Monday 8 August 2016

உலக சினிமா - உறவுச் சிக்கல்களின் மறுபக்கம்- intimate strangers


குமுதம் தீராநதி ஆகஸ்ட் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை 




உலக சினிமா
உறவுச் சிக்கல்களின் மறுபக்கம்
INTIMATE STRANGERS பிரெஞ்ச் திரைப்படம் -2004
இயக்குனர்- பேட்ரிஸ் லீகானே ( patrice le conte) 
செந்தூரம் ஜெகதீஷ்


எதுவும் என்றும் மாறலாம் மனசுதானே காரணம் என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகளை நினைவுபடுத்தும் படம் இது. மனதிற்குள் அறியாமல் மனிதன் போட்டு வைத்த மர்மமுடிச்சுகள் அவிழும் போது ஏற்படும் உறவுச்சிக்கல்களையும் அவற்றின் மறுபக்கத்தையும் இப்படம் சித்தரிக்கிறது.
ஆண் பெண் உறவு அந்தரங்கமானது. அன்பும் காமமும் அதன் இரண்டு பக்கங்கள். ஆண்களை நேசிக்கும் பெண்களுக்கு அது ஒரு ஏற்பாடு. வாழ்க்கைக்கான ஒரு ஒப்பந்தம். ஒரு உடன்பாடு. தனது உடலை முழுவதுமாய் ஆணுக்கு கொடுக்கும் முன்பாக பெண் தனது வாழ்நாள் பாதுகாப்பை நினைக்கிறாள். அவன் கடைசி வரை இதே அன்புடன் தன்னை நடத்துவானா என்ற சந்தேகம் அவளுக்குள் எழுவது இயல்புதான். அப்படி அவன் நடக்காத போது உறவுகள் தொடர்கதையாகாமல் சிறுகதையாகி விடுகிறது. 
ஆணுக்கோ பெண்ணின் உறவு ஒரு கேளிக்கை. சில சமயங்களில் அது ஒரு ஆராதனை. சில சமயங்களில் அது ஒரு ஆலாபனை. சில சமயங்களில் அது  ஆண்மையின் நிறைவு. சில சமயங்களில் பிள்ளைப் பிராயத்தின் குதூகலம். அதனால்தான் இப்படத்தில் வரும் டாக்டர் மோனியர் காதலிக்கும் போது நாம் சிறுபிள்ளைகள் போல் மாறி விடுகிறோம் என்று கூறுகிறார். மற்றவர்களுக்கு அசட்டுத்தனமாகத் தெரியும் காரியங்கள் காதலர்களின் கண்களுக்கு அப்படி தெரிவதில்லை. 
கணவனை ஆழமாகக் காதலிக்கிறவள் அன்னா ( சாண்டிரின் போனாயர்) ஆனால் போதிய பொருளாதார வசதியில்லாத கணவன். இல்லாதவனை இல்லாலும் வேண்டாள் என்பதாக அவர்களின் காதலுக்கு பொருளாதாரம் தடையாக வருகிறது. அவன் வேலைக்குப் போக விரும்பவில்லை. அவள் சூட்கேஸ்கள் விற்கும் ஒரு கடையில் வேலைக்குப் போய் தேவைகளை சமாளிக்கிறாள். இருவருக்கும் இடையிலான பிளவு அதிகரித்து வருகிறது. கணவன் மனைவி உறவுக்கு இடையில் இல்லாமை வந்து படுத்து விடுகிறது. இருவரையும் சேர விடாமல் பண்ணுகிறது. நான்கே வருட இல்லற வாழ்க்கையில் அவன் அவளை விட்டு விலகி விட்டான். 30 நாட்கள் தேனிலவு முடிந்தால் கணவனும் மனைவியும் சகோதர சகோதரிகளாக மாறி விடுகிறார்கள் என்பார் ஓஷோ. அவர்களின் தொடுதலில் தீ இல்லை. அனல் மூச்சுகள் இல்லை. ஆறிப்போன காபியை யார்தான் விரும்புவார்...ஒருவரில் ஒருவர் முயங்குதல், அணைத்தல், முத்தமிடுதல், உடலில் தலைமுதல் கால் வரை வருடுதல், ஆசை தீர உடலுறவு கொள்ளுதல் ஏதுமில்லாத ஒரு வெற்று இல்லறத்தை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவளுக்கு ஆணின் உறவு தேவைப்படுகிறது. அவள் உடல் இளமையானது. அழகானது. அந்த அழகுக்கும் இளமைக்கும் கண்ஜாடை காட்டினால் ஆயிரம் பேர் வரிசையில் நிற்பார்கள். ஆனால் அவள் கணவனையே நேசிக்கிறாள். அவனது ஸ்பரிசத்துக்காக அதன் பழைய நினைவுகளிலேயே வாழந்துக் கொண்டிருக்கிறாள். மனது அவளுக்கு பாரமாகிறது. அழுத்துகிறது. அழ வைக்கிறது. புகை பிடிக்கப் பழகுகிறாள். அதுவும் உதவவில்லை. 
