Wednesday 7 September 2016

எழுத்தாளனுக்கு ஊதியம்

நண்பர் சாரு நிவேதிதா  எழுத்தாளர்களுக்கு மறுக்கப்படும் ஊதியம் குறித்த பதிவுகளை தமது இணையதளத்தில் வெளியிட்டதை வாசிக்க நேர்ந்தது. இது நீண்ட காலமாகவே உள்ள  பிரச்சினைதான். மணிக்கொடி எழுத்தாளர் கு.ப.ரா தமது கும்பகோணம் வீட்டுத் திண்ணையில் புத்தகம் விற்று அன்றைய அடுப்பு பொங்க வைப்பார் என்று எம்.வி.வி,அவர்கள் என்னிடம் கூறியதை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. நண்பர் பிரபஞ்சன் தமது புத்தகங்களை பதிப்பிக்கும் பதிப்பாளர்களிடம் போய் பொங்கல் தீபாவளி இனாம் கேட்பது போல் பிச்சை எடுத்து அந்த வள்ளல்கள் கருணையால் ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுவருவதை  நேரில் கண்டிருக்கிறேன். பிரபஞ்சன் கையில் பணம் இருக்கும் போது சரவண பவனில் நல்ல காபி ஒன்று வாங்கிக் கொடுப்பார் அவர் செலவில்.
( அதே பதிப்பாளர் என் புத்தகத்தையும் போட்டு பணம் தரவே இல்லை என்பது தனிக்கதை ) பிரபஞ்சன் போன்ற முழு நேர எழுத்தாளர்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றபோதும் இந்த நிலை என்றால்  சிற்றிதழ் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்த சுகன், ஷாராஜ், சூர்யராஜன், மு.நந்தா, சொர்ணபாரதி, ,  யூமா வாசுகி, திலீப்குமார்,  போன்ற எண்ணற்ற  எழுத்தாள நண்பர்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. சுகன் மறைந்தே விட்டார். சிற்றிதழ் நடத்திய காசில் அவர் ஒரு வீடு கட்டி தனது குடும்பத்திற்கு விட்டுச் சென்றிருக்கலாம். தமிழுக்கு இது எந்த கங்கையிலும் கரையாத தீராத பாவம்தான்.
நானும் அவ்வப்போது பத்திரிகைகளில் கதை கட்டுரை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறேன் ,கல்வெட்டு ,சுகன் போன்ற பத்திரிகைகளில் எழுதுவதில் ஒரு பிரச்சினையும் எனக்கில்லை. ஒருபைசா கூட நான் எதிர்பார்க்கவே மாட்டேன். முடிந்தால் 500 அல்லது 1000 ரூபாய் அனுப்பி வைக்க முயற்சிப்பேன். அதுகூட முடியாமல் போன தருணங்கள் உண்டு.
ஆனால் பெரிய வணிக இதழ்களி்ல் எழுதும்போது எழுத்தாளனுக்கு ஊதியம் அல்லது சன்மானம் தர வேண்டும் என்ற நேர்மை எத்தனை இதழ் ஆசிரியர்களுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை.
குங்குமம் இதழில் பணியாற்றும் போது துணை ஆசிரியர் பரத் துணுக்கு எழுதுகிறவருக்குக் கூட 50 ரூபாய் சன்மானமும் இலவச இதழும் அனுப்பி வைக்கும் பணியில் முழு மூச்சாக உழைப்பதை கண்டு பாராட்டியிருக்கிறேன், குங்குமம் நிர்வாகமும் பாராட்டுக்குரியதுதான்.
குமுதம் தீராநதியில் உலக சினிமா கட்டுரைகளை 20 இதழ்களுக்கு மேல் எழுதி வருகிறேன் . தவறாமல் பணம் வந்துவிடுகிறது. ஆசிரியர் மணிகண்டன் அவர்களுக்கு நன்றி,
சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் நடிகர் ஷம்மி கபூர் மறைந்த போது ஒரு கட்டுரை எழுதினேன். அதற்கு ஒருமுறை என்பெயரில் 500 ரூபாய்க்கு ஒரு காசோலை வந்தது. ஆனால் உடனே ஒரு போன் அழைப்பு. காசோலையை போட்டு விடாதீர்கள் அது உங்களுக்கானது அல்ல. வேறு எழுத்தாளருக்கு பதிலாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது திருப்பி அனுப்பினால் உங்களுக்கான காசோலை அனுப்பி வைக்கப்படும் என்று யாரோ பேசினார்கள். சரி என கூரியரில் எனது செலவில் அந்த காசோலையை அனுப்பி வைத்தேன். இன்று வரை எனக்கான காசோலை வரவே இல்லை. அது எந்த எழுத்தாளருக்குப் போய் சேர்ந்ததோ சினிமா எக்ஸ்பிரஸ் நண்பர்களுக்கே வெளிச்சம்.
அதை விட கொடுமை சினிமா எக்ஸ்பிரஸ் போட்டியில் சிறந்த பட விமர்சனத்திற்காக 250 ரூபாய் பரிசு என என் பெயர் போட்டு பிரசுரமான அரைப்பக்க செய்திக்கும் இதுவரை பணம் கிடைக்கவில்லை.சினிமா எக்ஸ்பிரசும் இப்போது வருவதில்லை.யாரிடம் கேட்பது.?
இது போன்ற அனுபவங்கள் தமிழில் எழுதும் எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கும். சாரு அதிகமாக எழுதுவதால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கலாம்.
அவர் உணர்வைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.
புலவர்களை யானை மீதேற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று பொன்னும் வெள்ளியும் அள்ளிக் கொடுத்த மன்னர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில் படித்திருப்போம். இந்தக் காலத்தில் அத்தகைய மன்னர்களும் இல்லை என்பதால் வேலையில்லாத பட்டதாரியைப் போல்தான் அவமானங்களுடன் எழுத்தாளன் தனது சொந்த  வீட்டில் கூட தலைமறைவாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். கண்ணதாசன் கூறியது போல் தினம் ஒரு நோட்டீஸ் தினம் ஒரு கடன்காரன், தினம் ஒரு வழக்கு.
புதுமைப்பித்தனுக்கு ஒருநாள் கழிந்ததுபோல்தான் எழுத்தாளனுக்கு ஒவ்வொரு நாளும் கழிகிறது. ஆனால் எழுத்தின் மீதான ஆசை மட்டும் குறையவே இல்லை.

