Sunday 24 July 2016

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்
வசனத்தில் உறைந்த மௌனங்கள்
செந்தூரம் ஜெகதீஷ்
விழுப்புரம் சின்னய்யா கணேசன் என்ற வி.சி.கணேசன் சினிமாவில் சிவாஜி கணேசனாக மாறி விஸ்வரூபம் எடுத்த வரலாற்றை நினைத்துப் பார்க்கையில் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.மேடையில் கணேசனின் நடிப்பைப் பார்த்து பாராட்டிய பெரியார் அவருக்கு சிவாஜி பட்டத்தை தர அதுவே அவரது பெயராக நிலைத்து விட்டது.
பராசக்தி படம் மூலம் திரையுலக இன்னிங்சை தொடங்கிய சிவாஜி அடித்ததெல்லாம் சிக்சர்தான்.
கப்பலோட்டிய தமிழன் படத்தில் ..சிதம்பரம் பிள்ளை, கைகொடுத்த தெய்வம் படத்தில் பாரதியார், சொர்க்கம் படத்தில் சாக்ரடீஸ், திருவிளையாடலில் சிவபெருமாள், திருவருட்செல்வரில் நாவுக்கரசர், சரஸ்வதி சபதத்தில் நாரதர், கந்தன் கருணையில் வீரபாகு, ராஜபார்ட் ரங்கதுரையில் ஷேக்ஸ்பியர், திருப்பூர் குமரன், போன்ற புராண, வரலாற்று பாத்திரங்களை கண்முன்னே நிறுத்தியவர் சிவாஜிதான். சிவாஜியின் முகத்தை மறைத்து இந்த பாத்திரங்களை நம்மால் இனி கற்பனையே செய்ய முடியாது. அதுமட்டுமா ?கர்ணன், ராஜாராஜசோழன், வீரபாண்டிய கட்டபொம்மன்,ஹரிச்சந்திரன், தெனாலி ராமன், அம்பிகாபதி போன்ற பாத்திரங்களிலும் சிவாஜி காட்டிய நடிப்பின் பன்முகத்தன்மையை இன்று வரை எந்த ஒரு நடிகனும் இத்தனை கலாபூர்வமாக ஈடு செய்ததில்லை. கமல்ஹாசன் ஓரளவு நெருங்கி வந்தாலும் செயற்கையான நெடி வீசும் நடிப்பையே அவரது சில படங்களில் காண முடிந்தது. அது சிவாஜி கணேசனிடம் துளிக்கூட இல்லை. கண் புருவம் முதல் விரல் அசைவு வரை அத்தனை பாவனைகளும் இயல்பாகவே வெளியான பிறவிக்கலைஞர் அவர். உலகிலேயே சிவாஜி கணேசனுக்கு ஈடான இன்னொரு நடிகரை நான் பார்த்ததில்லை. உலகின் புகழ் பெற்ற பல நடிகர்கள் அவர் கால் சுண்டு விரலுக்கு ஈடாக மாட்டார்கள்.
சமூகத் திரைப்படங்களிலும் சிவாஜி கணேசனின் நடிப்பு புதிய திரைப்பட நடிப்புக்கான அகராதியை எழுதியது.வசந்தமாளிகையில் உருகும் காதலனாகவும் தங்கப்பதக்கத்தில் பாசத்திற்கும் கடமைக்கும் இடையே போராடும் காவல்துறை அதிகாரியாகவும் கௌரவம் படத்தில் பாசத்திற்கும் நீதிக்கும் இடையே போராடும் இருவேறு பாத்திரங்களிலும் சிவாஜி கணேசன் என்ற மகத்தான நடிகர் நம் கண்முன்னே தோன்றி செலுலாய்ட் ஸ்க்ரீனையே தீப்பிடிக்க வைத்தார். தெய்வமகன், ராஜபார்ட் ரங்கதுரை, எங்கிருந்தோ வந்தாள், சிவந்தமண், பாசமலர், பாவமன்னிப்பு, படித்தால் மட்டும் போதுமா, படிக்காத மேதை, பார்த்தால் பசி தீரும், பிராப்தம், புதிய பறவை, ஆலயமணி, பாலும் பழமும், ஆண்டவன் கட்டளை, எங்க மாமா, சொர்க்கம், பாரத விலாஸ், பாகப்பிரிவினை , இமயம், பாட்டும் பரதமும், எங்கள் தங்கராஜா மன்னவன் வந்தானடி ,டாக்டர் சிவா, தியாகம், தீபம், அவன்தான் மனிதன், அண்ணன ஒரு கோவில், திரிசூலம், நான் வாழ வைப்பேன் , பட்டாக்கத்தி பைரவன் , ரோஜாவின் ராஜா, விஸ்வரூபம், என் மகன் , மோகனப் புன்னகை, பாட்டும் பரதமும், வசந்த மாளிகை, அவன் ஒரு சரித்திரம் என நீளும் 200க்கும் மேற்பட்ட சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் சிவாஜி கணேசனைப் போல் யாரும் நம்மை அதிகமாக கவர்ந்ததில்லை. ஒவ்வொரு படத்திலும் ஒரு தோற்றம், ஒரு ஸ்டைல், ஒரு ஆளுமை, ஒரு அழகு என பெண்களே பொறைமைப்படும் விதமாக தோன்றியவர் சிவாஜி கணேசன்.







