பேராசிரியரும் எழுத்தாளருமான திரு மு.ஹரிகிருஷ்ணன் பற்றி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட அனுமன் வார்ப்பும் வனப்பும் என்ற நூல் மூலம் அறிந்தேன்.
பொதுவாக சிறுவயது முதலே விஷ்ணுவின் தசாவதாரங்கள் மீது ஒரு காவிய மயக்கம் கொண்டவன் நான். அதிலும் ராமன், கிருஷ்ணன் ஆகிய இரண்டு அவதாரங்களும் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இருபெரும் காப்பியங்களுடன் தொடர்பு கொண்டவை என்பதால் இந்த பாத்திரங்கள் மனதை விட்டு அகலாதவை. அதில் ராமாயணத்தில் ராமனுக்கு தோழனாக வரும் அனுமனின் பாத்திரமும் அலாதியானது. இதுவரை உலகில் படைக்கப்பட்ட கதாபாத்திரங்களில் அனுமனைப் போல் ஒரு பாத்திரமில்லை என்று ஹரிகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். அவரது புத்தகம் வாசிக்க வாசிக்க ஆன்மீகத்தைத் தாண்டி கம்பனின் தமிழ்ச்சுவையுடன் எனக்கு அன்பு, அறிவு, பணிவு, அடக்கம், ஞானம்,சேவை,மனத்தூய்மை உள்ளிட்ட ஏராளமான பண்புகளைக் கற்றுத் தந்தது.ஹரிகிருஷ்ணனின் தீவிர தேடலும் ஆய்வும் கம்பராமாயணத்தில் திளைத்த அவரது மேதைமையும் என்னை புத்தக வாசிப்பின்போது பல இடங்களில் அழவைத்தன. அனுமனும் லட்சுமணனும் பேசும் இடம், அனுமனும் குகனும் சந்திக்கும் இடம், அனுமனும் ராமனும் சந்திக்கும் இடம், அனுமனும் பரதனும் சந்திக்கும் இடம் என கம்பராமாயண்த்தின் காட்சிகளை அவர் விவரித்தது போல் யாரும் விவரித்ததில்லை. அத்தனை உணர்வுப்பூர்வமாகவும் இலக்கியச் சுவையுடனும் டிகேசி கூட கூறியதில்லை.
இந்தப் புத்தகத்தைப் படித்த வேகத்தில் 2011ம் ஆண்டில் குங்குமம் பத்திரிகைக்கு ஹரிகிருஷ்ணன் அவர்களைப் பேட்டியெடுக்க அனுமதி பெற்றேன். என் சொந்த செலவிலேயே பெங்களூர் சென்று அவர் வீட்டை தேடிப்பிடித்து ஒரு மழைக்கால மாலையில் ஆட்டோவில் போய்ச்சேர்ந்தேன். சுவையான காபியுடன் உபசரித்து அவர் பேசினார். புத்தகத்தில் இருந்த கனிவு அவரது பேச்சிலும் இருந்தது.
மிகப்பெரிய மேதைமை மிகவும் அடக்கமும் அமைதியும் கொண்டிருக்கும் என்பதை அனுமனிடமிருந்து மட்டுமல்ல திரு ஹரிகிருஷ்ணனிடமிருந்தும் நான் கற்றுக் கொண்ட தருணம் அது.
சில காரணங்களால் அந்தப் பேட்டி குங்குமம் இதழில் இடம் பெறவில்லை, கதாகாலட்சேபம் மாதிரியிருக்கு என நிராகரிக்கப்பட்டது. அதை இப்பகுதியில் இணைக்கிறேன். நீங்களே படித்து விட்டு முடிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment