Saturday 24 August 2019

பதிவுகள் 1 சுந்தர ராமசாமி

பதிவுகள் 1 சுந்தர ராமசாமி





எனது ஆதர்ச எழுத்தாளர்களில் பாரதியும் புதுமைப்பித்தனும் மௌனியும் இன்னும் ஒரு பத்து இருபது எழுத்தாளர்களும் உள்ளனர். ஆனால் நான் சந்தித்த எனது சமகால எழுத்தாளர்களில் அசோகமித்திரன், எம்.வி.வெங்கட்ராம், சுந்தர ராமசாமி என்றுதான் வரிசைப்படுத்த வேண்டும். ஆனால் மற்ற இருவரையும் மிகுந்த மரியாதையுடன் நகர்த்தி சுந்தர ராமசாமியையே நான் தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளராக சந்தித்து மகிழ்ந்த அனுபவத்தை உங்களுக்கு சொல்லுகிறேன்.
ஏன் சுந்தர ராமசாமிக்கு முதலிடம்.....அவருடைய ஜே.ஜே.சில குறிப்புகள் ஒரு pseudo intellectual நாவல் என்றும் ஜான் அப்டைக்கின் பெக் எ புக் என்ற ஆங்கில நாவலை தழுவி எழுதியவர் என்றெல்லாம் தமிழ்ச்சூழலில் விமர்சித்தார்கள். நானும் பெக் எ புக எல்லாம் படித்துப் பார்த்தேன். அது சுராவின் மேதைமைக்கு கால் தூசி பெறாது விடுங்கள்.
சுந்தர ராமசாமியை எனக்கு புத்தகங்கள் வாயிலாகத்தான் முதலில் அறிமுகம். ஒரு அதி தீவிர வாசகனாக என்னை தன் படைப்புலகிற்குள் சுந்தர ராமசாமி வளைத்துக் கொண்டார். அவரை சந்திப்பேன் என்றும் அவருக்கு பிரியமானவராக இருப்பேன் என்றும் கனவில் கூட நினைத்ததில்லை. பக்தன் கடவுளைக் கண்ட உணர்வுதான் அது.
சுந்தர ராமசாமி என்ற பெயரே முதன் முதலாக ஈர்த்தது. ஈர்த்ததுஎன்ற சொல் எத்தனை கொடூரமானது என்பார் எம்ஜி வல்லபன் அவர்கள். சரிதான். ஆனால் வேறு எப்படி சொல்வது. படைப்புகளில் உச்சத்தில் ஜெயகாந்தனையும் நா.பார்த்தசாரதியையும் வைத்து கொண்டாடியவன் நான்.அவர்கள் எழுதிய அனைத்து புத்தகங்களையும் வாசித்து தேனில் திளைத்த வண்டு போல்தான் இருந்தேன். இதனிடையே ஒரு இலக்கிய நண்பர், கவிஞர் இப்போதும் முகநூலிலும் பத்திரிகை உலகிலும் இருப்பவர் கேட்டாரே ஒரு கேள்வி....ஜெயகாந்தனை எல்லாம் ஏன் படிக்கணும்....எனக்கு ஜே.கே. தேவையில்லை ...என்றார்
பல இளைஞர்கள் இந்தமன நிலையில் இருக்கிறார்கள். ஆனால் சுந்தர ராமசாமி கூறுவார் புதுமைப்பித்தன், குபரா, மௌனி, கநாசு போன்றவர்களுக்கு எல்லாம் பின்னால் வந்தவன் நான் என்று....முன்னோடிகளை மதிக்கிற முதல் பாடத்தை நான் சுந்தர ராமசாமியிடமிருந்தே கற்றுக் கொண்டேன்.
சுந்தர ராமசாமியின் ஜே. ஜே .சில குறிப்புகள் நாவலை பற்றி நான் அறிந்திருக்கவில்லை. எண்பதுகள் என நினைவு...கன்னிமரா நூலகத்திற்கு தினமும் படிப்பதே வேலையாக கொண்டு செல்லும் நண்பர்கள் சூர்ய ராஜன், மு.நந்தாவுடன் நானும் வேலையை விட்ட நாட்களில் கூட செல்வதுண்டு. நூறு வேலைகள் மாறியிருக்கலாம். பலநூறு முறை கன்னிமரா சென்றிருக்கலாம். ஒருமுறை தேவி தியேட்டரில் சார்லி சாப்ளின் திரைப்பட விழா நடத்தப்பட்டது. ஒருவாரம் படம் பார்க்க லீவு கேட்டு கிடைக்காததால் 400 ரூபாய் சம்பளத்தில் இருந்த வேலையை தூக்கிப் போட்டு வந்தேன்.
