Monday 5 August 2019

ரசனை சினிமா 1

ரசனை சினிமா என்ற பெயரில் பேஸ்புக்கில் நான் எழுதும் தொடர்

1சினிமா - மீனவ நண்பன் -(1977)
எம்.ஜி.ஆர். லதா ,வெ.ஆ.நிர்மலா, நம்பியார், வி.கே.ராமசாமி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் ,சச்சு
பாடல்கள் வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம்
இசை எம்.எஸ்..விஸ்வநாதன்
இயக்கம் ஸ்ரீதர்
எம்ஜி ஆரின் வயதான தோற்றத்திலும் தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து லதா வாணி ஜெயராமின் இனிமையான குரலில் பாடும் போது நம்பத்தான் தோன்றுகிறது. வழக்கமான எம்ஜிஆரின் சுறுசுறுப்பான நடனங்களும் சண்டைக்காட்சிகளும் இப்படத்தில் சற்று குறைவுதான். மீனவர் வாழ்வை சித்தரித்த படகோட்டி அளவுக்கு கூட கதையம்சமும் இல்லை .ஆனாலும் இப்படத்தை தொடர்ந்து இரண்டரை மணி நேரம் பார்த்தேன். காரணம் எம்ஜிஆர் மட்டுமல்ல பாடல்களை தந்த இசையமைப்பாளரும கவிஞர்களும்தான்
புலவர் புலமைப்பித்தன் எழுதி நேருக்குநேராய் வரட்டும் என்ற முதல் பாடலில் தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகளுடன் எம்ஜிஆரின் கொள்கையை பொருத்திய விதம் அழகு....
வாலி எழுதிய பட்டத்து ராஜாவும் பாடலில்
கோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட கூட்டங்கள் என்னானது. பல ஓட்டை வந்து தண்ணீரில் மூழ்கும் ஓடங்கள் போலானது.
ஏற்றிய ஏணியை தூற்றிய பேருக்கு இதுதான் பாடம் அய்யா
நான் என்ன சொல்வதுநாட்டினில் நடப்பதுகண் கொண்டு பாருமய்யா என கருணாநிதியின் வீழ்ச்சியை சித்தரிக்கும் அரசியல்நெடி ஆஹா பேஷ் பேஷ்....
ஜேசுதாஸ்-வாணிஜெயராம் குரலில் தங்கத்தில் முகமெடுத்து என்ற முத்துலிங்கத்தின் பாடல் ஒரு கிளாசிக் ஜெம்.
நேரம் பவுர்ணமி நேரம், பொங்கும் கடலோசை போன்ற பாடல்களும் மீண்டும் கேட்கத் தூண்டுபவை.
ஸ்ரீதரின் முக்கோண காதல் கதைகள் பதித்த முத்திரைகள் இப்படத்தில் இல்லை. எம்ஜிஆர் என்ற தனிநபரின் ஆளுமையும் லதாவின் கவர்ச்சியும் சில அழகான பாடல்களும்தான் இப்படத்தில் காலம் கடந்து எஞ்சியிருக்கின்றன.
அது சரி ஏன் இதுபோன்ற பழைய படங்களை பார்க்காமல் விடுகிறோம். .....பல சாதனையாளர்கள் இணைந்து படைத்ததை ருசிப்பதில் என்ன தன்முனைப்பு நமக்கு?
