Monday 5 August 2019

ரசனை சினிமா 2

ரசனை சினிமா

ரசனை சினிமா 11
அவர்கள் -1977
கமல்ஹாசன், ரஜினிகாந்த், ரவிக்குமார், சுஜாதா ,லீலாவதி மற்றும் ஜூனியர் பொம்மை
பாடல்கள் -கவியரசு கண்ணதாசன்
இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்கம் -கே.பாலசந்தர்
அனு , பரணி, ராமநாதன், ஜனார்தன், லீலாவதி ஆகிய முக்கிய கதாபாத்திரங்களுடன் ஒரு சுட்டியான பொம்மையும் இப்படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளது. காதலிக்கும் பரணியை விட்டு மும்பை செல்லும் அனு அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லாததால் அவர் விருப்பத்திற்கு இணங்கி பண உதவி செய்யும் ராமனாதனை மணக்கிறாள். பரணிக்கு அவள் போட்ட கடிதங்களுக்கு பதில் இல்லை.
ராமனாதன் ஒரு சாடிஸ்ட் .மனைவியை மிகவும் கொடுமைப்படுத்துகிறான். ஆனால் அழக்கூடாது என்ற உறுதி கொண்டிருக்கும் அனு அவனை விட்டுப் பிரிந்து கைக்குழந்தையுடன் மீண்டும் சென்னைக்கு வருகிறாள். சென்னையில் அவளது அலுவலக சகாவான ஜனார்தன் ஒருதலையாய் அனுவை காதலிக்கிறான். ஆனால் காதலை சொல்லும் தைரியம் அவனுக்கு இல்லை. மீண்டும் பழைய காதலன் பரணியை சந்தித்து கடிதங்களுக்கு பதில் வராத காரணத்தை தெரிந்து மீண்டும் அவனுடன் பழகுகிறாள் அனு. ஆனால் ராமநாதன் திருந்தியவனாக அவள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான். கணவனா, காதலனா என தடுமாறும் அனுவுக்கு மனதார நேசிக்கும் இன்னொருவன் அருகில் இருப்பது புரியவில்லை. இந்த முக்கோண காதல் இல்லை நான்கு கோண காதல் கதையை மிகவும் லாவகமாக கையாண்டார் பாலசந்தர்.
அவருடைய பெண் பாத்திரங்களில் அனுவுக்கு சிறப்பிடம் உண்டு. வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அனு மிகப்பெரிய இன்ஸ்பிரேசன் ஆக இருப்பாள். சுஜாதாவின் நடிப்பு அற்புதம். பரணியாக ரவிக்குமார் , கொடூர கணவனாக ரஜினிகாந்த். அப்பாவி ஜனார்தனாக கமல்ஹாசன், ஆகியோர் படத்திற்கு உயிர் கொடுத்தார்கள் என்றால் அந்த பொம்மை செம்மை.
ஜூனியர் ஜூனியர் என்று கமல் பாடும் அந்தப்பாடல் தேன் வெள்ளம்.
சித்திரை மாதம் மழையைத் தேடி வாடுகிறாய்
மார்கழி மாதம் வெயிலைத் தேடிஓடுகிறாய்
உதயத்தை காண மேற்கு நோக்கி ஒவ்வொரு நாளும் ஏங்குகிறாய் என்றும்
கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா
அடுத்தவர் ராகம் அதை நீ பாடுதல் பாவமடா என்றும் கமல் அந்த பொம்மைக்கு உபதேசிப்பதும் பேரழகு .ஆனால் அந்த பொம்மைக்கு பாடவும் பேசவும் தெரியாது. பேசுவதும் பாடுவதும் கமல்தான் என்ற உண்மை புரியும் போது சுஜாதா உடைந்து அழுதுவிடும் இறுதிக்காட்சி கவிதை.
எனக்கு மிகவும் பிடித்த படங்களில் அவர்கள் முக்கியமானது.
இப்படியொரு தாலாட்டு பாடவா என்ற பாடலில் கண்ணன் அவன் கைகளில் குழல் இருந்தது அந்த கானம்தானே மீராவை கவர்ந்து வந்தது என்றும் , அன்றொருநாள் மீராவும் கண்ணனை நினைந்தாள், ஏனோ அவளுடைய தலையெழுத்து மன்னனை மணந்தாள் என்றும் அனு பாடுகிறாள்.
