Thursday 5 July 2018

படித்தது -குன்று நில மக்கள் -தில்லை எழிலன்

படித்தது -

குன்று நில மக்கள் -தில்லை எழிலன்

புலவர் தில்லை எழிலனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் புலவர் சங்கரலிங்கம். புலவர் சங்கரலிங்கம் புலமைப்பித்தனிடம் உதவியாளராக இருந்து பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நீண்ட காலம் உதவியாளராகப் பணிபுரிந்தார். சங்கரலிங்கம் மறைவுக்குப் பின்னர் அவர் மகன் பூங்குன்றனும் ஜெயலலிதாவிடம் பணிபுரிந்து இப்போது விசாரணை, வருமான வரி சோதனை என சோதனையான காலங்களில் இருக்கிறார்.
நிற்க.
புலவர் தில்லை எழிலன் பெரம்பூர் பிருந்தா திரையரங்கு அருகே உள்ள டான் பாஸ்கோவில் தமிழாசிரியராக பணிபுரிந்தார். நாங்கள் அழைத்ததன் பேரில் சில கவியரங்களில் கலந்துக் கொண்டார். மரபுக்கவிதை எழுதக்கூடியவர். இப்போது அவர் எங்கே என எனக்குத் தெரியாது.30 ஆண்டுகளாக அவர் பெயரை எங்குமே நான் கேள்விப்பட்டதில்லை.
அவர் எழுதிய குன்று நில மக்கள் எனும் புத்தகம் பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. தில்லை எழிலன் என்ற பெயரைப் பார்த்து ஆர்வமாக எடுத்தேன். 
குன்று நில மக்கள் என்பது குறிஞ்சி நில மலைப்பகுதியைச் சார்ந்து வாழ்ந்துவரும் குறவன் என்றழைக்கப்படும் ஒரு இனத்தைப்பற்றியது. மனித இனத்தின் முதல்குடியாகவும் ஆதிகுடியாகவும் தோன்றியவர்கள் இவர்களே என்கிறார் நூலாசிரியர்.
முறத்தால் புலியை விரட்டிய வீரத்தமிழ்ப்பெண் குறத்திதான் என்று கூறுகிறார்.மறத்தி என்பது குறப்பெண்ணே என்பது அவர் கூற்று.

நரிக்குறவர்கள் குறவர்களா என்றொரு அத்தியாயம். ஏறத்தாழ 30 ஆயிரம் நரிக்குறவர்கள் தமிழ்நாட்டில் வாழ்வதாக 1995 ல் வெளியான நூலில் அவர் பதிவு செய்கிறார். 

ஒளிவிளக்கு படத்தில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஏ சிங்கா ஏசிங்கி எனப்பாடி ஆடும் பாடலினால் அவர்கள் அனைவரின் வாக்குகளும்இரட்டை இலைக்கே போய்விடுகின்றன.

குறவர்கள் வேறு நரிக்குறவர்கள் வேறு என்று கூறுகிறார் ஆசிரியர்.தமிழ்க்கடவுளான முருகன் குறவரே என்றும் அகத்தியர் குறவரே என்றும் விளக்குகிறார்.ராமாயணத்தில் குகன், மகாபாரதத்தில் ஏகலைவன் உள்ளிட்டோரும் குறவர் இனத்தவரே என்பதும் ஆசிரியரின் முடிவு
குறி சொல்லும் குறவர்களின் சோதிட அறிவு போன்றவற்றையும் வேட்டைத் தொழிலையும் ஆசிரியர்விளக்குகிறார்.
நாட்டு வைத்தியத்தின் முன்னோடிகளாகவும் குறவர்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.அவர்களின் பச்சைக் குத்துதல். பூப்படைதல், பஞ்சாயத்து, திருமணம், மரணச்சடங்குகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்துள்ள தில்லை எழிலன் கூடைபின்னுதல், வேட்டையாடுதல் போன்ற அவர்களின் தொழில்களையும் பட்டியலிடுகிறார். தொல்காப்பியம், திருக்குறள் ,சங்கநூல்கள் தொட்டு பாரதி வரை இலக்கியத்தில்குறவர்கள் பற்றிய பதிவுகளையும் நினைவுகூர்கிறார்.இறுதியாக குறவர்கள் பற்றிய ஆங்கிலநூல்களின் பட்டியலையும் தந்துள்ளார்.
நமது முன்னோடிகளை அறியாமல் நாம் எதையும் சாதித்துவிட முடியாது என்று இந்நூல் உணர்த்துகிறது.


1 comment:

  1. இந்த புத்தகத்தின் பெயர் என்ன?

    ReplyDelete

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...