அப்படி கன்னிமரா செல்லும் நண்பர்களுக்கு தமது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கேண்டீனில் பொங்கலும் டீயும் வாங்கித் தருவார் நண்பர் நிமோஷிணி விஜயகுமாரன். அவர் அரசு அலுவலர் நிரந்தரமான சம்பளம் உடைய நண்பர் அப்போது அவர்தான்.
ஒருநாள் ஒரு இளைஞனை மரத்தடியில் சந்தித்தோம. கையில் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் புத்தகம் வைத்திருந்தான். வாங்கிப் பார்த்தால் வரிக்கு வரி அடிக்கோடிட்டு வைத்திருந்தான். சில வரிகள் மிகவும் பாதித்தன. அதுதான் சுந்தர ராமசாமி என்னை வளைத்த முதல் தருணம்.
என்னை ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று தெருவில் செல்லும் ஒவ்வொருவரையும் சட்டையைப் பிடித்து கேட்க வேண்டும் என்று ஜே.ஜே. கூறுவான்.
பலர் அந்த மனநிலையில்தான் அன்று இருந்தோம். வேலையில்லை, குடும்பத்திற்கு சுமையாகவும் பாரமாகவும் இருந்தோம். அம்மிக்ல்லைப் பெற்று எடுத்தால் சட்னி அரைக்கவாவது உதவியிருக்கும் என்று அம்மாவும் அப்பாவும் தங்கள் பொருளாதார சுமைகளால் எங்களை சவட்டிக் கொண்டிருந்த நேரம் அது.
அந்த இளைஞனின் பெயர் இப்போது நினைவில்லை. திரு என ஏதோ ஆரம்ப எழுத்து மட்டும் நினைவில் இருக்கிறது. அவனிடம் பேச்சு கொடுத்த போது திருநெல்வேலியில் இருந்து அப்பாவின் மளிகைக்கடையில் ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டதாக கூறினான். ஏன் என்றால் ஜே.ஜே.சிலகுறிப்புகளை காட்டினான். வாழப் பிடிக்கவில்லை என்று கூறிய அவன் ஆயிரம் ரூபாய் தீர்ந்த பின் என்ன செய்யப்போகிறாய் என்று நாங்கள் கேட்ட போது தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன் என்றான்.
ஜே.ஜே. சில குறிப்புகள் புத்தகம் எனக்கு மிகப் பெரிய பயத்தை ஏற்படுத்தியது. அதை அவன் கையில் வைத்திருந்தால் ஆபத்து என நான் வாங்கிக் கொண்டேன். அவனையும் என் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.
இரவில் அம்மா, அப்பா, தம்பிகளின் முறைப்பையும் தாங்கிக் கொண்டு அவனுக்கும் சோறு போட்டு அவனுடன் மொட்டை மாடியில் படுத்து மறுநாள் காலையில் கன்னிமரா நோக்கி நடந்தே சென்றோம்....நண்பர்களும் வந்து வி்ட்டனர். ஆளாளுக்கு அவனை மூளைச் சலவை செய்து விட்டோம். வாழ்க்கை மிகப்பெரிது வாழ்வது அரிதினும் அரிதானது என்றெல்லாம் அவனுக்குப் புரிய வைத்து அவன் காசிலேயே திருநெல்வேலிக்கு டிக்கட் எடுத்து அவனை அனுப்பி வைத்தோம். அவன் அப்பா எண்ணை வாங்கி தொலைபேசியில் பேசி மகனுடைய உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அன்புடன் நடத்துமாறும் தண்டிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டோம். அதன் பின்னர் அந்த இளைஞனை இன்று வரை சந்திக்கவில்லை. ஆனால் அவன் தந்த ஜே.ஜே.சில குறிப்புகள் புத்தகம் எனது வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்துவிட்டது. சுந்தர ராமசாமி என்ற பெயரும் அவருடைய ஜே.ஜே சில குறிப்புகள் நாவலும் என்னை அவருக்கு மிகவும் நெருக்கமான மனநிலைக்கு கொண்டு சென்றது. அவர் யார் எங்கே வாழ்கிறார் என்றெல்லாம் விசாரிக்க ஆரம்பித்தேன்.