அதே அனுதான் காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி பாடலில் பிள்ளை பெற்றும் பிள்ளையானேன். பேசிப் பேசி கிள்ளையானேன். கோவில் விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்றுக் கொள்வேன் என்று புதுமைப் பெண்ணாய் தோன்றுகிறாள்.
ரஜினிகாந்த் இந்தப் படத்தில் கமலுக்கு விட்டுக் கொடுத்து அடக்கமாகவும் அமர்க்களமாகவும் நடித்திருந்தார். எல்லோரது நடிப்பையும் கமல் தூக்கி சாப்பிட்டு விட்டார். கமலுக்குள் ஒரு மகத்தான கலைஞர் இருப்பதைக் கண்ட பாலசந்தர் தமது படங்களில் கமல்ஹாசனை வித்தியாசமான பாத்திரங்கள் கொடுத்து ரசிகர்களுக்கு பிடித்தமானவராக மாற்றினாா்.
சினிமாவை கமல் நேசிக்கிறார். அதே போன்று சினிமாவுடன் கமலை நேசிக்கக்கூடியவன் நான். அவரது மருதுபாண்டியன் , பொன்னியின் செல்வன் கனவுகள் நனவாகுமோ இல்லையோ, அரசியலில் அவர் ஆட்சியைப் பிடிப்பாரோ சிவாஜி கணேசன் மாதிரி திரும்பி வருவாரோ தெரியாது. ஆனால் நெற்றியில் பட்டையாக விபூசி பூசிக் கொண்டு கையில் ஒரு சிங்கப்பூர் பொம்மையுடன் ஜூனியர் ஜூனியர் என்று பாடுவாரே ஒரு துயரம் கலந்த சிரிப்புடன் அந்த கமல் போதும் என் போன்றவர்களுக்கு
------------------------------------------------------------
11. மாடி வீட்டு ஏழை -1981
சிவாஜி கணேசன், சுஜாதா, ஸ்ரீப்பிரியா, நாகேஷ்,வி.கே.ராமசாமி, ரஜினி சர்மா
கதை தாசரி நாராயண ராவ்
திரைக்கதை வசனம் -கலைஞர் மு.கருணாநிதி
பாடல்கள் வாலி  இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்கம் அமிர்தம்

தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய படம். தமிழில் கலைஞரின் கைவண்ணத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மனைவி-கணவன் சென்ட்டிமென்ட் கதை. ரசிகர்களை கண்ணீர் பிழிய வைக்கும் சிவாஜி- சுஜாதாவின் ஹைகிளாஸ் நடிப்பும் ஆங்காங்கே  சமூகக் கருத்துகளுடன் சுவையான வசனங்களினால் கவரும் கலைஞரும் படத்தை காப்பாற்றுகின்றனர். படத்தின் ஆரம்பத்தில் இளவயது கலைஞரின் தோற்றத்தில் அவர் உரை நிகழ்த்தும் முன்னுரையும் உண்டு.
எப்போதும் குடிசைகளில் வசிக்கும் ஏழைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் நான் மாடி வீடுகளிலும் ஏழைகளைப் போல் வாழ்பவர்களைப் பற்றி சிந்திக்கத் தவறுவதில்லை என்று கலைஞர் குறிப்பிடுகிறார்.
கோட் சூட் போட்ட நவ நாகரீக இளைஞன் செந்தமிழில் பேசுகிறான். அதை காதலியும் ரசிக்கிறாள். இதே கோட் சூட் போட்ட பெரிய சிவாஜி பியூனாக வேலை பார்க்கிறார். இப்படிப்பட்ட அபத்தங்களை மன்னித்தால் படத்தை ரசிக்கலாம்.