காதலின் கொண்டாட்டத்தை மட்டுமின்றி வாழ்க்கையின் தத்துவத்தையும் சிவாஜி கணேசனின் பாத்திரங்கள் வெளிப்படுத்தின. வாழ்க்கையைத் துறந்த ஒரு பக்குவப்பட்ட ஞானியை ஆண்டவன் கட்டளையின் ஆறுமனமே ஆறு பாடலில் வெளிப்படுத்திய அவர்தான் வேதாந்தியாக பாலும் பழமும் படத்தில் போனால் போகட்டும் போடா என்று பாடினார். அவரே தான் ஞான ஒளியில் உன் பாதையில் பிள்ளைப் பாசம் இல்லையோ என ஏசுவிடம் உருகுகிறார்.இருப்பதையெல்லாம் கொடுத்துவிட்டு கொடுக்க எதுவுமில்லை ஒரு குழப்பம் முடிந்ததடா என்கிற விச்ராந்தியாக அவன்தான் மனிதனில் நம்மை கலங்க வைத்தார். மருமகளிடம் உண்மையைக் கூறாமல் தத்தளிக்கும் பெரியவராக கீழ்வானம் சிவக்கும் படத்தில் நீ எண்ணியதும் இல்லையம்மா நாளை என்று கண்ணீருடன் வாழ்த்துகிற அந்த பாத்திரத்திலும் சிவாஜி ஜொலித்தார், பறவைகளே பதில் சொல்லுங்கள் மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் என்று பாடுகிற காதலனாக தியாகம் படத்திலும் பிரகாசித்தார். மருமகனுக்கு மாமன் நாளை அரண்மனை கட்டி வைப்பான் என்று மன்னவன் வந்தானில் சொர்க்கத்தில் தொட்டில் கட்டினார்.
சிவாஜி கணேசன் நடித்த படங்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளை சார்ந்த கதைகளே. தங்கைக்காக உருகும் ஒரு பாசமலரையும் எந்த கடனிலும் மிகப்பெரிது நல்ல மனைவியின் சேவை என்று விஸ்வரூபத்திலும் , அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்று பழனியிலும் முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும் பிள்ளைக் குலமடியோ என்று வியட்நாம் வீடு படத்திலும், அன்னையை பார்த்த பின் என்ன வேண்டும் தெய்மே என்று தாயின் அன்புக்காக உருகும் பிள்ளையாக தெய்வமகனிலும் , சிவாஜி கணேசன் காட்டிய சொந்த பந்தங்கள் நம் அருமையான சொந்தங்களை நினைத்து அவர்கள் உறவுகளுக்காக ஏங்க வைப்பவை.
புராணப்படங்களில் சிவாஜியைப் போல் இன்னொரு நடிகரை காட்ட முடியாது. திருவிளையாடல், திருவருட்செல்வர், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை, சம்பூர்ண ராமாயணம், சரஸ்வதி சபதம் போன்ற படங்கள் சிவாஜி கணேசனின் பொன் முத்துகள்.
சிவாஜி கணேசன் ஆக்சன் படங்களிலும் நடித்தார். திருடன் படத்தில் திருடனாக வருவார். தங்கச்சுரங்கம் படத்திலும் ராஜா விலும் காவல்துறை அதிகாரியாக சண்டைக் காட்சிகளில் நடித்தார். சிவந்த மண் படத்திலும் நம்பியாருடன் பறக்கும் பலூனில் சண்டை போட்டார். தர்மம் எங்கே படத்தில் சுதந்திர போராட்ட வீரனாக வாள் சண்டைகள் போட்டார்.
