Friday 6 July 2018

நடனம் ஆடினேன்

நடனம் ஆடினேன்
ஒரு பழைய பதிவு...கொரோனா காலத்தில் பலரும் நடனம் ஆடி வீடியோக்களைப் பதிவேற்றி வருவதைப் பார்க்கும் போது இது பொருந்துவதாக இருக்கிறது...
முன்பு ஒரு முறை உறவினர் திருண நிகழ்ச்சியில் பலரும் கட்டாயப்படுத்தியதன் பேரில் நடனம் ஆடினேன். வாழ்க்கையில் நான் இரண்டு முறை மட்டும் பொது இடத்தில் நடனம் ஆடியிருக்கிறேன்.வீட்டில் பலமுறை தனியாக இருக்கும் போது ஆடுவது தனி டிராக்.
கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இது பொது இடத்தில் நான் ஆடிய நடனம். சில ஸ்டெப்ஸ்தான். ஆனால் நன்றாக இருந்ததாக பலரும் பாராட்டினார்கள். ஒரு அழகான பெண்ணிடம் போய் எத்தனை மதிப்பெண்கள் என கேட்டதற்கு சிரித்துக் கொண்டே நூற்றுக்கு நூறு என்றாள். ரொம்பவும் அதிகம்தான்.
பல்வேறு நடனங்களை நான் திரையிலும் மேடைகளிலும் பார்த்திருக்கிறேன்.ஸ்ரீநிதியின் கதக் நடனம், மீனாட்சி சேஷாத்திரியின் பாம்பு நடனம் , சுதா சந்திரனின் ஒற்றைக்கால்நடனம், கமல்ஹாசனின் குரூப் நடனம், மிதுன் சக்ரவர்த்தியின் டிஸ்கோ டான்ஸ், அமிதாப் பச்சனின் பங்கரா நடனம் விஜய் ஆடும் நடனம், அஜித்தின் டோலுமா டாலுமா, சிலுக்கு ஸ்மிதாவின் கிக்கேற்றும் நடனம்,ஜிமிக்கி கம்மல் நடனம் ,சின்னக் குழந்தைகளின் நடனம், குத்துப்பாட்டு நடனம், சாவு நடனம் என பார்த்தவை பல.
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே
போன கதை உனக்குத் தெரியுமா
என்று சூர்யா ஆடிப்பாடியது எனக்கு மிகவும் பிடிக்கும்.
தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே என்ற சூப்பர் ஸ்டாரின் நடனமும் மிகவும் பிடிக்கும்.
பல நிஜவாழ்வில் போலீஸ்காரர்கள், அரசியல்வாதிகள் போன்ற பலரின் அதிகார நடனங்களையும் பார்த்திருக்கிறேன்.
வீட்டில் தனியாக இருக்கும் போது எனக்குப் பிடித்த ஒரு பாட்டைப் போட்டு நடனமாடுவது என் வழக்கம்.
நடனம் உற்சாகம்,மகிழ்ச்சியின் வெளிப்பாடு. ஆனால் கே.பாலசந்தர் இயக்கிய ஏக் தூஜே கேலியே படத்தில் கமல்ஹாசனுக்கு அது துயரத்தைக் கொட்டுவதற்காக ஆடும் தெரபி.
தகிட தகிட தில்லானா என்று சலங்கை ஒலியிலும் இளையராஜா இசையில் கமல் கிணற்றின்மேல் ஏறி ஆடுவார் அல்லவா
நடனத்தைப் பற்றி ஓஷோநிறைய பேசியிருக்கிறார். அவர் கூறுவது ஆன்மாவின் நடனங்கள் பற்றி.நிஜிலன்ஸ்கி என்ற நடனக்கலைஞன் நடனமாடி ஆடி ஆடி தானே நடனமாக, நடனமும் கலைஞனும் பிரிக்க முடியாத ஒரு கட்டத்திற்குப் போய்விடுவதை விவரிப்பார்.
நண்பர் அண்ணாச்சி கவிஞர் விக்ரமாதித்தியன் தில்லாலங்கடி தில்லாலங்கடி டோய் தெம்மாங்கு பாடும் மனசைத் தொலைச்சிடாதே டோய் என்று ஒரு கவிதை எழுதியிருந்தார்.
எழுத்தாளர் சுஜாதாவிடம் அந்தக் கவிதையை காட்டிய போது வாங்கி குமுதத்தில் பிரசுரம் செய்தார்.
தெம்மாங்கு பாடும் மனசுடன் வீட்டில் தனியாக ஆடிய நடனம் தான் ஒரு மேடையில் அரங்கேறியது.
மனதில் இருந்த துன்பங்கள் ரத்தமாகவும் சீழாகவும் கண்ணீராகவும் வழிந்ததை யாரும் பார்க்கவில்லை.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...