கோவை ஞானி அய்யா அவர்கள் மூலமாக சுந்தர ராமசாமியைப் பற்றி அதிகமாக அறிய முடிந்தது. அடிக்கடி ஞானி வீட்டுக்குச் செல்லும்போது சுந்தர ராமசாமியைப் பற்றி அவர் படைப்புகள் பற்றி ஆர்வமாக பேசுவேன். ஞானிக்கு இடதுசாரி மனநிலை. அவர் டி.செல்வராஜ், பொன்னீலன் போன்ற எழுத்தாளர்கள் மீது ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தார். சுந்தர ராமசாமியைப் பிடிக்கும் என்றாலும் அவர் ஒரு பணக்காரர் என்றும் மேல்தட்டு எழுத்தாளர் என்றும் ஞானிக்கு ஒரு எண்ணம் இருந்திருக்கலாம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. பின்னர் ஜெயமோகன், வேதசகாயகுமார் போன்றோருடனான நட்பும் சந்திப்புகளும் சுந்தர ராமசாமியை நான் நேசிப்பது சரிதான் என்று வலிமையான எண்ணத்தை தந்தன.
சுந்தர ராமசாமியை சந்தித்தால் என்னுடன் பேசுவாரா என்ற தயக்கம் இருந்தது. ஒருநாள் நாகர்கோவிலுக்கு எனது நிறுவனத்தின் சேல்ஸ் ரெப்பாக நான் அடியெடுத்து வைத்தேன். அந்த ரூட்டுக்கு வேறு ஆள் போட்டிருந்தார்கள் என்பதால் என்னால் கோவை, சேலம் தாண்டி போக முடிவதில்லை. எப்படியோ ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன்.
நாகர்கோவில் பேருந்து நிலையம் அருகில் அப்போது 25 ரூபாய்க்கு மிகவும் அசுத்தமான ரூம் கிடைக்கும் .மூத்திர நாற்றம், மூட்டைப்பூச்சி நிறைந்த கட்டில் எல்லாம் கிடைக்கும். வேறு வழியில்லை. ரயில் பேருந்து கட்டணத்திற்காக ஒரு தொகையை ஒதுக்கினால் கையில் சில நூறு ரூபாய்கள் தான் இருக்கும். அதுதான் ரூமுக்கும் சாப்பாட்டுக்கும் புத்தகங்களுக்கும்.
இரவில் ரூமில் தங்கிவிட்டு காலையில் கன்னியாகுமரி கோவிலுக்கு சென்றேன். அதற்கு முன்பாக தென்குமரிக் கடலில் சூரிய உதயத்தை கண்ணால் கண்டு மகிழ்ந்தேன். விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி சென்று வந்தேன். கடைசியாக காலையில 9 மணியளவில் வேதசகாயகுமாரின் வீட்டை கண்டுபிடித்து சென்றடைந்தேன். அப்போது ஜெயமோகன் திருப்பத்தூரிலோ தருமபுரியிலோ இருந்தார்.
வேதசகாயகுமார் உபசரித்து என்னை சுந்தர ராமசாமியின் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். காலச்சுவடு மீண்டும் வர ஆரம்பித்த நேரம் அது. கண்ணன் அறிமுகமானார். அவர் காலச்சுவடு தட்டச்சு பணிகளையும் வீட்டையும் காட்டினார். உடனே இணக்கமான நண்பரைப் போல் பழக ஆரம்பி்தது விட்டார். சில நிமிடங்கள் கழித்து வெள்ளை வேட்டி கோடு போட்ட சட்டையுடன் சுந்தர ராமசாமி என்னை வரவேற்றார். .
சுந்தர ராமசாமி என்னை வரவேற்றார் என்ற இந்த வரியை அத்தனை சாதாரணமாக தாண்டிப் போய்விடாதீர்கள். அது ஒரு வரலாற்றுத் தருணம். ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் பின்னால் மிகப்பெரிய எழுத்தாளனாக வரப்போகிற ஒருவனை வரவேற்ற தருணம். கிடங்குத் தெரு எழுதினபிறகு இப்படி கூறுகிற தைரியம் எனக்கு வந்துள்ளது. அந்த நாவலில் ராஜா கூறுவான்...நான் ஒரு ஜீனயஸ் இதை நீங்கள் நம்புங்கள் மிகுந்த பணிவுடன் தான் இதனைக் கூறுகிறேன். இதை ஒரு ஆணையிட்டும் என்னால் கூற முடியும்.