ஒரு எம்ஜிஆர் ரசிகனாக பார்த்தேன் .ரசித்தேன்
---------------------------------------------
2 காளி ( 1980)
ரஜினிகாந்த், விஜயகுமார், சீமா, படாபட் ஜெயலட்சுமி, சுபா, ரீனா, மேஜர் சுந்தர்ராஜன், வெ.ஆ.நிர்மலா
பாடல்கள் கண்ணதாசன் ,வைரமுத்து
திரைக்கதை மகேந்திரன் ,ஒளிப்பதிவு அசோக்குமார்
இசை இளையராஜா இயக்குனர் ஐ.வி. சசி
அக்கா மற்றும் அவர் இரண்டு குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்ட காளி தனது அக்காவின் கணவரையும் குழந்தைகளையும் கொடூரமாக கொன்று விட்ட வில்லனை பழிவாங்கும் கதைதான். நியாயமாக இப்படத்தின் கதாநாயகன் விஜயகுமார்தான் ஆனால் அவருடைய மார்க்கெட்டின் இறங்குமுகம்...ஒரு நடிகராக மட்டுமின்றி சூப்பர் ஸ்டாராகவும் ரஜினியின் ஏறுமுகம் டைட்டில் ரோலை ரஜினிக்கு தந்துவிட்டது. ஆனால் வாழு மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் பாடல் ரஜினியை பாடவிடாமல் விஜயகுமாரையே பாட வைத்து விட்டனர். அப்போது ரஜினிக்கும் எம்ஜிஆருக்கும் பிரச்சினை இருந்தது .ரஜினியின் வளர்ச்சியால் எம்ஜிஆர் அவருக்கு தொல்லை கொடுத்ததாக சொல்வார்கள். சில மஞ்சள் பத்திரிகைகள் ரஜினியை மனநலம் பாதித்தவராக சித்தரித்தன. ரஜினியும் அப்போது நிலை தடுமாறி இருந்தார். அந்தப் பாடலில் கண்ணதாசன் குசும்பாக ஒரு வரி எழுதினார்...
உன் பேரையும் என்பேரையும் ஊரார் சொன்னால் இந்திரனும் சந்திரனும் நடுங்கிட வேண்டாமா ......சந்திரன்,,ராமச்சந்திரன்...எம்.ஜி.ராமச்சந்திரன் என்றெல்லாம் கட்டுடைப்பு செய்துக் கொண்டே போகலாம்....ஆனால் ரஜினி பாடியிருந்தால்தான் இந்த பிரச்சினை....பாடியது கையில் அதிமுக முத்திரை குத்திய விஜயகுமார்....அதனால் பிரச்சினையாகவில்லை.
இந்தப் படத்தில் வைரமுத்துவும் ஒரு பாடல் எழுதினார். அடடா அது எந்தப் பாடல் எனத் தேடினால் காளி உத்தமசீலி என்றொரு பக்தி பாடல் .அடி ஆடு பூங்குயிலே. அழகழகா பூத்திருக்கு போன்ற மற்ற பாடல்களை எல்லாம் கண்ணதாசன் தான் எழுதியுள்ளார்.
மகேந்திரன் திரைக்கதை அசோக்குமார் ஒளிப்பதிவு என பல அம்சங்கள் இருந்தாலும் ஒரு சூப்பர்ஸ்டார் உதயமாகி வரும் காலங்களின் பதிவாக இந்தப் படம் உள்ளது. பார்க்கத் தானே போறே இந்த காளியோட ஆட்டத்தை என்று இன்றும் ரஜினி வசனம் பேசுகிறார். அந்த காளி தான் முள்ளும்மலரும் படத்தில் வேறொரு நடிப்பின் உச்சத்திற்கு போனார். அதே காளி என்ற பெயரிலேயே இந்தப் படம் எடுக்கப்பட்டது.இதே படம் தெலுங்கிலும் தயாரானது. விஜயகுமார் வேடத்தில் சிரஞ்சீவி ரஜினியுடன் நடித்தார்.
இப்படத்தை பார்க்கத் தோன்றுவது அன்றைய ரஜினியின் ஸ்டைல் நடிப்பு மற்றும் இளையராஜாவின் ஆரம்பகால இசை ஜாலங்களுக்காகத்தான்.
------------------------------------------------------
ரசனை சினிமா 4
செந்தூரம் ஜெகதீஷ்.
உத்தரவின்றி உள்ளே வா 1977
ரவிச்சந்திரன், நாகேஷ், வெ.ஆ.மூர்த்தி , காஞ்சனா, சச்சு
கதை வசனம் -கோபு
தயாரிப்பு சித்ராலாயா - ஸ்ரீதர்
பாடல்கள் -கண்ணதாசன்
இசை -எம்.எஸ்.விஸ்வநாதன்
ரவிச்சந்திரனின் அற்புதமான படங்களில் ஒன்று. கோபு கதை வசனம் எழுதி என்.சி சக்ரவர்த்தி இயக்கிய இத்திரைப்படம் முழு நீள நகைச்சுவை படம். தயாரிப்பாளர் ஸ்ரீதர் தான்.
