Thursday 11 August 2016

எம்.ஜி.வல்லபன் எனும் ஜீனியஸ்

பாடலாசிரியர்,  பத்திரிகையாளர், இயக்குனர்
எம்.ஜி.வல்லபன் நினைவுகள்

செந்தூரம் ஜெகதீஷ்

மீன்கொடித் தேரில் மன்மத ராஜன் 
ஊர்வலம் போகின்றான்.....
கரும்புவில் படத்தில் ஜேசுதாஸ் பாடிய இளையராஜா இசையமைத்த இநத்ப் பாடலைக் கேட்டவர்கள் எம்.ஜி.வல்லபனை நினைத்துக் கொள்வார்கள். தமிழ்த்திரைப்பட உலகில் தனக்கென தனியிடத்தைப் பெற்றவர் எம்.ஜி.வல்லபன்.
வடசென்னையின் கல்வி பெறாத ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து படித்து பட்டதாரியானவர் வல்லபன்.ஏராளமான ஆங்கில, இந்திப்படங்களைப் பார்த்து தமது ரசனையை வளர்த்துக் கொண்டார்.மாறுபட்ட திரைப்படங்கள் மீது ஈடுபாடு கொண்டார். நண்பர் சூர்யராஜன் அவருடன் பணியாற்றியுள்ளார். அந்த நட்பின் அடிப்படையில் சூர்யாவும் நானும் புதுவண்ணாரப்பேட்டையில் இருந்த வல்லபன் சார் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். சில சமயம் நன்றாக ஆடை அணிந்து அழகாக ஹீரோ போல மிடுக்காக காட்சியளிப்பார். சில நேரம் லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு சட்டையணியாத வெற்று மார்பில் ஒரு துண்டைப் போர்த்தியபடி மலையாளிகள் பாணியில் அமர்ந்து எங்களுடன் மணிக்கணக்கில் பேசுவார். பேச்சு அதிகமாக கமல்ஹாசன் மற்றும் இளையராஜா பற்றி இருக்கும். அவர் பிலிமாலயா பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். இதனால் ஆப் தி ரெக்கார்டாக பல கிசுகிசுக்களை எங்களிடம் தெரிவிப்பார். மிகப்பெரிய நட்சத்திரங்களின் திரைக்குப் பின்னால் உள்ள குணாதிசயங்கள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கும் .அதைப் பதிவு செய்தால் கொலை குத்து விழும். வேண்டாம்.
பேசும் படம் இதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய வல்லபன், பின்னர் பிலிமாலயா பத்திரிகையின் ஆசிரியாக மாறினார். அந்த க் காலதத்தில் சிறுபத்திரிகைகள் சினிமாவை நிராகரித்தன. காரணம் சிறுபத்திரிகை நடத்தியவர்களுக்கு சினிமா மீது எந்த அக்கறையும அது குறித்த அறிவும் இல்லை. தமிழ்நாட்டைத் தாண்டி சினிமா எப்படி இருக்கிறது என்பதை அசோகமித்திரனைத் தவிர வேறு யாரும் எழுதியதாக நினைவில்லை. பெரிய பத்திரிகைகளில் வரும் சினிமா செய்திகளும் சரி, சினிமா பத்திரிகைகளும் சரி நடிகர் நடிகைகளின் வண்ணப்படங்களுக்கு கொடுத்த இடத்தை சினிமா தொடர்பான எழுத்தாக்கங்களுக்குத் தரவில்லை. இக்குறையை அறிந்தவரான எம்.