சுந்தர ராமசாமியிடம் என்னைக் கவர்ந்த அம்சமே அந்த படைப்புத் திமிர்தான். படைப்பதனால் என்பெயர் இறைவன் என்ற மன நிலையை சுந்தர ராமசாமி தான் எனக்கு முதன் முதலில் நேரடியான அனுபவமாக தந்தார். ஒரு மிகச்சிறந்த படைப்பாளி எல்லா முதலமைச்சர்கள், பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், உலகத் தலைவர்கள், ஏன் ஒட்டு மொத்தமனித குலத்தைவிடவும் ஒரு அடி உயர்ந்தவர்கள்தான் என்ற எண்ணம் வலுவாக சுந்தர ராமசாமியிடமிருந்துதான் நான் பெற்றுக் கொண்டேன்.
கண்ணன் காலச்சுவடு பணிகளை எனக்கு காட்டிக் கொண்டிருந்தார். அதுவரை காத்திருந்த சுந்தர ராமசாமி பொறுமை இழந்து வாங்க என்று என்னை அழைத்து தன் வரவேற்பறைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார், காலை டிபன் கொடுத்தா்கள். பேசிக் கொண்டும் பின் அமர்ந்தும் பல மணி நேரம் அவருடன் உரையாடினேன். கிட்டதட்ட 12 மணிக்குதான் விடைபெற்றேன்.
அந்த உரையாடலில் நினைவில் பதிந்ததை மட்டும் கூறுகிறேன். சரிபார்க்க சுராவும் இப்போது இல்லை. தவறு இருந்தால் நானே பொறுப்பு மன்னித்துக் கொள்ளுங்கள்.
எனக்கு முதல் ஆச்சரியம் என் பெயரை அவர் தெரிந்து வைத்திருந்தார். செந்தூரம் சிற்றிதழ் வாயிலாகவும் எனது படைப்புகளை கணையாழி , தீபம், நிகழ், உள்ளிட்ட  இலக்கிய இதழ்களின் வாயிலாகவும் ஞானி, வேதசகாயகுமார், ஜெயமோகன் போன்ற நண்பர்கள் நேர்ப்பேச்சிலும்என்னை அவர் அறிந்திருந்தார் என்பது எனக்கு தாளாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எதிரே இருப்பவன் யார் அவன் இலக்கியத் தகுதி என்ன அவனுடன் என்ன உரையாட வேண்டும் என்பதையும் அப்போது ஒரு பாடமாக சுந்தரராமசாமியிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.
முதலில் தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் பற்றி பேச்சுவந்தது. நீங்க நிறைய படிக்கிற ஆளுன்னு கேள்விப்பட்டேன். நீங்க படிச்ச புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்கள் என்றார் சு.ரா.
ஜெகதீஷ் வரை தெரிந்து வைத்திருந்த அநத் ஆளுமைக்கு முன்னால் நான் மிகச்சிறியவனாக தெரிந்தேன். ஆனாலும் அவர் அறியாத ஒரு படைப்புலகில் என் மூலமாக அவர் பிரவேசிக்க முயற்சிப்பதாக எடுத்துக் கொண்டேன். மேலும் இளம் படைப்பாளர்களுக்கு எத்தகைய புத்தகங்களில் ஆர்வமும் ஈடுபாடும் இருக்கிறது என்பதை அவர் சோதிக்க நினைத்திருக்கலாம்.
ஜெயமேகன், சு.வேணுகோபால், குமாரசெல்வா, ஷாராஜ், சூர்யராஜன் , நந்தா, அறிவுமணி, கோணங்கி, பாவண்ணன் என்று அப்போது நான் படித்த பழகிய எழுத்தாளர்கள் பற்றியும் அவர்கள் படைப்புகள் பற்றியும் பேசுவதை கூர்ந்து கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். இடையில் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே அவர் புன்னகையுடன் பேசினார்.