பணக்கார ஜமீன்தாரின் மகன் என தப்பான ஆளை வீட்டில் அனுமதிக்கும் வி.கே.ராமசாமி அவன் ஏழை என அறிந்ததும் விரட்டுகிறார். அவர் மகள் லட்சுமி அந்த ஏழையை காதலித்து மாடி வீட்டை விட்டு குடிசை வீட்டு்க்குவந்து அவனோடு வாழ்கிறாள்
அன்பு எனும் நல்ல தேன் கலந்து இங்குநான் கொடுத்தேன் இந்த நல்விருந்து என்ற அற்புதமான ஒரு பாடலுடன் கணவனுக்கு மோர் சாதத்தையும் கடைசி கரண்டி தோசையைும் ஊட்டுகிறாள். இந்தப் பாடலை தயவு செய்து கேளுங்கள் ....இசையரசி பி.சுசிலாவின் குரலில் ஒரு இனிமையும் டி.எம்.எஸ் குரலில் ஒரு சோகமும் கலந்து இப்பாடல் இரண்டு முறை ஒலிக்கிறது. இந்த மகத்தான பாடலை மீண்டும் மீண்டும் கேட்டால் ஆனந்தம். இதற்காகவே இந்தப் படம் என் மனதுக்குப் பிடித் தபடங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
------------------------------------------------------------------
12  பாடு நிலாவே 1987
மோகன், ரவிச்சந்திரன், சோமாயாஜூலு, செந்தில், நதியா, அனுஜா, ஜெயலலிதா, கலாரஞ்சனி, மோகனப்பிரியா
கதை ஆர்.செல்வராஜ்  வசனம் ஈ .ராமதாஸ் திரைக்கதை எம்ஜி வல்லபன்
பாடல்கள் வாலி இசை இளையராஜா இயக்கம் கே.ரங்கராஜ்
மோகன் படம் என்றாலே பாட்டுதான், அதுவும் இளையராஜா பாட்டுதான். கதை எல்லாம் அப்புறம் என நம்பி எடுக்கப்பட்ட பல படங்கள்வெற்றிகரமாக ஓடின. ஆனால் சில படங்கள் ஏமாற்றம் தந்தன. அதில் ஒரு படம்தான் இது.
கதையை கோட்டை விட்டு இளையராஜாவை மட்டும் நம்பியதன் விளைவு.. இரண்டு பாடல்கள் செம ஜோராக கொடுத்தார். ஆனாலும் படத்தை காப்பாற்ற முடியவில்லை.
மலையோரம் வீசும் காத்து பாடலும் சிறைக்குள் மோகன் நதியா பாடும் பாடுங்கள் பாட்டு பாடுங்கள் பாடலும் இளையராஜாவின் அமுதங்கள்.
ரவிச்சந்திரன் கம்பீரமான வில்லன்வேடத்தில் கவர்கிறார். கவர்ச்சிக் கன்னிகள் அனுஜா, ஜெயலலிதா, மோகனப்பிரியா  இரண்டு கைக்குட்டை ஆடைகளுடன் குளிக்கிறார்கள், அதை விட அழகாக நதியா இருக்கிறார். முழங்கால் தெரியும் ஸ்கர்ட் அணிந்த கொழு கொழு நதியாதான் உலகின் பேரழகியோ எனவியக்க வைக்கிறார். அதிலும் கால் முட்டிக்கும் பாதங்களுக்குமான இடைப்பட்ட கால்பகுதியின் சதை நதியாவைப் போல் வேறு பெண்ணிடம் பார்க்கமுடியாது. அதை அவர் விதவிதமான ஆடைகளில் அழகாக வெளிப்படுத்துவார். அந்தக் காலத்தில் நடிகர்கள் தொடக்கூடாது, கவர்ச்சி காட்டமாட்டேன் என்று பலவித கண்டிஷன்கள் போட்டவர் நதியா. ஆனால் உடலின் கவர்ச்சியை அவரால் மறைக்கமுடியவில்லை. மூடிய ஆடைகளிலும் அவர் அவ்வளவும் அல்வாதான்.
கதை அட போங்கப்பா.....திரைக்கதை நம்ம வல்லபன் சார்...அதற்காகவும் இப்படத்தை பாருங்கள்.
