Sunday 14 August 2016

அஞ்சலி நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார் மரணம் அடைந்தார் என்று தொலைபேசியில் வந்த தகவலை நம்ப முடியவில்லை. எனக்கு முத்துக்குமாரை நன்கு தெரியும்.
முத்துக்குமாரை முதன் முதலாக காஞ்சிபுரத்தில் பார்த்தேன். இலக்கிய வட்டம் வெ.நாராயணன் ( அவரும் இன்று இல்லை) ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்க சென்றேன். அது தோப்பில் முகமது மீரானின் சாய்வுநாற்காலி விமர்சனக்கூட்டம் . அதில் பேசினேன். அப்போதுதான் நா.முத்துக்குமார் அறிமுகமானார். அண்ணே உங்க கதை ஒண்ணு கல்கியில் வந்திருக்கு என்றார். அப்படியா தெரியாதே என்றபோது ஓடிப்போய் தன் காசில் கல்கியை வாங்கி வந்தார். கொடூரக் கனவுகள் பெயரில் வெளியான அந்தக் கதையை நான் தலைப்பு வேறு வைத்து என் தொகுப்பில் இணைத்திருக்கிறேன்.
அதன் பிறகு ஓரிருமுறை சென்னை இலக்கியக் கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன். எழுத்தாளர் சுஜாதா அவர் கவிதையை பாராட்டி ஆயிரம் ரூபாய் பரிசு கொடுத்த போது கைகுலுக்கி வாழ்த்தினேன். தொடர்ந்து பட்டாம் பூச்சிகள் விற்பவன் என்ற கவிதை நூலை வெளியிட்டார். அவருடைய பட்டாம் பூச்சிகள் விற்பவன் வெளியீட்டு விழாவில் நான் கலந்துக் கொண்டு பேசியிருக்கிறேன். அப்பேச்சு சர்ச்சைக்கு ஆளாகி அறிவுமதி போன்றவர்களுடன் முரண்பட்டு சிறிய சண்டை சர்ச்சைகளுக்குப் பிறகு நாங்கள் சமாதானமாகிப் போனோம். நாம் நண்பர்களாகவே நீடிப்போம் என்று அண்ணன் அறிவுமதி புத்தகக் கண்காட்சியில் கைகுலுக்கினார்.பின்னர் இன்னொரு முறை நண்பர் ஃபீலிக்ஸ் ஜெரால்டின் திருமண விழாவில் முத்துக்குமாரை பார்த்த போது மிகப்பிரபலமான பாடலாசிரியராகி விட்டார். ஆனாலும் அகம்பாவம் ஏதுமில்லை. கூப்பிட்ட போது என்ன அண்ணே என்று அதே பிரியத்துடன் பேச வந்தார். என் கணிப்புகள் பொய்யாகி விட்டன முத்து. நீங்க ஜெயிச்சுட்டிங்க நான் தோத்ததுல ரொம்ப சந்தோஷம். நல்லா எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்க என்று கைக்குலுக்கி பேசினேன். அவர் முகம் மலர்ந்தது. தன் விசிட்டிங் கார்டை கொடுத்து எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்க என்றார்.

அதன் பிறகு ஓரிரு சந்திப்புகள். ஓரிரு தொலைபேசி உரையாடல்கள். அவர் இத்தனை சிறிய வயதில் காலமாகி விடுவார் என்பதை எதிர்பார்க்கவே இல்லை. அதிர்ச்சியாக இருந்தது. சத்தியமாக இதை நான் விரும்பவேயில்லை. நான் செத்துப் போயிருக்கலாம். வாழ்க்கையை ஒரு வெறுமையுடனும் சூன்யத்துடனும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.பெயர் , புகழ். அழகான குடும்பம் வெற்றி என எல்லாம் இருந்த முத்துக்குமார் சாக வேண்டிய அவசியமே இல்லை. ஊரே அழுகிறது. நான் செத்தால்  அதிகபட்சம் பத்து இருபது பேர்தான் உண்மையாக  அழுவார்கள்.

மிகவும் வருத்தம் தான் முத்துக்குமார் .ஏன் போய்விட்டாய் நண்பனே...





No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...