சிவாஜி நடித்த சிவந்தமண் படம் இந்தியில் எடுக்கப்பட்ட போது முத்துராமன் நடித்த புரட்சிக்காரன் பாத்திரத்தில் இந்தியில் சிவாஜியை நடிக்க வைத்தார் இயக்குனர் ஸ்ரீதர். சிவாஜி நடித்த பிரதான பாத்திரத்தில் இந்தியில் நடித்தவர் அப்போது ஸ்ரீதரின் அபிமான நடிகராயிருந்த ராஜேந்திரகுமார்.( ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் இந்தி ரீமேக்கிலும் இவரே நடித்திருந்தார்)
தச்சோளி அம்பு என்ற மலையாளப்படத்திலும் சிவாஜி கணேசன் நடித்தார். ஆனால் அவரது திரைப்பட வாழ்வும் வரலாறும் தமிழ்த்திரைப்படங்களுடனே பிணைக்கப்பட்டு விட்டதால் இந்திய அளவில் கூட தெரியாமல் போய்விட்டது. தாதா சாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் . 12 முறை தேசிய விருது என மத்திய அரசு அவரை கௌரவித்த போதும் இன்னும் பலப்பல விருதுகளுக்குத் தகுதியானவர் சிவாஜி . பிரான்ஸ் அரசு அவருக்கு செவாலியே விருது அளித்து மகிழ்ந்தது.
எம்ஜிஆருடன் கூண்டுக்கிளி என்ற படத்தில் மட்டும் சிவாஜி கணேசன் சேர்ந்து நடித்தார். எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் அந்த நாள் படத்திலும் கே.பாலசந்தரின் எதிரொலி படத்திலும் சிவாஜி நடித்திருந்தார். கமல்ஹாசனுடன் தேவர்மகன், நாம் பிறந்த மண், சத்யம் ஆகிய படங்களிலும் ரஜினியுடன் ஜஸ்டிஸ் கோபிநாத், படிக்காதவன், விடுதலை, படையப்பா, நான் வாழ வைப்பேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்துடன் ஒரு படத்திலும் சத்யராஜூடன் இரண்டு படங்களிலும் விஜய்யுடன் ஒன்ஸ்மோர் படத்திலும் சிவாஜி நடித்திருந்தார். பாக்யராஜூடன் தாவணிக் கனவுகளிலும் பாரதிராஜா இயக்கத்தில் முதல் மரியாதையிலும் சிவாஜி கணேசன் நடிப்பில் புதிய பரிமாணங்களை வெளியிட்டார்.
ருணாநிதியின் கதை வசனத்தில் பராசக்தி, மனோகரா போன்ற படங்களில் நடித்த சிவாஜியின் வசன உச்சரிப்புகள் பிரசித்தி பெற்றவை. வீரபாண்டி கட்டபொம்மன் படத்தில் அவர் பேசும் வசனம் ஒலிக்காத பட்டி தொட்டி இல்லை. அதே போல் திருவிளையாடலில் கருமியாக நடித்த நாகேஷூடன் சிவாஜி பேசும் வசனங்கள். ஆனால் சிவாஜியின் நடிப்போ இந்த வசனங்களில் உறைந்திருக்கும் மௌனங்களாலேயே மனம் கவர்ந்தது.
சிவாஜி கணேசன் 2001ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி காலமானார். ஆனால் சினிமாவில் சிவாஜிக்கு காலமில்லை. அவர் காலம் கடந்த நடிப்பால் நம்மைக் கட்டிப்போட்டவர் .அந்த நடிப்பை இன்னொரு தலைமுறையினரும் ரசிக்கும் வகையில் சிவாஜியி்ன் நடிப்பை புரிய வைக்கும் ரசனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அவருடைய படங்களின் டிவிடிக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் சிவாஜி கணேசனின் படங்களுக்கும் பாடல்களுக்கும் மாதத்தில் ஒரு நாளை ஒதுக்கக் கோர வேண்டும். அனைத்துப் பத்திரிகைகளும் ஆண்டுக்கொரு சிவாஜி கணேசன் சிறப்பிதழை வெளியிட வேண்டும். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் சிவாஜி கணேசன் பாடமாக்கப்பட வேண்டும்.
சினிமா உள்ள வரை சிவாஜி கணேசன் இருக்க வேண்டும். இதுதான் ஒரு எளிய ரசிகனின் ஆசை.
--------------------------------------------
 
 
 

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...