-----------------------------------------------------------------------
13  பார்த்த ஞாபகம் இல்லையோ  -1985
ஆனந்த் பாபு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், ராதாரவி, ராஜீவ் , ரம்யா கிருஷ்ணன், ஹேமா சவுத்ரி
கதை வசனம் -பேகன்
பாடல்கள் வாலி இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்கம் -நாகேஷ்
மிகப்பெரிய நடிகர் நாகேஷ்....இயக்குனர் அவதாரம் எடுத்த படம் இது. எல்லா பெரிய ஹீரோக்களும் தங்கள் மகனையும் நாயகனாக்கி விட படாத பாடு பட்டார்கள். இதில் வென்றவர்கள் சிவாஜியும் முத்துராமனும், சிவகுமாரும் ,தியாகராஜனும் டி..ராஜேந்தரும்தான் . சிவாஜி மகன் பிரபுவும் முத்துராமன் மகன் கார்த்தி்க்கும் பின்னர் சிவகுமார் மகன்கள் சூர்யாவும் கார்த்தியும், தியாகராஜனின் மகன் பிரசாந்தும் டி.ராஜேந்தரின் மகன் சிலம்பரசனும் மிகப்பெரிய ரவுண்டு கட்டி புகழ் பெற்றனர்,
பாக்யராஜின் மகன் சாந்தனு, பாரதிராஜாவின் மகன் மனோஜ், சத்யராஜின் மகன் சிபி, விஜயகுமாரின் மகன் அருண்விஜய் , நாகேஷின் மகன் ஆனந்த் பாபு போன்றவர்கள் திறமை மிக்க வர்களாக இருந்த போதும் அவர்களுக்கு ஒரு படத்தை தனியாக தோளில் சுமக்கும் அளவுக்கு திராணி இல்லை. சில நல்ல படங்களில் அவர்கள் நடித்தனர் என்பதைத் தவிர .
ஆனந்த்பாபு உண்மையிலேயே நடனமாடத் தெரிந்த அற்புதமான நடிகர். அவர் தந்தை நாகேஷின்  அவளுக்கென்ன அழகிய முகம் என்ற பாட்டு நடனத்தை யார்தான் மறக்கமுடியும் .... இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் ( தொடைகள் வெள்ளை வெளேர் ) ஒரு பாலே நடனமாடி மகிழ்விக்கிறார்.
ஆனால் நடனத்துடன் உணர்ச்சிகளை முகத்தில் காட்டுவதிலும் உடல் மொழியிலும் அவர் தமது தந்தையை பின்பற்றவில்லை, அதை பிரபு மிக அழகாக செய்து தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டார்.
இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் இரட்டை வேடத்தில் நடித்தார். ராதாரவியிடம் வளர்ந்த ஒருத்தியை ஆனந்த்பாபு காதலிக்கிறார். பின்னர் ராஜீவின் மனைவியாக இன்னொரு ரம்யா கிருஷ்ணனை சந்தித்து மனம் வாடுகிறார். அவர் வேறு இவர் வேறு என்று புரிந்துக் கொள்வது கிளைமேக்ஸ். ராதாரவியின் வில்லத்தனம் எடுபடுகிறது. ராஜீவ் ஒரு ஜென்டில்மேன் நடிகர்.
இப்படத்தின் சிறப்புகளில் ஒருவர் ஹேமா சவுத்ரி மன்மத லீலை படத்தில் மனைவி அமைவதெல்லாம் பாட்டுக்கு கமலுடன் கையில் டிரான்சிஸ்டர் வைத்து நடிப்பாரே அந்த அழகான கன்னட நடிகை அவரேதான்....இப்படத்தில் அவருடைய கவர்ச்சி விருந்தும் உண்டு
படத்தில் கௌரவ வேடம் ஏற்ற நாகேஷ் எம்.எஸ்.வியின் குரலில் ஒருபாட்டு பாடுகிறார். எனக்குத் தெரிஞ்ச வரையிலே என்ற அந்தப் பாட்டு ஏனோ சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் ஜெயகாந்தன் எழுதி நாகேஷ் நடித்து எம்.எஸ்.வி பாடிய கண்டதை சொல்கிறேன் பாடல் மாதிரி வரவில்லை. படமும் பூட்டகேஸ்
----------------------------------------------------
14. புது வசந்தம் -1990
முரளி, ஆனந்த்பாபு, ராஜா, சார்லி, சுரேஷ், குமரிமுத்து, ஜெய்கணேஷ், விஸ்வம் சித்தாரா
பாடல்கள் வாலி,முத்துலிங்கம், எஸ்.ஏ.ராஜ்குமார்
இசை எஸ்.ஏ. ராஜ்குமார்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் விக்ரமன்
சீதை கெட்டுப் போகணும்னு நினைச்சிருந்தா அயோத்தியிலேயே கெட்டுப் போயிருக்கலாம். அசோக வனத்துல கெட்டுப் போக வேண்டிய அவசியம் இல்லை.
காதலோட புனிதம் தெரியாத உன்னோட வாழ்றதை விட நட்போட புனிதம் தெரிஞ்ச அவங்க நாலு பேரோட வாழ்றதை நான் பெருமையா நினைக்கிறேன்.....
