Wednesday 13 June 2012

நான்



ALL PRAYER, MEDITATION IS INDIVIDUAL, IS PRIVATE-  OSHO

MAN'S GREATEST CREATION IS HIMSELF,HIS GREATEST CREATION WILL BE HIS OWN SELF REALIZATION- OSHO

பல வருடங்களுக்கு முன் தி.நகர் ரங்கநாதன் தெருவில் முன்றில் புத்தகக் கடை இருந்தது. அங்கு பலமுறை போயிருக்கிறேன். அங்கேதான் கோபிகிருஷ்ணன், மா.அரங்கநாதன், அழகியசிங்கர் போன்ற பலரின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. விஷயம் அதுவல்ல, முன்றிலை நடத்திய எழுத்தாளர் மா.அரங்கநாதனுடன் பேசும் போது எனது கவிதைகள் பற்றிய விவாதம் வந்தது. எனது கவிதைகளில் நான் என்ற தன்மை அதிகமாக இருப்பதாக அவர் குறைபாடு தெரிவித்தார்.அதுவரை அப்படியொரு விஷயமே எனக்கு தெரியவே இல்லை. அந்த நான் யார்? ஆயினும் அதன் பின்னர் மிகுந்த பிரக்ஞையுடன் நான் என்ற த்வனியை விட்டுக் கொடுக்காமல் தீவிரமாக எழுதத் தொடங்கினேன்.
என்னைப் பற்றி எனக்கென்ன ஈடுபாடு?இது ஒருவகை மனோவியாதி என்று கூறுபவர்கள் உண்டு. ஆங்கிலத்தில் இதனை நார்சிசசம் என்பார்கள்.தன் மீதான அதீத ஈடுபாடு என்று அதை எளிமையாக தமிழ்ப்படுத்தலாம்.அசாதாரண சுய ஈடுபாடு என்றும் கூறலாம்.இது சரியா என்று எனக்கு நானே பல முறை கேட்டுப் பார்த்து விட்டேன். தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம், தன்னலம் மறந்தால் அது பேரின்பம் என்று கவியரசர் கண்ணதாசன் பாடலை சந்திரபாபு பாடியதும் நினைவில் வருகிறது.
என்னை முன்னிறுத்தி நான் எழுதக் கூடாது என்று நண்பர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். அப்படி எழுதுவதானால் என்னால் எழுத முடியாமல் போய் விடுமோ என்று கவலைப் படுகிறேன்.என் நண்பர்கள் மீதும் வாசகர்களிடமும் எனக்கு பிரியமும் மதிப்பும் உண்டு. ஆனால் என்னைப் பற்றி நான் எழுதாமல் வேறு யார் எழுத முடியும்?
படைப்பாளிக்கு வாசகன் மூலம் கிடைக்கும் உறவுதான் சமூகத்துடனான அவனது உறவு. பிரதியை எழுதிவிட்டால் அது அவனுக்கு சொந்தமில்லை வாசகனுக்குரியது என்றும் போஸ்ட் மாடர்னிச ஜாம்பவான்கள் கூறுவார்கள்.ஒரு படைப்பாளி தன் படைப்புக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூற முடியுமா?அப்படி சொல்லும் போதே அந்தப் பிரதி செத்துப் போகாதா?ஒருவர் தன் ஆன்மாவின் அந்தரங்கமான துடிதுடிப்பிலிருந்து அந்தப் பிரதியை எழுதவில்லை என்று அர்த்தமாகாதா?எழுத்தாளன் தனது எழுத்தின் தொடர்பறுக்க முடியுமா என்ற கேள்வியால் நான் பல சிந்தனைகளில் மூழ்கி எழுந்திருக்கிறேன்.
சுயசரிதம், சுயபுராணம், சுய தம்பட்டம், சுயநலம் போன்ற வார்த்தைகள் எல்லாம் எனது படைப்புகளின் மீது விமர்சனமாக வீசப்படும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் நான் என்னுள் மூழ்கி தீவிரம் கொள்கிறேன். எந்தப் பரிந்துரையிலும் பட்டியலிலும் யாரும் என்னை சேர்க்காத போதும் கூட நான் மட்டுமே அறிந்த ஒரு சமூகத்துடனான எனது தீவிர உறவின் மையத்திலிருந்து எனது எழுத்து பிறக்கிறது என்று கோவை ஞானி அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டார். சமூக உணர்வு, மனித நேயம் என்ற சொற்களின் பொய்யான சித்திரங்களில் சிக்காமல் என்வழியாகவே அதை நான் காண்கிறேன்.நான் இல்லாமல் அந்த உணர்வுகள் இல்லை.அத்தகைய மேன்மையான இலக்குகள் இல்லாமலும் நான் இல்லை.