தொலைபேசி புத்தகத்தின் மஞ்சள் பக்கங்களில் மனநல நிபுணர் டாக்டர் மோனியரைப் பற்றிய தகவல் கிடைக்கிறது. அவரைத் தேடி அவள் செல்கிறாள். அதுதான் படத்தின் தொடக்க காட்சி.
டாக்டர் மோனியர் எந்த பிளாட்டில் வசிக்கிறார் என குடியிருப்பில் உள்ள ஒரு பெண்ணிடம் கேட்கிறாள் அன்னா. அவர் ஆறாவது மாடியில் வசிப்பதாக கூறுகிறார் அந்தப் பெண். ஆனால் பிளாட் நம்பர் தப்பாக சொல்லி விடுகிறாள். 
ஆறாவது மாடிக்குப் போகும் அன்னா தப்பான பிளாட் நம்பரில் காலிங் பெல்லை அழுத்த ஒரு நடுத்தர வயது மனிதர் கோட்டும் சூட்டுமாக கதவைத்திறக்கிறார். அவரை டாக்டராக நினைத்து தான் அப்பாயின்ட்மென்ட் பெற்று வந்ததாக கூறி உள்ளே வருகிறாள். அவரோ ஒரு வருமான வரி தொடர்பான கணக்காளர். யாரோ வாடிக்கையாளர் என நினைக்கிறார். ஆனால் அந்தப் பெண் தன் அந்தரங்க வாழ்க்கையை மனம் திறந்து பேச ஆரம்பிக்கிறாள். நடுநடுவே அழுகிறாள். ஒரு இளம் பெண்ணின் அந்தரங்கம் அவள் வாய்மூலமாகவே தன் முன் வெளியாவதைக் கேட்க அவர் ஆர்வம் கொள்கிறார். தாம் டாக்டர் அல்ல என்று கூறினாலும் ஆமாம் தெராபிஸ்ட்டுகள் முறையான மருத்துவர்கள் இல்லை என தமக்கும் தெரியும் என்று கூறுகிறாள் அன்னா. அதற்குமேல் உண்மையை போட்டு உடைக்க வில்லியம் என்ற அந்த மனிதருக்கும் மனசு இல்லை.
வில்லியம் மணமாகி விவாகரத்து பெற்றவர். மனைவி வேறு ஒரு உடற்பயிற்சி ஆசிரியனுடன் உறவாடி கணவரை விட்டு பிரிந்து விட்டாள். ஆனால் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசும் நண்பர்களாக நீடிக்கிறார்கள். எப்போதாவது முத்தமிடவும் புதிய காதலன் முன்னாள் கணவருக்கு அனுமதிக்கிறான்.
தமதுமாஜி மனைவியிடம் புதிதாக வந்த பெண்ணான அன்னாவைப் பற்றி கூறுகிறார் வில்லியம். அழகான பெண்ணோ என்ற லேசான பொறாமையுடனும் தமது முன்னாள் கணவர் மீண்டும் ஒரு காதல் வலையில் சிக்குவது குறித்த திருப்தியில் தனது குற்ற உணர்வை மறைப்பதற்கும் அந்த மனைவிக்கு ஒரு சந்தர்ப்பம் அது. நீயாக முதலில் உன் காதலை அந்தப் பெண்ணிடம் கூறக்கூடாது என நிபந்தனை விதிக்கிறாள். அவள் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் உண்மையில் அவளுக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம் அதற்கு நீ குறுக்கே நிற்காதே என்றும் அறிவுறுத்துகிறாள்.