ஜி.வல்லபன் பார்ப்பதற்காக சினிமா பத்திரிகையை நடத்தாமல் படிப்பதற்காக ஒரு பத்திரிகையாக பிலிமாலயாவை வளர்த்தார். இதனால் அவர் தனி கவனம் பெற்றார். சத்யஜித்ரே, நிமாய்கோஷ், ஷியாம் பெனகல் போன்ற இந்தியாவின் உன்னத திரைப்பட வல்லுனர்களையெல்லாம் தமது இதழ் மூலம் வல்லபன் தமிழ் வாசகர்களுக்கும் ரசிகர்களுக்கும் அறிமுகம் செய்தார். பிலிமாலயாவில் வெளியான அவரது ஜீனியஸ் பதில்கள் பகுதி மிகவும் வரவேற்பைப் பெற்றது. இன்று பைண்டு செய்யப்பட்ட பிலிமாலயா இதழின் நான்கைந்து வால்யூம்களைப் புரட்டிப்பார்த்தால் அந்தக்காலத்தில் நல்ல சினிமாவுக்கான தாகமும் அதற்கான ஒரு பத்திரிகையை வெளியிடும் ஈடுபாடும் எம்.ஜி.வல்லபனிடம் காணக்கிடைக்கிறது.
நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சிவபெருமானையே எதிர்த்து நின்ற நக்கீரன்தான் உலகின் முதல் பத்திரிகையாளன் என்று தமது நெற்றிக்கண் நாவலில் அமரர் நா.பார்த்தசாரதி குறிப்பிட்டார்.பத்திரிகையாளனின் அடிப்படை குணமான கேள்வி எழுப்புதல் எம்.ஜி.வல்லபனிடத்தில் காணப்பட்டதில் வியப்பில்லை. அவரது கேள்வி புகழின் உச்சத்தில் இருந்த பலரின் தகுதிகளைப் பற்றியது என்பதால் சிலரை அது எரிச்சலூட்டியது. எதற்கும் அஞ்சாத துணிச்சலான கருத்துகளால் அவர் பலரது கசப்புகளுக்கும் கோபதாபங்களுக்கும் ஆளானார். ஆயினும் ப்ரீலான்ஸ் ஜர்னலிசம் (free lance  ) எனப்படும் சுதந்திரப் பத்திரிகையாளர்களை தமிழகத்தில் உருவாக்கியவர் எம்.ஜி.வல்லபன்தான். இது குறித்து திரு பிலிம் நியூஸ் ஆனந்தனிடம் நான் நேரில் பேசிய போது உலகப் பட விழாக்களுக்கு ஹைதராபாத், பெங்களூர், டெல்லி என செல்லும் வழக்கம் கொண்டவராக வல்லபன் இருந்ததை நினைவுகூர்ந்த அவர் உண்மையலி ஜீனியஸ் பதில்கள் எழுதிய ஜீனியஸ்தான் அவர் என நினைவுகூர்ந்தார். தங்கள் கட்டுரைகளை கேட்டு வாங்கிப் போட்டு பத்திரிகையின் சன்மானம் கொடுத்து சுதந்திரப் பத்திரிகையாளர்களை ஊக்குவித்ததில் எம்.ஜி.வல்லபன்தான் முதல் நபர் என்று பிலிம் நியூஸ் ஆனந்தன் கூறியுள்ளார்.








