Thursday 28 July 2016

அஞ்சலி -கவிஞர் ஞானக்கூத்தன்

தமிழ் நவீனக் கவிதைகளின் முக்கியமான கவிஞர் ஞானக்கூத்தன். தமது 78வது வயதில் காலமானார். ( 28.07.2016 )
முதல்முறை அவரை எங்கே சந்தித்தேன் என்று நினைவில்லை.ஆனால் பலமுறை சந்தித்துப் பேசியது நினைவில் உள்ளது. ஜெயமோகனுடன் ஒருமுறை பெரம்பூர் ஜமாலியாவில் நடைபெற்ற கூட்டத்தில் நான் கலந்துக் கொண்டேன். அக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் எங்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் எனது கவிதைத் தொகுப்பான இன்னும் மிச்சமிருப்பவை வெளியீட்டு விழாவுக்கு அழைத்தேன். வருவதாக கூறி மறந்துவிட்டார். பெரியார்தாசன் பெயரை போட்டதால் அவர் வரவில்லை என்று சில நண்பர்கள் கூறினார்கள். ஏன் வரவில்லை என்று நான் அவரைக் கேட்கவில்லை. அவரும் கூறவில்லை. ஆனால் என் கவிதைகளைப் பற்றி நேரில் பாராட்டினார்.
செந்தூரம் சார்பில் நடைபெற்ற பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் ஞானக்கூத்தன் முன்வரிசையில் வந்து அமர்ந்திருப்பார். சில கூட்டங்களில் கலந்துக் கொண்டு பேசியும் இருக்கிறார்.
திருப்பூரில் ஒருமுறை இலக்கிய நிகழ்வொன்றில் கோவை ஞானியுடன் அவரை சந்தித்தபோதும் நீண்ட நேரம் உரையாடியது மனதுக்குள் நிழலாடுகிறது. அப்போது அங்கு வந்த கவிஞர் கனிமொழியின் கவிதைகள் குறித்து ஞானக்கூத்தன் அவரிடம் பேசிக் கொண்டிருந்ததை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். கனிமொழி பயன்படுத்திய கறுக்கு மருதாணி என்ற சொல் பிரயோகத்தைப் பற்றி அவர் கூறிக் கொண்டிருந்தார். ஒருமுறை கணையாழியில் ஞானக்கூத்தன் கட்டுரையொன்றில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை வலியுறுத்த அந்த இடத்தை சுழியிட்டு எழுத வேண்டும் என்று குறிப்பிட்டதை நண்பர் சூர்யராஜன் ரசித்துப் படித்து என்னிடம் கொண்டு வந்து காட்டினார். அன்றும் கனிமொழியின் கறுக்கு மருதாணியை அவர் சுழியிட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதையல் நிகழ்ச்சியில் அவரை பேட்டி கண்டேன். தமிழின் மிகச்சிறந்த பேட்டிகளில் அதுவும் ஒன்று. அதன் பிரதி என்னிடம் இல்லை என்று மனம் வருந்துகிறது.
ஓரிருமுறை திருவல்லிக்கேணி பகுதியில் வாக்கிங் செல்லும் அவரை சந்தித்து பேசியிருக்கிறேன்.அவர் வீடுகளுக்கும் ஓரிரு முறை போயிருக்கிறேன்.

ஞானக்கூத்தன் மறைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் மனம் இருப்பு கொள்ளவில்லை. நண்பர் ஆர்.கே.ரவியை அழைத்துக் கொண்டு அவர் வீடு இருந்த ஈஸ்வரதாஸ் தெருவைத் தேடிச் சென்ற போது புதிய தலைமுறை, தந்தி டிவி நண்பர்கள் கேமராவும் கையுமாக அவர் தெரு முனையில் நின்றிருந்தனர். எழுத்தாளர்கள் பாலகுமாரன், சா.கந்தசாமி, ஆர்.ராஜகோபால் போன்றோரும் அங்கு இருந்தனர். மீடியாக்கள் பாலகுமாரனையும் கந்தசாமியையும் பேட்டி எடுத்தன. தமிழின் மிக முக்கியமான கவிஞர் ஞானக்கூத்தன் என்று பாலகுமாரன் கூறினார். உண்மைதான் என்பது சற்று அழுத்தமாக மனதுக்குள் பதிந்தது.
ஞானக்கூத்தனுக்கு எனது மனமார்ந்த அஞ்சலி



No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...