பின்னர் பேச்சு புதுமைப்பித்தன் முதல் ஜி.நாகராஜன் வரை திரும்பியது. ஜி.நாகராஜன் தமது வீட்டுக்கு வந்து குடிக்க காசு கேட்பதையும் அவருடைய கட்டுப்பாடற்ற வாழ்க்கையையும் மிகச்சிறந்த ஒரு படைப்பாளி எப்படி சிதைந்து போனார் என்பதையும் சுரா வாயிலாக கேட்ட போது மனம் கலங்கியபடியே இருந்தது. ஜிநாகராஜனின் நாளை மற்றும் ஒரு நாளே , குறத்திமுடுக்கு உள்ளிட்ட படைப்புகளைப் படித்திருந்திருந்ததால் எனக்கு சுராவுடன் உரையாட தயக்கம் இல்லை. அடுத்து கிருஷ்ணன் நம்பி பற்றியும் பேசினோம், இந்த நினைவுகளையெல்லாம் தொகுத்து புத்தகமாக்க வேண்டுமம் என்று நான் சுராவிடம் கேட்டுக் கொண்டேன். பின்னர் அரவிந்தன் தொகுத்த சுராவின் நினைவோடை நூல் வரிசைகளுக்கு அன்றைய எனது கோரிக்கை ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
தொடர்ந்து க.நா.சு பற்றியும் பேசினோம். நான் சொன்னேன் கநாசு மொழிபெயர்ப்புகளின் நம்பகத்தன்மை பற்றி நான் சந்தேகம் எழுப்பினேன். சுருக்கியும் மாற்றியும் எழுதியிருப்பதாக நான் எண்ணுவதை தெரிவித்தேன். இது அவருக்கு புதிய செய்தியாக இருந்தது. அத்தனை உன்னிப்பாக கநாசுவின் மொழிபெயர்பபுகளை படித்து யாரும் பேசியதில்லை என்றார். இதுவரை தமிழில் மூல நூலையும் மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை கூட எழுதப்படவில்லை என்று அப்போது சுந்தர ராமசாமி கூறினார். பின்னர் எனது புகாருக்கு பதிலளிக்கும் விதமாக தமது நண்பரான கநாசுவை விட்டுக் கொடுக்காமல் ,கநாசு மொழிபெயர்த்ததில் குறைகள் இருக்கலாம்.ஆனால் எது எல்லாம் தமிழுக்கு அவசியம் வரவேண்டும் என்று நினைத்தாரோ அத்தனை நூல்களையும் அவர் தானே அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் என்றார். என்னால் மறுக்கவே முடிவில்லை.
கணையாழி அப்போது தசரா அறக்கட்டளையின் வெளியீடாக வந்துக் கொண்டிருந்தது. அதில் சுரா கேள்வி பதில் எழுதிக் கொண்டிருந்தா்ர. இளையராஜாவின்  இசையில் வெளியான அவதாரம் படத்தில் தென்றலது உன்னிடத்தில் என்ற பாடல் தமக்கு மிகவும் பிடிக்கும் என்று சுந்தர ராமசாமி அதில் பதிவுசெய்திருந்தார். அது பற்றியெல்லாம் அவர் ஆர்வமாக கேட்டார். காப்கா பற்றிய பதிவு சிறப்பாக இருந்ததாக கூறினேன். ஆனால் சார் கணையாழி பழைய மரியாதையை இழந்துவிட்டது. இப்ப அதுல நீங்க எழுதினா அது உங்களுக்குத்தான் கௌரவக் குறைவு என்று கூறினேன். இது அவருக்கு மிக்பபெரிய வியப்பை ஏற்படுத்தியது. செம்மலர்  சுந்தர ராமசாமியை அங்கீகரிப்பதாக ஒரு முறை எழுதிய போது அதற்கு கடிதம் எழுதிய சுந்தர ராமசாமி, செம்மலர் என்னை அங்கீகரிப்பது ஒரு பொருட்டல்ல, நான் செம்மலரை அங்கீகரிக்கிறேனா என்பதுதான் முக்கியம் என்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் .அதனை சுட்டிக் காட்டினேன். கணையாழிக்கும் இது பொருந்தும் என்ற எனது கருத்தை அவர் உள்வாங்கிக் கொண்டார் .அடுத்த சில மாதங்களில் கணையாழியில் சுராவிந் கேள்வி பதில் நிறுத்தப்பட்டது. சுரா தொடர்ந்து எழுதியிருக்கலாம் என்று இப்போது வருத்தத்துடன் எண்ணிக் கொள்கிறேன். ஏனென்றால் அந்தக் காலத்தில் குமுதத்தில் எழுதக்கூடாது தசரா கணையாழியில் எழுதக் கூடாது என்ற மிகுந்த தவறான எண்ணங்களுடன்தான் நாங்கள் தீவிர இலக்கியம் வாசித்தும் எழுதியும் வந்தோம்.