பத்திரிகைத் துறையிலிருந்து சினிமாவுக்கு சென்ற எம்.ஜி.வல்லபன் பாடல்கள் மற்றும் வசனங்களை எழுதினார். இளையராஜா இசையில் தர்மயுத்தம், கரும்புவில், பொண்ணு ஊருக்குப் புதுசு, நிறம் மாறாத பூக்கள், மண்வாசனை போன்ற படங்களில் 80க்கும் மேற்பட்ட பாடல்களை எம்.ஜி.வல்லபன் எழுதியிருக்கிறார். இன்று அநதப் பாடல்களை எழுதிய அவர் பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டு கங்கை அமரனோ வைரமுத்துவோ அந்தப்பாட்டை எழுதியிருக்கக்கூடும் என்று எண்ண வைக்கிறது.
தர்மயுத்தம் படத்தில் மிகவும் புகழ் பெற்ற ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பாடலை எழுதிய பிறகும் கூட ரஜினிகாந்த் தம்மை சந்திக்க மறுத்ததைக் கண்டித்து,  ரஜினியை பேட்டி எடுப்பதும் படம் எடுப்பதும் பத்திரிகையாளரின் உரிமை என்று குரல் கொடுத்தார் எம்.ஜி.வல்லபன்.எம்.ஜி.ஆர். உச்சத்தில் இருந்தபோது கூட பத்திரிகையாளர்களை தவிர்த்தது இல்லை என்பதையும் அப்போது வல்லபன் சுட்டிக்காட்டினார்.பத்திரிகையாளர்களை மதிக்காத ரஜினி அந்தப் பண்பை வளர்த்துக் கொள்ளாமல் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்று அன்றே துணிச்சலோடு எழுதியவர் வல்லபன்.
மணிரத்தினம் இயக்கிய இதயகோவில் மற்றும் ஆர்.ரங்கராஜன் இயக்கிய உதயகீதம் ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் வல்லபன். இந்தப் படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தமது சொந்த கதை வசனத்தில் தானே இயக்கிய தைப்பொங்கல் படமும் பிரமாதமாக பேசப்பட்டது. 
இளையராஜாவுக்கு புகழால் தலைக்கனம் அதிகரித்து வைரமுத்து அவரிடம் இருந்து விலகினார். வாலி, புலமைப்பித்தன்,நா.காமராசன், மு.மேத்தா, முத்துலிங்கம் என மற்ற பாடலாசிரியர்கள் தயவை நாட வேண்டிய நிலை இளையராஜாவுக்கு ஏற்பட்டது. கங்கை அமரனும் வல்லபனும் தொடர்ந்து இளையராஜாவுக்கு பாடல்களை எழுதினார்கள். இத்தகைய சூழலில் , இளையராஜாவின் ஆணவத்தை அடக்க புதிய இசையமைப்பாளர்களை கொண்டு வர பல தயாரிப்பாளர்கள் முயன்றனர். இளையராஜாவுக்கு தொடர்ந்து படங்கள் தந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் இந்தியில் உச்சத்தில் கொடி கட்டிப்பறந்த லட்சுமிகாந்த் பியாரேலாலை உயிரே உனக்காக படத்தில் கொண்டு வந்தனர். இதிலும் வல்லபன் அந்நிறுவனத்துடன் இருந்த தொடர்பால் பாடல் எழுதினார். இதே போல் அந்த காலகட்டத்தில் பாடும் வானம்பாடி, தாய் வீடு போன்ற படங்களுக்கு பப்பிலஹரி இசையமைத்தார் . மணிரத்தினமும் இளையராஜாவை கைவிட்டு ஏ.ஆர்.ரகுமானை அறிமுகம் செய்தார். ரோஜா மூலம் ரகுமான் உச்சத்திற்கு போன போது இளையராஜாவின் சாம்ராஜ்யம் சரியத்தொடங்கியது. இந்த நிகழ்வுகள் குறித்து அப்போது வல்லபன் எங்களுடன் மனம் விட்டுப் பேசியிருக்கிறார்.
ஹாலிவுட் சினிமாவில் கிளைமேக்ஸ் பற்றி சடன்பிரேக் போட்டது போன்ற முடிவுகள் என்று தமது கட்டுரையொன்றில் எம்.ஜி.வல்லபன் பதிவு செய்தார். அதே போல் அவர் வாழ்க்கைக்கும் சடன் பிரேக் போட்டது மரணம்.
2003ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் எம்.ஜி.வல்லபன் மறைந்தார். சிறிய வயதிலேயே நிகழ்ந்த அவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
வல்லபன் மறைந்தாலும் அவரது புகழை கூறும் சாதனைகள் திரையுலகின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்திருக்கின்றன. பன்னீரில் நனைந்த அவருடைய பாடல்கள் என்றும் அழியாப் புகழுடன் எங்கெங்கோ ஒலிக்கின்றன. வல்லபனுக்கு வினோதினி என்ற மனைவியும் அர்ச்சனா, அபிலாஷ் என்ற இரண்டு வாரிசுகளும் உள்ளனர். குடும்பத்தினரைப் பொருத்த வரை அவர் மிகவும் அன்பான மனிதராகவே இருந்தார்.
அவருடைய குடும்பத்தினரை சந்தித்துப் பேசிய போது, அவருடைய பாடல்களை அடையாளம் கண்டு தொகுத்து தனி எம்.பி 3 அல்லது ஆடியோ சிடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவருடைய பிலிமாலயா இதழ் தொகுப்புகளை நூலாக்கவும் எம்.ஜி.வல்லபனுடைய கட்டுரைகளையும் பேட்டிகளையும் தொகுக்கவும் வேண்டும். இந்தப் பணியில் இப்போதைக்கு சூர்யாவும் நானும் மட்டும் இறங்கியிருக்கிறோம். பல நல்ல உள்ளங்கள் நிதியுதவியுடன் ,அரிய புகைப்படங்கள், தகவல்களை தந்தும் கை கொடுக்கலாம்.

1 comment:

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...