ரவிச்சந்திரன், நாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகிய மூவரும் ஒரே பெண்ணை காதலிக்கும் கதை. நாயகி காஞ்சனா. இந்தப்படத்தில் மெல்லிய சேலையில் லோ ஹிப் கட்டி காஞ்சனா மிக அழகாக இருப்பார்.
மூன்று பேரும் கதாநாயகியை நினைத்து பாடும் ஒரு டூயட் பாடல் உத்தரவின்றி உள்ளே வா உன்னிடம் ஆசை கொண்டேன் வா.....இந்தப் பாடலை தொடக்கத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவார். முதலில் வெண்ணிற ஆடை மூர்த்தி நடனமாடுவார். ஆனால் அவருக்கு வாய்ஸ் கிடையாது. பல்லவியும் முதல் சரணமும் எல்,ஆர்.ஈஸ்வரியே பாடிவிடுவார். ஆனால் மூர்த்திக்கு புதர் மறைவில் காஞ்சனாவுக்கு முத்தம் கொடுக்கும் பாக்கியம் கிடைத்தது.
நாகேஷ் தொடாமலே டூயட் பாடுவார். ஒரு சங்கீத வித்வானைப் போல் நடையுடை பாவனையை அற்புதமாக வெளிப்படுத்துவார் நாகேஷ்... அவருடைய பகுதிக்கு டி.எம்.சௌந்திரராஜன் குரல்
பூமியில் மானுட ஜென்மம் எடுத்தது காதலி உன்னைக்காண....என்று பாடி நாகேஷ் சென்று மறைவார். இதுவரை பரதநாட்டிய உடையிலும் சேலையிலும் நடித்த காஞ்சனா அடுத்துமாடர்ன் பெண்ணாக அழகான சல்வார் குர்தா அணிந்து வருவார். ரவிச்சந்திரனும் மிக ஸ்டையான உடையுடன் இளமை பொங்க தானேதான் காஞ்சனாவுக்குப் பொருத்தமான ஜோடி என்பதைப் போல் அழகாக நடனமாடுவார்....அவருக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் இளமை பொங்கும் குரல்...
கள்ளம் இல்லாத பிள்ளை நிலாவை கன்னம் தொடாமல் போவேனோ...என்று ரவிச்சந்திரன் பாடியாடும் அழகுக்காகவே அந்தப் படத்தை பித்து பிடித்தவன் போல் சிறுவயதில் பலமுறை பார்த்திருக்கிறேன். ரவிச்சந்திரனுக்கு வெறும் எஸ்.பி.பி ஹம்மிங் மட்டுமே கொடுத்த மற்றொரு பாடலான காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ பாட்டிலும் ரவிச்சந்திரனின் உடல்மொழி அதுவரை தமிழ்த்திரையுலகம் காணாதது.மாதமோ மார்கழி மங்கையோ மாங்கனி என்ற பாட்டும் ரசிகர்களை கொள்ளை கொண்டது.
--------------------------------------------------------
5 ராஜபார்ட் ரங்கதுரை 1973
சிவாஜிகணேசன். ஸ்ரீகாந்த், டி.கே.பகவதி, வி.கே.ராமசாமி,நம்பியார், சசிகுமார், பூர்ணம் விசுவநாதன், சுருளிராஜன், செந்தாமரை
உஷாநந்தினி, ஜெயா, குட்டி பத்மினி, மனோரமா
கதை வசனம் -பாலமுருகன்
பாடல்கள் -கண்ணதாசன் இசை எம்.எஸ்,விஸ்வநாதன்
இயக்கம் -பி.மாதவன்
சிவாஜி கணேசன் படங்களில் இரண்டு அம்சங்கள் நிச்சயம். சோகம், பந்தம் . இவை இரண்டுமே இந்தப் படத்தில் தூக்கலாக இருக்கின்றன. உலகிலேயே மிகச்சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் தான். அதை மீண்டும் இப்படம் நிரூபிக்கிறது. ஏழை ராஜபார்ட் ரங்கதுரை என்ற நாடக நடிகராக தோன்றும் சிவாஜி தனது தம்பியின் அன்பைப் பெற தவிக்கும் படம். தம்பியோ படித்து பணக்காரர்கள் சகவாசத்தால் அண்ணனின் தியாகத்தை மறக்கிறான். அப்போது சிவாஜி பாடும் அம்மம்மா தம்பி என்று நம்பி ....பாடலில் கண்ணதாசன் உச்சத்தைத் தொட்டிருப்பார்.