இந்த இரண்டு வசனங்களே அடிப்படையாகக் கொண்டு வெளியான இத்திரைப்படம் அருமையான திரைக்கதை, வசனம் இசை பாடல்களால் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது. முக்கியமாக ஆண் பெண் நட்பு புனிதமானது என்பதை இது நிரூபித்தது.
இன்றுநட்பு என்ற பெயரில் பல மோசடிகள் நடக்கின்றன. செலவு பண்ணத்தான் அவ ஒரு லூசைத்தேடுறா.. பொழுது போக்கவே அவனும் அவளைத்தேடுறான். ரெண்டு பேருமே ரொம்ப பொய்யா பழகுறா...எல்லாம் முடிஞ்சதும் நட்பு என்று கைக்குலுக்கி பிரியறா... இது கழுகு படத்தில் ஒரு பாட்டு.
இன்றைய காலத்தின் நட்பும் காதலும் பொய்யாகத்தான் இருக்கிறது. பலருக்கு இரண்டுக்குமான வித்தியாசமே தெரியாது. பெண்கள் பிடித்த ஆண்களுடன் ஊர் சுற்றுகிறார்கள். அவர்களின் எல்லை என்ன என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா என்ற கவிஞர் முத்துலிங்கத்தின் பாடலை இரண்டு முறை இப்படம் ஒலிக்கிறது. ஒன்று ஜேசுதாஸ் குரலில் இன்னொன்று எஸ்.பி.பி , பி,சுசிலா குரலில்
பாடுவதால் வாழுகிறோம்... சோகம்இல்லையே என்ற வரி பித்துக் கொள்ள வைத்திருக்கிறது..
படத்தை மீண்டும் முழுசாகப் பார்த்தேன். பத்து இருபது நிமிடம் காட்சிகளை வெட்டி எறிந்துவிட்டால் இன்றும் கூட எந்த ஒரு உலக சினிமாவுக்கும் ஈடான அருமையான தமிழ்ப்படம்தான்.
---------------------------------------------------------------------------
15 மன்னவன் வந்தானடி 1975
சிவாஜி கணேசன், நம்பியார், நாகேஷ், மஞ்சுளா, ஜெயசுதா
கதை, வசனம் - பாலமுருகன்
பாடல்கள் - கண்ணதாசன், வாலி இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்கம் பி.மாதவன்
நாட்டைத் திருத்தும் நாகரீக கோமாளி தர்மராஜாவாக சிவாஜி கணேசன் கிறுக்குத்தனமாக நடித்த முதல் பகுதியை விட கோட் சூட்டுடன் டிப்டாப் மாப்பிள்ளையாக நம்பியாரை ஆட்டிப் படைக்கும் பி்ற்பகுதியில் மனம் கவர்கிறார். கொடிய முதலாளி நம்பியாரின் மகள் மஞ்சுளாவை காதலித்ததால் அடியாட்களால் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்படும் தர்மராஜா புதிய அவதாரம் எடுத்து ஃபாரின் ரிட்டன் மாப்பிள்ளையாக வந்து கலக்குவது கதை.
இப்படத்தில் சிவாஜியின் தங்கையாக ஜெயசுதா அழகாக நடித்திருப்பார். காதலித்து கணவனால் கைவிடப்பட்ட நிலையில் குழந்தையுடன் வறுமையில் வாடும் போது சிவாஜி பிள்ளைக்கு ஒரு தாலாட்டு பாடுவார்
சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில் ஏழ்மை துன்பத்தில் ஆடுதடா இங்கு...
கன்னத்தில் காலமிட்ட கண்ணீரின் கோடு
பிள்ளைக்கு தெய்வம் தந்த வைரத்து தோடு
அன்னைக்கு வீடு இன்றுசின்னஞ்சிறு கூடு
மாமன் அரண்மனை கட்டி வைப்பான் நாளை அன்போடு....
உள்ளத்தை உருக்கும் இப்பாடலுக்கு இசை அற்புதமான தாலாட்டு கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்த்து செய்த மாயாஜாலம். மலர்ந்தும் மலராத பாச மலர் பாடலில் தங்கை பாடுவாள்...மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவான்......இதுவும் அப்படிப்பட்ட பாசப்பாடல். மஞ்சுளாவுடன் சிவாஜி பாடும்  காதல் ராஜ்ஜியம் எனது அங்கு காவல் ராஜ்ஜியம் உனது என்ற கவியரசரின் பாடலும் தித்தி்ப்பு., வாலியும் இப்படத்திற்கு 2 கொள்கைபாடல்கள் எழுதினார். நான் நாட்டைத் திருத்தப் போறேன் என்ற முதல் பாடலைவிட இவர்கள் நமது பங்காளிகள் என்ற இறுதிப் பாடல் சிறப்பு.
