Thursday 1 October 2015

சந்திப்பு 5 டி.ஆர்.சுதா




இருபதுவயதில் நான் இந்தியா சில்க் ஹவுஸ் என்ற ஜவுளிக்கடையில் பணி புரிந்த காலங்களில் என் வீட்டிலிருந்து அண்ணா சாலை செல்ல 28 சி என்ற பேருந்து வரும். அது திருவொற்றியூரிலிருந்து காயிதே மில்லத் வரை செல்லும் பேருந்து. காலை 9 மணி்க்கு நான் வேலைக்குப் போகும் நேரத்தில் அந்தப் பேருந்தில் கல்லூரி மாணவிகள் நிரம்பியிருப்பார்கள், கிட்டதட்ட புட்போர்டில் தொற்றிக் கொண்டே செல்வேன்.பெண்களுடன் பேசுவதில் இயல்பாகவே கூச்சம் இருந்தாலும் பார்க்க பரவசம் தரும் காட்சி அது. மரத்தடியில் மாணவிகள் அட வேர்களிலுமா பூக்கள் என்றொரு ஹைகூவை எனக்குள் படைத்தவை அந்த பேருந்து மற்றும் கன்னிமாரா நூலக மரத்தடி அனுபவங்களே.


ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பதை வழக்கமாக வைத்திருப்பேன். என் கடையில் புத்தகத்திற்கு அனுமதி கிடையாது. உழைக்க வேண்டிய நேரத்தில் ஊழியர் புத்தகம் படிப்பதை எந்த முதலாளிதான் ஏற்றுக் கொள்வான்?ஆனாலும் நான் முதலாளித்துவ எதிர்ப்பு சிந்தனைகளுடன் மார்க்சீயம் படித்துக் கொண்டிருந்தேன். அதனால் ஒரு எதிர்ப்புணர்வுடன் தினம் ஒரு புத்தகத்தை கடைக்கு கொண்டுசெல்வேன். அதனால் பலமுறை பல வாக்குவாதங்களையும் அவமானங்களும் நேர்ந்தன.

அன்று நான் கையில் ஜெயகாந்தனின் உண்மை சுடும் என்ற சிறுகதைத் தொகுப்பை வைத்திருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் என்னால் படிக்கட்டில் சமாளிக்க முடியவில்லை. பொதுவாக படியில் பயணிப்பதை தவிர்ப்பவன் நான். படியில் பயணம் நொடியில் மரணம் என்பதுமட்டுமல்ல, அப்போது பெரியமேடு, சிந்தாதிரிப்பேட்டை போன்ற இடங்களில் போலீஸ்காரர்கள் பிடித்து அபராதம் போடுவார்கள். அது கிட்டதட்ட என் பத்துநாள் சம்பளம்.

அன்று நான் உள்ளே போய்விட முயன்ற போது என் கையில் இருந்த புத்தகம் நழுவி ஒருமாணவியின் மடியில் விழுந்தது. பாவாடை தாவணியும் புன்னகை நிறைந்த முகமுமாய் இருந்த அந்தப் பெண் அதை எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டார். நான் இறங்க வேண்டிய நேரத்தில் புத்தகத்தை கேட்ட போது நாளைக்கும் இதே பஸ்ஸில் இதே டைமில் வருவேன் நாளைக்கு வாங்கிக்கங்க என்ற நட்புடன் கூறிய போது என்னால் மறுக்க முடியவில்லை


தொடர்ந்து பலநாட்கள் சுதாவும் நானும் பேருந்தில் சந்திப்பதும் சிறிய புன்னகை, புத்தகப் பரிமாற்றத்துடன் எங்கள் நட்பை வளர்த்தோம். ஒருநாள் கடைக்கு வந்தார். உடன் சில மாணவிகள்.

