நடிகை ஐஸ்வர்யா ராய் சுமார் 5 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் திரைப்படம் இது. அக்டோபர் 9ம் தேதி வெளியாகியுள்ளது. முதல் நாளிலேயே படத்தைப் பார்த்து விடுவது நல்ல அனுபவம். தேவி பாரடைசில் இந்தப் படத்தைப் பார்க்கப் போனேன். சிறுவயதில் தேவி பாரடைசில் 2 ரூபாய் 90 காசு டிக்கட்டில் படங்களைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. இப்போது டிக்கட் விலை 120 ரூபாய்.
படம் வழக்கமான கிரைம் திரில்லர். பழிக்குப் பழி வாங்கும் படம்.தான். ஆனால் ஐஸ்வர்யா என்ற அழகு தேவதை தனது முதிர்ந்த வயதுடனும் நடிப்புடனும் நம்மை கட்டிப்போடுகிறார். மகளை கடத்தியவர் பாலியல் பலாத்காரம் கொலை செய்த ஒரு கொடியவனை தப்பச் செய்ய வாதாடும்படி லாயரான அனுராதா வர்மாவை ( ஐஸ்வர்யா ராய் ) கட்டாயப்படுத்த அவரும் அவர் ஆண் நண்பரான சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி யவ்வானும்( இர்பான் பத்தான் ) ஐஸ்வர்யாவின் மகளான சனாய்னாவை( தேசிய விருது பெற்ற சிறுமி சாரா ) மீட்பதும் குற்றவாளியை கண்டுபிடிப்பதும்தான் கதை. ஷபனா ஆஸ்மி, ஜாக்கி ஷராப் போன்ற தெரிந்த முகங்கள் முக்கியப் பாத்திரங்களில் தோன்றுகிறார்கள். குரூரமாக கெடுக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண்ணாக பிரியா பானர்ஜியும் ஒரு கலக்கல் நடனக்காட்சியில் மாடல் அழகி தீக்சா கவுலும் நடித்துள்ளனர்.
மும்பை நகரின் பேரழகையும் பாலத்தின் மீது வாகனங்கள் செல்வதையும் ஏரியல் ஷாட்டுகளில் காட்டி பிரமிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர். இசையின் தாக்கம் ஒரு தனிமைப் பாடலுடன் முடிந்துவிடுகிறது. வசனங்கள் ஆங்காங்கே ரசிக்க வைக்கின்றன. இயக்குனர் சஞ்சய் குப்தா முடிந்த மட்டும் படத்தை சீராக கொண்டு செல்கிறார்.
கடற்கரை ஓரமாக நீண்ட ஒற்றையடிப்பாதையில் ஐஸ்வர்யா ராய் ஜாகிங் செய்யும் முதல் காட்சியிலிருந்து தனது காதலை மென்மையாக வெளிப்படுத்தும் இர்பானிடம் உதவியாளன் உரையாடும் காட்சி வரை படம் பிடித்தது. ஆனால் கிளைமேக்ஸ் சஸ்பென்சுக்கு இத்தனை மெனக்கெட்டிருக்க வேண்டியதில்லை.
படத்தை ஐஸ்வர்யா ராய்க்காக மட்டுமே பார்க்கப் போயிருந்தேன். ஏமாற்றவில்லை. ஒரு அற்புதமான நடிகையாகவும் அவர் பரிணமித்துள்ளார். தாய்மையும் அழகும் அவரது புகழை மேலும் கூட்டத்தான் செய்துள்ளன.புருவங்களின் கீழ் கருவளையம் அதிகமாக பூசப்பட்ட லிப்ஸ்டிக் எல்லாம் இருந்தாலும் அவர் அழகானவர்தான். கண்கள் போதுமே.
No comments:
Post a Comment