அய்யா சாமி ஆண்டவனே எனும் அழுகுரல் ஓயவில்லை
ஆழத்தில் கிண்டிய கூழுக்கு இவர்கள் அடிதடி நின்றதில்லை
அடடா நாட்டில் ஆயிரம் கொடிகள் பறப்பதில் குறைச்சல் இல்லை  என்ற வரிகளும்
ஏழையின் கைகள் வானில் உயர்ந்தால் சந்திரன் கைக்கு வரும் என்ற வரியும் சந்திராயன் காலத்தில் நினைவுகூரத்தக்கவை. அன்று இந்தியா ஒரு ஏழை நாடு. இன்று சந்திராயன் 2 சாதனையை நிகழ்த்தவில்லையா...
சிவாஜி கணேசன் என்ற அற்புதமான நடிகரின் பல்வேறு பரிமாணங்களில் இதுவும் ஒரு ரசிக்கத்தக்க படம்தான்.
----------------------------------------------------------
16. சொர்க்கம் நரகம் 1977
சிவகுமார், விஜயகுமார், நாகேஷ், படாபட் ஜெயலட்சுமி, பத்மப்ரியா
பாடல்கள் கண்ணதாசன் இசை சங்கர் -கணேஷ்
இயக்கம் -ஆர்.தியாகராஜன்
குடும்பத்தை சொர்க்கமாகவும் நரகமாகவும் மாற்றுவது பெண்ணின் கையில் தான் உள்ளது என்பதை விளக்கும் படம். இரண்டு தோழிகள். இருவருக்கும் திருணமாகிறது.படாபட் ஜெயலட்சுமி அன்பான கணவர் சிவகுமாரை டார்ச்சர் செய்து சந்தேகப்பட்டு சொர்க்கமான தனது இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்கிறார். பத்மப்பிரியா தனது குடிகார பொம்பளை பொறுக்கி புருஷனுக்கு சேவைகள் செய்து அவன் அன்பை வென்று திருத்தி நல்ல மனிதனாக மாற்றுகிறாள். நரகமான அவளது குடும்ப வாழ்வு சொர்க்கமாகிறது.
வீடு என்பது பெண்களால் ஆனது என்பதை இப்படம் கூறுகிறது. தெலுங்கில் தாசரி நாராயண ராவ் கதையில் இயக்கிய படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்ய்பட்டது.
இப்படத்தின் சிறப்பு சங்கர்கணேஷ் -கண்ணதாசன் காம்பினேஷனில் வந்துள்ள சூப்பர் பாடல்கள்.
இரண்டுகிளிகள் என்ற பி.சுசிலா பாடிய முதல் பாடல் கண்ணதாசனின் வைர வரிகளால் மின்னுகிறது.
தங்கப் பதுமை அங்கம் யாவும் தழுவும் கைராசி
தழுவித் தழுவி தன்னை மறந்து மயங்கும் மகராசி
----------
இங்கே உடல் இல்லை சாந்தி இல்லை
குங்குமம் பூசி அம்மா  பாவம் இவள் ராசி
------------என இருவேறு பெண்களின் வாழ்வை நாலே வரிகளில் சொல்லிவிடுகிறார். சுசிலாவின் குரல் தேன் என்பதை சொல்லவும் வேண்டுமா...
அடுத்த பாடல் மல்லுவேட்டிமடித்துக் கட்டும் மச்சான் ஒரு மயிலக்காளை அந்தக் காலத்தில் சக்கைபோடு போட்ட பாடல். இதே போல்  பூவும் பொட்டும் இங்கே என் பூஜை தெய்வம் எங்கே பாடலும் இனிமை.
டி.எம்.எஸ் குரலில் வரும் ஒரு சோகப்பாடல் அற்புதம்.
சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு இதை மறந்தவர் வீடு துன்பம் வளர்ந்திடும் காடு....