ஒருமுறை ஜெயகாந்தனுடன் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார் எழுத்தாளனுக்கு கூலி கொடு. அச்சுக் கோர்ப்பவன், தட்டச்சு செய்பவனுக்கு கூலி தருவான் எழுத்தாளனுக்கு தரமாட்டான். பேசாமல் நானும்  அச்சுகோர்க்கிறேன் .கூலி கொடு. நீ அச்சுக் கோர்ப்பவனை விட்டு எழுத்தை வாங்கு பார்க்கலாம்.

பதிப்பகங்கள் யாவும் இப்படி என்றால் புத்தக விற்பனையாளர்கள் அதை விட மோசம். பல நூறு பிரதிகள் செந்தூரம் விநியோகித்து இதுவரை பணம் வரவில்லை. இன்னும் மிச்சமிருப்பவை, கிடங்குத் தெரு, சிறகுப் பருவம், எனது அண்மையில் வெளியான இரண்டு சினிமா புத்தகங்கள் எதற்கும் யாரும் பணம் அனுப்பவில்லை, புத்தகங்களும் திருப்பித் தரப்படவில்லை. அது ஒரு பொருட்டாகவே யாருக்கும் தோன்றியதில்லை.

அழகிய சிங்கர் மட்டும்தான் நேர்மையாக கணக்கை பைசல் செய்தார்.
கொரோனாவுக்குப் பின்னர் இன்னும் நிலைமை மோசம். தினசரி பத்திரிகைகளில் பக்கங்கள் குறைந்துவிட்டன. கட்டுரைகள் எழுத ஆள் இல்லை. எழுதினாலும் சன்மானம் இல்லை. பத்திரிகை விற்பனையும் இல்லை. குமுதம் 10 பிரதிகளும் குங்குமம் 5 பிரதிகளும் வாடிக்கையாளர்களுக்காக வாங்குவதாக எனக்குத் தெரிந்த கடைக்காரர் ஒருவர் கூறினார். கொரோனாவுக்கு முன்பு குமுதம் 150 பிரதிகள் வரையும் குங்குமம் 50 பிரதிகள் வரையும் விற்றதாக அவர் கூறினார்.
பல லட்சம் பிரதிகள் என்ற கணக்கில்தான் பத்திரிகைகளுக்கு விளம்பரங்கள் கிடைக்கும். இப்போது தொலைக்காட்சிகளுக்குத்தான் விளம்பரங்கள் அதிகளவில் இருக்கின்றன. சினிமா காட்சிகள் இல்லாததால் தினத்தந்தி கூட மெலிந்துவிட்டது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை டைம்ஸ் இணைப்பு ஒரு பக்கத்துடன் முடிந்துவிட்டது.பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு பலநூறு நண்பர்கள் பணி இழந்து தவிக்கின்றனர். எனக்கு வேலை வாங்கித் தரும்படி கேட்டு தினமும் மூன்று நான்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
யாரும் வேலை தருவதாக இல்லை.

இத்தகைய சூழலில் அச்சிதழ்கள், சிற்றிதழ்கள் புத்தகங்கள் வெளியிடும் சாத்தியங்கள் குறைந்து மின்னிதழ்கள் அதிகமாகி வருகின்றன. அவையும் எழுத்தாளனுக்கு கூலி கொடுக்க இயலாத சூழல்தான் நிலவுகிறது.

ரேஷன் பொருள் முதல் இலக்கியம் வரை அனைத்தையும் ஓசியில் பெறும் பழக்கத்துக்கு ஆளாகி விட்டோம். சினிமாவையும் ஓசியில் போனில் டவுன்லோடு செய்து பார்ப்பதையே செய்கிறோம்.

முழு நேர எழுத்தாளனாக வாழ்வது தற்கொலைக்கு சமம் என்று புதுமைப்பித்தன். குபரா, எம்.விவி, என நீளும் எழுத்தாளர் வரிசை வரை பார்த்து விட்டோம். பிரபஞ்சன் சொன்னது போல எழுத்தாளனாக வாழ முடியாது .எழுத்தாளனாக சாகலாம்.

---------------




No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...