தொடர்ந்து அன்னாவும் வில்லியமும் உரையாடுகின்றனர். எதிரே இருப்பவன் ஒரு அந்நியன் என்ற உணர்வில்லாமல், தான் நாடி வந்த மருத்துவனும் அவன் அல்லன் என்று தெரியாமல் அவள் தன் மனதின் கதவுகளைத்திறந்து தனது உணர்வுகளைக் கொட்டுகிறாள்.பேசக்கூட தமக்கு யாருமில்லை என்றும் யாரிடமாவது மனம்திறந்து பேசாவிட்டால் தான் பைத்தியமாகி விடுவேன் என்றும் அன்னா கூறும் போது அவள் பேசுவதை மறுக்க வில்லியமால் முடிவதில்லை. தான் வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்வதில் தனது கணவனுக்கு ஆட்சேபமில்லை என்கிறாள் அன்னா. அது அவர்கள் இருவரிடையிலான புதிய உறவுக்கு பச்சைக் கொடியாக பார்க்கப்படுகிறது.
ஏன் உன் கணவரை விவாகரத்து செய்யவில்லை என்ற வில்லியமின் கேள்விக்கு இனி அது மிகவும தாமதமான முடிவு என்கிறாள் அன்னா. திருமணமான ஓரிரு ஆண்டுகளில் விவாகரத்து பெறா த உறவு ஒரு சடலம் போல் வாழ்நாளெல்லாம் சுமக்கக் கூடியது என்று அன்னா உணர்த்துகிறாள்.
அவள் யாரைத் தேடி இவரிடம் வந்தாளோ அந்த உண்மையான டாக்டருடன் வில்லியம் ஆலோசிக்கிறார். டாக்டர் மோனியர் கூறுகிறார் காதலில் விழுந்துவிட்டால் அதை கடைசி வரை போய் பார்த்துவிடு....எங்கே அது கொண்டு செல்கிறது என்பதை கவனி. ஏமாற்றாதே. அதே சமயம் அதனுடன் செல்லவும் தயங்காதே. ஒரு கட்டத்தில் நீ யார் என்ற உண்மையை அவளுக்குக் கூறு. இப்போதே கூற வேண்டாம். அவள் பேச வேண்டியவற்றை பேசி முடிக்கட்டும். எந்தப் பெண்ணும் அந்நியமான ஒரு ஆணிடத்தில் தனது உள்ளத்தை திறந்து தனது அந்தரங்கத்திலும் அந்தரங்கமாக புதைந்து கிடக்கும் ரகசியங்களைப் பேச மாட்டாள். உன்னிடம் அவள் பேசுகிறாள் என்றால் உன் மீது ஒரு மரியாதை கலந்த நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையை வாழ விடு. சிதைத்து விடாதே. நீயே அவளுடைய மனநோய்க்க மருந்தாக முடியும் என்கிறார் மருத்துவர்.
காதலிக்கும் போது பெண் சுகம் பித்துப்பிடிக்க வைக்கிறது. நாம் சிறுபையன்கள் போல் ஆகி விடுகிறோம். நமது வயது அந்தஸ்து யாவற்றையும் மறந்துவிடுகிறோம். ஆனால் அதுதான் காதலின் சக்தி என்று விளக்குகிறார் டாக்டர் மோனியர்.
அன்னாவுடன் நெருங்கிப் பழகத் தொடங்கி அவளுக்கு நல்லதொரு நண்பனாக மாறிவிடும் வில்லியம் அவ்வப்போது தனது முன்னாள் மனைவி, டாக்டர் மோனியர் ஆகியோரின் ஆலோசனைப்படி அன்னாவிடம் தனது உறவின் பாதையில் ஒவ்வொரு அடியாக முன்னே எடுத்து வைத்து செல்கிறார்.
ஒரு கட்டத்தில் அன்னாவின் கணவரையும் அவர் சந்திக்கிறார். அன்னாவுக்கும் அவள் கணவனுக்குமான உறவில் ஏதேனும் ஆனந்தம் எஞ்சியிருந்தால் அதை தான் பறித்துவிடக்கூடாது என்பதே அவரது நல்ல நோக்கம்.
ஆனால் திருமண உறவை ஒரு சடலம்போலத்தான் அதன் துர்நாற்றத்துடன்தான் அன்னா சுமந்துக் கொண்டிருக்கிறாள் என்ற தெளிவு ஏற்பட்டு அவர் தமது உறவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைக்கிறார். ஆனால் அதற்கு முன்பு அன்னாவிடம் தான் அவள் தேடி வந்த டாக்டர் அல்ல என்பதையும் சொல்லிவிட வேண்டும்.