இப்படம் இன்றும் ரசிக்கும்படியாக இதில் நடித்த நடிகர்கள், குறிப்பாக சிவக்குமார் படாபட் பத்மப்ரியா ஆகியோரின் பாத்திரங்கள் நம் கண்முன்னே நிற்கின்றன .நமது வீட்டில் வசிப்பவர்களுடன் பேதங்களின்றி அன்புடனும் அக்கறையுடனும் பேசக் கற்றுக் கொடுக்கிறது இந்தப் படம்.
--------------------------------------------------------
17  அவளுக்கென்று ஓரு மனம் 1971
ஜெமினி கணேசன், முத்துராமன், மேஜர் சுந்தரராஜன், வி.எஸ்.ராகவன், காஞ்சனா, பாரதி
பாடல்கள் கண்ணதாசன்  இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
இயக்கம் ஸ்ரீதர்
லலிதா, மீனா, கண்ணன் ,கோபால் என்ற நான்கு முக்கிய கதாபாத்திரங்களை வைத்து இயக்குனர் ஸ்ரீதர் தமது பாணியில் இயக்கிய காதல் கதை. லலிதாவாக பாரதி முதல் காட்சியில் நீச்சலுடையில் தோன்றும்போதே மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறார்.
மலர் எது என் நெஞ்சம்தான் என்று சொல்வேனடி....காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி என்று பி.சுசிலாவின் இனிமையான பாடல் ஒலிக்க நீச்சல் உடைகளில் அழகிகள் நீருக்கு மேலேயும் அடியிலும் மிதக்கும் காட்சிகள்...ஆம் under water photography உத்தியில் படமாக்கப்பட்ட இந்தப் பாடல் அந்தக் காலத்தில் செம ஹிட். இதே உத்தியைப் பயன்படுத்தி ஸ்ரீதர் பின்னர் தென்றலே என்னைத் தொடு என்ற படத்தில் ஜெயஸ்ரீயை நீச்சல் உடையில் நீந்த விட்டு புதிய பூவிது பூத்தது என்றுஇளையராஜா பாடலை படமாக்கினார். இருப்பினும் அவளுக்கென்று ஒரு மனம் படத்தி்ல் பாரதியின் கவர்ச்சியும் நடிப்பும் இசையும் பாடலும் ஏ கிளாஸ். அதாவது அடல்ட்ஸ் ஒன்லி .
கேமரா கோணங்களைப் பயன்படுத்துவதில் ஸ்ரீதருக்கு தனி உத்தி உண்டு. இதிலும் அப்படித்தான் இப்பாடலில்  ஜெமினி அணிந்திருக்கும் கருப்பு கூலிங்கிளாசிலும் பாரதி நீந்துவதை காண முடிகிறது.
கயவனை நம்பி காதல் கடிதம் எழுதிய தோழியின் மானத்தை காக்க தன்னையே பறிகொடுக்கும் பாரதி கடைசியில் வில்லனை சுட்டுக் கொன்ற சிறைக்கு செல்கிறாள். அவள் காதலித்த கண்ணனையும் தோழிக்கே மணமுடித்து தியாக மெழுகுவர்த்தியாக நிற்கிறாள். ஜெமினி, பாரதி ஆகியோரின் ஆடைகள் இப்படத்தில் மிகவும் மாடர்னாக இருக்கின்றன. முத்துராமனும் அப்படித்தான் அழகான சட்டைகளை அணிந்துள்ளார். அவர் வில்லன் என்பதைத்தான் மனம் ஏற்கவில்லை. அத்தனை டீசன்ட்டான நடிப்பு. ஜெமினிக்கு வழக்கமாக தரப்படும் கனமான பாத்திரமில்லை. பாரதியே மொத்த படத்தையும் சுமக்கிறார். ஜெமினி்க்கு எஸ்பிபி குரலில் இரண்டு மூன்று பாடல்கள் உண்டு .ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது பாட்டும். மங்கையரின் மகராணி மாங்கனி போல் பொன்மேனி என்ற பாடலும் ரசிக்க ரசிக்க திகட்டவே இல்லை. எல்லாவற்றையும் விட எஸ்.ஜானகி குரலில் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடல் தேனிசை. காற்றில் ஆடும் மலை என்னை பெண்மை என்றது. காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது என்ற கவியரசரின் பாடல் வரிகளைப் போல் இன்று யாரும் எழுதுவதில்லை. பாடல்கள் செத்துக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்கிறோம் அல்லவா....பழைய பாடல்களே ஆறுதல்அளிக்கின்றன.
--------------------------------------------------------------

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...