பொதுவாக தமிழ் இலக்கியத்தில் தன்னை மிகப் பெரிய ஆகிருதியாக முன்னிறுத்தி இலக்கியத்திற்கே தான்தான் பெரிய அத்தாரிட்டி போல சொந்தத் திராணியுடன் கருத்துகளை முன்வைக்கும் போக்கு பாரதியிடமும் இருந்தது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி உள்ளிட்ட பல படைப்பாளிகளிடமும் உள்ளதுதான். சுஜாதா கூட ஹைகூவுக்கே தான்தான் அத்தாரிட்டி போல பேசியவர்தான். அவருக்கு அதன் அரிச்சுவடி மட்டும்தான் தெரிந்திருந்தது.
எனில் என்னைப் பற்றி நான் பேசுவதில் என்ன தவறு? உலகைப் புரிந்துக் கொள்ள முதலில் உன்னைப் பற்றி நீ புரிந்துக் கொள் என்கிறது பௌத்தம். உலகைப் புரிந்துக் கொண்டால் அதில் உன் இருப்பைப் புரிந்துக் கொள்ள முடியும் என்கிறது மார்க்சியம். நீ- நான் என்ற உறவுதான் சமூக ரீதியிலான உறவாகவும் உள்ளது. அதனிடையே தான் நமது வாழ்க்கையும் இருக்கிறது. எழுத்து எனக்கா சமூகத்திற்காகவா என கேள்வி எழும்போது உனக்கான கவிதையை நீ எழுது என்ற சுந்தர ராமசாமியின் வரி நினைவில் வருகிறது.
நான் எழுதுவது எனக்கேதான் என்பதான தெளிவு வந்துவிட்டது. என் வாசகர்களுக்காக மட்டுமல்லாது, என் பொருட்டும் என்னால் என்னால் என் எழுத்தை மாற்ற முடியாது. அது எப்படி வர வேண்டுமோ அப்படித்தான் வந்துக் கொண்டிருக்கும். ஒரு இலை துளிர்க்கும் திசையை யார் தீர்மானிக்கிறார்களோ அவர்களே அதை தீர்மானிக்கட்டும். ஒரு பூ மலரும் போது எந்த திசை நோக்கி மலர்கிறதோ அதுவே அதன் திக்குதிசை எல்லாம். என் வாழ்வை மாற்றும் ஆற்றலும் எனக்கில்லை. அது போகும் போக்கில் போய்க் கொண்டிருக்கிறேன். அதில் என்னையே நீர்ச்சுழல் போல வட்டமிட்டு சுழலும் நாட்களும் உழலுகின்ற காலங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.என்னை நானே புரிந்துக் கொள்வதன் மூலம் இவ்வுலகைப் புரிந்துக் கொள்ள நான் முயலுகிறேன். வாழ்க்கை எனக்கு இன்னும் சற்று ஆயாசமும் அவகாசமும் அளிக்குமானால் இந்தப் புரிதலில் இன்னும் முழுமை கிடைக்கும்.
என்னைப் பற்றி நான் எழுதுவதும் முழுக்க முழுக்க என்னைப் பற்றியதல்ல என்பதை ஒரு நுட்பமான வாசகனால் உணர முடியும். அதற்கான மௌனமான இடைவெளிகளை எனது படைப்புகள் கொண்டிருக்கும். என்னைப் பற்றி நானே பேசக் கூடாது என்று தடைகள் விதிப்பவர்களை நான் மதித்தாலும் கூட, நுண்ணறிவும் நேர்மையும் துணிவும் மிக்க ஒரு படைப்பாளியை அப்படியெல்லாம் தண்டிக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். என் மேதைமையின் திமிரோடு இதனை ஒரு கட்டளையாகவும் என்னால் கூற முடியும்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...