சுந்தர ராமசாமியின் வீட்டில் அவருடனான சந்திப்பு மிகுந்த மன நிறைவையும் உற்சாகத்தையும் தந்தது. திருநெல்வேலி இளைஞன் ஜேஜே சில குறி்ப்புகள் படித்துவிட்டு தற்கொலை எண்ணத்துடன் சென்னை வந்து எங்களிடம் சி்க்கிய கதையை நான் அவருக்கு சொல்லவில்லை.ஒருவன் தனது மனப்பிதற்றல், பிறழ்வுக்கு குறிப்பிட்ட புத்தகத்தையோ, நபரையோ, திரைப்படத்தையோ குற்றம் கூறுவதும் காரணமாக்குவதும் அபத்தம் என்பதை நானும் புரிந்துக் கொள்ளத் தொடங்கிவிட்டேன். அதன் பின்னர் நானும் இரண்டு மூன்று முறை தற்கொலைக்கு முயன்றவன்தான். வாழ்க்கையின் இறுக்கமான தருணங்களில் வழிகாட்டும் ஒளியாக கடவுள் இல்லாத போது இலக்கியமோ இசையோ உதவக்கூடும் என்பதை தான் எனதுஅனுபவம் வாயிலாக உணர்ந்திருக்கிறேன். நல்ல நட்பும் சில சமயங்களில்  வாழ்க்கை மீதான நேசத்தை உருவாக்கும். அப்படித்தான் எனது வாழ்க்கை கழிந்துள்ளது.
சொல் புதிது இதழ் வெளியீட்டு விழாவுக்காக சுந்தர ராமசாமி சென்னை வந்தார். ஜெயமோகன் அழைத்திருந்தார். நான் ஜெயகாந்தனை அழைத்தேன். அவரும் விழாவுக்கு வந்துவிட்டார். பிரபஞ்சன், சா.கந்தசாமி, வஐசெ ஜெயபாலன், எம்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஒரே மேடையில் தோன்றினர். அந்த விழாவில் என்னால் பேச முடியவில்லை. மிகப்பெரிய எழுத்தாளர்களாக நான் மதிக்கக்கூடிய நான்கு பேர் ஒரு மேடையில் இருப்பதை பரவசமான அனுபமாக உணர்ந்தாலும் ஜெயமோகன் கலந்துக் கொள்ள இயலவில்லை.வேலை இல்லாத மனச்சோர்வு, கையில் காசு இல்லாத வேதனை, வீட்டில் காத்திருந்த பிரச்சினைகள் எல்லாமுமாக நான் ஊமையாக பேசிவிட்டு போனேன்.
முன்னதாக காலையில் ஆழ்வார்ப்பேட்டையில் சுரா தங்கியிருந்த உறவினர் வீட்டில் போய் அவரை பார்த்தேன். மிகுந்த பிரியத்துடன் வரவேற்று பேசினார். அவருடைய அன்பு கனிந்து ஆகர்ஷித்தது. என்னை மிகவும் நெருக்கமானவனை போல் அவர்  ஏற்றுக் கொண்டார். அப்புறமும் ஒருமுறை சென்னை காஞ்சி ஓட்டலில் சுரா இல்லத்திருமண விழா வரவேற்பறையில் அவரை சந்தித்த போதும் அந்த பிரியத்தை என்னால் உணர முடிந்தது.
சுந்தர ராமசாமி மறைந்த போது கண்ணன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நாகர்கோவில் போக முடியவில்லை. கையில் காசு இல்லை.
பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கிடங்குத் தெரு நாவல் சுந்தர ராமசாமிக்குப் பிடித்திருந்தது என்றும் அவரே காலச்சுவடில் எழுத நினைத்தார்  என்றும் கண்ணன் எழுதிய கடிதம் மூலம் அறிந்துக் கொண்டேன். அந்த நாவலுக்கு பாஷா பாரதிய சம்மான் என்ற தேசிய விருதும் தஞ்சை ப்ரகாஷ் இலக்கிய விருதும் பெற்ற மகிழ்ச்சியை விட அந்த இரண்டு வரிகள் எனக்குத் தந்தன. கிடங்குத் தெருவும் ஜேஜே சில குறிப்புகளும் ஒரே அவஸ்தையை கூறுகின்றன. ஒன்று சுந்தர ராமசாமியின் பார்வையில் மற்றொன்று செந்தூரம் ஜெகதீஷின் பார்வையில்....
சுந்தர ராமசாமி பதிவுகள் நிறைந்தது

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...