கண்ணில் நீர்ப்பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகின்றது
அது பாசம் அன்றோ இது வேஷம் அன்றோ
அவன் ராஜாதி ராஜனுக்குப் பிள்ளையல்லவோ
இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழை அல்லவோ
இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் திருப்பூர் குமரனாகவும் ஷேக்ஸ்பியரின் ஹேம்லட்டாகவும் நடித்திருப்பார் .டூ பீ ஆர் நாட் டூ பீ என்ற வசனம் பேசும் சிவாஜியின் நடிப்பு ஈடு இணையற்றது.
ஜின்ஜினிக்கா சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி என்ற பாடலும் அபாரமானது.
பார்த்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு ஆனா பத்துக் கதை உள்ளத்துல இருக்கு
என்றும் இது மேல் புறத்தில் கசப்பு கீழ்புறத்தில் இனிப்பு பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு என்றும் தன் வாழ்க்கையை பாடி வைத்த அந்த நாடகக் கலைஞன் கண்ணை விட்டு மறையவே இல்லை. நலிந்தநாடகக் கலைஞ்ர்கள் மற்றும் அழியும் நிலையில் இருந்த நாடகக் கலையை இந்தப் படம் சித்தரிப்பதால் இன்றும் இது காலம் கடந்த பொக்கிஷமாக திகழ்கிறது.
------------------------------------------------------
6 மேயர் மீனாட்சி 1977
ஜெய்சங்கர் , கே.ஆர்.விஜயா, விஜயகுமார், ஸ்ரீப்ரியா, ரோகிணி, வி.கே.ராமசாமி, சோ, சுருளிராஜன், மனோரமா, மனோகர்
மூலக்கதை சுகி. சுப்பிரமணியம் பாடல்கள் கண்ணதாசன், வாலி
இசை எம்.எஸ்.விஸ்வநாதன், இயக்கம் -மதுரை திருமாறன்
சாதாரண குப்பை பொறுக்கும் மீனாட்சி ஊர் பெரிய மனிதர் வி.கே.ராமசாமியின் அசல் முகத்தை அறிந்து மேயராகப் போட்டியிட்டு அவருடைய வில்லத்தனங்களுக்கு முடிவு கட்டுகிறாள். நீங்கள் விரும்பும் வரை மேயராக இருப்பேன். இல்லாவிட்டால் மீண்டும் குப்பை பொறுக்கப்போய் விடுவேன் என்று ஆபிரகாம் லிங்கன் தனது செருப்புத் தைக்கும் குலத்தொழில் பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறியது போல் கூறுகிறாள். அத்துடன் படம் முடிகிறது. இந்தப் படத்தின் ஹீரோ கே.ஆர்.விஜயாதான். அவருடை புசுபுசு உடம்புக்கு குப்பை பொறுக்கும் பெண் என்பதை நம்பமுடியவில்லை. ஜெய்சங்கர் இருந்தாலும் இரண்டு மூன்று சண்டைகள், பாடல்களுடன் சரி...பாடல்கள் இந்தப் படத்தின் சிறப்பம்சம். திருமுருகன் அருகினிலே வள்ளிக்குறத்தி ( ஜெயச்சந்திரன், வாணிஜெயராம்) கண்டேன் கல்யாணப் பெண் போன்ற கோலம் ( எஸ்.பி.பி- பி.சுசிலா ) எவளோ ஒரு பெண்ணாம் அது நானில்லையாம் ( வாணி ஜெயராம் ) கொடி விட்ட சிறுமுல்லை மலரே ( வாணி ஜெயராம் ) ஆகிய பாடல்கள் மீணடும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிமை.
ஸ்ரீப்ரியா பலாத்காம் செய்யப்பட்டு இறந்துவிடுவா்ர. ரோகிணி குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார் . சிறு வயதில் சென்னை மேகலா திரையரங்கில் இந்தப் படத்தைப் பல முறை பார்த்திருக்கிறேன். இப்போதும் பார்த்தேன். படம் போரடிப்பது போல் தோன்றினாலும் பாடல்கள் மனதுக்குள் ரீங்காரமிடுகின்றன. கூடவே கே.ஆர்.விஜயா என்ற புன்னகை அரசியின் நடிப்பும்.