லீலாகுமாரி, சீதா என சில பெயர்கள் மட்டும் நினைவில் உள்ளன

பிறகு சுதா வீட்டிற்கு நானும் என் நண்பர்களுடன் செல்வதும் என் வீட்டுக்கு சுதா தன் நண்பர்களுடன் வருவதும் வாடிக்கையாகி விட்டது. அப்போது நான் கவிதைகள் எழுதி மு.மேத்தா, பழனிபாரதி அறிவுமணி, இன்குலாப் போன்ற கவிஞர்களுடன் பழகிக் கொண்டிருந்தேன். புலவர் புலமைப்பித்தனின் உதவியாளராக இருந்த புலவர் சங்கரலிங்கம் தலைவராகவும் நான் செயலாளராகவும் நரசிம்மமூர்த்தி பொருளாளராகவும் செந்தூரம் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி கவியரங்குகள், கருத்தரங்குகள் நடத்தினோம். முதலில் வீட்டிலும் பிறகு தேவநேய பாவாணர் நூலகத்தின் சிறிய அரங்கிலும் ரஷ்ய கலாச்சார மையத்திலும் எங்கள் கூட்டங்கள் நடைபெற்றன.


சுதாவின் குடும்பத்தினரும் என்னை மதித்தார்கள். அக்கா பிரபாவதி, அம்மா, அப்பா, அண்ணன் நாராயணன் போன்றோர் ஆண் பெண் நட்பை பாவமாக கருதவில்லை. இலக்கிய நட்பு என்பது ஒருவகை platonic relationship( பாலியல் உறவு கலக்காத அறிவார்ந்த நட்பு ) என்பதை அவர்கள் புரிந்துக் கொண்டவர்கள்.
இளம் வயது அழகான கல்லூரி மாணவி என்பதெல்லாம் பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய விஷயங்கள் அல்ல என்று அந்த சிறிய வயதிலேயே நான் புரிந்துக் கொண்டேன். சுதா மீது மதிப்பும் மரியாதையும் கூடியது.
சுதா உலக ஒளியை மணம் முடித்தார். இதனால் வீட்டை விட்டு விலகினார். நாங்களும் அவரை சந்திக்க முயன்று அது மெதுவாக குறைந்தது. கிட்டதட்ட 25 வருடங்களுக்குப் பிறகு பேஸ் புக் மூலம் உலக ஒளி எனது இந்த இணைய வலை பக்கம் படித்து விட்டு என்னை கண்டு பிடித்தார்.
வசந்த் என்ற மகனை பறிகொடுத்த துயரம் நிரம்பிய புதிய சுதாவை நாங்கள் அண்மையில் சந்தித்தோம்.டெல்லியில் குடியேறிய அவர் இரண்டு முறை சென்னை வந்து என் வீட்டுக்கும் வந்திருந்தார். மகனின் துயரத்தை அழுதும் தீர்க்க முடியாத அவரால் அதே நட்புடன் பழக முடிந்தது சற்று ஆறுதலாக இருந்தது. தனது ஆங்கில நாவல் திருடப்பட்டது உலக சினிமா, சினிமாவுக்கு திரைக்கதை வசனம் எழுத ஆசைப்படுவது உள்பட பல விஷயங்களை இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறோம்.


சமீபத்தில் தொலைபேசியில் சுதா பேசும் போது, உங்களுக்கு மூச்சு வாங்குகிறது என்று கூறிய பிறகுதான் என்னுள் ஏதோ ஒரு நோய் உருவாகியிருப்பதை புரிந்துக் கொண்டேன். வீட்டருகில் இருந்த மருத்துவர் சொக்கலிங்கத்தை சந்தித்த போது இதய நோயாக இருக்கலாம் என எச்சரித்தார். உடனடியாக நீரிழவு, இதய பரிசோதனை செய்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
உடனடியாக அமைந்தரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சோதனைகள் செய்ததில் பல ஆயிரம் ரூபாய் போனது ஆனால் பேராபத்திலிருந்து தப்பி விட்டேன். தொடக்க நிலையிலேயே என் உடல் ஆரோக்கியம் குறித்த கவனம் எழுந்து சிகிச்சை பெறத் தொடங்கி விட்டேன்.













No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...