாசன் நடித்த ஈட்டா உள்ளிட்ட 4 மலையாளப் படங்கள் ஒரே டிவிடியில் கிடைத்தன.

கேரள வாழைக்காய் சிப்ஸ், தேநீர் ருசியுடன் என் நினைவுகள் பின்னோக்கி்ச் சென்றன. பாலக்காட்டில் சில நண்பர்கள் இருந்தனர். இப்போது ஷாராஜ் மட்டுமே தொடர்பில் இருக்கிறார். சித்தூர் அரசு கல்லூரியில் பேராசிரியரான வேதசகாயகுமார் நாகர்கோவில் சென்றுவிட்டார். பாறா பகுதியைச்ம சேர்ந்த நோம்பிக்கோடு என்.மனோகரன் சித்தூர் அரசுக்கலை கல்லூரியில் பேராசிரியராக இருப்பதாக தெரிகிறது. சந்திக்கவில்லை. மற்ற நண்பர்களுக்கு வயதாகி டீன் ஏஜில் பெண் குழந்தையோ ஆண்குழந்தையோ இருப்பதை அறிகிறேன். எனக்கும் 15 வயது மகன் விக்கி இருக்கிறான்.

காலம் எத்தனையோ சுவடுகளை அழித்து விடுகிறது. சில வலிகளையும் நீக்கி விடுகிறது. சில துளி கண்ணீரை மட்டும் விழிகள் தக்கவைத்துள்ளன. சில நினைவுகளை உள்ளம் ஆழமாகப் புதைத்து விட்டது. சில உணர்வுகளை நானே ரத்து செய்யத் தொடங்கிவிட்டேன். சில கனவுகள் மட்டும் இருக்கின்றன. அவையும் அர்த்தமற்றவை. சில சந்திப்புகளுக்கான ஏக்கம் இருக்கிறது. சில நண்பர்களுக்கான உறவுக்கு என் கைகள் இன்றும் நீள்கின்றன. ஆனால் மறுமுனையில் வெறுமைதான் எஞ்சியிருக்கிறது.
கோவையும் பாலக்காடும் எனது கடந்தகாலத்தின் ரணங்களைக் கீறிச் சென்றாலும் இன்றும் அதன் வசியம் குறைந்துவிடவில்லை


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...