----------------------------------------
7 உனக்காக நான் -1976
இந்தியில் அமிதாப் பச்சன் வளர்ந்துக் கொண்டிருந்த நேரம்...அப்போது ராஜேஷ் கன்னா சூப்பர் ஸ்டாராக இருந்தார். இருவரும் இணைந்து சில படங்களில் நடித்தனர். ஆனந்த் ,நமக் ஹராம் போன்ற படங்கள் நினைவில் நிற்பவை. நமக் ஹராம் கதையில் மூன்றாவதாக ஒரு முக்கியப் பாத்திரத்தில் வில்லன் நடிகர் ருசா முராத் நடித்திருப்பார். அவர் வில்லன் நடிகராக பல பிட்டு படங்களிலும் பின்னர் நடித்தவர். இப்போதும் மதம் சார்ந்த அரசியல் கருத்துகளை ஊடகங்களில் பேசி வருபவர். தமிழில் அந்த பாத்திரத்திற்கு நாகேஷ் உயிர் கொடுத்தார். மூலக்கதை குல்சார் . இந்தியில் வசனமும் பாடல்களும் அற்புதம்.
என் மரணத்திற்குப் பின்னர் என் வீட்டை சுத்தம் செய்யும் போது உங்களுக்கு பாதி அருந்திய மதுவுடன் சில கோப்பைகள் கிடைக்கலாம். சில உடைந்த மனோரதங்கள் கிடைக்கலாம்... என்றெல்லாம் கவி்த்துவமாக வரிகள் விழும்.
தமிழில் இப்படத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் காதல் மன்னன் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்திருந்தனர். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுத சிவி ராஜேந்திரன் இயக்கினார். லட்சுமி சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். காதல் மன்னன் ஜெமினி்க்கு ஜோடியே இல்லாத படம். தொழிற்சங்க பிரச்சினையால் முதலாளியாகவும் தொழிலாளியாகவும் வர்க்க ரீதியாக பிரிந்து நிற்கும் இரண்டு நண்பர்களின் கதைதான் இது.
தமிழில் பாடல்களை கண்ணதாசன் எழுத மெல்லிசை மன்னர் எம்.எஸ்,விஸ்வநாதன் இசையமைத்தார்.
ராமு ஐ லவ் யூ....ராஜா ஐ லவ் யூ என்ற நண்பர்களின் பாடலை டி.எம்.எஸ், ஜேசுதால் ஆகிய இரண்டு பெரிய பாடகர்கள் இணைந்து பாடினர். இத்தகைய தருணம் தமிழ் சினிமா இசையில் ஒரு அபூர்வம்தான்.
இமை தொட்ட மணி விழி இரண்டுக்கும் தூரம் அதிகமில்லை என்று ஆரம்பித்து
கம்பனிடம் சோழன் கண்ட சுகம்....கண்ணனிடம் குசேலன் கண்ட சுகம்....இது காவிய காலத்து அன்பு மனம்,பசும் பாலையும் நீரையும் சேர்த்த விதம் என்றெல்லாம் கவியரசரின் கற்பனை வான்நோக்கி உயர்ந்த பாடல் அது....
அதே போல் ஜேசுதாஸ் தனித்துப் பாடும் பாடல் இறைவன் உலகத்தைப் படைத்தானாம் ......மறக்கமுடியாத தேனமுது.
மரணப் படுக்கையில் இருக்கும் கவிஞர் நாகேஷ். அவர் எழுதிய பாடலை ஜெமினி பாடுவதாக காட்சியமைப்பு
உயரே பறக்கும் காற்றாடி
உதவும் ஏழை நூல் போல
பட்டம் போல் அவர் பளபளப்பார்
பட்டினியால் இவர் இளைத்திருப்பார்
என்றும்,
இறைவன் இங்கே வரவில்லை எனவே நான் அங்கு போகின்றேன். வறுமை முழுவதும் தீ்ர்ந்த பின்னே மறுபடி ஒருநாள் நான் வருவேன்
என்றும் கண்ணதாசனின் வரிகள் கண்ணீரைத் தொட்டு விடும்.
