Tuesday 26 June 2012

பஷீரின் மதிலுகள்

எத்தனை முறை படித்தாலும் மனதுக்குள் மணக்கும் கதைகள் பஷீருடையவை. பாத்திமாவின் ஆடு நேஷனல் புக் டிரஸ்ட்டில் வந்தப்போது படித்தது. இன்றும் பசுமையாக நினைவில் இருக்குது. அண்மையில் திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடையில் நீல பத்மனாபன் மொழிபெயர்த்த மலையாள இலக்கியத் தொகுப்பு மதிலுகள் கிடைத்தது. பல கவிதைகளை மலையாள மொழியின் வாசத்துடன் மொழிபெயர்த்திருக்கிறார் நீல.பத்மனாபன். 2000 ஆண்டில் வந்த தொகுப்பு. அப்போதே மட்டமான தாளில் நிதியுதவி பெற்று 75 ரூபாய் விலையில் வெளியிட்ட காவ்யா சண்முகசுந்தரம் மீது கோபம்தான் வந்தது. வாங்காமல் விடுபட்டுப் போனதற்கு இதுவும் காரணம். எப்படியோ பழைய புத்தகக் கடையில் பத்து ரூபாய்க்குக் கிடைத்தது.
கவிதைகளையும் கட்டுரைகளையும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன். தகழியின் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடம் ரசிக்க வைத்தது. ஆனாலும் நம்ம சாய்ஸ் பஷீர்தான். மீண்டும் வரிவரியாய் லயித்துப் போய் மதிலுகளைப் படித்ததும் மனதில் எண்ணங்களில் பாடலும் கண்ணீரும் வந்து கலந்தன. நாராயணீ இரவில் அழுவாளோ இல்லையோ பஷீர் நம்மை அழவைத்துவிடுவார். சிறையில் இரு மதில்களால் பிரிக்கப்பட்ட முகம் அறியாத காதலர்களின் பகிர்தல்களும் எதிர்காலமே இல்லாத அவர்களின் காதலும் அற்புதமான வாசிப்பனுபவம் தருகின்றன. இந்தக் கதையை நான் படிக்கும் போதே மதிலுகள் படமாகியிருப்பதும் நினைவில் வராமல் இல்லை. மம்முட்டி அந்தப் பாத்திரத்திற்கு பொருந்தியிருப்பாரா என்று பதறாமல் படிக்கவே முடியவில்லை. அந்தப் படத்தை எப்படியாவது பார்க்க வேண்டும். நாராயணீயாக யார் என்றே தெரியவில்லை. அதுவும் தெரியணும். அதுகிடக்கட்டும். அந்த வார்டனுடன் அடிக்கும் ஜோக்குகளும், பெண்களின் கழிவறையில் ஓட்டை போட்டு பார்க்கும் ஆடவர் வக்கிரமும் எத்தனை அற்புதமான இலக்கியமாகியிருக்கு பஷீர் சேட்டனிடம். எங்கள் மனதுக்குள் நுழைந்து பார்க்காதீர்கள், அறம் உபதேசம் எல்லாம் வெளியில் இருப்பவர்களிடம்தான் என்ற பஷீரின் தர்க்கம் அபாரம். படிக்காதவர்கள் கட்டாயம் படித்துப் பாருங்கள். மதிலுகள் ஒரு எழுத்துக் காவியம். அதே தொகுப்பில் ரோஸ்மேரி என்ற டீச்சரின் பேட்டியும் உள்ளது. அந்த ரோஸ் மேரி யிடம் பஷீர் காதல் கொண்டதாக மற்றொரு மலையாள எழுத்தாளர் பஷீரின் இரங்கலில் எழுதிவிட்டாராம். ரோஸ் மேரியோ அவர் எங்க பெரியப்பா மாதிரியான சொந்தம் என்கிறார். காதல் ஏதும் இல்லை என்கிறார். இன்னொரு தகவல் எதுவென்றால் ரோஸ்மேரியின் கணவர் கே.ஜி.தாமஸ். மற்றொரு மலையாள எழுத்தாளர். அவரைப் பற்றி சுந்தரராமசாமி எழுதியிருக்கிறார் என்று ஞாபகம். ஒருவேளை ஜே ஜே சில குறிப்புகளில் வருவாரா...பார்க்க வேண்டும். மறதி அதிகமாகிவிட்டது.


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...