ஒரு நாள் சொல்லிவிடுகிறார். அன்னா கோபம் கொண்டு அவரை விட்டு பிரிந்து செல்லலாம். அவர் தன்னை ஏமாற்றியதாக வழக்குத் தொடரலாம். ஊரைக்கூட்டி அசிங்கப்படுத்தலாம். அவள் எதை செய்தாலும் சரி தான் அவளை நேசித்தது நிஜமானது. அவள் அந்தரங்கத்தினுள் சென்றது தவறுதான் என்ற போதும் சென்ற பிறகு அவள் மீதான அனுதாபத்தால் அவளை ஆழமாகக் காதலித்ததும் நிஜமானதுதான். அந்த காதலை அவள் ஏற்றாலும் சரி நிராகரித்தாலும் சரி.
அன்னை நிராகரிக்கவில்லை. அவனை நம்புவதா இல்லையா என்ற சிறிய குழப்பத்தையும் அவள் நீக்கி விடுகிறாள். இத்தனை நாட்களாக தனது கண்ணீரையும் காம உணர்வையும் ஒருவித அனுதாபத்துடன் சுண்டுவிரல் கூட தன் மீது படாமல் கண்ணியமான முறையில் கேட்டு ஆறுதல் தந்த ஒரு மகத்தான மனிதனை அவள் தன் எதிரே காண்கிறாள்.  தான் தேடி வந்தது தப்பான நபரையல்ல, சரியான நபரைத்தான் என்று அவள் உறுதி கொள்கிறாள். முதன் முறையாக வில்லியம் அவளை முத்தமிடுகிறான். இருவருக்கும் ஒரு புதிய உறவு, ஒரு புதிய உலகம் மலர்கிறது. அந்தரங்கமான இரண்டு அந்நியர்கள் ஒருவராகி சங்கமிக்கிறார்கள்.
இந்த நுணுக்கமான கதையை மிகவும் நேர்த்தியாக இயக்கியுள்ளார் பிரெஞ்ச் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பேட்ரிஸ் லீகானே. வழக்கமாக இதுபோன்ற ஆண்பெண் உறவு தொடர்பான கதைகளில் பெரிய அளவில் காட்டப்படும் படுக்கையறை நிர்வாணக்காட்சிகள் இந்தப்படத்தில் அறவே இல்லை. அப்படிப்பட்ட படம் என கற்பனையால் பார்த்தால் ஏமாற்றம்தான் எஞ்சும். உரையாடல் புரியாமல் படத்தை பாஸ்ட் பார்வர்டு செய்தாலும் படத்தின் ஜீவனை நாம் இழந்துவிடுவோம் . ஆனால் நல்ல வேளை அப்படி ஏதும் நடந்துவிடவில்லை. இப்படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி வசூலைக் குவித்தது. பெர்லின் சர்வதேச திரைப்பட விழா போன்ற விழாக்களில் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றது. 
அன்னாவாக நடித்த நடிகை சாண்டரினா அழகோ அழகு. இருண்ட கண்களில் அவர் காட்டும் உணர்ச்சிகள் அபாரமானவை. ஹை ஹீல்ஸ் காலணிகளுடன் அவள் டாக்டரை நாடி வரும் காட்சியில் தொடங்கி அவர் வில்லியமாக நடித்த ஃபேப்ரிஸ் லூச்சினியின் மனத்தை மட்டுமல்ல நமது உள்ளங்களையும் கொள்ளை கொண்டு விடுகிறார்.
பேப்ரிசின் நடிப்பு தனித்து சொல்ல வேண்டியது. ஒரு கண்ணியமான மனிதனுக்கு கடவுள் தந்த பரிசாக அந்த காதல் இதழ் இதழாக மலர்வதை படம் முழுவதும் ஒரு அற்புதமான நறுமணத்துடன் ரசிக்க முடிகிறது.
மழலைப்பட்டாளம் படத்தில் கௌரி மனோகரியை கண்டேன் என்ற பாடலில் கவிஞர் கண்ணதாசன் எழுதியது போல் வயதோடு வந்தாலும் காதல் அது வயதாகி வந்தாலும் காதல் என்பதை இப்படம் உணர்த்துகிறது.
காதல் வந்தால் நாம் சிறுபையன்கள் போல் நமது வயதை மறந்து துள்ளித்திரிகிறோம் என்று டாக்டர் மோனியர் கூறியது உண்மைதான். மீண்டும் நமது பால்யகாலத்தையும் இளமைக்காலத்தையும் அசை போட வைக்கிறது இப்படம்.
மீண்டும் ஒரு முறை யயாதி தனது மகனிடம் வரம் கேட்கக் கூடும்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...