நினைவில் நிற்கும் படங்களில் உனக்காக நான் சிறப்பானதுதான்.
----------------------------------------------------
ரசனை -சினிமா  8
சிரித்து வாழ வேண்டும் -1974
எம்ஜிஆர், லதா, காஞ்சனா, நம்பியார்
பாடல்கள் வாலி ,புலமைப்பித்தன்
இசை எம்.எஸ்,விஸ்வநாதன்
இயக்கம் -எஸ்.எஸ்.பாலன்
இந்தியில் ஒரே இரவில் அமிதாப் பச்சனை சூப்பர் ஸ்டாராக்கிய படம் ஜன்ஜிர் (zanzeer) சல்மான் கானின் தந்தையான சலீம் மற்றும் பிரபல பாடலாசிரியரான ஜாவேத் அக்தரும் இணைந்து கதை வசனம்எழுதிய படம். அந்தக் காலத்தில் ஷோலே, தீவார் என இந்த ஜோடி வசனம் எழுதிய படங்கள் இந்தியில் சக்கை போடு போட்டன. இநதியாவின் மிகச்சிறந்த திரைக்கதைவசனகர்த்தாக்களாக சலீம் ஜாவேத் ஜோடி பேசப்பட்டது.( இரண்டாவது இடத்தில் நம்ம பாக்யராஜ் சார் பேசப்பட்டதும் உண்டு)
ஜன்ஜிர் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய எம்ஜிஆர் இந்தப் படத்தை எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் நடித்தார். இந்தியில் அமிதாப்பின் நண்பராக பிரான் நடித்த முஸ்லீம் வேடத்திலும் தமிழில் எம்ஜிஆரே நடித்தததால் அவருடைய இரட்டை வேட படங்களின் வரிசையில்இந்தப் படமும் இடம் பெற்றது.
முஸ்லீம் கதாபாத்திரத்தின் பெயர் அப்துல் ரகுமான். அவர் தோன்றும் முதல் காட்சியில் ஒரு பிரமாதமான பாடல் இடம் பெற்றது. பாடலாசிரியர் வாலி.
மேரா நாம் அப்துல் ரகுமான்....இந்தப் பாடலின் வரிகள் நினைவில் பசுமையாக உள்ளன.
யாரும் அறியாமல் செய்யும் தவறென்று ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நிறைந்தான் ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பை சொல்வான்
தாய் தந்தையை கொன்றவனை ராமு என்ற கதாநாயகன் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பழிக்குப் பழிவாங்கும் கதைதான் . ஆனால்அற்புதமான ஆக்சன் படம். இந்தியில் ஜெயா பச்சன் நடித்த வேடத்தில் தமிழில் லதா கூடுதலான கவர்ச்சி காட்டி நடித்தார். கொஞ்சம் நேரம் என்னை மறந்தேன் என்ற பாடலிலும் பொன் மனச்செம்மலை புண்படச் செய்தது யாரோ பாடலிலும் லதாவையும் வாணி ஜெயராம் ,எஸ்.ஜானகி குரல்களையும் ரசிக்கலாம்.
இப்படத்தில் வி்ல்லன் ராமுவின் பெற்றோரை சுடும் போது பீரோ மறைவில் மறைந்து பார்க்கும் சிறுவன் ராமுவின் கண்களில் தெரிவது வி்ல்லனின் கையில் உள்ள ஒரு பிரேஸ்லட் .அதில் குதிரை வீரன் முகமூடி அணிந்து இருக்கும் உருவம் அவன் மனதில் பதிந்து இரவின் கனவுகளில் ஆட்டிப்படைக்கும். அச்சமூட்டும் கொலைகாரனின் முகமூடி குதிரை வீரன் படிமம் சிறுவயதில் பார்த்த இந்தப் படத்தில் காட்சியாய் விரிந்த போது எம்ஜிஆர் என்ற சூப்பர் ஹீரோவுக்காக மனம் ஏங்கத்தொடங்கி விடும்.
எம்ஜிஆரின் வெற்றி இதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்ததில்தான் இருந்தது. தனக்குப் பொருத்தமானவற்றை தனக்கேற்ற விதத்தில் மாற்றியவர். இந்தப் படம் எம்ஜிஆரின் சிறப்புக்கு இன்னொரு சான்று.
-----------------------------------------------------
9 அன்னக்கிளி -1976
சிவகுமார் , சுஜாதா, தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த்,, எஸ்.வி.சுப்பையா, படாபட் ஜெயலட்சுமி
கதை ஆர்.செல்வராஜ்
திரைக்கதை வசனம் பாடல்கள் - பஞ்சு அருணாச்சலம்
இசை -இளையராஜா
இயக்கம் -தேவராஜ் மோகன்
இசைஞானி இளையராஜாவை அறிமுகம் செய்த படம் அன்னக்கிளி. இப்படம் வெளியான போது நான் ஒன்பது அல்லது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். முதல்நாளிலேயே படம் பார்க்க கெயிட்டி திரையரங்குக்கு போனேன். காரணம் சுஜாதா. . எனது கருப்பு வெள்ளை நாயகிகளில் சுஜாதாவுக்கு தனி இடம் உண்டு.
அன்னக்கிளி படம் பார்க்க போன போது கெயிட்டி திரையரங்கில் பத்து பேர் கூட இல்லை. படம் ஓடத் தொடங்கியதும் முதல் காட்சியில் சிவகுமார் கிராமத்திற்கு வாத்தியார் பொறுப்பேற்க வருவார் .நீங்க வருவது தெரியாதே கடிதம் போடலீயா என விசாரிப்பார் சுப்பையா. கடிதம் போட்டேன் என்பார் சிவகுமார். அப்போது தபால்காரன் அந்த கடிதத்துடன் வருவான். மெலிதான நகைச்சுவையும் வாழ்வின் அபத்தத்தையும் விளக்கும் இக்காட்சியில் இருந்தே படம் கவரத் தொடங்கிவிட்டது. அன்னக்கிளியே ஒன்னைத் தேடுதே என்ற முதல் பாடல் கிராமிய இசையுடன் எஸ்.ஜானகியின் குரலில் ஒலித்த போது மனம் படத்தில் முழுதாக ஒன்றி விட்டது.
படம் பார்க்க பார்க்க இசை வசீகரித்தது. சுத்த சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேண்டும் என்றபாடலில் சந்தோஷமும் சோகமும் இழையோடும். மச்சானைப் பார்த்தீங்களா பாட்டில் திரையரங்கில் இருந்தவர்கள் எல்லாம் எழுந்து ஆடத் தொடங்கினர். டி.எம்.எஸ். குரலில் மீண்டும் அன்னக்கிளியே ஒன்னைத் தேடுதே என்று சோகமாக இழைத்த போதும் பி.சுசிலாவின் உள்ளம் உருக்கும் அக்கக்கோ எனும் கீதம் ஒலித்த போதும் படம் பிரமாதம் என பட்டது.மீண்டும் மீண்டும் அதே படத்தை அடுத்தமூன்று நாட்களுக்கு பார்த்தேன், கூட்டம் கொஞ்சம்கூடியிருந்தது. ஒருவாரம் கழித்து மீண்டும் போன போது டிக்கட் கிடைக்கவில்லை. ஹவுஸ்புல். இசைஞானி இளையராஜா என்ற மகத்தான கலைஞனை தமிழகம் கொண்டாடத் தொடங்கி விட்டது. இப்படத்தின் வெற்றிக்கு பஞ்சு அருணாசலத்தின் நேர்த்தியான திரைக்கதையும் பாடல்களும் ஒருமுக்கியக் காரணம். அதே போல் சிவகுமாரின் பண்பட்ட நடிப்பை பலமுறை இப்படத்தில் ரசிக்கிறேன். ஒரு கட்டத்தில் திருமணத்திற்கு பிறகு சுஜாதாவுடன் சிவகுமார் பேசும் காட்சியில் இருவரும் உணர்ச்சிவசப்பட்டு அணைத்துக் கொண்டு சுஜாதா சுதாரி்த்துக் கொண்டு வாத்தியாரய்யா போய் விடுங்கள் என்று கதறும் போது இப்படம் காவியமாகிவிட்டது. இன்று வரையிலும் இது ஒரு காவியம்தான் தமிழ்சினிமாவுக்கு.
-----------------------------------------------------

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...